Saturday, May 8, 2021

Uttarakosha mangai temple

பச்சை வண்ண பரமேஸ்வரன் -- நங்கநல்லூர் J K SIVAN --
சீரும் சிறப்புமாக ஒரு காலத்தில் பாண்டிய நாட்டில் ராமநாதபுரம் அருகே இருக்கும் புனித க்ஷேத்ரம் உத்திர கோச மங்கை. மாணிக்க வாசகரோடு நெருங்கிய சம்பந்தம். மதுரை யிலிருந்து 85 கி.மீ. ராமநாத புரத்திலிருந்து 18 கி.மீ. ராமநாதபுரம்-ராமேஸ்வரம் சாலையில் உள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் வயதான 7 நிலை ராஜகோபுரம். அம்பாளுக்கு ஐந்து நிலை கோபுரம். சிவன் பெயர் மங்களநாதர், மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர். அம்பாளுக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள்.
பாண்டிய ராஜாக்கள், அச்சுதப்ப நாயக்கர் (1529–1542), மற்றும் சில ராமநாதபுரம் ராஜாக்கள் நிர்மாணித்த ஆலயம். இங்கே சேது மாதவ தீர்த்தம் லக்ஷ்மண தீர்த்தம் என இரு புஷ்கர ணிகள் பிரசித்தம். எல்லாவற் றையும் விட புகழ் சேர்ப்பது இங்குள்ள அற்புத மரகத நடராஜர் சிலை தான்.
ரொம்ப பழைய இந்த உத்திர கோசமங்கை மங்கள நாதர் கோயில் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவாலயம். முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடிய ஸ்தலம். 20 ஏக்கர் பரப்பு. உத்தரகோச மங்கை தவிர வேறு பெயர்கள் சிவபுரம், தக்ஷிண கைலாயம்', சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் .
நவகிரஹங்கள் தோன்றுவதற்கு முன்பே சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு க்ரஹங்கள் என்பது ஒரு விசேஷம். மங்களாம் பிகைக்கு சிவன் ஆனந்த தாண்டவத்தை ஆடிக் காட்டிய க்ஷேத்ரம். உத்ரம் என்றால் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திர ரஹஸ்யத்தை மங்கையாகிய மங்களாம்பிகைக்கு உபதேசித்ததால் ''உத்ர கோச மங்கை''.
ஸ்தாணுவாகி நின்ற சிவனின் அடி முடி தேடி விஷ்ணுவும் பிரம்மாவும் அலைந்தபோது ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவைக் கண்ட பிரம்மன், ''என்னோடு சிவனிடம் வந்து நான் அவன் முடியை நான் கண்டேன் என்று நீ சாக்ஷி சொல்'' என்றதும் சரி என்று தாழம்பூவும் அப்படியே பொய் சொல்லி சாபம் பெற்றது. சிவ பூஜை யில் இடம் பெறுவதில்லை. சாபம் நீங்க தாழம்பூ உத்தர கோச மங்கையில் வெகுகாலம் தவம் செய்து, சாபம் நீங்கியது. உத்தர கோச மங்கையில் சிவனுக்கு தாழம்பூ சாத்துகிற வழக்கம் உண்டு. .
ராவணனுடைய மனைவியான மண்டோதரி உலகத்திலேயே சிறந்த சிவ பக்தனையே கணவனாக ஏற்பேன் என அவன் கிடைக்க உத்தரகோச மங்கையில் மங்கள நாதரை வேண்டி தவமிருந்தாள். அவள் பக்தியை மெச்சி சிவன் மண்டோதரி முன்பு ஒரு குழந்தை உருவில் தோன்ற, அப்பொழுது அங்கு வந்த ராவணன், ஆசையாக குழந்தை உருவில் இருந்த சிவபெருமானைத் தொட முயன்றான். சிவபெருமான் அக்னி பிழம்பாக மாறி விட, அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிய தொடங்கின. சிவன் தேவர்களுக்கு அளித்த வேத நூல்களும் எரிய, அவற்றைக் காக்க முயன்ற தேவர்கள் முயன்றும் தோல்வியடைந்து தீயில் மாண்டனர். பின்னர் மாணிக்க வாசகர் மூலம் வேத நூல்கள் மீண்டது . அக்னியில் விழுந்த தேவர்களும் மீண்டனர். சிவபக்தன் ராவணனும் மண்டோதரியை இங்கே தான் மணந்தான் என்று சுபமான முடிவோடு ஒரு கதை. சிவனருளால் மாணிக்கவாசகர் இங்கே லிங்க வடிவத்தில் உள்ளார்.
