Wednesday, March 31, 2021

Great boons had by Urmila & Puri Jagannath

மகா  பிரசாதத்தின் மகிமை


புரி ஜெகந்நாதர் ஆலயத்தில்  பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது. இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய துணி கிழிகளில் கட்டி , உலர்ந்த நிர்மால்ய பிரசாதமாக விற்பனைக்கு வைத்திருப்பார்கள் .பகவான் ஶ்ரீ ஜெகன்நாதருடைய பக்தர்கள் மணிக்கணக்கில் மிக நீண்ட வரிசையில் நின்று இந்த நிர்மால்ய மகா பிரசாதத்தை விரும்பி வாங்குவார்கள். ஏனென்றால் மகா பிரசாதத்தை ஏற்பதன் மூலம் அவர்கள் மிகப்பெரிய புண்ணியத்தை அடைவதாக நினைக்கின்றார்கள்.

ஒடிசா மக்கள் தங்கள் தினசரி பூஜைக்கு பிறகு கடுகளவேணும் நிர்மால்ய பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதற்காக அதை பாதுகாத்து வைக்கிறார்கள். ஒரிசா மக்களிடம் ஒரு முக்கியமான பழக்கம் என்னவென்றால் திருமணப் பேச்சு வார்த்தையின் போது மணப்பெண் மற்றும் மணமகன் நிர்மால்யத்தை தங்களது கைகளால் பற்றிக்கொண்டு , இந்தப் பேச்சு வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதாகவும் இதிலிருந்து மாற மாட்டோம் என்று சத்தியம் செய்கிறார்கள். மேலும் மரண சமயத்தில் நிர்மால்ய பிரசாதத்தையும், புனித துளசியும் தண்ணீருடன் சேர்த்து வாயில் ஊற்றப்படுகிறது. அதன் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால் மரணத்திற்குப் பிறகு இதை உட்கொண்டதால் ஆத்மா எமனுடைய தண்டனையிலிருந்து காப்பாற்றப்படும். இது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

மகா பிரசாதத்திற்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது திரேதாயுகத்தில் பத்து தலை அசுரனான இராவணனை வென்ற பிறகு பிரபு இராமச்சந்திர மூர்த்தியும் லக்ஷ்மணனும் மற்றவர்களும் அப்போதுதான் அயோத்திக்குத் திரும்பினார்கள். அயோத்தியா வாசிகளும் அவர்களுடைய வீரதீர செயல்களை கேட்டு மகிழ்ச்சியில் இருந்தனர்...லக்ஷ்மணனுடைய மனைவி ஊர்மிளா மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்.... எல்லோரும் லக்ஷ்மணன் இந்திரஜித்தை கொன்றதையும், இந்திரஜித்தின் பலத்தையும், அவன் பெற்றிருந்த ஒரு வரத்தை பற்றியம் பேசி கொண்டிருந்தார்கள். இந்திரஜித் பெற்ற வரம் என்னவென்றால், எவனொருவன் பதினான்கு வருடம் தொடர்ந்து சாப்பிட வில்லையோ.... எவன் ஒருவன் தொடர்ந்து பதினான்கு வருடங்கள் தூங்கவில்லையோ .அவன் மட்டுமே இந்திரஜித்தை கொல்ல முடியும் என்பதாகும்.

அரண்மனையில் அன்று மாலையே இந்த செய்திக்குப் பின் உள்ள உண்மையை பற்றி அறிய ஒரு கூட்டம் கூடியது பிரபு ராமர் லட்சுமணனை பார்த்து, லக்ஷ்மணா! நீ பதினான்கு வருடங்களாக உணவு உண்ணாவில்லை என்றால் பஞ்சவடியில் நாம் தங்கியிருந்த போது நான் தந்த உணவு பொட்டலங்களை என்ன செய்தாய் என்று வினவினார் ? லக்ஷ்மணன் பிரபுவே நான் அந்த உணவு பொட்டலங்களை பஞ்சவடியில் ஷமி மரத்தில் உள்ள ஒரு பெரிய துவாரத்தில் வைத்திருக்கிறேன் என்றார் . இதை மெய்ப்பிப்பதற்க்காக இராமர் ஹனுமானை நீ இப்போது பஞ்சவடிக்கு சென்று ஷமி மரப்பொந்தில் வைக்கப்பட்டிருக்கும் உணவு பொட்டலங்களை எடுத்து வா என்றார் .

