Tuesday, November 20, 2018

Good thoughts -positive story

*நல்ல எண்ணங்களை மட்டுமே சிந்தையில் கொள்வோம் ! நல்லதே நடக்கும் !*

சித்தர் ஒருவர் பாம்பு வளர்த்தார். எங்கு போனாலும் தன் வளர்ப்புப் பாம்போடுதான் வெளியே போவார். ஒரு நாள் வெளியூருக்குப் போய்க்கொண்டிருந்த சித்தர், நல்ல வெயில் நேரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார். அருகே அவரது பாம்புக்கூடை.
சமர்த்துப் பாம்பு ஏனோ அன்று அந்தக் கூடையிலிருந்து தப்பிவிட்டது. பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது.

அங்கே ஒரு இரண்டு  வயதுக் குழந்தை. தத்தக்கா புத்தக்கா என்று நடந்துவந்தது. இந்தப் பாம்பைப் பார்த்ததும், 'ஐ பொம்மை!' என்று பாய்ந்து பிடித்துவிட்டது.
அந்த நேரம் பார்த்து அந்தக் குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தார். குழந்தை கையில் பாம்பைப் பார்த்துவிட்டு அலறினார். அதைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள்.

ஆனால் அவர்களில் யாருக்கும் பாம்பை நெருங்கத் தைரியம் இல்லை. பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி 'கண்ணு, அந்தப் பாம்பைக் கீழே போடு' என்று அலறினார்கள். 'கடவுளே, எங்க குழந்தையைக் காப்பாத்து' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இந்தச் சத்தம் கேட்டு சித்தர் எழுந்துகொண்டார். பரபரப்பாக குழந்தை கையில் பாம்பைப் பார்த்ததும், பதறாமல் அருகே சென்று அதைப் பிடித்துக் கூடையில் போட்டார்.
'ஐயா, உங்களுக்கு பயமே இல்லையா?' கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
'எதுக்கு பயம்? அந்தப் பாம்புக்குதான் ஏற்கெனவே பல் பிடுங்கியாச்சே!'
பாம்புக்குப் பல் பிடுங்கிவிட்டது என்பது தெரிந்த சித்தருக்கும் பயம் இல்லை. பாம்புக்கு விஷப்பல் உண்டு என்பதே தெரியாத பச்சைக் குழந்தைக்கும் பயம் இல்லை. இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்கள்தான் அரைகுறை ஞானத்தால் பயந்து பதறி அவதிப்படுகிறார்கள்.
உங்கள் பயங்கள் எந்த வகை? அவற்றைப் போக்குவதற்கு நீங்கள் தேர்ந்தெடுப்பது சித்தரின்  வழியா? அல்லது குழந்தை வழியா?

"நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை, தீய எண்ணம் ஒன்றைதவிர" என்கிறார் வேதாத்திரி மகரிஷி.இதை அவரது வார்த்தைகளில்  கேட்போமா?

"தீய எண்ணங்களைக் கண்டு பயப்பட வேண்டாம் . நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருங்கள்.தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது. எந்நேரமும் ஏதேனும் ஒரு சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டு இருந்தாலுங்கூட அது தீய எண்ணத்தை விலக்கும்.
அன்பர்களே! தீய எண்ணத்திற்கு ஒருபோதும் மனதில் இடம் அளிக்காதீர்கள்.நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றி வையுங்கள்.உங்கள் மனதில் அடிக்கடி வந்து போகும் எண்ணங்களையும் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும ஆராயுங்கள். விழிப்புநிலை, எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி, விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்".

No comments:

Post a Comment