Sunday, October 31, 2021

Story of pundaleeka

விட்டலன் வந்த வரலாறு

துவாரகையில் கிருஷ்ணனைப் பார்க்க பலரும் வந்து போய்க்கொண்டிருந்தனர். சலித்துப் போன கிருஷ்ணன், நாரதரிடம், எல்லோரும் என்னை வந்து பார்க்கிறார்களே, நான் போய் பார்க்கும் அளவுக்கு ஒரு பக்தன் இப்பூமியில் இருக்கிறானா என்றார்.

"இருக்கிறானே… புண்டலீகன் என்பவன் இருக்கிறான். அவனுடைய தாய், தந்தையைத் தன் கண்ணைப் போல் பராமரித்து வருபவன்" என்றார் நாரதர்.

உடனே புண்டலீகன் இருக்கும் எளிய குடிசையின் முன் தோன்றினான் பாண்டுரங்கன். குடிசைக்கு வெளியே மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. வெளியே நின்றபடி பாண்டுரங்கன் புண்டலீகா… புண்டலீகா…. என்று குரல் கொடுத்தான்.

யார் அது, யாராக இருந்தாலும் கொஞ்ச நேரம் காத்திருங்கள். என்னுடைய தாயும், தந்தையும் அசதியாக இருக்கிறார்கள். அவர்கள் தூங்கிய பிறகு வருகிறேன் என்று அவர்களின் காலை வலது கையால் பிடித்துவிட்டபடி, இடது கையால் ஒரு செங்கல்லை வெளியே எடுத்துப் போட்டான் புண்டலீகன்.

அந்தக் கல்லின்மீது கொஞ்சநேரம் நில்லுங்கள். என் பெற்றோர் உறங்கியவுடன் வருகிறேன் என்றான்.

அவ்வளவுதான் அந்த செங்கல்லின் மீது ஜம்மென்று இடுப்பில் கைவைத்தபடி பாண்டுரங்கன் நின்றுவிட்டான்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த புண்டலீகன், "ஹே பாண்டுரங்கா.. நீயா" என்று புளங்காகிதம் அடைந்தான்…

"இரு இரு உணர்ச்சிவசப்படாதே… நான் உன்னைக் கண்டதில் சந்தோசமாக இருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான் பாண்டுரங்கன்.

"என்னுடைய பெற்றோர் அன்றாட சிரம பரிகாரங்களைச் செய்வதற்கு நதிக்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருக்கிறது. அந்த பீமா நதியின் பாதையை இந்த குடிசைக்கு அருகில் ஓட விட்டால் நன்றாக இருக்கும்" என்றான் புண்டலீகன்.

"நான் உனக்குக் கொடுக்க நினைத்த வரத்தை, உன்னுடைய பெற்றோருக்காகவே கேட்டுவிட்டாய். பரவாயில்லை.. உனக்கு வேண்டியதைக் கேள்" என்றான் பாண்டுரங்கன்.

"என்னைப் போன்ற எளியவனை நாடி நீ வந்திருக்கிறாயே இதே போலே, படித்தவர், பாமரர்,‌‌ மகாபாவி‌ என வித்தியாசம் இல்லாமல், எல்லோருக்கும் எனக்குக் கொடுத்தது போலவே காட்சி கொடுத்து ‌அவர்கள் உம்மை தரிசித்த மாத்திரம் முக்தி அருள வேண்டும் பாண்டுரங்கா!!என்றான்... வெள்ளந்தியாக புண்டலீகன் கிருஷ்ணன் அப்படியே ஆகட்டும் என்று புன் சிரிப்புடன் மறைந்தான்.

நம் எல்லோரின் சார்பாகவும் புண்டலீகன் அன்று கேட்ட வரத்தை நிறைவேற்றுவதற்கே தன் இடுப்பில் கைவைத்தபடி‌ இருபத்தி எட்டு சதுர்யுகமாய் இன்றைக்கும் பக்தர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் பாண்டுரங்கன்.

நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி

நன்றி: விட்டல சரவணன் சுவாமி

No comments:

Post a Comment