Monday, January 14, 2019

Human beings can become GOD - Periyavaa

பேசும் தெய்வம்: J.K. SIVAN 
மகா பெரியவா;

"மனிதனென்பவன் தெய்வமாகலாம்...''

மனிதனும் மிருகமும் ரெண்டுமே உயிருள்ள ஜீவன் தானே. ஏன் கடவுள் இப்படி வித்யாசமாக படைத்திருக்கிறார்? என்ன காரணம்? இந்த கேள்விகள் உங்களுக்கோ எனக்கோ எழவில்லை. அதைப்பற்றி நாம் நினைக்கவில்லை. ஒருவேளை ரெண்டுக்கும் வித்தியாசமின்றி நாம் நடந்து கொள்வதாலோ?" எங்கோ ஒரு தடவை படித்தது பசுமரத்தாணி போல் மனதில் இன்னும் ''நிற்கிறது''. OF ALL THE BEINGS CREATED BY GOD, MAN STANDS ALONE, BECAUSE HE ALONE STANDS''. ஆமாம், மனிதன் ஒருவனால் தான் இரு கால்களால் ஸ்வாதீனமாக நடக்க, ஓட முடியும். மற்ற மிருகங்கள் நாலு காலில் தானே. ஏதோ சர்க்கஸில் நமக்கு வேடிக்கை காட்ட யானையை, குரங்கை, கரடியை நடக்கவைத்து, ரெண்டு காலால் சைக்கிள் ஒட்டி, என்ன இதெல்லாம்? இயற்கைக்கு விரோதமாக அவற்றை துன்புறுத்தியா இன்பம் பெறவேண்டும்? மனித மனம் விசாலமாக வேண்டாமா? யோசிக்க வேண்டாமா? இதில் விருப்பம் அவசியமா?

நாம் நினைக்காவிட்டாலும் எதைப்பற்றியும் எல்லோரைப்பற்றியும் சதா சர்வ காலமும் நினைத்து கொண்டிருந்த மஹா பெரியவாளுடைய சிந்தனையை இது விஷயத்தில் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்:

""மிருகங்கள் குறுக்குவாட்டில் ( horizontal ) வளர்கின்றன. இதனாலேயே அவற்றுக்குத் "திர்யக்" என்று பெயர். இதற்கு மாறாக உயர்ந்து மேல்நோக்கி (vertical) வளருகின்ற மனிதன் மற்றப் பிராணிகளைக் காட்டிலும் மேலான நோக்கத்தைப் பெறவேண்டும். இப்படிச் செய்தால் இவன்தான் சகல ஜீவ இனங்களையும்விட அதிகமான சுகத்தை அநுபவிக்கலாம். ஆனால் நடைமுறையிலோ அவற்றைவிட அதிகமாக துக்கத்தைத்தான் நாம் அநுபவிக்கின்றோம். மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனைக் கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை நாம்தான் அநுபவிக்கின்றோம்.

ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஒர் ஆயுதமும் இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்குக் கொம்பு இல்லை. நகம் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஒடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.

இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.

குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால். மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டுவிடுகிறான். கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா. வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை இவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.

மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில்தான் இருக்கும். குளிர்ப் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுதும் வாழ்கிறான். அங்கங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சூழ்நிலையைச் செய்து கொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.

இந்த உயர்ந்த புத்தியை பகவான் நமக்கு வைத்திருந்தாலும் மனிதன் கஷ்டப்படுகிறான். துக்கப் படுகிறான். பிறந்து விட்டதனாலே இவ்வளவு கஷ்டம். இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது?. பிறப்புக்குக் காரணம் என்ன.? நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குக் தண்டனையாக இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்று விதித்திருப்பதால் இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து ஆன பிறகு இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த புது உடம்பு வாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதினாலே ஜனனம் உண்டாகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலேயே பல பாபங்களைச் செய்கிறோம்.

கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்து விட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.

ஆசைக்குக் காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னோன்று இருப்பதாக எண்ணுவதால் அதனிடம் ஆசை வருகிறது.

உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது. ஒரு மாடு தன்னைக் கண்ணாடியில் பார்த்துவிட்டது என்று வைத்துக் கொண்டால் , இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்று நினைத்து அவன் சாந்தமாக இருக்கிறான். 
இதிலிருந்து என்ன புரிகிறது?
நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். 
இரண்டாவது என்று எண்ணினால் அங்கே ஆசை முளைக்கும்.
ஆசை வருவதினால் கோபம் வருகிறது. 
கோபம் வருவதினால் பாபங்களைச் செய்கிறோம். 
பாப கர்ம பலனை அனுபவிக்க ஜன்மம் உண்டாகிறது.

எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் கிடையாது அல்லவா? ஆகவே எதுவும் இல்லாததனாலே ஆசை இல்லை. பாபம் இல்லை. காரியம் இல்லை. ஜனனம் இல்லை. துன்பமும் இல்லை.

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது?.

நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாவிந்தங்களைப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும். மனிதன் அப்போது தெய்வமாவான்.

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாகவே ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாயிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேத மிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதிகளுடன் இருக்க விடக்கூடாது. இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன."

  

No comments:

Post a Comment