ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம்3-
அத்தியாயம் 27
புருஷன் அல்லது ஜீவாத்மா இயற்கையில் குணமற்று செயலற்று இருந்தாலும் நான் என்ற உணர்வினால் பிரக்ருதியின் குணங்களோடு தன்னை ஐக்யப்படுத்திக் கொள்கிறானோ அப்போது மோஹமடைந்து தன்னை செயல் புரிபவனாக நினைக்கிறான். அப்போது பிரக்ருதியின் குணங்களை உடைய தேஹத்தை நான் என்று எண்ணி சுகதுக்கங்களை அனுபவிக்கிறான். சம்சாரத்தில் அகப்பட்டுக்கொள்கிறான்,.
அதனால் இந்த்ரியங்களின் வசமான மனதை பக்தியினாலும் வைராக்யத்தினாலும் மெல்ல மெல்ல தன்வசமாக்க முயலவேண்டும். (அதற்கு வேண்டிய நியமங்கள் அடுத்த அத்தியாயத்தில் விரிவாக சொல்லப்படுகின்றன.)
தேவஹுதி இப்போது ஒரு சந்தேகம்கேட்கிறாள். இது நம் எல்லோருக்கும் தோன்றும் சந்தேகம்தான்.
புருஷனும் ப்ரக்ருதியும் எப்போதும் ஒன்றாக இருப்பதால் எவ்வாறு புருஷன் பிரக்ருதியிடம் இருந்து விலக முடியும்? அதாவது தேகம் மனம் இவற்றோடு சம்பந்தப்பட்டதுதானே ஆத்மா?
கபிலர் கூறினார்.
அதே தேகத்தையும் மனதையும் கொண்டு, எவ்வாறு எரிபொருளினால் நெருப்பு எரிகிறதோ அதே எரிபொருளை கடைசியில் அழித்து விடுவது போல் யோக சாதனை, பக்தி இவைகள் மூலம் பிரக்ருதியின் கார்யமான இவைகளின் நாசம் ஏற்படுகிறது. பிரக்ருதியினால் உண்டான போகங்களை வீண் எனக்கருதி பகவானிடம் மனதை ஈடுபடுத்தும் புருஷன் பிரக்ருதியின் தூண்டுதலில் இருந்து விடுபடுகிறான்,
.
இதற்கு வழி என்னவென்றால், ஸ்வதர்மத்தை பயன் கருதாது பகவதர்ப்பணமாகச் செய்தல், பகவத் கதைகளையும் பிரபாவத்தையும், கேட்தல, படித்தல், தியானம் செய்தல் இவை மூலம் த்ருடமான பக்தியைப் பெறுதல், யோகாப்யாசம், தவம் இவைகள் மூலம் ஏற்பட்ட வைராக்கியம், இவைகளே.
பல காலம் இந்த அப்யாசத்தை செய்த பிறகு ஆத்ம ஞானம் ஏற்படும். அப்போது இந்த ஜன்மத்திலேயே பிறவியற்ற நிலை அடைகிறான். இந்த ஞானமும் பக்தியும் சித்திக்கும்போது அணிமாதி சித்திகள் அவனை வந்தடைகின்றன. அவைகளால் எப்போது அவன் மனம் சபலம் அடையவில்லையோ அப்போது என்னை வந்தடைகிறான்.
ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 3- அத்தியாயம் 28
கபிலர் கூறினார்.
எந்த யோகவிதிகளைக் கைக்கொண்டால் மனது தெளிவடைந்து நல்ல வழியில் செல்லுமோ அதை உனக்கு இப்போது சொல்லப்போகிறேன்.
1.முழு சக்தியுடன் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்தல்.
2. அதர்மத்தில் இருந்து விலகுதல்
3.கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைதல்
4,ஆத்மஞானிகளை பூஜித்தல்.
5.இந்த்ரிய சுகங்களிலிருந்து விலகுதல்.
6. மோட்சத்தில் விருப்பம்
7. அளவோடு உண்ணுதல்
8.தனிமையாக தொந்தரவற்ற இடத்தில் வசித்தல்
9.அஹிம்சை
10 .சத்தியம்
11.கள்ளத்தனம் இல்லாமை
12.உடமைகளில் ஆசை இல்லாமை
13.ப்ரம்மசர்யம்
14.தவம்
15.பரிசுத்தம்
16.வேதம் ஓதுதல்
17. பகவதாராதனம்
18.மௌனம்
19.யோகாப்யாசம்
20.பிராணாயாமம்
21.இந்த்ரியங்களை மனதினால் கட்டுப்படுத்தி ஹ்ருதயத்தில் நிறுத்துதல்
22. ஆதார சக்ரங்களில் மனதை நிலை நிறுத்துதல்
23.பகவானின் லீலைகளை தியானித்தல்
24.அதனால் சமாதிநிலை அடைதல்
பகவானை மனதில் நிறுத்துவது எப்படி என்றால், முதலில் அவர் உருவத்தை இவ்வாறு த்யானிக்க வேண்டும்.
