Friday, August 30, 2019

Dhanvantari

*22. தன்வந்தரி அவதாரம்*

பாற்கடலை கடைந்தபோது அமிர்த கலசத்தை தாங்கியவாறு தோன்றியவரே தன்வந்திரி. அமிர்தத்தை கொண்டு வந்தபிறகு, தன் தந்தையான விஷ்ணுவைப் பார்த்து கேட்கிறார் "எனக்கு யக்ஞபாகத்தில் ஒரு இடம் கொடு. எனக்கு இந்த உலகத்தில் இருப்பதற்கு ஒரு இடம் கொடு". (அசுர மோகனத்திற்காக செய்யப்பட்ட ஒரு நாடகம் இது).

தன்வந்திரி கேட்டதைப் போலவே தந்தையான மகாவிஷ்ணு வரம் அளிக்கிறார். "நீ காசிராஜனின் வம்சத்தில் அவதரிப்பாய். அப்போது உனக்கு யக்ஞத்தில் பங்கு கிடைக்கும். மேலும் உலகத்தில், ஆயுர்வேத சாஸ்திரத்தைக் கண்டுபிடித்தவன் என்றே புகழ் பெறுவாய். உனக்கு முன்னர் பிறந்த தேவர்கள் தாங்கள் செய்த யாகத்தில் தம் பங்கினை ஏற்கனவே பெற்று விட்டதால், உனக்கு அதில் பாகத்தை அளிப்பது சாத்தியமில்லை'. 

தந்தையான விஷ்ணுவின் ஆணையின் பேரில், இதே தன்வந்திரி பின்னர் காசிராஜனின் மகனாகப் பிறக்கிறார். யயாதியின் வம்சத்தில், தீர்கதனு என்னும் காசிராஜனின் மகனாக, தன்வ என்பவன் பிறக்கிறான். இவன் ஸ்ரீஹரியின் தன்வந்திரி ரூபத்தைக் குறித்து தவம் செய்தான். 

விஷ்ணு தரிசனம் அளித்தபோது, "நீயே எனக்கு மகனாகப் பிறக்கவேண்டும்" என்று வரம் கேட்கிறான். ஸ்ரீஹரியும், "அப்படியே ஆகட்டும்" என்று வரமளித்து, அந்த தன்வ ராஜனுக்கு மகனாகப் பிறந்து, தன்வந்திரி என்ற பெயரில் புகழ்பெற்றார்.

பாரத்வாஜ முனிவர்களிடமிருந்து ஆயுர்வேதத்தைக் கற்றார். ஆயுர்வேதத்தினை, 1. உடல் சிகிச்சை 2. குழந்தைகளுக்கான சிகிச்சை 3. வீட்டு சிகிச்சை 4. உடம்பில் மேல் பகுதிக்கான சிகிச்சை 5. அறுவை சிகிச்சை 6. பல் சிகிச்சை 7. ஜுர சிகிச்சை 8. பாலியல் பிரச்னைகளுக்கான சிகிச்சை என்று எட்டு பாகங்களாகப் பிரித்து, ஆயுர்வேதத்தைத் துவக்கியவர் என்று பெயர் பெற்றார். 

தன்வந்திரிக்கு கேதுமந்த என்ற மகனும், அவனுக்கு பீமரத என்னும் மகனும் பிறந்தனர். இப்படியாக இவரின் வம்சம் வளர்ந்தது. இந்த தன்வந்திரி, ஸ்ரீஹரியின் ஆவேச-அவதாரமே தவிர, ஸ்வருப அவதாரம் இல்லை என்று பாகவதம் சொல்கிறது. 

தன்வ = நோய், நொடி, கஷ்டங்களை; தரி = நாசம் செய்பவன் என்று பொருள். 'அஞ்ஞானரோக' என்னும் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து பிரச்னைகளையும் நாசம் செய்பவன். தந்த்ரசார சங்க்ரஹ தியான ஸ்லோகத்தில் ஸ்ரீமதாசார்யார் தன்வந்திரி என்னும் பெயரின் பொருளை விவரமாகச் சொல்லியிருக்கிறார். 

சந்திரமண்டலத்தில் அமர்ந்து, அமிர்தகலசத்தைப் பிடித்தவாறு இருக்கும் தன்வந்திரியின் படத்தை / உருவச்சிலையை பூஜிப்பதால் நல்ல ஆரோக்கியம் கிட்டும். 

தென் கர்நாடகத்தில் உள்ள கொக்கட என்னும் ஊரில் தன்வந்திரி ஆலயம் ஒன்று உள்ளது. ஸ்ரீமதாசார்யர் இந்த கோயிலுக்கு வந்திருக்கிறார் என்று மத்வவிஜயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

நானாவித கஷ்டங்களில் மூழ்கியிருக்கும் நாம் அனைவரும் இந்த சம்சார சாகரத்தைக் கடந்து, ஸ்ரீஹரியை அடைவதற்கு, தன்வந்திரியையே சரணடைவோம்.

