Tuesday, September 18, 2018

Srimad Bhagavatam skanda 3 adhyaya 29,30 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 3 அத்தியாயம் 29/30

அத்தியாயம் 29

தேவஹூதி கூறினாள்.

மஹத் தத்துவம் பிரகிருதி புருஷன் லக்ஷணம் முதலியவைகளைப் பற்றி எனக்குக் கூறினீர்கள். இதற்கு ஆதார வேர் போன்ற பக்தியோகத்தின் வழியை எனக்கு உபதேசிக்க வேண்டுகிறேன்.

கபிலர் கூறியது.

பக்தியோகமா னது மனிதர்களின் இயற்கையை ஒட்டி பலவித மார்க்கங்களைக் கொண்டது. 
தாமச மார்க்கம்- முன்கோபம் , பேத புத்தி இவைகளுடன், ஹிம்சையை கொண்டதாகவும் ( பலி இடுதல் உடலை ஹிம்சைப்படுத்துதல் ) , டம்பத்திற்காகவும், பொறாமையை முன்னிட்டும் செய்யும் வழிபாடு.

ராஜச மார்க்கம்- பேத புத்தியுடன் விஷய சுகங்கள் , புகழ், ஐஸ்வர்யம் இவைகளைப் பெற செய்யும் பூஜை.

ஸாத்வீக மார்க்கம்- எனது குணங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே, எல்லோருடைய உள்ளத்திலும் உறைபவனாக உணர்ந்து, சமுத்திரத்தை நோக்கி கங்கை ஓடுவது போல் என்னிடத்தில் இடைவிடாது மனதை செலுத்தி காரணமில்லாத, இயற்கையான , வேறு எதிலும் நாட்டமில்லாத நிர்குண பக்தி.

அப்படிப்பட்ட பக்தர்கள் மோக்ஷத்தையும் விரும்பார். என் சேவையிலேயே திருப்தி அடைவார். (உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் என்றபடி).
இப்படிப்பட்ட பக்தியினால் முக்குண ப்ர்க்ருதியிடம் இருந்து விடுபட்டு ஜீவன் என்னை அடைகிறான்.

நான் எல்லா உயிர்களிலும் இருக்கிறேன் என்பதை உணராமல் படாடோபமாக என்னை விக்ரஹ ஆராதனை செய்வது ( அதாவது விக்ரஹத்தில் மாத்திரம்தான் நான் இருக்கிறேன் என்று எண்ணி எனக்கு ஏதோ ப்ரீதியை உண்டுபண்ணுவதாக நினைத்து) சாம்பலில் ஹோமம் செய்வதைப் போன்றது.

தன்னலத்துடன் பிறரைப் பகைத்து பேத பாவனையுடன் செய்யும் பூஜையினால் மனம் அமைதியடையாது. அப்படிப்பட்ட பூஜையினால் நான் திருப்தி அடையமாட்டேன்.

எல்லாப் ப்ராணிகளிடத்தும் உறையும் என்னை தன் ஹ்ருதயத்தில் உறைபவனாகக் காணும் வரை அதற்கு சாதனமான விக்ரஹ ஆராதனை அவசியமே . தன் கடமையை பற்றில்லாமல் செய்துகொண்டு என்னை வழிபடவேண்டும்.

பிற உயிர்கள் மூலமாக என்னை தானத்தாலும், மரியாதையாலும், நட்பாலும் பேதமற்ற நோக்கத்தினாலும் பூஜிக்க வேண்டும். எல்லா உயிர்களிடமும் என்னையே காண்பவனும், எல்லாவற்றையும் எனக்கே அர்ப்பணித்தவனும் ஆன பக்தனே எல்லோருக்கும்மேலானவன்.

அத்தியாயம் 30
பொருள், சொத்து முதலியவற்றில் மோகம் கொண்ட மனிதன் விஷய சுகங்கள் நித்தியம் என்றெண்ணி காலம் எல்லாவற்றையும் ஒருநாள் கொண்டு செல்லும் என்று அறிவதில்லை. பல பிறவி எடுத்தும் பல யோனிகளில் பிறந்தும் ஆசை அடங்குவதில்லை.

நரகத்தில் இருப்பினும் புருஷன் சரீரத்தை விடுவதற்கு விரும்புவதில்லை. நரகமும் சுவர்க்கமும் இந்த உலகிலேயே உள்ளன என்று சொல்லலாம். ஏனென்றால் இங்கும் நரக வேதனை அனுபவிக்கப்படுகிறது அல்லவா?

பிராணிகளுக்கு துரோகம் செய்து எந்த உடலானது வளர்க்கப்பட்டதோ அப்படிப்பட்ட உடலைவிட்டு, பாப கர்மத்தை மட்டும் மூட்டை கட்டிக்கொண்டு நரகத்தை அடைகிறான். பல ஜன்மங்கள் கீழ்ப்பட்ட நிலைகளிலும் பிறவிகளிலும் கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய பாவம் தீர்ந்த பின் மறுபடி மனித ஜன்மம் அடைகிறான்.

அடுத்த அத்தியாயம் மனிதப்பிறவி கருவடைவதில் இருந்து வர்ணிக்கிறது.

  

No comments:

Post a Comment