Monday, September 7, 2020

Periazhwr & andal part 13

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

தந்தையும் மகளும் -13

அடுத்து கண்ணன் நடக்க ஆரம்பிக்கிறான். அதை பெரியாழ்வார் வர்ணிப்பதைக் காண்போம்.

தொடர் சங்கிலிகை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்ப
படுமும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல 
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடை மணி பறை கறங்க
தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடை நடவானோ

" குடந்தைக் கிடந்த சாரங்கபாணி இங்கு சிறு பிள்ளையாய் நடக்க ஆரம்பிக்கிறான். அவன் மார்பில் உள்ள சங்கிலி இங்கும் அங்கும் ஆட அதில் கோர்த்த பொன் மணிகள் சலார் பிலார் என்று ஒலிக்கின்றன. அதைவிட அதிகமாக அவன் பாதத்தில் உள்ள நூபுரத்தின் மணிகளும் இடையில் உள்ள பொற்சதங்கைகளும் ஆரவாரிக்கின்றன. அது எப்படி இருக்கிறது தெரியுமா ? ஒரு மதயானை மெல்ல ஊர்வது போல இருக்கிறது." என்றார் பெரியாழ்வார்.

"ஆம் தந்தையே ஒரு மதயானை தன் காலில் கட்டிய சங்கிலி ஒலிக்க, கழுத்தில் கட்டிய மணியோசையுடன் மதநீர் பெருக ஊர்வது போல மெல்ல நடக்க முயற்சிக்கும் கண்ணனின் உடலில் வியர்வைத் துளிகள் காணப்படுகின்றன . " என்றாள் கோதை.

"நடக்க ஆரம்பித்ததில் அவனுடைய மகிழ்ச்சியைப பார், 
'செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறுபிறை முளை போல 
நக்கச செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண்பல் முளை இலக"

சிவந்த மேகத்தினூடே தோன்றும் சிறு பிறை நிலவைப் போல அவனுடைய சிவந்த வாயில் முளைத்த பல் தெரிய சிரிக்கிறான். தளர்நடை நடக்கும் இந்த வாசுதேவன்தான் அனந்த சயனன் , ஹ்ருஷீகேசன் என்றால் எவர் நம்புவார்?"

"அது சரி தந்தையே அவன் எங்கு செல்கிறான்? " என்றாள் கோதை.
"வேறு எங்கே" என்ற பெரியாழ்வார் யசோதையாய் மாறுகிறார்.

" என் முகில் வண்ணன் , ஸ்ரீதேவியை மார்பில் கொண்டவன் என் முன் நடந்து வந்து எனக்கு கரும்புச்சாறுபோன்ற தன் வாயமுதம் தந்து கணகண என்று சிரிக்கிறான் . இந்தச் சிறு கால்களை அவன் விரோதிகள் தலை மீது வைப்பதுபோல் நடக்கிறான்." என்றார்.

"யசோதை பாவனையில் உங்கள் வார்த்தைகள் அற்புதம் தந்தையே ," என்றால் ஆண்டாள்.

கண்ணன் சிறிது வளரந்துவிட்டான் .
பலராமன் ஓடுகிறான். கண்ணன் அவனைத் தொடர முயற்சிக்கிறான். அதை பெரியாழ்வார் கூறுகிறார் .

'முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட 
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவதுபோல் '

" பலராமன் வெள்ளி மலை போல முன் ஓடுகிறான். அவனைத் தொடர்ந்து ஒரு கருமலை போல கண்ணன் பின் பற்ற முயற்சிக்கிறான். அவன் பாதங்கள் மண்மீது பதியும் அழகை என்னவென்று சொல்ல. !"

'ஒரு காலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடிபொறித்தமைந்து 
இருகாலும் கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை பட நடந்து '

" அவன் பாதங்கள் மண்ணில் பதிய ஓர் பாதத்தின் சின்னம் சங்காகவும் இன்னொரு பாதத்தின் சின்னம் சக்கரமாகவும் காட்சி அளிக்கிறது. இரண்டு பாதங்களையும் கொண்டு தன் முத்திரையை மண்ணில் பதிப்பதுபோல் நடக்கிறான்." என்ற பெரியாழ்வாரிடம் ,

"முன்பு மகாபலியிடம் வாங்கிய இந்த மண் என்னைச் சேர்ந்தது என்று காட்டவோ ? " என்றாள் கோதை.

"ஆம் . அவன் திருவிக்ரமன் அல்லவா? 
அண்ணனைதொடர்ந்து போகும் அவன் ஒரு யானைக்குட்டியைப்போல உடல் முழுவதும் புழுதி படர வியர்த்து விரைகின்றான். 
அவன் பாதங்கள் நோகுமே அதனால் மலர் தூவின பாதையில் நடக்கமாட்டானா என்ற ஆதங்கம் அவன் த்ரிவிக்ரமன் அல்லவா என்ற எண்ணத்தால் அடங்கியது. " என்றார் பெரியாழ்வார்.

ஆண்டாள் " அவன் நடப்பதைக் கண்டவர் யாவரும் அவனை அணைக்க ஆசை கொள்வர். " என்றாள்.

"ஆம் உண்மையில் அவ்வாறுதான் நேர்ந்தது. அதை நாளை கூறுகிறேன்." என்றார் பெரியாழ்வார்.


No comments:

Post a Comment