Wednesday, August 22, 2018

Saving a child - Bhagavan Ramana Maharshi

1944ம் ஆண்டு கோடை விடுமுறையின்போது என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயர் தன் மனைவி குழந்தைகளை தன்னுடைய கிராமத்திற்கு அனுப்பிவிட்டு திருவண்ணாமலைக்கு வந்தார். 

அப்போது மகாபூஜை சமயம், பகவானின் ஜெயந்தியும், அம்மாவின் சமாதி நாளும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு பெரிய பந்தல் அமைத்து அன்று வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்கப்படும். 

இரண்டாயிரம் பேருக்குமேல் உணவு உட்கொள்வார்கள்.
என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயருக்கு உணவுப் பந்தலுக்கு ஆட்களை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பொறுப்பு வழங்கப்பட்டது. 

ஒவ்வொரு பந்திக்கும் ஆட்களை அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது கட்டுக்கடங்காமல் கூட்டம் தள்ளி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர் கீழே விழுந்தார்கள். 

ஜனங்கள் மிதித்துக்கொண்டு சென்றார்கள். கிருஷ்ண மூர்த்தி ஐயர் செய்வதறியாது செயலற்று நின்றார். 

அப்போது அவர் கண் எதிரே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் குழந்தையுடன் கீழே விழுந்தாள். கூட்டம் மிதித்துச் சென்றது. அப்பெண்ணின் குழந்தையைத் தூக்க ஓடினார் கிருஷ்ணமூர்த்தி ஐயர். 

ஆனால் கூட்டம் மிதித்து விட்டது. அருகில் சென்றபோது குழந்தை அசைவற்றுக் கிடந்தது. உயிரில்லை.

'பகவானே! உன் சந்நிதியில் இன்னைக்கா இப்படி நடக்க வேண்டும்?' என்று வாய்விட்டுக் கதறினார்.

அப்போது "இதுக்கு பதிலா ஒங் குழந்தையைத் தந்துடறியா?" என்று பகவான் குரல் அவருள் கேட்டது. 

அது பகவானின் குரலேதான். ஒரு வினாடி அதிர்ந்தார்.

அடுத்த நொடி, 'சரி பகவானே! என் குழந்தையைத் தர்றேன்' என்று கத்தியப்படியே குழந்தையைத் தூக்கினார்.

 குழந்தை ஒரு துள்ளு துள்ளி அழுதது. குழந்தையைத் தாயிடம் ஒப்படைத்து விட்டு, ஓரமாக சென்று அமர்ந்து விட்டார்.

திருவண்ணாமலையில் இவ்வாறு நடந்து கொண்டிருக்கும்போது என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி அய்யரின் குழந்தைகள் கிராமத்து வயல்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது கிருஷ்ணமூர்த்தி ஐயரின் குழந்தை ரமணனை ஒரு கன்றுக்குட்டி முட்டித் தள்ளியதில் கிணற்றில் விழுந்தான். பெரியவர்களைக் கூப்பிட மற்ற குழந்தைகள் கிராமத்திற்கு ஓடினர். 

அனைவரும் கத்திக் கொண்டு ஓடினர். ஏனென்றால் குழந்தைகள் வந்து கூறி அங்குச் செல்வதற்கு காலம் சற்று அதிகம். கோடைக்காலம் என்பதால் வயல்களில் யாரும் இருக்க மாட்டார்கள்.

விரும்பத்தகாததை எதிர்ப்பார்த்தே ஓடினார்கள். கிணற்றுமேட்டில் குழந்தை ரமணன் கிடத்தப்பட்டு இருந்தான். ஓடிச்சென்றவர்கள் போய்த் தூக்கியவுடன் எழுந்துவிட்டான். 

யார் கிணற்றில் இருந்து வெளியே காப்பாற்றியது என்று பார்த்தபோது தூரத்தில் ஈரத்துடன் ஒரு சந்நியாசி சென்று கொண்டிருந்தார். 

திருவண்ணாமலை ரமணாச்ரமத்தில் சிறிது நேரத்தில் ஒரு தந்தி என்.ஆர் கிருஷ்ணமூர்த்தி ஐயருக்கு அவரது கிராமத்தில் இருந்து வந்தது. 

குழந்தை ரமணன் காப்பாற்றப்பட்டான் என்ற செய்தியை படித்த என்.ஆர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் விம்மிவிம்மி அழுதார்.

 மனிதர்களால் முடியாததை கிரகங்கள் சாதிப்பார்கள். கிரகங்களால் முடியாததை தெய்வம் சாதிக்கும். தெய்வங்களாலும் முடியாததை குருபக்தி சாதிக்கும்'.

குருவின் கட்டளையை மனதார ஏற்றுக்கொண்டு சுயநலத்தை துறந்து நீங்கள் தியாகம் செய்ய துணிகிறீர்கள் என்றால், நீங்கள் எதை தியாகம் செய்கிறீர்களோ அது நிச்சயம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். 

உங்கள் குருபக்தியை சோதிக்கும் விதமாக அது அமையுமே தவிர, உங்களுக்கு தண்டனையாக ஒரு போதும் அது இருக்காது. குருபக்திக்கு மட்டுமல்ல. தெய்வத்துக்கும் இது பொருந்தும்.

ரமண திருவிளையாடற் திரட்டு....

No comments:

Post a Comment