Wednesday, November 20, 2019

Thirunangoor temple

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள்  ஒரு விளக்கம் 71

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

சோழநாட்டு திவ்யதேசங்கள்  திருநாங்கூர் 11 திவ்ய தேசங்கள் அறிமுகம் 01

சோழநாட்டுத் திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும்
ஆறு திவ்ய தேசம் உள்ளது. இவ்வூரைச் சுற்றி சுமார் 1/2, 1, 1 1/2 மைல்
தூரங்களில் உள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து திருநாங்கூர் பதினொரு
திவ்ய தேசம் என்றே வழங்குவர்.

     ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில்
நடைபெறும் கருட சேவைக்கு இந்த 11 பெருமாள்களும் எழுந்தருள்வர். இந்த
11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் வந்து ஒருவருக்கு அடுத்து
ஒருவராக மங்களாசாசனம் செய்வார். அதன்பின் திருமங்கையாழ்வாரை
மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வர். இந்த கண்கொள்ளா
காட்சியான கருட சேவையை காண்பதற்கு இந்தியா வெங்கிலும் உள்ள
பக்தர்கள் கூடுவர்.

     அந்த 11 திருப்பதிகள் விவரம்.

இந்த 6
     1. திருக்காவளம்பாடி             

     2. திருஅரிமேய விண்ணகரம்      ஸ்தலங்களும்
     3. திருவண்புருடோத்தமம்         

     4. திருச்செம்பொன் செய்கோவில்   

     5. திருமணிமாடக்கோவில்         

     6. திருவைகுந்த விண்ணகரம்

திருநாங்கூருக்குள்ளேயே இருக்கிறது.
     7. திருத்தேவனார்த் தொகை
     8. திருத்தெற்றியம்பலம்
     9. திருமணிக்கூடம்
     10. திருவெள்ளக்குளம்
     11. திருப்பார்த்தன் பள்ளி

     திருநாங்கூரில் 11 திவ்ய தேசங்கள் உண்டானமைக்கு பலவிதமான
கதைகள் உண்டு. இருப்பினும் (பாத்ம புராணத்தில்) கூறப்பட்டுள்ள கூற்றே
பிரதானமாக பேசப்படுகிறது. புரசங்காடு எனவும், பலாசவன சேத்திரம் எனவும்,
மதங்காச்சரமம் எனவும் நாகபுரி எனவும் பல பெயர்களில் வழங்கப்படும் இந்த
திருநாங்கூர் பகுதிக்கு உபய காவேரி மத்திமம் என்றும் ஒரு பெயர் உண்டு.
தெற்கே காவேரிக்கும் வடக்கே மண்ணியாறுக்கும் இடைப்பட்ட இப்பகுதி
உபயகாவேரி மத்திமம் ஆகும்.

     ஒரு சமயம் பூலோகத்தில் பராசக்தியின் தந்தையாக இருந்த தட்சன் ஒரு
யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே
பார்வதி சிவனைநோக்கி தட்சனுக்கு புத்திமதி கூறி தங்களை அழைக்கச்
செய்கிறேன் என்று சென்று தட்சனுக்கு புத்திமதிகள் கூற அவன் சிவனை
மேலும் இகழ்ந்து பேசி அனுப்பினான். இதனால் கோபமுற்ற பார்வதி தட்சனை
சபித்து அவன் யாகத்தை அழித்துவிட்டு மீண்டும் சிவனிடம் வர, சிவன்
ஏற்றுக்கொள்ள மறுத்து கோபம் அடங்காமல் ருத்ர தாண்டவம் ஆடினார்
என்ற கதை எல்லோருக்கும் தெரியும். சற்றேனும் கோபம் தணியாத சிவன்
இவ்வுலகமே அழியும்படியாக கொடூர நடனத்தில் இந்த உபயகாவேரி
மத்திமத்தில் வந்து ஆடியதாகவும் அப்பொழுது சிவனின் தலையில் உள்ள
சடாமுடித் தரையில் பட்ட உடன் அதில் இருந்து ஒரு சிவன் தோன்றி
கொடூர நடனம் ஆட, இவ்வாறு ஒவ்வொரு முறையும் சிவனுடைய தலைமுடி
தரையில் அடிபட அதிலிருந்து ஒவ்வொரு சிவனாக தோன்ற தேவர்களும்,
ரிஷிகளும் பேரழிவு வந்துவிடுமோ என்று எண்ணி உலகை காக்குமாறு
மகாவிஷ்ணுவிடம் வேண்ட பரமபதத்தில் இருந்து மகாவிஷ்ணு புறப்பட்டார்.
இதற்குள் இந்த உபயகாவேரி மத்திமத்தில் 11 சிவன்கள் (சிவரூபங்கள்)
தோன்றி கொடும் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க பரமபதத்திலிருந்து வந்த
எம்பெருமான் இவ்விடத்திற்கு எழுந்தருளினான். நாராயணனை பரமபத
நாதனாக கண்டதும் சிவன் தனது கொடூரமான தாண்டவத்தை நிறுத்தினான்.
என்னைப்போல் தாங்கள் 11 திருமால்களாக காட்சி அளிக்கவேண்டும் என்று
சிவன் வேண்ட பூலோகத்தில் அர்ச்சாவதார மூர்த்திகளாக உள்ள 10
பெருமாள்களை பரமபதநாதன் நினைத்த மாத்திரத்தில் 10 பெருமாள்களும்
இங்கு எழுந்தருளினர். பேராச்சரியம் உற்ற சிவன் ஏகாதச மூர்த்தியாக காட்சி
தரவேண்டும் என்று விண்ணப்பிக்க, அவ்வண்ணமே செய்வதாக பெருமாள்
அருள்பாலித்தார்.

     11 பெருமாள்கள் நின்ற இடந்தான் உபயகாவேரி மத்திமத்தில்
அமைந்துள்ள இந்த திருநாங்கூர் 11 திருப்பதிகள் ஆகும்.

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  திருநாங்கூர்  திவ்யதேசங்கள் அறிமுகம் பற்றி காணலாம் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

No comments:

Post a Comment