Monday, September 7, 2020

Namaskarams - Periyavaa


நமஸ்காரம் பற்றி காஞ்சி மஹா பெரியவா விளக்கம்.

நமஸ்கார தத்துவம்: 

  எப்பொழுதுமே, நாம் செய்யும் எந்த ஒரு சிறு செயலாயினும், அதன்  முழு பொருள் உணர்ந்து செய்யும் பொழுது அதில் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனி தான் என்பதில் ஐயமில்லை அல்லவா ?

  நமஸ்காரம் என்றால் என்ன ? அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன ? 

  காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து ஒரு சில தகவல்கள் ......

  பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார்.

  "திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே! நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம். போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறது என்கிறாயா? எனக்கு இப்போது ஒரு ஜன்மம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போன பிறவியில் உன்னை நமஸ்கரித்திருந்தால் அப்போதே எனக்கு மோக்ஷம் கிடைத்திருக்கும். இந்த மறு பிறவியே ஏற்பட்டிராது. அது சரி, அடுத்த ஜன்மாவில் நமஸ்கரிக்கமாட்டேன் என்றது ஏன் தெரியுமா? இந்த ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்து விட்டேன் அல்லவா? அதனால் நீ இனி எனக்குப் பிறவியே தரமாட்டாய். மறு ஜன்மாவே இல்லாதபோது அப்போது உனக்குச் செய்ய வேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும்? இப்படியாக போன ஜன்மா, வருகிற ஜன்மா இரண்டிலும் உன்னை வணங்காத குற்றத்தை மன்னித்துவிடு.

    இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது? மனப் பூர்வமாக ஈஸ்வரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும், அவர் நம்மை ஜனன மரண சக்கரத்திலிருந்து விடுவித்து விடுவார். நம் பாவங்களையெல்லாம் போக்கி முக்தி தந்து விடுவார். இந்த ஸ்லோகத்தைச் சொன்னவர் கவித்வ சமத்காரத்தில் பாடியவரில்லை. 

  அவர் பழுத்த அநுபவசாலி, எனவே அவரது வார்த்தையை பரிபூர்ணமாக நம்பி நாமும் ஈசுவரனிடத்தில் சரணாகதி என்று விழுந்து நமஸ்காரம் பண்ணுவோம். நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் பண்ணினால் அப்படியே கிடைக்கும்! சந்தேகமில்லை.

    நமஸ்காரம் செய்வதைத் "தண்டம் சமர்ப்பித்தல்" என்பார்கள். "தண்டம்" என்றால் 'கழி' அல்லது 'கோல்' என்று அர்த்தம். கையில் பிடித்திருக்கிற ஒரு கோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். அப்படியே இந்த சரீரத்தை நமதல்ல, இது ஈஸ்வரனுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான் நமஸ்காரம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை 'அது தண்டமாகி விட்டது' என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். 

  இதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்துவிட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கிவிட்டு, அதற்கு அடையாளமாக ஈசுவரன் முன் இந்தச் சரீரத்தைக் கீழே போடவேண்டும். அதுதான் 'தண்டம் சமர்ப்பிப்பது'. ஜுரம் வந்தால் நம் சரீரத்தால் நிற்கவும் நடக்கவும் முடிகிறதில்லை. இந்த ஜன்மாவே பெரிய ஜுரமாக வந்திருக்கிறது. இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக, நமக்கு வந்திருக்கிற சம்ஸார ஜுரத்தை புரிந்துகொண்டு, அதற்கு அடையாளமாக ஸ்வாமியின் முன் தண்டகாரமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.

  'நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால் அதுவே ஸதாகால நமஸ்காரம். அந்த அநுபவம் நமக்கு ஸித்திக்காத போதிலும் ஈஸ்வர சந்நிதியிலாவது அப்படி பாவித்து வணங்கித் தரையோடு, தரையாக எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கிவிட்டால், அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம். 'பொறுப்பை உன்னிடமே பூரணமாகக் போட்டேன்' என்பதற்கு அடையாளம் சரீரத்தைத் தரையில் போடுவது, கொஞ்சம் பொறுப்பை நமக்கு என்று வைத்துக் கொண்டால்கூட ஸ்வாமி தம் பங்கைக் குறைத்துக் கொண்டு விடுவார். இதில் அரைகுறைக்கு இடமே இல்லை. நம்முடைய நல்லது பொல்லாதது அவ்வளவும் அவர் விட்டபடி என்று சகல பொறுப்பையும் அவரிடம் தள்ளுவதற்கு வெளி அடையாளமாக உடம்பைத் தரையில் தள்ளி நமஸ்காரம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் நம் பாரம் அனைத்தையும் கிருபா சமுத்திரமான ஸ்வாமியே ஏற்று அநுக்கிரகிப்பார்.

     கோவில்களில் நமஸ்காரம் செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த மற்றும் பலரும் வழக்கமாக செய்யக்கூடிய ஒன்றே... ஆனால், மஹா பெரியவா கூறியபடி, நாம் நமஸ்காரம் செய்யும் பொழுது  " நம்மையே அர்ப்பணிக்கின்றோம்" என்ற எண்ணத்தோடு ("நான்" என்ற எண்ணத்தை)  செய்யும் பொழுது நாம் முழு பலனையும் அடைகின்றோம். 

  இந்த நேரத்தில், இந்த சிறியவனின் சிந்தையில் தோன்றியது "பாஞ்சாலி" துகில் உரியும் காட்சி தான்.. 
ஆம்... இதே 'சரணாகதி தத்துவம்' தான் "பாஞ்சாலி துகில் உரியும் காட்சியிலும்" அல்லவா ? துச்சாதனன் தனது வஸ்திரத்தை இழுக்கும் பொழுது பாஞ்சாலி ஒரு கையால் வஸ்திரத்தை  பிடித்துக்கொண்டே கிருஷ்ணரை அழைத்த பொழுது, சிறிது நேரம் வராது சோதனை செய்த பகவான், எப்பொழுது "இனி நடப்பதெல்லாம் கிருஷ்ணா உன் பொறுப்பு" என்று முழு சரணாகதி அடைந்து தனது இரு கைகளையும் உயர்த்தி கண்ணை மூடி கிருஷ்ணரை அழைத்தவுடன், கிருஷ்ணர் வஸ்திரங்களை அள்ளி வழங்கி காப்பாற்றினாரோ அது போல, 
நமது_நமஸ்காரத்தை தெரிவிக்கும் முறையானது, ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபடும். ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் "சாஷ்டாங்க நமஸ்காரம்" (சாஷ்டாங்க = எட்டு அங்கங்கள்) என்றும் பெண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் "பஞ்ச அங்க  நமஸ்காரம்" என்றும் அழைக்கப்படும். (பஞ்ச அங்க = ஐந்து அங்கங்கள்).
ஏன் என்றால், இன்னென்ன, அவயங்கள் மட்டும் தான் பூமியில் அதுவும் கோவிலில் பட வேண்டும் என்ற சாஸ்திர விதி இருப்பதால்...
ஆண்கள்: இரண்டு கால் பாதங்கள், இரண்டு மூட்டுகள், மார்பு பகுதி, இரண்டு கைகள் மற்றும் நெற்றி பகுதி. (மற்ற அங்கங்கள் படக்கூடாது )
பெண்கள்: இரண்டு கால் பாதங்கள், இரண்டு கைகள் மற்றும் நெற்றி பகுதி.     (வஜ்ராசனம்  செய்வது போல்) (மற்ற அங்கங்கள் படக்கூடாது ).

  இனி, ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் பொழுதும், கண்டிப்பாக நமஸ்காரம் (அர்த்தம் புரிந்து) செய்வோம்.

ஓம் நம ஷிவாய 🙏

No comments:

Post a Comment