Thursday, June 25, 2020

Uddhava gita part3 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

உத்தவகீதை- ஹம்சாக்யானம் -3

எப்படிப்பட்ட ஞானியானவன் தங்கள் மனதிற்குகந்தவன்? நாரதர் முதலிய முனிவர்களால் ஆதரிக்கப்பட்டு தங்களிடம் கைக்கொள்ளும் பக்தி எப்படிப்பட்டது? " என்ற உத்த்வரின் கேள்விக்கு 
பகவான் கூறிய பதில்.
.
"க்ருபாளு: அக்ருதத்ரோஹ: திதிக்ஷு: சர்வதேஹினாம்
ஸத்ய ஸாரோ அனவத்யாத்மா ஸம: ஸர்வோபகாரக:

எல்லோரிடமும் கிருபை உள்ளவன், யாரிடமும் விரோதம் இல்லாதவன், பொறுமையுடையவன், சத்தியமே பலமாகக் கொண்டவன், குற்றமில்லாத மனதை உடையவன்,எல்லோரிடமும் சமமான பார்வையை உடையவன், எல்லோருக்கும் நன்மையை செய்பவன்,

காமை: அஹததீ: தாந்த: ம்ருது: ஸுசி: அகிஞ்சன: 
அநீஹோ மிதபுக் சாந்த: ஸ்திரோ மத்சரணோ முனி:

ஆசைகளால் அலைக்கழிக்கப்படாத புத்தியை உடையவன், இந்த்ரியங்களை அடக்கியவன், கடினமற்றவன், நன்னடத்தை உள்ளவன், உடைமைகள் ஒன்றும் இல்லாதவன், காம்ய கர்மங்களை விட்டவன், மிதமான ஆகாரம் உண்பவன், சாந்தமானவன், ஸ்திரபுத்தியுடையவன் , என்னையே ஆச்ரயிப்பவன், என்னையே தியானம் செய்பவன்,

அப்ரமத்தோ கபீராத்மா த்ருதிமான் ஜிதஷட்குண:
அமாநீ மானத: கல்ப: மைத்ர: காருணிக: கவி:

எப்போதும் விழிப்புடன் இருப்பவன், ஆழ்ந்த மனத்தை உடையவன், திட மனதை உடையவன், பசி , தாகம், சோகம், மோஹம், முதுமை, மரணம் இவற்றை வென்றவன், புகழை விரும்பாதவன், மற்றவருக்கு மரியாதை செய்பவன், திறமையுள்ளவன், நட்புள்ளம் கொண்டவன், கருணையே வடிவானவன், நுண்ணறிவுள்ளவன்,

ஆக்ஞாயைவம் குணான் தோஷான் மயாதிஷ்டானபி ஸ்வகான் 
தர்மான் ஸந்த்யஜ்ய யா: ஸர்வான் மாம் பஜேத ஸ ஸத்தம:

வேதத்தில் என்னால் கூறப்பட்ட தர்மானுஷ்டானங்களையும் ஸ்வதர்மத்தையும் அவைகளின் குற்றம் குறைகளை உணர்ந்து ( எவை பகவானை தியானிப்பதற்கு அனுகூலமானது என்று அறிந்து) எல்லாவற்றையும் விட்டவனாய் என்னையே சேவிக்கின்றானோ அவனே சாதுக்களில் உத்தமமானவன்."

'ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,' என்ற கீதை ஸ்லோகத்தின் மறு வடிவம்.

"நான் கால தேசத்திற்கு அப்பாற்பட்டவன் என்றும், எல்லா உயிருக்குள்ளும் அந்தராத்மாவாக இருக்கிறேன் என்றும் அறிந்து என்னை முழுமனதுடன் பூஜிப்பவர்களே தலை சிறந்த பக்தர்கள். "

இதுவரை பக்தர்களின் லக்ஷணம் கூறப்பட்டது. இனி பக்தியின் லக்ஷணம் சொல்லப்படுகிறது.

