Thursday, June 21, 2018

Aadakeswarar temple - thevara vaippu sthalam

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி*
____________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தொடர்:*
(எல்லோரும் தரிசிப்பதற்காக........)
___________________________________
*தேவார வைப்புத் தல தொடர் எண்:13-ம், 14-ம்.*

*தேவார வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*🏜ஆடகேச்சுவரர் திருக்கோயில், ஆடகேச்சுரம்:*
____________________________________
வைப்புத் தல எண் 13.

(திருவாரூர்த் திருக்கோவிலுக்குள் "நாகபிலம்" என வழங்கும் ஆலயம்)

*🌙இறைவன்:* ஆடகேச்சுவரர்.

*💥இறைவி:*
 பெயர்அம்பாள் சந்நிதி இல்லை.

*📖தேவார பதிகம் உரைத்தவர்:*
அப்பர்.

ஆறாம் திருமுறையில், எழுபத்தொன்றாவது பதிகத்தில், எட்டாவது பாடல்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குள் உள்ள ஒரு தனிக் கோயில் ஆடகேச்சுரம்.

திருவாரூர்த் திருக்கோவிலுக்குள் தெற்குப் பிராகாரத்தில் *நாகபிலம்* என வழங்கும் ஆலயமே ஆடகேச்சுரம் என்பர்.

*ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்,
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம்,
PIN - 610 001

ஆடகேச்சுரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

இப்பதிகத்தை அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது *சுரம்* என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்திருக்கிறார்.

🔔நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மா காளேச் சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால் ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் ஈடு திரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.

🙏கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக.. 

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள திண்டீச்சரம், நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம்,. அத்தீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
________________________________________
வைப்புத் தல எண்:14.

*🏜கங்காளநாதர் திருக்கோயில், ஆழியூர்:*

*🌙இறைவன்:* கங்காளநாதர்.

*💥இறைவி:* கற்பகவல்லி.

*🛣இருப்பிடம்:*
திருவாரூர் - நாகப்பட்டிணம் பேருந்து சாலையில் கீவளூருக்கும், சிக்கலுக்கும் இடையே ஆழியூர் உள்ளது.

பிரதான சாலையில் ஆழியூரை அடைந்து ஊருக்குள்ளார கொஞ்சம் உள்ளடங்கி உள்ள கோவிலுக்கு வழி விசாரித்துக் கொண்டு செல்ல வேண்டும்.

*📮ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு கங்காளநாதர் திருக்கோயில்,
ஆழியூர்,
ஆழியூர் அஞ்சல்,
வழி கீவளூர்,
நாகப்பட்டிணம் மாவட்டம்.
PIN - 611 117

*📖தேவார வைப்புத் தல உரைத்தவர்கள்:*
நாவுக்கரசர், சுந்தரர்.

நாவுக்கரசர்.
ஆறாம் திருமுறையில், எழுபதாவது பதிகத்தில், ஏழாவது பாடல்.

🔔வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் ஆழி யகத்தியான் பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப்பெரும்பாழி பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் காழி கடல் நாகைக் காரோணத்தும் கயிலாய நாதனையே காணலாமே.

🙏வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர், வேதிகுடி, விசயமங்கை, வியலூர், ஆழி, அகத்தியான்பள்ளி, அண்ணாமலை, ஆலங்காடு, அரதைப் பெரும்பாழி, பழனம், பனந்தாள், பாதாளம், பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், காழி, கடற்கரையை அடுத்த நாகைக்காரோணம் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் . 
***********************************
சுந்தரர்.
ஏழாம் திருமுறையில், பன்னிரண்டாவது, ஏழாவது பாடல்.

 🔔ஈழநாட்டு மாதோட்டம் தென்னாட்டு இராமேச்சுரம் சோழ நாட்டுத் துருத்தி நெய்த்தானம் திருமலை ஆழியூரன நாட்டுக்கெல்லாம் அணியாகிய கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி யதே.

🙏சிவபெருமானாருக்கு உரிய தலங்கள் ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம், சோழநாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், திருமலை, ஆழி, கடல் சூழ்ந்த நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில், கிள்ளிகுடி என்பவையாகும். 

*கோவில் அமைப்பு:*
நான்கு புறமும் மதிற்சுவர்களுடனும், உயரமான மரக்கதவுடனும் கூடிய ஒரு வாயிலுடனும், ஒரு பிராகாரத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது.

முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே விநாயகர், அதையடுத்து பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் இருக்கக் காணலாம்.

அடுத்துள்ள வாயில் வழியே உள்ளே நுழைந்தால் ஒரு விசாலமான முன் மண்டபம் உள்ளது.

நேரே கிழக்கு நோக்கி சதுரபீட ஆவுடையார் மீது லிங்க உருவில் மூலவர் கங்காளநாதர் எழுந்தருளியுள்ளார்.

முன் மண்டபத்தின் வடபகுதியில் தெற்கு நோக்கிய அம்பாள் கற்பூரவல்லி சந்நிதி உள்ளது.

வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தென் மேற்கு மூலையில் பிரளயம் காத்த விநாயகர் இருக்கிறார்.

மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், அதையடுத்து கஜலட்சுமியும் கோவில் கொண்டுள்ளனர்.

கிழக்குப் பிராகாரத்தில் வடகிழக்கில் பைரவர் மற்றும் சூரியன் சிலாஉருவங்கள் உள்ளன.

*தல அருமை:*
ஸ்ரீ முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார்.

அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார்.

அதற்கு ஈசன், *பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம்* என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும் என்று கூறி அருளினார்.

அதன்படி முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த லிங்கங்களில் ஆழியூரிலுள்ள கங்காளதார் ஒருவர் என்று தல வரலாறு கூறுகிறது.

கீவளூரில் முருகர் செய்யும் பூஜைக்கு இடையூறு வராமல் காக்க அஞ்சுவட்டத்தம்மன் காவல் இருந்தது போல ஆழியூரிலும் முருகர் பூஜையைக் காக்க பிடாரி அம்மன் காவல் காத்ததாக சொல்லப்படுகிறது.

பிடாரி அம்மனுக்கு இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

           திருச்சிற்றம்பலம்.

தேவார வைப்புத் தலங்களில் நாளைய தலப்பதிவு *கைலாசநாதர் திருக்கோயில், ஆறைமேற்றளி.*

____________________________________
*இராஜபதி கைலாசநாதர் திருக்கோயிலுக்கு உபயம் அனுப்பி விட்டீர்களா?:*

No comments:

Post a Comment