Sunday, October 24, 2021

Story of jadabharata

ஜடபரதரின் ஞானோபதேசம்
ஒரு சமயம் ஸிந்து-ஸௌவீர தேசத்தின் அரசன் ரஹூகுணன் என்பவன் கபில முனிவரிடம் ஞானோபதேசம் பெருவதற்காகப் பல்லக்கில் போய்க் கொண்டிருந்தான். இக்ஷுமதி நதிக்கரையில் பல்லக்கு போய்க்கொண்டிருந்தபோது பல்லக்கைத் தூக்க ஒரு ஆள் தேவைப்பட்டது. அப்பொழுது ஜடபரதரைப் பார்த்ததும் 'இவன் பருத்து திடமாக இருக்கிறான், கழுதைபோல் பொறுமையாக சுமை தூக்கத் தகுதியான ஆள் இவன்தான்' என்று தீர்மானித்து பல்லக்கைத் தூக்க அவனை நியமித்துக் கொண்டார்கள். தரைமீது ஊரும் பூச்சி, புழுக்களை மிதித்து விடப் போகிறோமே என்ற கவலையில் அவன் பல்லக்கை நிதானமாகச் சுமந்து வந்தான். மற்றவர்களின் வேகம் அதனால் தடைப்பட்டது. பல்லக்கும் மேலும் கீழுமாகவும், பக்கவாட்டிலும் திடீர் திடீரென்று சீர்குலைந்து ஆடியது. அரசன் பணியாட்களைக் கோபிக்க அவர்கள் ஜடபரதன்தான் குற்றத்திற்கு காரணம் என்று கூறினர். மன்னன் அவனைப் பார்த்து எதிர்மறையாய், ஏளனமாய்க் கூறினான்: "ஐயோ பாவம்! நீ இளைத்து நோஞ்சானாய் இருக்கிறாய்! வெகு நேரம் நீ ஒருவனாகவே சுமையைத் தூக்கித் தூக்கி மிகவும் களைத்து விட்டாய்!" என்றான். ஜடபரதன் பரிஹாஸத்தைப் பொருட்படுத்தாமல் மீண்டும் பழையபடியே தூக்கிச் சென்றான். ரஹூகுணனுக்கு மீண்டும் கோபம் வந்து ஜடபரதனிடம் சொன்னான்: "உயிரிருந்தும் நீ ஒரு நடைபிணமே. உன்னைத் தக்கபடி தண்டித்தால்தான் உனக்கு சொரணை வரும்" என்று கூறினான். ஜடபரதன் பதில் கூறினான்: நீங்கள் கொடுக்கப்போகும் தண்டனை இந்தச் சரீரத்திற்கே ஒழிய எனக்கில்லை. இன்று நீ அரசன். நான் ஸேவகன். நாளை நான் அரசன். நீ ஸேவகன். இவ்வாறு மாறி வரும் வாழ்க்கைச்சூழலில் எவன் எஜமானன்? எவன் வேலையாள்? சரீரத்தொடர்புடன் ஏற்கனவே நானே தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது நீயும் மேலும் தண்டனையளித்தால் பிசைந்த மாவையே மீண்டும் மீண்டும் பிசைவதற்கு ஒப்பாகும்" என்றான்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட அரசன் துணுக்குற்றான். இவை யாவும் வேதாந்த உண்மைகளின் ஸாரமே அன்றோ? ரஹூகுணன், ஜடபரதன் சாமான்யன் இல்லை. ஒரு பெரிய மஹான். பித்தனைப்போல் தோற்றமளிக்கிறார் என்று தீர்மானித்து, பல்லக்கிலிருந்து குதித்து, அவர் காலில் விழுந்து பணிவுடன் கேட்டான்: "தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்? எங்கு செல்கிறீர்? ஒருக்கால் நான் தேடிப்போகும் ஆத்மஞானி, கபில முனிவர் தாங்கள்தானோ? நான் யமனுக்குக் கூட பயப்படமாட்டேன். ஆனால் ஒரு ப்ரம்மஞானியிடம் அபசாரப்பட்டதற்க்குத்தான் பயப்படுகிறேன். என் குற்றத்தைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும். நீர் ஒர் ஞானி. பகவத்ஸ்வரூபி. தேஹாபிமானத்தைக் கடந்தவர். கருணைகூர்ந்து என்னை க்ஷமித்து தத்துவோபதேசம் செய்ய வேண்டும்." என்று வேண்டினான்.
