Wednesday, November 6, 2019

Garuda puranam in tamil

2. மஹாவிஷ்ணு முதல்வர்

விஷ்ணு கருடனை அழைத்து '' நீ இந்த புராணத்தை கூறு'' என்று சொல்லி நமக்கு கிடைத்தது தான் கருடபுராணம். அகஸ்திய சம்ஹிதையில் இடம் பெற்றது.

சுதர் கருட புராணத்தை பற்றி குறிப்பிட்டதும் மற்ற ரிஷிகள் ''ஆஹா வேத வியாசரா தங்களிடம் இந்த புராணத்தை விவரித்தார் ? விஷ்ணு சம்பந்தமான இதை எங்களுக்கு தாங்கள் உபதேசிக்கவேண்டும்'' என்கிறார்கள்.
சுதர் :''பதரியில் சில முனிவர்களோடு சென்றபோது வேதவியாசர் அங்கே பகவானை தியானம் பண்ணிக் கொண்டிருந்தார். அவரை வணங்கி ''நீங்கள் பகவானோடு ஒன்றி தியானம் செய்பவர்.இந்த பிரபஞ்ச காரணன் ஹரியை பற்றி எங்களுக்கு காது குளிர சொல்லவேண்டும்'' என்றேன்

''சுதா, எனக்கு நாரதர், தக்ஷன் மற்றும் பலர் சகிதம் இருக்கும்போது ப்ரம்மா தான் கருட புராணத்தை உபதேசித்தார்'' என்கிறார் வேத வியாசர்.

''வியாச மகரிஷி, நீங்கள் நாரதர், தக்ஷன் மற்றோருடன் இருக்கும்போதா ப்ரம்மா கருடபுராணத்தை சொன்னார்?''

''ஆம் ப்ரம்மலோகத்தில் நான், தக்ஷன், நாரதர், ப்ருகு, இன்னும் சிலர் பிரம்மாவை வணங்கி அதை எங்களுக்குச் சொல்ல வேண்டினோம்."
''வியாசரே, எனக்கும் ருத்ரன் சிவ பெருமானுக்கும் இதை நேரடியாக சொன்னது விஷ்ணுவே'

சொல்கிறேன் கேளும்'' என்கிறார் ப்ரம்மா:
''இந்திராதி தேவர்களுடன் நான் கைலாசம் சென்ற போது ருத்ரன் தியானத்தில் இருந்தார், அவரை வணங்கி ''எங்களுக்கு ஞானத்தை
உபதேசிக்கவேண்டும் '' என்று கேட்டோம்.
''பரமசிவன் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

''நான் சர்வ வியாபி விஷ்ணுவை தான் த்யானம் பண்ணிக்கொண்டிருந்தேன். அவர் அணுவிலும் அணு. மஹத்திலும் மஹத். சஹஸ்ர (ஆயிரம்) சிரமுடையவர். ஆயிரம் கண்ணுடையவர். எதெல்லாம் சிறந்ததோ அது அவரே. மஹா புருஷன் என்று அழைக்கப் படுபவர். அவரே சங்கர்ஷணன் எனும் சம்ஹார மூர்த்தி. பிரபஞ்சமே உருவானவர், தன்னில் பிரபஞ்சத்தை உடையவர். ஸ்வேத திவீபம் எனும் வெண்ணிற ஜல பிரதேசத்தில் (பாற்கடல்) உறைபவர் '' என்கிறார் பரமேஸ்வரன் .

பரமசிவன் நாராயணனிடம் ''ஹரி, தேவாதி தேவா, , வணங்கப்படவேண்டிய ஈஸ்வரன் யார், அதற்கான முறை என்ன, விரதம், ப்ரீதி செய்யும் வழி பாடு யாவை, அவர் உருவம் எது? எவரிலிருந்து இந்த பிரபஞ்சம் உருவானது ? யார் அதை காப்பது? அவர் அவதாரங்கள் என்ன? எவரில் சர்வமும் அடக்கம்? மன்வந்தரங்கள் உருவாகிறது? இவற்றை விளக்கவேண்டும்"" என்று கேட்கிறார்.

அப்போது தான் ஹரி ருத்ரனுக்கு, பிரம்மா மற்றும் தேவாதி தேவர்களுக்கு, ஈஸ்வர மஹிமை, யோக சாஸ்திரம், பதினெட்டு ஞான மார்கங்கள் பற்றி சொல்கிறார்.

''உங்கள் கேள்விக்கு பதில் நானே. வேண்டுவோர்க்கு அருள்பவன், காப்பவன், பிரபஞ்சம் உருவாகும் வித்து. ரக்ஷிப்பவன், அழிப்பவன், தீயவர்களை ஒடுக்குபவன், மத்ஸ்ய (மீன்) முதலான அவதாரங்களை எல்லாம் கொண்டு பூமியை காப்பவன்
.மண்ணும் விண்ணும் தோற்றுவித்தவன். சகல ஸாஸ்த்ரங்களும் , ஞானமும் நானே. தியானமும் நானே தியான பலனும் நானே. சகல மண்டலங்களும், இதிகாசங்களும் நானே. ''ருத்ரா, நானே எல்லா தெய்வமும்.'' ''சம்போ, ஞானத்தின் எந்த உருவமும் நான் தான். நானே ப்ரம்மா சிவன் அம்சமாக உள்ளேன். சகல வர்ணமும் நானே. சூர்ய , சந்திர, கிரஹங்களும் நானே. பூமியில என்னை நோக்கி தவமிருந்த கருடனிடம் ''உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?'' என்றபோது கருடன் ''ஓ ஹரி, என் தாய் வினதை, நாகர்களிடம் அடிமையாக இருக்கிறாள். தேவர்களை வென்று அம்ருதத்தை பெறவேண்டும். என் தாயை நான் அடிமைத்தளையிலிருந்து மீட்க வேண்டும். எல்லாவற்றிலும் மேலாக நான் தங்களின் வாகனமாக வேண்டும். சக்திமானாக, என்றும் எங்கும் தங்களை இணை பிரியாதவனாக, நாகர்களின் எமனாக புராண சம்ஹிதைகளை இயற்றும் ஆசிரியனாக இருக்க அருள் புரியவேண்டும்'' என்றான் கருடன்.
கருடன் வேண்டுகோளுக்கு மகிழ்ந்து விஷ்ணு '' ததாஸ்து'' (அப்படியே ஆகட்டும்) என்று கருடனுக்கு வரம் தந்தார்

நாகர்களின் அடிமைத்தளையிலிருந்து தனது தாய் விநதையை கருடன் விடுவித்தான் தேவர்களை வென்று அம்ருத கலசத்தை கொண்டுவந்தான். வேகமான, கனமான, நிரந்தரமான வாகனமாக கருடன் விஷ்ணுவுக்கு சேவை செய்து வருகிறான். கருடபுராணம் இயற்றினான். அவன் பெயரால் கருட புராணமாக அது விளங்குகிறது. கருடனை உபதெய்வமாக வணங்குகிறோம் . புராணங்களில் மேன்மை பெற்றதாக விஷ்ணுவின் அருளால் கருடபுராணம் சிறப்பு வாய்ந்தது. கருடன் விஷ்ணுவை வேண்டிக்கொண்டு அவர் பெருமையை இந்த புராணமாக பாடினான்.

கருடன் அதை காஸ்யப மகரிஷியிடம் கூறி, அதை அவர் பிரயோகித்து கருகி எரிந்து போன ஒரு மரத்துக்கு புத்துயிர் அளித்தார்.

மேலும் கருட புராணத்துக்குள் செல்வோம்.

 గరు 

No comments:

Post a Comment