Thursday, September 20, 2018

Seshadri swamigal and a judge

ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்

எப்போது எது நடக்குமோ!

சமீபத்தில் ரொம்ப தடபுடலாக அடிபட்ட ஒரு வார்த்தை ''தாசி''.
அந்த காலத்தில் தாசிகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவள் அலமேலு. பிழைக்க
வேறு வழி தெரியாதவள். திருவண்ணாமலை வாசி. தாசி அலமேலு தொழிலால்
இழிந்தவளானாலும் மனதால் உயர்ந்தவள். சேஷாத்திரி சுவாமிகள் மேல் அளவில்லாத
பக்தி கொண்டவள்..

ஒரு நாள் அண்ணாமலையார் கோவில் செல்லும் பாதையில் ஒரு இலுப்பை மரத்தடியில்
நின்றுகொண்டிருந்த ஸ்வாமியை பார்த்து விட்டாள் . வணங்கினாள். ஸ்வாமியும்
அவளை பார்த்தார். கீழே ஒரு சாமந்திப் பூ கிடந்தது.

''இங்கே வா '' . ஜாடையாக அவளை கிட்டே கூப்பிட்டார். அந்த சாமந்திப் பூவை
எடுத்து அவள் தலையில் போட்டார். ''போ '' என்று விரட்டினார்.

அன்று மாலையே, வறுமையில் வாடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை யாரோ ஒரு
தனவந்தர் ஆசையாக தன்னோடு வீட்டுக் கொண்டு போய் ராஜபோக வாழ்க்கை அவளுக்கு
கிடைத்தது.

இது மாதிரி ஸ்வாமிகள் அனுபவங்களை எழுதிக் கொண்டே போனால் அதற்கு எல்லையே
இல்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒரு அபூர்வ சங்கதி சொல்லும் . ஸ்வாமிகள்
பெருமையை சொல்வதற்கு வெறுமனே கதைகளை அடுக்கிக் கொண்டே போகவேண்டாம்.

ஸ்வாமிகள் விசித்திரம் நிறைந்த மஹான். விதியையே மாற்றி அமைக்கக் கூடிய
சக்தி வாய்ந்தவர். ஒருவேளை இறைவனே ஸ்வாமிகள் வடிவில் வந்திருப்பானோ?
என்று கூட வியக்க வைக்கிறது.

அவர் திருவடி தரிசித்தால், அவர் திருஷ்டி பட்டாலே போதும். பாபங்கள்
விலகும். புனிதம் கிட்டும். எத்தனையோ பேருக்கு பிள்ளைப்பேறு, சம்பள
உயர்வு, நல்ல உத்யோகம், திருமணம், வீட்டுச் சிக்கல் தீர்வு, தீராத நோய்
நீங்கியது, வியாதி குணமானது. உணவு கிடைத்தது. பணம் கொட்டியது. இன்னும்
என்ன என்னவோ கொள்ளை கொள்ளையாக சொல்வார்கள்.

1909-1910 கால கட்டத்தில் திருவண்ணாமலையில் நீதிபதியாக இருந்தவர் திவான்
பகதூர் கே. சுந்தரம் செட்டியார். ஸ்வாமிகளை பற்றி அதிகம் அறிந்தவர்.
நேரில் தரிசிக்க ஆர்வம்.

ஒருநாள் இரவு செட்டியார் வீட்டு கதவை யாரோ பலமாக இடித்தார்கள்.
செட்டியார் கோபத்தோடு ''யார் இந்த நேரத்தில் கதவை இடிப்பது ?'' என்று
கதவை திறந்தார். எதிரே ஸ்வாமிகள். அப்படியே சாஷ்டாங்கமாக செட்டியார்
ஸ்வாமிகள் காலில் விழுந்தார். கண்களில் ஆனந்தக் கண்ணீர். சுவாமிகள் உள்ளே
நுழைந்து தரையில் உட்கார்ந்து கொண்டார். செட்டியார் அவரை போஜனம் செய்ய
வேண்டினார்.