"அனைத்தையும் பார்க்கிறேன். ஆனாலும் நான் குருடன். அனைத்தையும் கேட்கிறேன். ஆனாலும் நான் செவிடன். ஓயாமல் அரட்டை அடிக்கிறேன். ஆனாலும் நான் ஊமை. வயிறு நிறைய உண்கிறேன். ஆனாலும் எனக்கு நாக்கே இல்லை. ஒரு நொடியும் வீணாக்காமல் ஏதோ வேலை செய்கிறேன். ஆனால் எனக்கு கைகளே இல்லை. 

முகத்திற்கு அழகான அலங்காரங்களைச் செய்து கொள்கிறேன். ஆனால் எனக்கு தலையே இல்லை. எல்லா இடத்திற்கும் போய் வருவேன். ஆனால் எனக்கு கால்களே இல்லை. 

ஹே! தன்வந்திரியே! எனக்கு இந்திரியங்கள் இல்லாததால் எந்த நோயும் இல்லை. உன்னையே தேடி அலையும் ஒரே ஒரு இந்திரியமாவது கொடுத்து எனக்கு அருள்வாயாக, ஸ்வாமி! உண்மை வழியில் நடப்பதற்கு எனக்கு அருள்வாயாக" என்று வணங்க வேண்டும்"

தன்வந்திரி ரூபியான ஸ்ரீஹரி அப்த்யவிலிருந்து என்னை ரட்சிக்கட்டும். தேவர்களின் அனைத்துவித கஷ்டங்களையும் போக்கி, அவர்களுக்கு நலன்களை அள்ளி வழங்கிய கருணை மிகுந்தவன் தன்வந்திரி. 

அமிர்தத்தைப் பெறத் துடிக்கும் அனைத்து சாதகர்களுக்கும், காமம், அகங்காரம் முதலியவற்றை ஒழிக்கும் செயலில், பல்வேறு பிரச்னைகள் வரும்போது அவற்றை நீக்கி நமக்கு அருள்பவனே தன்வந்திரி. 

உடலுக்கு வரும் நோய்கள் மட்டுமல்லாது, மனதிற்கு வரும் நோய்களையும் நீக்கி, சஜ்ஜனர்கள் அனைவர்க்கும், நிரந்தரமான அமிர்தத்தை கொடுக்கும் தன்வந்திரியை தினம்தோறும் ஒவ்வொரு நொடியும் தியானிக்க வேண்டும். 

சந்த்ரௌககாந்தி மம்ருதோரு கரைர்ஜகந்தி
ஸஜ்ஜீவயந்த மமிதாத்ம சுகம் பரேஷம் |
ஞானம் சுதாகயஷமேவ ச ஸந்ததானம் 
சீதாம்ஷுமண்டலகதம் ஸ்மரதாத்ம சம்ஸ்தம் ||

எண்ணிக்கையற்ற சந்திரர்களின் ஒளியைக் காட்டிலும் அதிக பிரகாசமுள்ளவர். அமிர்தத்தை பொழிந்து கொண்டிருக்கும் கிரணங்களால் அனைத்து உலகையும் வாழ வைத்துக் கொண்டு இருப்பவர். ஆனந்த வடிவுடையவர். ரமா, பிரம்மா முதலியோர்க்கு தலைவர். ஞான முத்திரை, அமிர்த கலசம் இரண்டையும் இரு கைகளில் ஏந்தி இருப்பவர். சந்திர மண்டலத்தில் வீற்றிருப்பவர் - இப்படியாக தியானிக்க வேண்டும். 

மூர்த்னி ஸ்திதாதமுத ஏவ சுதாம் ஸ்ரவந்தீம்
ப்ரூமத்யகாச்ச தத ஏவ ச தாலுஸம்ஸ்தாத் |
ஹார்த்ராச்ச நாபிசதனாததர ஸ்திதாச்ச 
த்யாத்வாகபி பூரிததனுர்துரிதம் நிஹந்த்யாத் ||

நம் தலையில், புருவங்களுக்கு நடுவில், கன்னங்களில், இதயத்தில், உடலின் கீழ் பாகத்தில் - இந்த அனைத்து இந்திரியங்களிலும், சந்திரமண்டலத்தில் வீற்றிருக்கும் தன்வந்திரி ரூபியான ஸ்ரீஹரி, அமிர்தமழையைப் பொழிந்து வருகின்றார். அந்த அமிர்தமழை தன் உடலில் நிரம்பியிருக்கிறது என்று நினைத்து ஜெபிப்பவர்கள் தீயவைகளை விலக்கிவிடுவார்கள். (இப்படி தியானிப்பதால் தீயவைகள் விலகிவிடும்).

அக்ஞான துக்கபயரோக மஹாவிஷாணி
யோகோக்யமாஷு வினிஹந்தி சுகம் ச தத்யாத் |
உன்மாதவிப்ரமஹர: பரதஸ்ச சாந்த்ர
ஸ்வானந்தமேவ பதமாபயதி ஸ்ம நித்யம் ||

இந்த தன்வந்திரி மந்திரமானது, அஞ்ஞானம், சந்தேகம், விபரீத ஞானம், ஆத்யாத்மிக துக்கங்கள், பிசாசுகளினால் வரும் பயங்கள், நோய்கள், எதிரிகளால் வரும் பிரச்னைகள், விஷம் - இவைகளை விரைவில் போக்கி சுகத்தைக் கொடுக்கக்கூடியது. 

அதுமட்டுமல்லாமல், பைத்தியம், பயப்படுதல் ஆகியவற்றை நீக்குவது மட்டுமல்லாமல், மறு உலகத்திலும் ஒரு நிரந்தரமான இடம் - இந்த மந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு கிடைக்கும். 

த்யாத்வைவ ஹஸ்ததலகம் ஸ்வம்ருதம் ஸ்ரவந்தம் 
தேவம் ஸ யஸ்ய ஷிரஸி ஸ்வகரம் நிதாய |
ஆவர்தயேன்மனுமிமம் ஸ ச வீதரோக:
பாபாதபைதி மனஸா யதி பக்தினம்ர: ||

தன்வந்திரி மந்திரத்தை தியானிப்பவன், தன் தலை முதலான இந்திரியங்களில் அமிர்தத்தைப் பொழிந்து கொண்டிருக்கும் தன்வந்திரியை, தன் கைகளில் இருப்பவராக தியானித்து, அந்தக் கையை ஒரு ரோகியின் தலையில் வைத்து, தன்வந்திரி மந்திரத்தை ஜெபித்தார் என்றால், அவர் எல்லா நோய்களும் நீங்கியவராகவும், எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை அடைந்தவராகவும் ஆகிறார். இதற்கு அந்த ரோகி, ஸ்ரீஹரி பக்தி உடையவராகவும், சிரத்தை உள்ளவராகவும் இருத்தல் அவசியம். 

ஆத்மஸம்ஸ்தம்' என்ற சொல்லின் மூலம் ஸ்ரீமதாசார்யர் தியானம் எங்கு செய்யவேண்டும் என்று சொல்கிறார். நம் இதயத்தில், அக்னி மண்டலம், சந்திர மண்டலம் மற்றும் சூர்ய மண்டலங்கள் உள்ளன. இதயத்திலிருக்கும் சூரிய மண்டலத்தில் சூரிய நாராயணனை நினைத்து காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதைப் போல, சந்திர மண்டலத்தில் தன்வந்திரியை நினைத்து ஜபம் செய்யவேண்டும். 

இதயத்திலிருக்கும் சந்திரமண்டலத்தில் இருக்கும் தன்வந்திரியானவர், நம் உடலில் இருக்கும் 72,000 நாடிகளில் தன் ஒளியைப் பாய்ச்சி நம் உடலை அமிர்தத்தால் நிரப்புகிறார். அதுமட்டுமல்லாமல், நம் தலையில், புருவங்களுக்கு நடுவில், உள் நாக்கினில், நாபியில் மற்றும் உடலின் கீழ்பாகத்தில் இருக்கும் ஷட்-சக்கரங்களில் (ஆறு சக்கரங்களில்) இதே தன்வந்திரி நிலைத்திருந்து, அமிர்த மழையை பொழிகின்றார். 

எந்த மந்திரத்திற்கும் இல்லாத மகிமை தன்வந்திரி மந்திரத்திற்கு உண்டு. இதற்கு காரணம் தந்த்ரசார சங்க்ரஹத்தில், ஸ்ரீமதாசார்யர் தன்வந்திரி மந்திரத்தின் மகிமைகளைப் பற்றி மிகவும் அருமையாக விவரித்திருக்கிறார். அனைத்து மந்திரங்களின் கிரீடம் இதுவே என்று கொண்டாடுகிறார். 

'தன்வந்தரோ மஹாமந்த்ர: ஸம்ஸ்ருதிவ்யாதி நாஷன:' என்று சொன்னதின் மூலம், தன்வந்திரி மந்திரத்திற்கு, தற்காலிக நோய்கள் மட்டுமல்ல, சம்சாரத்தில் வரும் நோய்கள் அனைத்தையுமே தீர்க்கும் சாமர்த்தியம் உள்ளது என்று கண்டிப்பான குரலில் தெளிவாகக் கூறுகிறார். அஷ்டமஹா மந்திரங்களுக்கு அடுத்த நிலையில் தன்வந்திரி மந்திரம் உள்ளது.

