புனரபி ஜனனம்; புனரபி மரணம்;
புனரபி ஜனனீ ஜடரே சயனம்;
இஹ ஸம்ஸாரே பஹுதுஸ்தாரே,
க்ருபயாபாரே, பாஹி முராரே!
(21)
மறுமுறை பிறப்பு, மறுமுறை இறப்பு−
மறுமுறை கருவினில் ஒரு குடியிருப்பு;
பிறவிப் பெருந்துயர், இனியும் வேண்டாம்;−
இரங்கியே நீயும், இறைவா, காப்பாய்!
(21)
(பத்மாகோபால் )
புனரபி- மறுபடியும் பிறப்பு , புனரபி மரணம், புனரபி- மறுபடியும், ஜனனீ ஜடரே –தாயின் கருவறையில், சயனம்- படுப்பது. இஹ – இந்த , பஹு துஸ்தாரே – கடக்கமுடியாத , ஸம்ஸாரே- சம்சார பந்தத்தினின்று , க்ருபயா அபாரே – அபாரகருணை உடைய , முராரே – முரனைக்கொன்றவனே , பாஹி- காப்பாற்றுவாயாக.
இந்த ஜனனமரண சுழற்சி எதனால் ஏற்படுகிறது? பூர்வ ஜன்ம கர்மாவினால். இது நிற்க வேண்டுமானால் பக்தி, நிஷ்காம கர்மம் இவை அவசியம். இது பகவானின் அருளால்தான் நிறைவேறும்.
பாகவதத்தில் கபிலாவதார அத்தியாயத்தில் கூறியபடி, ஒரு ஜீவன் கருவில் உதித்து முழுமையான தேஹம் உண்டானபின் ஏழாவது முதல் ஒன்பதாவது மாதத்தில் அறிவு உண்டாகிறது. உடனே முன் ஜன்ம நினைவு உண்டாகி மறுபடி இந்த உலகத்தில் பிறக்க வேண்டுமே என்ற பயத்தில் அந்த ஜீவன் இறைவனைப் ப்ரார்த்திக்கிறது. ஆனால் கர்ம வினை காரணமாக சட வாயுவினால் வெளியே தள்ளப்பட்ட போது முன் ஜன்ம நினைவு மறந்து விடுகிறது.
பிறந்த பின்பும் கர்ம வினைப்படி அதன் பெற்றோர்கள் அமைகிறார்கள்.
வாயால் கூற முடியாத நிலையில் நல்ல பெற்றோர் அமைந்தால் அந்த சிசுவிற்கு சுகம் உண்டாகும் இல்லையென்றால் துன்பம்தான்.
பிறகு வளர வளர மரணம் வரை உண்டாகும் துன்பங்கள் தெரிந்ததே.
சம்சாரத்திற்குக் காரணம் ஆசைகள்., அதற்காக மேற்கொள்ளும் செயல்கள். இவை கர்ம வினையை உண்டாக்குகின்றன. அதனால் உலகப் பற்றை ஒழித்து அவன் பாதம் பற்ற வேண்டும் என்பதே இதன் கருத்து. அப்படிச்செய்தவர் நிலையை அடுத்த ஸ்லோகம் கூறுகிறது.
No comments:
Post a Comment