பரதன் கூறினார்: "உலகத்தோர் அனுபவிக்கும் ஸுக-துக்கங்கள் ஸ்வப்நத்தில் அனுபவிப்பதைப் போன்றதாகும். கர்மேந்த்ரியங்கள், ஞானேந்திரியங்கள், மனஸ் ஆகியவற்றின் செயல்பாடுகளினால்தான் பிறப்புகள் ஏற்படுகின்றன. அதற்கு பகவத் பக்திதான் தகுந்த பரிகாரம்" என்றார். ரஹுகுணன் பரதனை வினவினான்: "நீறு பூத்த நெருப்பைப் போன்ற ஆத்மஞானி தாங்கள். சிரமப்படும்போது தேகத்தில் வியர்வை உண்டாகிறபோது அது உண்மையில்லை என்று எப்படி நாம் சொல்ல முடியும்? என் ஸந்தேஹத்தை நிவர்த்திக்க வேண்டும்".
பரதன் பதில் கூறினார்: "சரீரம் பஞ்ச பூதங்களில் கூட்டுச் சேர்க்கை. "நான்" என்று உலகத்தோர் கூறுவது இந்த சரீரத்தையே. அது உண்மைக்கு மாறுபட்டது சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டு தனித்து நிற்பவன் ஆத்மா. அந்தக்கரணம், பூர்வஜன்ம வாஸனை. காலம் முதலியன ப்ரக்ருதியால் ஏற்பட்டவைகள். ஆத்மா ஜ்ஞானஸ்வரூபியாய், ஸர்வவ்யாபகனாய், ஒவ்வொன்றிலும் ஒரே ரீதியாய் பரவியிருப்பவன். இப் பரமாத்மாவே வாஸுதேவன் எனப்படுபவன். ஸத்ஸங்கத்தால் அவனிடம் பக்தியும், அதன் மூலம் முக்தியும் கிடைக்கப் பெறும். நான் முன் ஜன்மத்தில் ஒரு அரசனாய் இருந்தேன். பிறகு ஒரு மானிடம் ஏற்பட்ட பாசத்தால் மான் ஜன்மம் எடுத்தேன். இப்பொழுது இந்த ஜன்மம் கிடைக்கப் பெற்று, பூர்வ ஜன்ம வாஸனையால் பகவத்ஸ்மரணை தொடர்ந்து கொண்டு எதிலும் பற்றற்றவனாக இருக்கிறேன்.
ஸம்ஸாரம் ஒரு அரண்யம் போன்றது. அதில் சிங்கம், ஓநாய்போல் ஜீவனை இந்த்ரியங்கள் சூழ்ந்திருக்கின்றன. வணிகன் பணத்தை சம்பாதிப்பதுபோல், மனிதன் மனைவி, மக்கள் என்கிற பாசங்கள் அவனைக் கட்டுறச் செய்ய, காட்டில் திரியும் சிங்கம், ஓநாய், திருடன் போன்ற அநேக ஆபத்துகளை அடைந்து மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டு ஸம்ஸார முடிவைக் காணாது தவிக்கின்றான்.
இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் (ஸம்ஸாரம்) கண், காது, நாவு, நாசி, தோல், மனஸ் என்கிற ஆறு இந்திரியங்களுமே திருடர்கள் எனப்பட்டனர். ஜீவனே வணிகன். திருடர்கள் பணத்தை அபஹரிப்பதுபோல் ஜீவனின் புத்தியை இந்த்ரியங்கள் அபஹரிக்கின்றன. காட்டில் சிங்கம், ஓநாய் ஆட்டைக் கவ்வுவதுபோல் மனைவி, மக்கள் மனிதனின் மனத்தைக் கவ்விப் பிடித்துக் கொள்கிறார்கள். தாகமெடுத்தவன் கானல் நீரைத் தேடிச் செல்வதுபோல், மதிமயங்கி காமத்தால் ஈர்க்கப்படுகிறான். சப்தாதி விஷயங்களே கானல் நீராகும். ஸ்வப்னஸுகமே ஒர் கந்தர்வ நகரம் போலாகும். உறக்கமே மலைப்பாம்பு. ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் மனிதன் செய்யும் எல்லாக் காரியங்களும் அவனை ஸம்ஸாரக்குழியில் தள்ளுகின்றன. முனிவர்கள் அனுஷ்டிக்கும் நிவ்ருத்தி மார்க்கமே இஹபரத்தில் ஆனந்தத்தைக் கொடுப்பது. அரசனே! இந்த வாழ்க்கையில் ஆசையுறாதே. ஆசைகளைக் களைந்து, இந்த்ரியங்களை அடக்கி, பக்தியில் ஈடுபட்ட மஹான்கள் சென்ற நிவ்ருத்தி மார்க்கத்தில் செல்வாயாக. அதுவேதான், பரமானந்தத்தை நல்கிடும்; முக்தியைக் தரும்".
ஜடபரதனின் இந்தப் புண்யசரித்ரம் வக்தா, ச்ரோதாக்களுக்கு ஸர்வ மங்களங்களையும் விளைவிக்கும்.
(தொடரும்)
ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலில் பதிவு செய்தவர் திரு விஜயராகவன் நரசிம்ஹன் அவர்கள்.

No comments:

Post a Comment