"என் விக்ரஹங்களை பூஜிப்பது , வணங்குவது, என் பக்தர்களை பூசிப்பது, என் கதைகளையும் என் பக்தர்களின் கதைகளையும் கூறுவது, என்னை தியானம் செய்வதும் எனக்கு சகலத்தையும் அர்ப்பணிப்பது, வ்ரத தினங்களை அனுஷ்டிப்பது, என் ஆலயத்தில் உத்சவங்களை பாட்டு நர்த்தனம் முதலியவைகளால் கொண்டாடுவது, என் விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்வது, தனியாகவோ பலருடன் சேர்ந்தோ நந்தவனங்கள் கோயில்கள் முதலியன அமைப்பது, என் கோவில்களில் சேவை செய்வது, எதெது ப்ரியமானதோ அவைகளை எனக்கு நிவேதனம் செய்வது இவைகள் பக்தியின் லக்ஷணங்கள். இவை அளவற்ற பயனைத் தரக்கூடியவை. "

அடுத்து பகவானைப் பூஜிப்பதற்குரிய பதினோரு ஸ்தானங்களைக் கூறுகிறார்.

சூரியன், அக்னி, பிராமணன், பசுக்கள், விஷ்ணுபக்தன்,, ஆகாயம், வாயு, ஜலம், பூமி, ஆத்மா, சமஸ்த பிராணிகள் இவை என் பூஜைக்குரியவை.

சூரியனை வேத மந்திரத்தாலும், அக்னியை ஹவிஸ்ஸாலும், உத்தம ப்ராமணனை அதிதி ஸத்காரத்தினாலும், பசுக்களை புல் முதலியவை கொடுப்பதானாலும், விஷ்ணு பக்தனை பந்துவைப்போல் ஆதரிப்பதனாலும், ஆகாயத்தை ஹ்ருதயாகாசம் என்ற முறையில் தியானிப்பதாலும், ஜலத்தை தர்ப்பணம் முதலியவைகளாலும், பூமியை ரஹஸ்ய மந்திரங்கள் மூலம் புனிதப்படுத்துவதாலும், ஆத்மாவை போஜனம் முதலியவைகளை பகவதர்ப்பணமாக உட்கொள்வதாலும், க்ஷேத்ரக்ஞனாக உள்ள என்னை எல்லா உயிரும் சமம் என்ற பாவனையினாலும் ஆராதிக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிலும் என்னை சங்கு சக்ர கதா பத்ம பாணியாக சதுர்புஜங்களுடன் தியானிக்க வேண்டும்.
எவன் அடக்கத்துடன் யாகம் அன்னதானம் முதலியவைகளுடன் என்னையே பூஜிக்கிறானோ அவன் என்னிடம் சிறந்த பக்தியை அடைவான்.ஸஜ்ஜனங்களை சேவிப்பதால் ஏற்படும் பக்தியைத் தவிர்த்து சிறந்த உபாயம் இல்லை., ஏனென்றால் நான்தான் சாதுக்களுக்கு சிறந்த புகலிடம்."

" உத்தவா, இப்போது நான் சொல்லப்போவது மிகச்சிறந்தது. மிக ரஹஸ்யமானது. நீ எனக்குகந்த தோழன் ஆதலால் இதை உனக்கு உபதேசிக்கிறேன்."

சாங்கியம் யோகம் இவைகள் புலனடக்கம், தவம் முதலிய வேறு சாதனங்களை அபேக்ஷிக்கின்றன. ஆயினும் பலன் கிடைப்பது நிச்சயம் இல்லை. ஏனென்றால் சிறிது கவனக் குறைவு ஏற்பட்டாலும் தோல்வி நிச்சயம் ( விச்வாமித்திரர் போன்றவர்கள் சாக்ஷி) அதனால் சாது சங்கமானது பலனை நிச்சயம் கொடுக்கக்கூடியது என்று அதை அடுத்து வர்ணிக்கிறார் 


No comments:

Post a Comment