Sunday, June 28, 2020

Uddhava Gita part 4 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

உத்தவகீதை-ஹம்சாக்யானம் -4

உத்தவா, யோகமோ, ஞானமோ, தர்மமோ, வேத அத்யயனமோ,தவமோ, த்யாகமோ என்னை வசப்படுத்தாது. யாகம் செய்வது, தானதருமங்கள் செய்வது, இவைகளாலும் நான் வசப்படமாட்டேன். பற்றை எல்லாம் நீக்கும் சாதுக்களின் ஸங்கத்தினாலன்றி வ்ரதமும், மந்திரங்களும், தீர்த்தங்களும் யமநியமங்களும் என்னை வசப்படுத்தாது.

அசுரர்கள், ராக்ஷசர்கள், பட்சிகள் மிருகங்கள், கந்தர்வர் முதலிய தேவகணங்கள் ரஜோகுணமும் தமோகுணமும் மேலிட்டவர்கள் , மனிதர்களில் எல்லா வகையினரும் அந்தந்த யுகத்தில் சாதுக்களின் சேர்க்கையால் என்னை வந்தடைந்தார்கள்.

வ்ருத்ராசுரன், பிரஹ்லாதன், பலி, பாணன், விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜடாயு, தர்ம வியாதன் , சபரி, குப்ஜை, கோபிகள், முதலியோர் இதற்கு உதாரணம் ஆவார்

வேத அத்யயனம் இல்லாமலும், . மகன்களை உபாசிக்காவிட்டாலும், தவம் வ்ரதம் இவைகளை அனுஷ்டிக்காதபோதிலும் சத்சங்கத்தினாலேயே என்னை அடைந்தனர்.

தவம், யோகம் முதலியவைகளாலும் அடையமுடியாத என்னை அன்பு ஒன்றாலேயே கோபியரும் பசுக்களும் மரங்களும் மிருகங்களும் நாகங்களும் மற்றவர்களும் அடைந்தனர் .

அதனால் உத்தவா, தெரிந்தது , தெரியாதது, விதிக்கப்பட்டது , ஒதுக்கப்பட்டது, அறிந்தது, அறியாதது, கற்றது , கல்லாதது எல்லாவற்றையும் விட்டு சர்வாந்தர்யாமியாகிய என்னை சரணடைவாயாக. அதனால் நீ பயமற்றவனாக ஆவாய். ( ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ , அஹம் த்வாம் ஸர்வ பாபேப்ய: மோக்ஷயிஷ்யாமி மா சுச: என்ற கீதை வாக்கியத்தின் சாராம்சம்)

இங்கு உத்தவர் அர்ஜுனனைப் போல் ஒரு சந்தேகம் எழுப்புகிறார்.

"யோகேஸ்வர , உங்கள் சொற்களைக் கேட்டும் கூட என் மனதின் சம்சயங்கள் தீரவில்லை அதனால் மனம் குழப்பமடைகிறது. "

பகவான் சொல்கிறார்.
பரமாத்மா ஆதாரச்சக்கரம் முதலிய ஸ்தானங்களில் தோற்றத்தை உடையவராய், பிராணவாயுவுடன் ஆதாரசக்ரத்தை உடையவராய் பின்பு மணிபூரகத்தில் பச்யந்தீ என்ற பெயருடனும் விசுத்தி சக்ரத்தில் மத்யமா என்ற பெயருடனும் ஆன ரூபத்தை அடைந்து மற்ற மனதில் மட்டுமே ஒலிக்கும் சூக்ஷ்ம சப்தங்களாக ஆகி பின்னர் கடைசியில் கேட்கும் ஒலியாகவும் சொல்லாகவும் ஆகிறார்.

எவ்வாறு சூக்ஷ்மத்தில் உள்ள அக்னி அரணிகட்டையில் அரூபமாக இருந்து கடையப்பட்டு காற்றின் உதவியால் தீப்பொறியாக மாறி பெரும் நெருப்பாக ஆகிறதோ அதுபோல என் வேதரூபமான வாக்கு இவ்விதம் வெளியாகிறது.

இவ்விதம் பேசுதல் மட்டுமன்றி கை கால்களாலும் மற்ற அவயவங்களாலும் செய்பவைகளும் மனதின் எண்ணங்களும் முக்குணங்களின் செயல்பாடுகளேயாகும்.

ஒருவரேயாகவும் பேதமில்லாதவராகவும் உள்ள ஈஸ்வரன் , எவ்வாறு விதைகள் வயலை அடைந்து பலவாறாக முளைக்கின்றனவோ அவ்வாறே பலவாறாகத் தோன்றுகிறார்.

குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்ட நூல்களால் வஸ்திரம் முழுத் தோற்றத்தை அடைவது போல இந்த பிரபஞ்சம் முழுவதும் அந்த ஈஸ்வரனில் தோற்றம் அளிக்கிறது.

( அடுத்து சம்சாரம் என்பது ஒரு மரமாக உருவகம் செய்யப்படுகிறது. )

இந்த சம்சாரமாகிய வ்ருக்ஷத்திற்கு பாபம், புண்யம் என்ற இரண்டு விதைகள். கணக்கற்ற கர்ம வாசனைகளாகியய வேர்கள். முக்குணங்களாகிய கொம்புகள் . பஞ்ச பூதங்களாகிய கிளைகள். பதினொன்று இந்த்ரியங்களாகிய சிறு கிளைகள். இதில் ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரு பறவைகள் குடியிருக்கின்றன. வாதம், பித்தம், கபம் என்கிற மூன்று பட்டைகள். சுகம் துக்கம் என்கிற இருவகை பழங்கள்.

( 'த்வாசுபர்ணா ஸயுஜா ஸகாயா' – கடோபநிஷத் )

நகரத்தில் உள்ள கழுகுகள் ( விஷயசுகத்தை விரும்பும் க்ருஹஸ்தர்கள்) ஒரு வித பழங்களையும் ( துக்கம் ) வனத்தில் உள்ள அன்னப்பறவைகள் ( சன்யாசிகள்) மற்றொரு வகை பழங்களையும் (சுகம்) புசிக்கின்றனர். .

எவனொருவன் குருவின் உபதேசத்தால் மாயையினால் பல உருவங்களாகத் தோன்றும் பரமாத்மாவை அறிகிறானோ அவனே வேதத்தின் தத்தவத்தை அறிந்தவனாவான்


No comments:

Post a Comment