Monday, July 6, 2020

Do your duty-positive story

*மனம் தளராமல் கடமையை செய்வோம்..!!!*

 துறவி ஒருவரை சந்தித்தான் ஒரு மனிதன், . 

"சுவாமி, என் வாழ்க்கை முழுவதும் கண்ணீர். பிறந்ததிலிருந்து துன்பம், துயரம், வறுமை. எனக்கு இவ்வுலகில் வாழ தெரியவில்லை. நான் நேர்மையானவன்; உண்மையானவன், இறை நம்பிக்கை உடையவன்.
எனக்கு பணம் சம்பாதிக்க தெரியவில்லை. எனவே, அவ்வப்போது பட்டினி. வேலை செய்யும் இடங்களில் என் உழைப்புச் சுரண்டப்படுகிறது. என் கூலி குறைக்கப்படுகிறது.

"எனக்குரிய கூலியை காலம் தாழ்த்தி தருகின்றனர் அல்லது அலைய விட்டுத் தருகின்றனர். கூலி வாங்க நான் அலையும் போது செலவுக்கு வேண்டிய தொகை, என் குடும்பத்தின் மூன்று நாட்கள் சாப்பாட்டுச் செலவு... இப்படி எத்தனை எத்தனையோ சொல்லலாம்.
"நான் ஏழையாகவே உள்ளேன். ஏழையாக இருப்பதைக் குற்றமாக எண்ணவில்லை. வாழ்நாள் முழுவதும் இந்த துன்பங்களையும், துயரங்களையும் என் கடின உழைப்பால் போக்க முடியவில்லை. எனவே தான் சாக முயற்சித்தேன்; நீங்கள் தடுத்து விட்டீர்கள்," என்று கதறினான்.

"மகனே நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொல்... உலோகங்களிலேயே துாய்மையான ஒரு பொருள் என்று பாமர மக்களால் மதிக்கப்படுகிறது... ஆனால், அது விலை அதிகம். அதை ஆபரணமாக்க மனிதர்கள் முயலும் போது என்ன செய்கின்றனர்...

"நெருப்பில் போட்டு உருக்கி, சுத்தியால் தட்டி, நீட்டி, வளைத்து, பின் சிறு உளியனால் செதுக்குகின்றனர். மீண்டும் நெருப்பில் இட்டுக் காய்ச்சுகின்றனர்!

"சாதாரண உலோகமான தங்கம், மற்ற உலோகங்களை எல்லாம் விட விலை உயர்ந்தது. துாய்மையானது என தெரிந்திருந்தாலும் அதை எவ்வாறெல்லாம் பாடுபடுத்துகின்றனர்.

"பயிர்களில் இனிமையானது கரும்பு என்பது உண்மைதான்! அதைத்தான் நசுக்கி, கசக்கி, பிழிந்து, சாறு எடுத்து, பின், வடிகட்டுகின்றனர். 

சாதாரணமாகப் பசுவின் பாலில் இருந்து பெறப்படுவது என்ன... "தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவை. இது எப்படி கிடைக்கிறது. பசுவிலிருந்து பாலைக் கறந்தவுடன், அது ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்டு அடுப்பின் மேல் ஏற்றப்பட்டு எவ்வளவு சூடாக்க முடியுமோ அவ்வளவு சூடாகும் வரை காய்ச்சப்படுகிறது. 

''அதன்பின், அதில் ஒரு துளி எலுமிச்சைச் சாறு விடப்பட்டு புரையிடப்படுகிறது. அது திரிந்து தயிராக மாறுகிறது. அந்தத் தயிரையும் ஒரு மத்துப் போட்டுக் கடை கடை என்று கடைந்து அதிலிருந்து வெண்ணெய் எடுக்கப்படுகிறது.
"மேலே திரண்டு வரும் வெண்ணெய் எடுக்கப்பட்டவுடன், சிறிதளவு நீர் ஊற்றி, அது மோர் ஆக்கப்படுகிறது. வெண்ணெய் அதன் பின் மீண்டும் அக்னிப் பரீட்சைக்கு உள்ளாகிறது. இப்போது அதிலிருந்து நெய் பெறப்படுகிறது. இவ்வளவு ஏன்... அது பாலாக இருப்பதால்தான்!

ஆகவே, நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடிய படிப்பினை என்ன...

"நல்லவர்களுக்கு இப்படிப்பட்ட துக்கமான, கவலை தரக்கூடிய அனுபவங்கள் எல்லாம் உண்டாவது சகஜமான விஷயமே. இதனால் விளைவது நன்மையே தவிர... வேறு எதுவுமில்லை. 

"நல்லவர்கள், நாணயம் மிக்கவர்கள், நேர்மையானவர்கள், உண்மையை பேசுபவர்கள், இறை நம்பிக்கை உடையவர்க்கெல்லாம்  சோதனைகள் நேரிடுவது சகஜம். "இறைவனை சரண்டைந்தவர்கள் இச்சோதனைகளை பொருட்படுத்த மாட்டார். ஆகவே, இந்த சோதனைகளை தாங்கு. முடிவில் நன்மையே கிடைக்கும்! வீட்டுக்குப் போ. உன் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே. அந்தப் பலன் இறையருளால்வித்தியாசமான வடிவத்துடன், நீ எதிர்பாராத நாளில், எதிர்பாராத வித்த்தில் வந்து உன்னைக் காக்கும்," என்று அவனை ஆசிர்வதித்து அனுப்பினார்.

தெளிந்த மனதுடன் வீடு திரும்பினான் மனிதன்.

நமது கடமையை முழுமையாக இறை நம்பிக்கையுடன் மனம் தளராமல் செய்வோம்...! 

*நமக்கு உண்மையிலேயே என்ன தேவையோ அதை இறைவன் நிறைவேற்றுவான் !*

இறைவன் அருளால் 
வாழ்க வளமுடன்..!

*ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்*
*சர்வம்🌍 விஷ்ணு மயம்*👈

No comments:

Post a Comment