இந்த ஆலயத்தில் இரட்டை பைரவர், சுப்ரமணியர் ஸ்படிக லிங்கம் ஆகியவை களும் சிறப்பு. இங்குள்ள மரகத நடராஜா 5 1/2 அடி உயரம். உலகத்திலேயே பெரிய மரகதக் கல் சிலை. மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விசேஷம். அன்று மட்டுமே பூஜை அபிஷேகம். மரகத நடராஜனை தரிசிக்கலாம். மற்றநாட்களில் முழுவதும் சந்தனக் காப்பு மட்டுமே. ஆதி நடராஜா என்று பெயர். சிரித்த முகம். ஒரு விஷயம் ரொம்ப கெட்டிக்காரத் தனமாக மரகத நடராஜா சந்தனக் காப்பு மூலம் வெள்ளைக்கார, கொள்ளைக் காரர்களிட மிருந்து தப்பி இருக்கிறார். மரகதக் கல் என்று தெரிந்திருந்தால் நாம் நடராஜரை இழந்திரு ப்போம். இது தான் சாமர்த்திய சந்தன டிமிக்கி. சந்தனத்தையே விற்கிறார்கள், சிலையை விடுவார்களா? இப்போது ஹிந்து சமய அறங்காவல் துறை அதிகாரிகள் வசம் ஜாக்கிரதையாக இருக்கிறார்!.
மாணிக்க வாசகர் 9 பாடல்கள் பாடி இருக்கிறார் .
'தாதாடும் பூஞ்சோலைத் த்த்தாய் நமைஆளும்மாதாடு பாகத்தன் வாழ் பதி என் – கோதாட்டி
பத்தர்எலம் பார்மேல் சிவபுரம்போற் கொண்டாடும்உத்திர கோச மங்கை ஊர்.. . .' என்கிறார்.
நமது பழைய கோவில்களில் மட்டுமே நாம் யாளி பார்க்கலாம். விசித்ர பெரிய உருவம். இங்கே இரண்டு யாளிகள் வாயில் உருளையாக கல் உருண்டை அற்புதமாக சிற்பி செதுக்கி இருப்பதை தொடலாம், சுழலும். உருளும். வெளியே எடுக்க முடியாது. பெரிய தெப்பகுளம். வற்றாத உப்பு கரிக்கும் தண்ணீர். அதில் நிறைய கடல் மீன்கள் வகை. .
உத்திர கோசமங்கைக் கோவிலிலும் சுரங்கம் உண்டாம். சிதம்பரம், ராமேஸ்வரம், சௌதி அராபியாவில் இருக்கும் மெக்காவில் மெக்கேஸ்வரன் கோவில் வரை செல்கிறதாம். இப்போது முஸ்லிம்கள் தொழும் மெக்கா ஒருகாலத்தில் சிவாலயமாக இருந்ததாக நிறைய படங்கள் விஷயங்கள் கேட்டும் பார்த்தும் படித்துமிருக்கிறேன். தாஜ்மஹால் தேஜோமய ஈஸ்வரன் கோவில் என்கிற மாதிரி சென்ஸிட் டிவ் பழங்கதை. மனித முயற்சி இல்லாமல்
தானாகவே உள்ள சுயம்பு சுரங்கப்பாதை போல் இருக்கிறது. ரிஷிகள் முனிவர்கள் மஹான்கள் மட்டுமே உபயோகித்த பாதை.
இங்கே முருகனுக்கு யானை வாகனம். இந்திரன் கொடுத்த ஐராவதம் என்று ஆதி சிதம்பர மஹாத்மியம் சொல்கிறது. . .
