Friday, June 1, 2018

Farmer - a poem by Smt.,Padma Gopal

courtesy:Smt.Padma Gopal


(விவசாயி...அவன் சாமி!!..)

(படம் உபயம்:− திரு. Rajagopal Srinivasan அவர்கள்..)

அறுசுவையில் ஒரு சுவையே−
அதிகம் நீ பார்த்தது;
அந்த உவர்ப்பே, அல்லும்பகலும்,
உன் தேகத்திலே வேர்த்தது!

அருந்தினாயே மூவேளையும்−
அனலில் இட்ட கஞ்சியே;
அதிலும், அந்த உவர்ப்புதானே−
நின்றதென்றும், விஞ்சியே!

இந்த ஒருசுவையை விடுத்து, உனக்கு−
மறு சுவைகளும் தெரியுமா?
அந்த மறுசுவைகளும், மணந்திடுமே−
அதை உணர, உன்னால் முடியுமா?

அன்னாடம் காய்ச்சிக் குடித்து−
வாழ வைத்தாய் எம்மையே;
என்னாளும் உழைத்தே நீயும்−
எமக்கு செய்தாய் நன்மையே!

வயலோட மண்ணுதானே−
வயிரம் உனக்கு வாழ்க்கையில்!
வாய்க்காலின் வரப்பு தானே−நீ
வாங்கிக் குவித்த சொத்துமே!

தொழுது உன்னைக் கொண்டாடச்−
சொல்லிச் சென்றார் குறளிலே; ஆயின்−
அழுது இன்று நீ இருப்பதோ,
அல்லல், வறுமை இருளிலே!

விளைநிலத்தைப் புறக்கணித்து−
வேற்றிடம் நீ ஏகினால்,
கொலைகளமாய் மாறிப்போகும்−இந்த
பூமி இங்கு வாடியே!

தெய்வம் நின்னு படியளக்குது−
தேடி வேண்டி வருபவர்க்கே; உன்−
கை எமக்கே படியளக்குதே−
வேண்டி நில்லா பொழுதுமே!

அவதிப் படும் பேர்களுக்கே−
அருள்வது ஒரு சாமியே; இந்த
அவனி முழுதும் அருளும் சாமி−
ஐயா, நீ விவசாயியே!!


​​


No comments:

Post a Comment