Friday, August 31, 2018

Srimad bhagavatam skanda 3 adhyaya 10 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம். ஸ்கந்தம் 3. அத்தியாயம் 1௦

அத்தியாயம் 10
விதுரர் கூறினார். 
பகவான் மறைந்த பிறகு பிரம்மா என்ன செய்தார்? எவ்வகையான பிரஜைகளை தேகத்திலிருந்தும் மனதிலிருந்தும் சிருஷ்டித்தார் ? தங்களிடத்தில் எந்தெந்த விஷயங்கள் கேட்கப்பட்டனவோ அவைகளை வரிசையாக விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மைத்ரேயர் கூறலானார். 
பிரம்மா பகவானுடைய உபதேசத்தின்படி ஆயிரம் வருடம் பகவானிடத்தில் ஒருமுகப்பட்ட மனதுடன் தவம் இயற்றினார். பிறகு அவர் வீற்றிருந்த தாமரையும் அது இருந்த ஜலமும் பிரளயகால காற்றால் அலைக்கழிக்கப்பட்டதைக் கண்டு, அவருடைய பக்தியாலும் தவத்தினாலும் ஏற்பட்ட சக்தியால் அந்தக் காற்றை ஜலத்தோடு சேர்த்து பானம் செய்தார். பிறகு அந்தத் தாமரை ஆகாயம் முழுதும் வியாபிக்கக் கண்டு அதனுள் புகுந்து மூன்று லோகங்களை சிருஷ்டித்தார். இதுதான் விசர்க்கம் எனப்படும்.

உலகஸ்ருஷ்டியானது ஒன்பது வகைப்படும். பிரளயம் மூன்றுவகை. நித்ய பிரளயம் என்பது நாம் தூங்கும்போது ஏற்படுவது . அதாவது தூங்கும்போது உலகம் நம் வரையில் இல்லை அல்லவா ? அதுதான் நித்ய பிரளயம். இரண்டாவது நைமித்திக பிரளயம். பிரம்மாவின் இரவு. அப்போது பிரளயகால நெருப்பு பிரம்மலோகம் வரை எல்லாவற்றையும் எரித்து விடுகிறது. ப்ராக்ருதப்ரலயம் என்பது பிரம்ம உள்பட எல்லாம் பகவானிடம் ஒடுங்குவது.. இப்போது வர்ணிக்கப் படுவது ப்ராக்ருத ப்ரளயத்திற்குப் பிறகு பிரம்மாவின் ஸ்ருஷ்டியின் பின் உலகஸ்ருஷ்டி.

ப்ராக்ருதஸ்ருஷ்டி
1. மஹத் தத்வம் ஈஸ்வர சங்கல்பத்தினால் உண்டானது. 
2. அஹங்காரம்- சத்வம் ரஜஸ் தமஸ் என மூன்று வகைப்பட்டது. 
3. பஞ்ச பூதங்களின் சூக்ஷ்ம உருவான தன் மாத்திரைகள். 
4. ஞான கர்மேந்த்ரியங்கள்
5. மனம் , இந்தியங்களின் அதி தேவதைகள்
6.அவித்யா அல்லது தமஸ்.

விக்ருத ஸ்ருஷ்டி
7. ஆறுவகை ஸ்தாவர சிருஷ்டி – மலர்கள் இல்லாமலே பழம் கொடுக்கும் தாவரங்கள் , மூலிகைகள், கொடிகள், மூங்கில் வகைகள், கொடி வகையைச் சேர்ந்த கொழுகொம்பு வேண்டாத தாவரங்கள், பழம் தரும் மரங்கள் இவையாகும்.

8.பசுபக்ஷிகள்-நாளை என்பதை நினையாதவை. பசி தாகம் உடலுணரவு தவிர் வேறு அறியாதவை. மோப்பசக்தியின் மூலமே அறிவு. ஆறாவது அறிவு அற்றவை.

பிளந்த குளம்பு உடையவை, பசு, ஆடு, ஒட்டகம் மான், பன்றி முதலியன
பிளக்காத குழம்பு உடையன-கழுதை, குதிரை,சிலவகை மான்கள் முதலியன. 
ஐந்து நகங்கள் கொண்ட பாதங்கள் உடையன- நாய், பூனை, ஓநாய் நரி, சிங்கம், புலி, யானை, குரங்கு,ஆமை, முதலை முதலியன. 
பக்ஷி வகைகள்.

9.மானுட சிருஷ்டி. இதை கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார். 
ரஜோதிகா: .கர்மபரா: துக்கே ச ஸுகமானின:
மனிதர்கள் ரஜோகுணம் மிக்கவர்கள். கர்மத்தில் நாட்டம் உள்ளவர்கள். துக்கத்தை சுகம் என்று நினைப்பவர்கள் .

1௦. தேவஸ்ருஷ்டி- ஸுராசுர, பித்ரு, கந்தர்வ, அப்சர , சித்த , யக்க்ஷ , சாரண வித்யாதர, முதலியோர்.

இவ்வாறு கூறிவிட்டு மைத்ரேயர் இனி வம்சங்களையும், மன்வந்தரங்களையும் பற்றிக் கூறுகிறேன் என்றார்.


No comments:

Post a Comment