''சரி. கொண்டுவா சாப்பிடுகிறேன்''

செட்டியார் மனைவி நிமிஷமாக ஏதோ தயார் செய்தாள். இலையில் சாதம், குழம்பு,
பருப்பு, நெய் , அப்பளம் ஊறுகாய், காய்கறிகள் பரிமாறுவதை எல்லாம்
ஸ்வாமிகள் பார்த்தார். போதும் என்றார். எல்லாவற்றையும் ஒரேயடியாக கலக்கி
உருண்டையாக்கினார். வழக்கப்படி அதோடு விளையாடினார். கொஞ்சம் வாயில்
போட்டுக் கொண்டார். சட்டென்று எழுந்து விட்டார். ஜட்ஜ் செட்டியாருக்கு
பரம சந்தோஷம். யாருக்கும் கிடைக்காத பாக்யம் அல்லவா அது? ஸ்வாமிக்கு ஒரு
புது வஸ்திரம் தர வேண்டும் என்று அவருக்கு ஆசை. வீட்டிலிருந்த ஒரு புது
ஜரிகை வேஷ்டியை சுவாமியிடம் கொடுத்தார்.

''ஜோர் ஜோர்'' என்று சிரித்துக் கொண்டே ஸ்வாமிகள் புது வேஷ்டியை தனது
உடலின் மேல் சுற்றிக் கொண்டு தனது அழுக்கு, கந்தல், வேஷ்டியை அவிழ்த்து
ஜட்ஜ் செட்டியாரின் தோளில் போட்டுவிட்டார். பிறகு அதை எடுத்து அவர்
கழுத்தில் மாலையாக போட்டார். மாற்றி மாற்றி இவ்வாறு என்னவோ செய்தார் .
திடீரென்று வெளியே சென்றுவிட்டார்.

அதற்கு அப்புறம் நடந்தது ஆச்சர்யம்.

செட்டியார் 1927ல் தென்னார்க்காடு ஜில்லா ஜட்ஜாக பதவி ஏற்றார். ஓரு சில
நாள் விடுமுறை வாங்கி கொண்டு திருவண்ணாமலை வந்தார். ஸ்வாமிகளை சந்திக்க
ஆசைப்பட்டார். அவர் அதிர்ஷ்டம் ஸ்வாமிகளை சாது சத்திரத்தில் பார்த்தார்.
வணங்கினார்.

என்னவோ தெரியவில்லை. ''நீ உட்கார்'' என்று ஸ்வாமிகள் செட்டியாரை
திண்ணையில் உட்கார வைத்தார். அதற்குள் ஸ்வாமிக்கு கொடுக்க ஒரு புதிய
வஸ்திரம் வாங்கி வர ஒருவரை வேகமாக அனுப்பினார் செட்டியார். அதற்குள்
பலதடவை செட்டியார் கைகளை நீட்டச் சொல்லி தனது கைகளை அவர் கைகள் மேல்
வைத்து ஸ்பரிச தீக்ஷை வழங்கினார் ஸ்வாமிகள்.

செட்டியாருக்கு கவலை. '' சீக்கிரம் வஸ்திரம் வரவேண்டுமே. ஸ்வாமிகள்
அதற்குள் எங்கும் செல்லாமல் இருக்கவேண்டுமே'' நல்லவேளை. போன ஆள்
சீக்கிரம் ஒரு புது வஸ்திரம் வாங்கி வந்து விட்டான். சுவாமி பார்த்து
விட்டார். அதை தாமே வாங்கி இடுப்பில் அணிந்து கொண்டார்.

''நான் புண்ணிய சாலி'' என்று ஜட்ஜ் மகிழ்ந்தார். கிராமத்தில் ஒய்வு
விடுமுறை முடிந்த பிறகு பதவிக்கு திரும்பியபோது அவரை பெரிய கோர்ட்டான ஹை
கோர்ட் நீதிபதியாக வெள்ளைக்கார அரசாங்கம் நியமித்தது. செட்டியார்
எதிர்பார்க்காதது இது. ஸ்வாமியின் பிரபாவம் என்று அவரும் அவரை
தெரிந்தவர்களும் ஏன் நாமும் கூட சந்தேகமற ஒப்புக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment