நாரத பக்திசூத்திரம்
சூத்திரம் 69
தீர்த்தீ குர்வந்தி தீர்த்தானி ஸுகர்மீ குர்வந்தி கர்மாணி ஸத் சாஸ்த்ரீகுர்வந்தி சாஸ்த்ராணி
அப்படிப்பட்ட பக்தர்கள் புண்யத்தலங்களை பாவனம் ஆக்குகிறார்கள். செயல்களை புண்ணியச்செயல்களாக்குகிறார்கள். சாஸ்த்திரங்களை உண்மையாக ஆக்குகிறார்கள்.
புண்யஸ்தலங்கள் என்று கருதப்படுபவை பக்தர்கள் அங்கு சென்று வழிபட்டதனால்தான். பிருந்தாவனம், பண்டரிபுரம், இவைகளுக்குச் சென்றால் நமக்கு ஒருவித பரவச நிலை ஏற்படுவதன் காரணம் இதுவே. துளசிதாஸ், மீராபாய், துகாராம் போன்ற பக்தர்களின் தொடர்பினால் இவை போன்ற ஸ்தலங்கள் புனிதமாக ஆகின்றன.
ஆழ்வார்களின் அருளிச்செயல்களாலும், நாயன்மார்களின் பாடல் பெற்றதனாலும், மற்றும் அம்பிகை முருகன் இவர்களின் கோயில்கள் உள்ள இடங்களிலும் அபிராமி பட்டர் , அருணகிரிநாதர் இவர்களின் வழிபாட்டினாலும் இவை புண்ய ஸ்தலங்களாக கருதப்படுகின்றன.
சாஸ்திரங்களை அறிவது என்பது எல்லோராலும் முடிவதில்லை. பக்தர்கள் சான்றோர் இவர்களின் பாதையை பின்பற்றினால் போதுமானது. ஏனென்றால் அவர்கள் செய்கைகளே சாஸ்திரங்களுக்கு சமம்.
சூத்திரம் 7௦
தன்மயா:
இது ஏனென்றால் அவர்கள் பகவானுக்கு சமம்.
சூத்திரம் 71
மோதந்தே பிதர: நர்த்யந்தி தேவா: ஸநாதா ச ஐயம் பூ: பவதி
பித்ருக்கள் குதூகலிக்கின்றனர், தேவர்கள் நடனம் ஆடுகிறார்கள், இந்த பூமி ரட்சகரைப் பெறுகிறது.
ஒரு வம்சத்தில் பக்தன் முக்தி அடைந்தால் பித்ருக்கள் மகிழ்கிறார்கள் ஏனென்றால் அந்த வம்சத்தில் மேலும் கீழும் ஏழு தலைமுறையினர் நற்கதி அடைவர். தேவர்களும் பக்தர்களை போற்றுகின்றனர். ஏனென்றால் பிரஹ்லாதன் போன்ற பக்தர்களுக்காக பகவான் அவதாரம் செய்து துஷ்டர்களை அழிக்கிறான். அவர்கள் தங்களுக்காக இல்லாமல் லோக க்ஷேமத்திற்காக இறைவனை வழிபடுவதால் உலகம் க்ஷேமம் அடைகிறது.
No comments:
Post a Comment