பக்தி ஒன்றே வழி !! ( #DeivathinKural)
_______________
ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொறு 'ஸைகலாஜிகல்' காரணத்தை இந்நாட்களில் பிரபலமாகி வரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றால் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார்.
.
தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கர்ம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.
.
வியாதிக்கு மட்டுமின்றி நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவிதக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. நோய்நொடி என்றால் வைத்தியமும் செய்யத்தானே வேண்டும்? கடைசியில் எல்லாம் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோதுதான் தீரும் என்று வெறுமே, இருந்துவிட வேண்டியதுதானா? இப்படியாகக் குழப்பம் ஏற்படுகிறது.
.
பல காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது; மழை ஒன்றுதான் – ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன? பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது; ஈசல் உண்டாகிறது; தவளை கத்துகிறது; சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன; வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம்.
.
இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்னைகள்! பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவுசக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்னைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause) இருந்தேயாக வேண்டும்.
.
ஜகத் முழுதும் காரணம்—விளைவு, செயல்—பிரதிச் செயல் (Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் கட்டுண்டிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் (Physics) முழுதும் இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம் ஜீவப் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு.
.
பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவரனுடைய ஆக்ஞைப்படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்பந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்பந்தமில்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் ஸர்வேச்வரன்.
.
ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கே துணைக்காரணமாக—அல்லது அடையாளமாக—கிரகசாரம், தெய்வ குற்றம், ஆரோக்கியக்குறைவு முதலியன அமைகின்றன.
.
ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம்; உண்மையான பரிகாரம்.
Deivathin_Kural (Paramacharya) - Ra.Ganapathi
No comments:
Post a Comment