புத்திசாலியான ஹனுமானுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருந்தும். யுத்த பூமியில் இந்திரஜித்தின் அம்பால்  மயக்கமடைந்த லஷ்மணனை  காக்க சஞ்ஜீவினி மலையை ஒற்றை கையால் கொண்டு வந்த நான், அந்த உணவு பொட்டலங்களை கொண்டு வர வேண்டுமா என்று சிறுது தயக்கத்துடன் எடுத்து வர புறப்பட்டார்.

பஞ்சவடியை அடைந்த ஹனுமான் அந்த உணவு பொட்டலங்களை பார்த்தார் ...ஆனால் அதை அவரால் எடுக்க முடியவில்லை. இறுதியில் மிகவும் பணிவாக தனது எஜமானிடம் தனது இயலாமையை பணிவுடன் தெரிவித்தார் ஹனுமான் .அவரால் அந்த உணவு பொட்டலங்களை  தனது அஹங்காரத்தினால் சுமக்க முடியாமல் போனது என்று பிரபு ராமன் புரிந்துகொண்டார். இறுதியில் லக்ஷ்மணன் கூறினார் மரியாதைக்குரிய எனது சகோதரனே நான் அந்த உணவு பொட்டலங்களை பஞ்சவடியில் இருந்து கொண்டு வருகிறேன் என்றார்.

லக்ஷ்மணன் தனது பலம் பொருந்திய அம்பினால் அந்த உணவு பொட்டலங்களை கொண்டுவந்தார் அவை எல்லாம் ஸ்ரீராமர் முன்பாக சமர்ப்பிக்கபட்டது. பிரபு ஸ்ரீராமச்சந்திரன் அதிசய பட்டவராக ஆஞ்சநேயரிடம் பதினான்கு வருடங்களாக சேமிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை சரி பார்க்க சொன்னார் . அப்படி சரிபார்த்தபோது அதில் ஏழு பொட்டலங்கள் மட்டும் குறைவதாக கூறினார்.

பிரபு ராமர் லக்ஷ்மணனிடம் இருந்து  ஏழு உணவுப் பொட்டலங்கள் குறைந்ததைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டார். லக்ஷ்மணன் மிகவும் பணிவாக அதன் காரணத்தை விளக்குகின்றேன் என்று கூறினார். நாம் இருவரும் காட்டில் இருக்கும்போது, தந்தையின் மரணச் செய்தியைக் கேட்ட போது தாங்கள் அன்று எனக்கு முதல் முறையாக உணவு அளிக்க வில்லை. இராவணன் பஞ்சவடியில் இருந்து சீதையை கடத்திக் கொண்டு சென்ற போது தாங்கள் எனக்கு இரண்டாவது முறையாக உணவு அளிக்க வில்லை. மூன்றாவது முறை லங்கேஸ்வரிக்கு முன்பு பலிகொடுக்க பாதாளம் சென்ற போது நாம் இருவரும் உணவு  உட்கொள்ளவில்லை . இந்திரஜித்தின் பானத்தால் மயங்கி விழுந்த நான் அன்று நான்காவது முறையாக உணவு  உட்கொள்ளவில்லை .  இந்திரஜித் தலை துண்டிக்கப்பட்ட போது நான் ஐந்தாவது முறையாக உணவு உட்கொள்ளவில்லை. நீங்கள் ராவணனை சிரச்சேதம் செய்த போது ஆறாவது முறையாக உணவு உட்கொள்ளவில்லை. புலஸ்தியர் ரிஷியின் மைந்தனான, இராவணன். பிராமணன்னாவான்  அந்த இராவணனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்ததாக நீங்கள் எண்ணினீர்கள். அப்போது ராவணனின் மரணத்திற்கு  இலங்கையில் துக்கம் அனுஷ்டித்த போது அதில் கலந்து கொண்டு உணவு உண்ணாமலே நாம் லங்கையை விட்டு கிளம்பினோம்.