மரகத நடராஜா கதை ஆச்சர்யமானது. சுருக்க மாக சொல்லி முடிக்கிறேன்.
ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்ற ஊர் இருக்கிறதே, அங்கே ஒரு ஒரு மரைக்காய மீனவர் இஸ்லாமியராக இருந்தும் உத்தரகோச மங்கை மங்களேஸ்வரர் மேல் ரொம்ப பக்தி. பரம ஏழை. பாய்மரப் படகில் கடலில் சென்று மீன் பிடித்து வியாபாரம் செய்பவர். ஒரு நாள் கடலில் திடீர் சூறாவளிக் காற்றில் அவரது படகு சிக்கி எங்கேயோ அடித்து செல்லப்பட்டு வெகுதூரத்தில் ஒரு பாசிபடிந்த பாறை மேல் மோதி நின்றது. சில பாறைகள் சரிந்து படகிலே விழுந்தது. படகில் ரெண்டு சின்ன பாறைகள் , ஒரு பெரிய பாறை. புயலும் மழையும் கொஞ்சம் கொஞ்சமாக நின்றது, அதிர்ச்சி நீங்கி மனதில் உத்தரகோசமங்கை மங்களநாதரை விடாமல் வேண்டிக் கொண்டு எப்படியோ பல நாட்கள் கடலில் தடுமாறி மீண்டும் மண்டபம் வந்து சேர்ந்தார். படகில் இருந்த பாசி பிடித்த பாறைகளை வீட்டு வாசலில் படிக்கட்டுகளாக போட்டு வைத்தார். வெயிலில் காய்ந்து நடந்து பாசி நீங்கி பாறைகள் பளிச்சென்று சூரிய வெளியில் பச்சை யாக பளபளவென்று மின்னின.
''ஆஹா, மங்களநாதா , என் வறுமையை நீங்க நீ வழி செய்தாயா'' என்று நன்றிக் கண்ணீருடன் ராஜாவிடம் சென்று விஷயம் சொன்னார். ராஜாவின் ஆட்கள் பச்சை பாறைக்கற்களை அரண்மனைக்கு கொண்டு வந்து பரிசோதித் ததில் அவை விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக் கல் என்று தெரிந்தது. ராஜா மரைக்காயருக்கு நிறைய பொற்காசுகள் கொடுத்தான். அவர் ஏழ்மை நீங்கியது. பாண்டியன் சிவ பக்தனல்லவா? இந்த பெரிய அபூர்வ மரகதக் கல்லில் ஒரு நடராஜர் சிலை வடித்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்? என எண்ணி பல இடங்களிலும் தேடி கடைசியில், இலங்கை மன்னன் முதலாம் கயவாகுவின் அரண் மனைச் சிற்பி சிவபக்தரான ரத்தின சபாபதியை வரவழைத்தான். பாறையைப் பார்த்த சிற்பி மயங்கி சாய்ந்தான். ''என்னால் இதில் மரகத நடராஜர் சிலை செய்ய முடியாது'' என்று திரும்பிவிட்டான். பாண்டி யன் மங்கள நாதர் முன்பு கண்ணீருடன் பிரார்த்தனை செய்தபோது ஒரு குரல் கேட்டது ''கவலைப் படாதே பாண்டியா, நான் சிலையை வடித்து தருகிறேன்'' ராஜா திரும்பினான். அங்கே ஒரு சித்தர் நின்றார். சித்தர் சண்முக வடிவேலர். அவரை வணங்கி பொறுப்பை ஒப்படைத்தான் பாண்டியன்.
அந்த பெரிய பாறையிலிருந்து ஐந்தரை அடி உயர மரகத நடராஜர் ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில், மிகவும் நுணுக்கமாக, நடராஜரின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் புடைக்க தெரியும் படி விக்ரஹமானார் . (பாலபிஷேகத்தின் போது நரம்பு தெரியும்)
பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பல படையெடுப்புகளையும் தாண்டி, இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆருத்ரா அன்று மரகத நடராஜனை தரிசிக்கிறோம்.

No comments:

Post a Comment