பெண்கள் தன்வந்திரி மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும் என்பதில்லை. தன்வந்திரி சூளாதியைப் படித்தே அதிலிருந்து சித்தி அடையலாம் அல்லது அவர்கள் கணவரின் மூலம் ஜெபம் செய்வித்து, அவரின் மூலமே நோய்களுக்கான பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம். அல்லது அவர் மூலம் பிரணவம் இல்லாத தன்வந்திரி மந்திரத்தை உபதேசம் பெற்று, அதனை ஜெபிக்கலாம். நோக்கம் தெளிவாக இருந்தால், அதை அடையும் வழிகள் ஆயிரம் உண்டு. 

மருத்துவராக இருப்பவர் தினமும் தன்வந்திரி மந்திரத்தை ஆயிரம் முறை ஜெபம் செய்து தன் உள்ளங்கையில் மருத்தினை வைத்து, தன்வந்திரி மந்திரத்தை ஒரு முறை ஜெபித்து, அதை நோயாளிகளுக்கு கொடுத்தால் கொடுக்கும் சாதாரண மருந்தினால், பெரிய நோய்களும் கூட தூர ஓடிப்போகும். அதிக நோயாளிகளுக்கு சேவை செய்யும் பாக்கியம் தேடிவரும். 

அமிர்தத்தைப் பொழிந்து கொண்டிருக்கும் தன்வந்திரியை மனதில் நினைத்து, தலையில் கைவைத்தோ அல்லது, இன்னொரு மந்திர-உபாசகர் தன்வந்திரி ஜெபத்தை செய்தாலும் போதுமானது. இப்படிச் செய்தால் நிச்சயமாக ரோகங்கள் பரிகாரம் ஆகும். நோய்க்குக் காரணமாக இருக்கும் பாவங்கள் தூர விலகிப் போகும். அப்படி ஜெபிக்கும் மந்திர உபாசகரிடம் ஹரிபக்தி மற்றும் சிரத்தைகள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். 

த்யாத்யேவ ஹஸ்த தள கம் ஸ்வம்ருதம் ஸ்ரவந்தம்
வேதம் ஸ யஸ்ய திரஸி ஸ்வ கரம் நிதாய |
ஆவர்தயேன் மனுமெமம் ஸ ச வேதரோக: 
பாபாதபைதி மனுஸா யதி பக்தி மனு: ||

தினந்தோறும் தன்வந்திரி மந்திரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறை பக்தியுடன் ஜெபிக்க வேண்டும். இதனால் அஞ்ஞானம், துக்கம், பயம், நோய், உணவில் கலந்த விஷம் இவை அனைத்தும் கூட நீங்கி, வாழ்க்கையில் சுகம் பிறக்கும். அதுமட்டுமல்லாமல் மனதளவில் வரும் பிரச்னைகள், குழப்பங்கள் இவைகளும்கூட தன்வந்திரி மந்திரத்தினால் பரிகாரம் ஆகின்றன.

அஞ்ஞான துக்க பய ரோக மஹா விஷாண |
யோகோSயாமாஷு வினிஹத்ய சுகம் ச தத்யாத் ||

ஜென்ம நட்சத்திரத்தின் நாளில், பசும்பால் மற்றும் நெய் கொண்டு, தன்வந்திரி மந்திரத்தால், ஒரு ஹோமம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும்.

ஜ்வர தாஹாதி ஷாந்த்யர்தம் தர்பயோன்மனுனாSமுனா |
த்யாத்வா ஹரிம் ஜலே ஸப்த ராத்ரா ஜ்ஜோர்திர் வினஸ்யதி ||

தினமும் (ஒரு நாளைக்கு 8000 அல்லது 3000மாவது) தன்வந்திரி மந்திரத்தை ஏழு நாளைக்கு ஜபம் செய்து தர்ப்பணம் விடும் போது நோய்கள் கண்காணாத தூரத்திற்கு ஒடி மறைந்துவிடும்.

வாழ்க்கையில் நல்ல சாதனைகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே கஷ்டங்கள் வருகின்றன என்று அறிந்து கொள்ள வேண்டும். பூர்ண நம்பிக்கை வந்து தன்வந்திரி மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபம் செய்து நாயுருவி மரத்தின் சமித்துகளின் மூலம் பத்தாயிரம் முறையும், 2000 முறை அமிர்தவல்லியின் மூலம் ஆஹுதி கொடுத்து தன்வந்திரி ஹோமம் செய்தால் எந்த பிரச்னையும் அருகிலேயே வராது. 

தன்வந்திரி பகவானின் பெருமைகளை கூறி முடியாது.

No comments:

Post a Comment