பிரபு இராமர் லக்ஷ்மணனுடைய மிக உயர்ந்த தியாகத்தினாலும் அர்ப்பணிப்பு உணர்வினாலும் தழுதழுத்து லக்ஷ்மணனுடைய தியாகம் ஈடு இணை இல்லாதது என்று கூறினார். பின்பு மிகவும் உன்னதமான  தியாகம் புரிந்த லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவை புகழ்ந்து கூறினார். லக்ஷ்மணன் இல்லாமல் பதினான்கு வருடங்கள் ஊர்மிளா கழிக்க நேர்ந்தது.

நான் எனது மனைவியுடன் பதினான்கு வருடங்கள் காட்டில் கழித்தேன் ஆனால் ஊர்மிளா மிகவும் உயர்ந்த தியாகம் செய்திருக்கின்றாள்..…. இந்த பதினான்கு வருடங்களும் லக்ஷ்மணனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள் எல்லா புகழும் ஊர்மிளாவிற்கே என்று கூறினார்.

அயோத்தியாவில் நமக்கு மூன்று சிம்மாசனங்கள் இருக்கிறது ஒன்று எனக்கு மற்றொன்று சீதைக்கு மற்றொன்று லக்ஷ்மணனுக்கு.  இன்றிலிருந்து ஊர்மிளாவிற்காக நான்காவது சிம்மாசனம் ஏற்பாடு ஆகட்டும் என்று ஆணையிட்டார்.

ஊர்மிளா கூப்பிய கரங்களுடன் ராஜா ராமரிடம் கூறினாள் .....எனக்கு சிம்மாசனத்தின் மீது எந்த பற்றுதலும்  இல்லை..... எனக்கு உங்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் மட்டும் அளிக்க வேண்டும் எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை  என்றாள்.

ராமர் மிகவும் மகிழ்ந்து அவளிடம் வேறு ஏதாவது வரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறினார்.... அப்போது மிகவும் பணிவுடன் இருகரம் கூப்பி தாங்கள் எனக்கு ஏதாவது வரம் தர நினைத்தால் இனி வரும் காலங்களில் எனக்காக கோவில்களோ அல்லது வழிபாடோ கூடாது. நான் எல்லோருக்கும் மனம் தரும் ஒரு ஊதுபத்தியாக இருக்க விரும்புகின்றேன். இனிவரும் காலங்களில் நான் தங்களது தாமரை பாதத்திற்கு கீழ் நிவேதனமாக  இருக்க விரும்புகின்றேன் எனக் கூறினாள்

பகவான் ஶ்ரீ ராமசந்திரன் ஊர்மிளாவின் பக்தியை கண்டு பின்வருமாறு கூறினார் .... வரப்போகும்  கலியுகத்தில் நான் பூரி க்ஷேத்திரத்தில் அவதரிக்கும் போது லக்ஷ்மிதேவி எனது அருகில் இருக்க மாட்டாள் . லக்ஷ்மணன் எனது மூத்த சகோதரராக பலராமர் என்ற பெயருடன் என் அருகில் இருப்பார். எனக்கு நெய்வேதியம் செய்யப்படும் எந்த பிரசாதமும் விமலாதேவிக்கு  நைவேத்தியம் செய்யப்படும். பிறகுதான் அது மகா பிரசாதமாக மாறுகிறது .நீ மகா பிரசாதமாக இருப்பாய். உமது இனிய நறுமணத்தால் தெய்வீகத்தை பரப்புவாய்.... .நீ மகா பிரசாதமாகவும் நிர்மால்யமாகவும் வரும் காலங்களில் விளங்குவாய். பக்தர்கள் உன்னை வழிபட்டு புண்ணியம் அடைவார்கள். ராமர் மேலும் கூறினார் கலியுகத்தில் நீ அன்ன பிரம்மமாக வழிபட படுவாய் ஊர்மிளா மேலும் வேண்டினாள் ...நீங்கள் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் போது நான் வங்கக் கடலில் ஒரு நீர்க்குமிழியாக வந்து  தங்களது பொற்பாதங்களை  தொட வேண்டும்... இந்த வரங்களை ஊர்மிளாவிற்கு வழங்கிய ஶ்ரீராமர்  கூறினார் ஊர்மிளா உன்னுடைய தன்னலமற்ற அன்பும் தியாகமும் ஈடு இணையற்றது.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

No comments:

Post a Comment