பஞ்சகச்சம்
நீங்கள் பஞ்சகச்சம் உடுத்தி கொண்டிருக் கிறீர்களா ?
ஆமாம் என்றால் மேலே படியுங்கள்.
இல்லையென்றால் அவசியம் மேலே படியுங்கள்.
வேஷ்டிகள் பல வகை.
மயில்கண் வேஷ்டி என்னும் வகை ரொம்ப காலம் பிரசித்தியுடன் விளங்கியது.
'என்ன மயில்கண் வேஷ்டி வாங்ல்லியா?' என்றூ மாப்பிள்ளைகள் கோபித்துக்கொண்டு போன காலங்கள் உண்டு.
அத்தனை ஜாஜ்வல்யத்துடன் திகழ்ந்த மயில்கண் வேஷ்டியை தற்போது யாரும் சீந்துவார் இல்லை.
யாரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை.
மயில்கண் வேஷ்டியைப் போலவே சமீப காலத்தில் ஈரோடு வேஷ்டி என்று ஒன்று வந்தது.
ஒன்றிரண்டு முறை துவைத்த பின் முழங்காலுக்கு மேல் ஏறிக்கொள்ளும்.
அதை விரித்துவிட வேஷ்டி நுனியில் கல்லைக் கட்டி விட வேண்டும் என்பது போல் 1-2 வாரத்துக்குள்ளேயே பல்லிளித்து நின்றுவிடும்.
அது என்ன டெக்னாலஜி என்று இன்னமும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் இரண்டாந்தரமான வேஷ்டியாக 'மல் வேஷ்டி' என்று ஒன்று இருந்தது.
சரியாக மூன்று முறை உடுத்திக் கொண்டவுடன் குழந்தைத் துணியாகப் பயன்படுத்தலாம்.
இதைத் தூக்கி அடிக்கும் விதமாகத் தற்காலத்தில் பாலியஸ்டர் வேஷ்டி என்று ஒரு வஸ்து வந்துள்ளது.
கிறிஸ்தவ மணப்பெண் அணியும் முகம் மறைக்கும் / மறைக்காத பாலாடை போன்ற வெண் துணியால் ஆனது இந்த பாலியஸ்டர் வேஷ்டி.
வேஷ்டியை உடுத்திக் கொண்டது போலவும் இருக்கும், இல்லாதது போலவும் இருக்கும். வேஷ்டியே இல்லாதது போலவும் இருக்கும்.
'உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவர்கள்' என்று யாராகிலும் இருந்தால் இந்த வஸ்திரத்தைப் பயன் படுத்தலாம்.
ஆங்கிலத்தில் 'Leaving nothing to the imagination' என்பார்கள்.
பாலியஸ்டர் வேஷ்டி அப்படியானது.
வேதாந்த பாடத்தில் 'அந்தர் இந்திரியம்' , 'பஹுர் இந்திரியம்' என்பார்கள்.
அப்படி அந்தர் இந்திரியத்தையும், பஹுர் இந்திரியத்தையும் ஒன்றைணைக்கும் விதமாக, வேறுபாடு இல்லாமல் உள்ளிருப்பதை வெளிக்காட்டி, பரமானந்த அனுபவத்தை அளிக்கவல்லதாக பாலியஸ்டர் வேஷ்டி திகழ்கிறது.
இப்படிப்பட்ட ஒப்பற்ற ஆன்மீக அனுபவத்தை அளிக்கும் பாலியஸ்டர் வேஷ்டிக்கு 'Transparency International' விருது கொடுக்கலாம்.
தற்காலத்தில் வேஷ்டியை உடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
வெறுமனே பேண்ட் போட்டுக்கொள்வது போல் அணிந்து கொள்ளலாம்
அல்லது அதனுள் புகுந்துகொள்ளலாம்.
இப்போதெல்லாம் ஜிப், பாக்கெட் எல்லாம் வைத்து ரொம்ப வசதிகள் உள்ளனவாம்.
பெல்ட் இருப்பதால் எப்போது அவிழ்ந்து மானத்தை வாங்கும் என்கிற பயம் எல்லாம் இல்லை.
இதற்கு 'பேஷ்டி' என்று நான் பெயர் வைத்திருக்கிறேன் (பேண்ட் + வேஷ்டி = பேஷ்டி ).
4 முழம், 8 முழம் என்பது போக, 9-5, 10-6 என்று ஆபீஸ் டைமிங் மாதிரி வேஷ்டிகள் உள்ளன.
9-5, 10-6 என்பவை அளவைக் குறிப்பதாக நான் நினைத்ததுண்டு.
ஆனால் இவற்றில் பஞ்சகச்சம் என்னும் முறையில் உடுத்திக் கொண்ட போதுதான் இந்த நம்பர்களின் அருமை தெரிந்தது.
9-5 உடுத்திக் கொள்ள காலை 9ல் இருந்து மாலை 5 மணி வரை ஆகலாம் என்றும்
10-6 என்பது காலை 10ல் இருந்து மாலை 6 வரை ஆகும் என்றும் தெரிந்து புளகாங்கிதம் அடைந்தேன்.
10-6 வேஷ்டியை உடுத்திக் கொள்ள சில ஆசனங்களையும், ஒரு சில தண்டால்களையும், சில முறை ஆத்மப்பிரதட்சணமும் செய்ய வேண்டும்.
அவ்வப்போது கீழே கிடக்கும் வேஷ்டி நுனிகளை இடுப்பில் சொருகிக்கொள்ள வேண்டும்.
ஒரு 10 நிமிஷத்தில் அது ஒரு மாதிரி பஞ்சகச்சம் போல் வரும்.
அந்தப் பதம் தெரிந்து உடனே உடுத்திக் கொள்வதை நிறுத்திவிட வேண்டும்.
ஏனெனில் 10-6ல் பஞ்சகச்சம் எப்போது நிகழும் என்று சொல்ல முடியாது.
பஞ்சகச்சம் தியானம் போன்றது.
அதைப் பூரணமாக அடைய மனுஷனால், மனுஷ யத்னத்தால் முடியாது.
அதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
அது நிகழும் போது நிகழும். அதுவரை நாம் பலனை எதிர்பாராமல் கடமையாற்றும் கர்மயோகி போல 10-6 வேஷ்டியின் மேல் மேற்சொன்ன ஆசனங்களைச் செய்தவண்ணம் இருக்க வேண்டும்.
அருகில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கும் யாராவது 'வந்துடுத்துடா, பஞ்சகச்சம் வந்துடுத்து' என்று பாஞ்சஜன்யம் போல் முழங்குவார்.
அப்போது ராமன் வில்லைப் படீரென்று ஒடித்தது போல் நிறுத்திவிட வேண்டும்.
அப்போது பஞ்சகச்சம் நிகழ்ந்துவிட்டது என்று பொருள்.
பஞ்சகச்சம் சரியான நீள அகலத்தில் வாங்கி அழகாக உடுத்தாவிட்டால்,
பஞ்சத்துக் கச்சமாக முழங்கால்வரை ஏறிவிடும்
No comments:
Post a Comment