ப்ரேமையின் உச்சம் ராதையா, சூர்தாஸா.......
நந்தவனத்தில் ஒருநாள்
" ஏன் உங்கள் தலை எதையோ ரசித்தவாறு அசைந்து கொண்டிருக்கிறது ?"
" நான் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா ?"
" என்ன அப்படி ரொம்ப ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ?" என்று கிருஷ்ணன் தலை அசைத்து ராதை கேட்டாள்.
" ஆஹா! என்னமா பாடறார் அவர் . என்னை எப்போதும் கட்டிப்போட்டே வைத்து
விடுகிறார் . விடுபட முடியவில்லையே ?" என்றான் கண்ணன்.
" எப்பவும் சூர்தாஸ், சூர்தாஸ் என்று அவரைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே அப்படி என்ன சூர்தாஸ் உங்களை மயக்கி வைத்திருக்கிறார் ? நானே சென்று பார்க்கிறேன்" என்று ராதை சொல்ல " நீ அவர் கிட்டே போகாதே, போகாதே" என்று கிருஷ்ணன் தடுத்தான்
"ஏன் அவர் கிட்டே போகக் கூடாது, கண்டிப்பாகப் போகப்போகிறேன்" என்று சூர்தாஸ் பாடிக்கொண்டிருந்த கோவிலுக்குச் சென்றாள் . பிறவிக் குருடரான சூர்தாஸ் அருகில் அவள் போய் நின்றதும் அவளது கொலுசு சப்தம் தெய்வீக சப்தம் எழுப்பியதும், உணர்ந்த சூர்தாஸ் கையை நீட்டி அவள் கொலுசைப் பிடித்துகொண்டார் .
" விடுங்கள் என் காலை " என்ற போதும் கொலுசை விடவில்லை அவர் .
" நான் ராதை, கிருஷ்ணனைச் சேர்ந்தவள்" என்றாள் .
" எனக்கு நீ யார் என்று தெரியாது . பார்க்கவும் முடியாது . போய் கிருஷ்ணனை வரச்சொல்" என்று கொலுசை காலிலிருந்து உருவி எடுத்து வைத்துகொண்டார் .
ராதை கூப்பிட, கிருஷ்ணன் வந்தான் . சூர்தாஸ் பக்தியை மெச்சி பார்வை அளித்தான் . " சூர்தாஸ், உங்களுக்கு வேண்டிய வரம் கேளுங்கள்" என்றான் .
" கிருஷ்ணா, உன்னைப் பார்த்ததே இல்லை . காது நிறைய உன்னைப் பற்றி கேட்டிருக்கிறேன். வாய் நிறைய உன்னைப் பாடிக்கொண்டே இருக்கிறேன். கண் கொடுத்த உன்னைக் கண் நிறையப் பார்த்து விட்டேன். எனக்கு வேண்டியது கிடைத்து விட்டது கண்ணின்றியே வாழப் பழகிவிட்டேன் . தயவு செய்து என்னை மீண்டும் குருடனாக்கிவிடு . உன்னைப் பார்த்த கண்ணால் வேறு எதையும் நான் பார்க்க விரும்பவில்லை "
" இந்தா தாயே ராதை உன் கொலுசு "
கண்ணனும் ராதையும் திரும்பும்போது, ராதை சூர்தாஸ் பற்றியே அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள் வாய் ஓயாமல் .
" இதற்குத் தான் சொன்னேன், சூர்தாசைப் போய்ப் பார்க்காதே என்று, புரிகிறதா !" என்றான் கண்ணன்.
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.....
No comments:
Post a Comment