Friday, June 5, 2020

Uddhava gita in tamil part1

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

உத்தவகீதை - முன்னுரை

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீமத்பாகவதம் ஞானத்தில் பொரிக்கப்பட்டு பக்தி என்னும் சர்க்கரைப்பாகில் தோய்க்கப்பட்டது என்று சொல்கிறார். இதிலிருந்து பக்தி,ஞானம் இவை சேர்ந்தே உள்ளவை என்று அறியலாம். ஏனென்றால் ஒன்று மற்றொன்றிற்கு வழி வகுக்கிறது.

பதினோராவது ஸ்கந்தத்தில் காணும் உத்தவகீதை பெருமை பகவத்கீதையைப்போல் பெருமை வாய்ந்தது. விரிவானது.

தேவர்கள் பிரம்மாவுடன் த்வாரகைக்கு வந்து பரமபுருஷனான கிருஷ்ணனை ,அவருடைய அவதாரகாரியம் முடிந்ததால் அவர் இருப்பிடமான வைகுண்டத்திற்கு எழுந்தருளுமாறு கேட்டுக்கொண்டனர்.

கிருஷ்ணரும், ரிஷிகள் சாபத்தினால் த்வாரகையும் யது குலமும் அழியப்போகிறதை எண்ணி அது முடிந்த பின் தான் வைகுண்டத்திற்கு திரும்புவதாகக் கூறினார். பிறகு யாதவகுலப்பெரியோர்களை புண்ணிய தீர்த்தமாகிய பிரபாஸதீர்த்தத்திற்கு செல்லுமாறு கூறினார்.

அப்போது உத்தவர் கிருஷ்ணர் கூறியதைக் கேட்டு பல பயங்கரமான சகுனங்களையும் பார்த்து கிருஷ்ணரிடம் வந்து அவர் பாதம் வணங்கி பின்வருமாறு கூறினார்.

" தேவா தேவநாயகா, யோகநாயகா, உம்மைப்பற்றி கேட்டாலும் பாடினாலும் புண்ணியம் வளரும். நீர் இந்த யதுகுலத்தை சம்ஹரிக்க எண்ணம் கொண்டு ரிஷிகள் சாபத்தை விலக்க முயற்சிக்கவில்லை என்பது நிச்சயம். நான் உம்மைவிட்டுப் பிரிந்திருக்க மாட்டேன். என்னையும் உம்மோடு அழைத்துச்செல்ல பிரார்த்திக்கிறேன்." என்றார்.

கிருஷ்ணர் கூறினார். 
"யாதவகுலம் தமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டு மடியப்போகிறது. "

(இந்த ஸ்கந்த முடிவில் இதைப்பற்றி விரிவான விளக்கம் காணலாம் . இந்த பதிவு உத்தவகீதை பற்றி மட்டுமே.)

"இன்றிலிருந்து ஏழாவதுநாள் சமுத்திரம் த்வாரகையை விழுங்கிவிடும்.நான் விட்டுவிலகிய தேசத்தில் நீ இருக்கவேண்டாம் கலியுகத்தில் ஜனங்கள் அதர்மத்தில் ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள். நீ பற்றைத் துறந்து என்னிடம் மனதை செலுத்தி பூமியில் சஞ்சரிப்பாயாக." என்று கூறி அவருக்கு ஞானத்தை உபதேசித்தார். இதவே உத்தவகீதை எனப்படுகிறது.


உத்தவ கீதை-1

பகவான் கூறியதைக் கேட்ட உத்தவர் பின்வருமாறு பதிலளித்தார்.

'பகவானே, பற்றைத் துறப்பது என்பது உம்மிடம் பக்தியுள்ளர்களால் அன்றி வேறு எவராலும் முடியாத காரியம். நான், என்னுடையது, என்ற மூடபுத்தியுடைய நான் உமது மாயையால் இந்த தேகத்துடனும் அதனால் ஏற்பட்ட பந்தத்துடனும் அயர்கிறேன். உங்கள் ஆக்ஞைப்படி எவ்வாறு நான் செயலாற்றுவேனோ அந்த ஞானத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும்."

பகவான் கூறினார். 
"உலகத்தில் உண்மையை உணர்ந்த புருஷர்கள் தங்கள் முயற்சியாலேயே உலகபந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.

ஆத்மனோ குரு: ஆத்மைவ புருஷஸ்ய விசேஷத: 
யத் பிரத்யக்ஷானுமானாப்யாம் ச்ரேயோ அசௌ அனுவிந்ததே (ஸ்ரீ.பா. 11.7.19)

ஒரு புருஷனுடைய ஆத்மாவிற்கு அவன் ஆத்மாவே குரு. பிரத்யக்ஷம் அனுமானம் இவற்றின் மூலம் உயர்நலன் அடைகிறான். "

( உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானம் அவஸாதயேத்| ஆத்மன்யைவாத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மான: || (ப. கீ.6.5)

இந்த பகவத்கீதை ஸ்லோகத்தின் பொருள், தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவேண்டும் கீழே போகவிடக்கூடாது. ஏனென்றால் தனக்குத்தானே நண்பன் , தானே எதிரி.

அதாவது முற்றும் துறந்த நிலை தானே வராது. அதற்கு முயலவேண்டும். பக்தி, யோகம் அல்லது சாஸ்திரஞானம் இவை படிக்கட்டுகள். மேலே போகவேண்டுமென்றால் நாம்தானே ஏற வேண்டும்? ஏறத்துணிந்த பின் முயற்சியை விட்டுவிடக்கூடாது. இந்த ஸ்லோகத்தின் சாராம்சம்,.)

உத்தவருக்குக் கூறின இந்த ஸ்லோகத்தின் முதல் வரிக்கு இதுதான் அர்த்தம். அடுத்தவரி பிரத்யக்ஷத்தினாலும் அனுமாநத்தினாலும் உயர் நலம் அடையலாம் என்பது என்னவென்றால்,

நாம் தினம் தினம் இந்த உலகத்தில் எதுவும் சாஸ்வதம் இல்லை என்று பார்த்துக்கொண்டே இருக்கிறோம். இது பிரத்யக்ஷம். ஆனால் சாஸ்வதமான ஒன்று இதன் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது அனுமானம் .

இப்போது மலையிலிருந்து புகை வருவதைப் பார்க்கிறோம். இது ப்ரத்யக்ஷம். நெருப்பில்லாமல் புகையாது ஆகையால் மலையில் நெருப்பு இருக்கிறது. இது அனுமானம்.

பகவான் மேலும் சொல்கிறார்.

"ஸ்திரமான புத்தியை உடையவர்கள், ஞானம் யோகம் இவற்றில் வல்லவர்கள் என்னை மனித ரூபத்தில் பூரணனாகவும் சர்வசக்திமானாகவும் காண்கிறார்கள். இந்த்ரியங்களை வென்றவர்கள் மனதுக்கும் புத்திக்கும் அப்பாற்ப்பட்ட என்னை உள்ளபடி காண்கிறார்கள்."

"புராதனமான ஒரு வரலாற்றை கூறுகிறேன் கேள்" என்று சொல்லி பகவான் யதுவுக்கும் அவதூதருக்கும் இடையே நடந்த சம்பாஷணையை கூற ஆரம்பிக்கிறார். மிகவும் ஸ்வாரஸ்யமான இதை அடுத்து காண்போம்.


No comments:

Post a Comment