Friday, November 29, 2019

Intelligent fish or the seller ...?

நடைமுறை அரசியல்

🏏🏏🏏🏏🏏🏏🏏

சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக்கொண்டிருந்தனர். வியாபாரம் மிகவும் மந்தமாகத்தான் இருந்தது.

சற்று நேரம் கழித்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். முதல் பையனிடம் சென்று மீன் விலை விசாரித்தார்.

"ஒரு கிலோ 100 ருபாய் ஆகும், சார்," என்று அவன் கூறினான்.

சற்று தூரத்தில் இரண்டாவது பையனும் அதே வகை மீனை வைத்துக்கொண்டிருந்ததால், அவனிடம் சென்று இந்த விலைக்குக் குறைவாகக் கொடுக்கச்சொல்லி, பேரம் பேசி வாங்கலாம் என்று நினைத்து அவனை அணுகினார்.

விலை என்னவென்று விசாரித்தபோது, அவனோ, " மீன் விலை ஒரு கிலோ 500 ருபாய் ஆகும், சார்," என்று கூறினான்.

விலையைக்கேட்டுத் திடுக்கிட்டுப்போன அவர், " என்னப்பா இது ? அந்தப் பையனும் இதே மாதிரி மீன்தான் வைத்திருக்கிறான். அவன் விலை 100 ருபாய் என்று சொல்கிறான். நீ அதே மாதிரி மீனுக்கு விலை 500 ருபாய் என்று சொல்கிறாயே. இது நியாயமா?" என்று வினவினார்.

அந்தப் பையனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சொன்னான்:

" சார், பார்க்கத்தான் இரண்டும் ஒரே மாதிரியாகத்தெரியும். ஆனால் என்னுடைய மீன் மிகவும் விசேஷமானது. அதனால்தான் கூடுதல் விலை," என்றான்.

"அப்படி என்னப்பா விசேஷம் உன் மீனில் இருக்கிறது?" என்று கேட்டார் வாடிக்கையாளர்.

"சார், இது புத்திசாலியான மீன். இதைச் சாப்பிடுபவர்களும் நாளடைவில் புத்திசாலியாகி விடுவார்கள். அதனால்தான் இவ்வளவு விலை," என்றான் பையன்.

"உண்மையாகவா ?" என்று வியந்தார் வாடிக்கையாளர்.

"வாங்கிப்பாருங்கள், சார், உங்களுக்கே தெரியும்,"

"சரி,சரி, ஒரு கிலோ கொடு. 'ட்ரை' பண்ணிப் பார்க்கிறேன்", என்று சொல்லி, ஒரு கிலோ மீனை 5௦௦ ருபாய்க்கு வாங்கிச் சென்றார்.

அடுத்தடுத்து தொடந்து 6 நாட்களுக்கு அதே மீனை அதே பையனிடம் அதே விலைக்கு வாங்கிச் சென்று சாப்பிட்டுவந்தார்.

புத்திசாலித்தனத்தில் ஏதாவது முன்னேற்றம் ... ?

ம்ஹும். ...! எதுவும் தெரியவில்லை.

அப்போதுதான் அவருக்குப் புரிந்தது "புத்திசாலி மீன்" என்று அந்தப் பையன் சொன்னது எல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று.

கடுமையான கோபம் வந்துவிட்டது அவருக்கு. 'இன்று அவனைப்போய் 'உண்டு அல்லது இல்லை' என்று ஆக்கிவிடவேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் சந்தைக்குச் சென்றார்..

அந்தப் பையனிடம் சென்று, தன் கோபத்தை வெளிக்காட்டாமல், "என்னப்பா, அந்த புத்திசாலி மீன் இருக்கா? ", என்று இவர் கேட்க, இவரின் கோபத்தைப் புரிந்துகொள்ளாமல் அவனும், " ஓ, இருக்கே. உங்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருகிறேனே ! ", என்று உற்சாகமாகக் கூறினான்.

வந்ததே கோபம் அவருக்கு !

"அயோக்கியப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய் ? உன் பேச்சைக்கேட்டு ஒரு வாரமாக நானும் அந்த மீனை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டேன். அணுவளவும் முன்னேற்றம் இல்லை. புத்திசாலி மீனும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. என்னை ஏமாற்றிவிட்டாய். உடனடியாக என் பணத்தையெல்லாம் திருப்பித் தந்துவிடு. இல்லையென்றால் உடனடியாகப் போலீசைக் கூப்பிட்டுவிடுவேன்", என்று கத்தினார்.

பையனோ அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான்:

" சார், இங்கே பாருங்க. இதே மீனை புத்திசாலி மீன் என்று நான் ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்னபோது நீங்கள் ஆட்சேபிக்கவேயில்லை. இப்போ பாருங்க, ஒரு வாரத்திலேயே இது புத்திசாலி மீன் இல்லை என்று நீங்களே கண்டு பிடித்துவிட்டீர்கள். என்ன பிரமாதமான முன்னேற்றம்..! 

இதைப் போய் முன்னேற்றம் இல்லை என்று சொல்கிறீர்களே, சார் ! தொடர்ந்து சாப்பிடுங்க, சார். இன்னும் பிரமாதமான முன்னேற்றம் கிடைக்கும்."

வாடிக்கையாளர் வாயடைத்து நின்றார்.

கற்றது கையளவு
கல்லாதது உலகளவு.

No comments:

Post a Comment