பிரசன்னவதனாம்போஜம் பத்மகர்பாருணேக்ஷணம்
நீலோத்பலதளச்யாமம் சங்கச்சக்ரகதாதரம்
லஸத்பங்கஜகிஞ்சல்கபீதகௌசேயவா
ஸ்ரீவத்சவவக்ஷம் ப்ராஜத்கௌஸ்துபாமுக்தகந்தரம்
மத்த த்விரேபகலயா பரீதம் வனமாலயா
பரார்க்யஹாரவலயகிரீடாங்கதநூபு
காஞ்சீகுணோல்லஸத் ச்ரோணிம் ஹ்ருத்யாம்போஜவிஷ்டரம்
தர்சநீயதமம் சாந்தம் மனோநயனவர்தனம்
மலர்ந்த தாமரைமுகம், தாமரையின் உள் பாகம் போல் சிவந்தகண்கள், நீலோத்பலம் போன்ற மேனி,சங்கு சக்கரம் ஏந்திய கைகள், அரையில் பீதாம்பரம், மார்பில் ஸ்ரீவத்சம், கழுத்தில் தொங்கும் கௌஸ்துபமணி, மதுவுண்ட வண்டு மொய்க்கும் வனமாலை, ஹாரம், கிரீடம் ,தோள்வளை ,கங்கணம், நூபுரம், இடுப்பில தங்க அரைஞாண்.
இவற்றோடு, ஹ்ருதயத்தாமரையில் நிற்பவரும் , கண்களையும் மனதையும் மகிழ்விப்பவருமான பகவானை எல்லா அங்கங்களுடனும் தியானம் செய்ய வேண்டும்.
வஜ்ரம் அங்குசம் கோடி தாமரை ஆகிய சின்னங்களுடன் கூடியதும் சிவந்தும் உயர்ந்தும் பிரகாசிக்கும் திருவடித்தாமரையை சிந்திக்க வேண்டும். பின்பு படிப்படியாக ஒவ்வொரு அங்கமாக த்யானித்து தியானத்தின் எல்லையாகிற சிவந்த அதரங்களின் ஒளியால் பிரகாசிக்கும் மல்லிகை மொட்டுக்களைப் போன்ற பற்களின் புன்முறுவலை ஹருத்யத்தில் நிறுத்த வேண்டும்.
அப்படிப்பட்ட பக்தியின் மூலம் ஹ்ருதயம் உருகி வெள்ளமென கண்ணீர் பெருகுகிறது. அது ப்ரக்ருதியினுடன் மனதைப் பிணைக்கும் வலையை அறுக்கிறது. இந்நிலை அடைந்த புருஷன் ஒரு குடிகாரன் எவ்வாறு தன் வஸ்திரத்தை உணருவதில்லையோ அதுபோல தன் தேகத்தை காண்பதில்லை. விழித்துக்கொண்டவன் கனவில் கண்டதை பொருட்படுத்துவதில்லை. அது போல பிராரப்த கர்மம் உள்ள்வரை
இருந்துகொண்டிருக்கும்இந்த தேகத்தையும் ஆத்மஞானம் பெற்றவன் பெரிதாகக் கருதுவதில்லை.
ஒரு மனிதன் தன் புத்திரர்களிடம் இருந்தும் செல்வம் முதலியவைகளிடம் இருந்தும் எப்படி வேறானவனோ அவ்வாறே தேகம் முதலியவற்றிலிருந்தும் புருஷன் என்கிற ஆத்மா வேறானவன்.
அக்னி என்பது கொள்ளி, பொறி, புகை , இவைகளின் மயமாகவே காணப்பட்டாலும் உண்மையில் வேறானது. அதுபோல ஆத்மா பஞ்ச பூதங்கள் இந்த்ரியம் , மனம் , புத்தி இவைகளில் இருந்து வேறானது. நெருப்பு ஒன்றாயினும் வெவ்வேறு உபகரணங்கள் மூலம் வேறு
வேறாகக்காணப்பட்டாலும் உண்மையில் அது ஒன்றுதான்.
அவ்வாறே ஆத்மாவும் வெவ்வேறாக பிரக்ருதியின் குணங்களை ஒட்டி காணப்படுகிறது.
ஆகையால் இந்த பிரகிருதியை பகவான் அருளால் ஜெயித்து பக்தன் தன் ஸ்வரூபத்தில் நிலை பெருகிறான்.
அடுத்து பக்தியோகத்தைப் பற்றிக் கூறுகிறார்
No comments:
Post a Comment