Tuesday, April 10, 2018

Significance of Lord Shiva"s roopam and weapons

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!

சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள்
நாம் தெரிந்திருப்போம். ஆனால்,
சிவபெருமானிடம் இருக்கும்்அற்புதமான
விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம்
கடவுள்! மகாதேவன்! மகேஸ்வரன்!
சிவனிடம் வருமானம், வரம் வேண்டுவது
மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல
விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இது
நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில்
முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண
உதவும்.

சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து,
ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை,
நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள்
குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக்
கூறப்பட்டுள்ளது.

இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு
பார்க்கும் போது சிவபெருமான் மிகவும்
எளிமையான தோற்றம் கொண்டவர். ஆனால்,
மிகவும் உடல்திறன் அதிகமாகவும்,
திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும்
கடவுளாக திகழ்வார் சிவபெருமான்.
இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின்
வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான
நிலைக்கு செல்லும் என நாம்
தெரிந்துக்கொள்ளலாம். மக்கள் வீண் பகட்டை
தவிர்ப்பது அவர்களுக்கு தான் நல்லது. சரி
இனி, சிவபெருமானிடம் இருந்து பொதுமக்கள்
கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு
நலன்கள் மற்றும் வாழிவியல் கருத்துகள்
குறித்து தெரிந்துக்கொள்ளலாம்..

| ஜடாமுடி |

சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து
காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக
இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா
உங்களது உடல்நிலையையும், மனநிலையும்
அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை
அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும்.
உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு
செயல்பட பயன்தரும்.

| நெற்றிக்கண் |

சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது
என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும்
பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை
தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும்
முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.

| திரிசூலம் |

திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது,
நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு
ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில்
நமது வேலைகளில் சிறந்து செயல்பட
இயலும் மற்றும் தோல்விகளைத்
தகர்த்தெறியலாம் என்பனவாகும்.

| ஆழ்ந்தநிலை |

சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக,
நாம் அமைதி மற்றும் பொறுமையைக்
கையாளும் போது, நமது தினசரி
பிரச்சனைகளையும், கவலைகளையும்
எளிதாக கடந்து தெளிவான மனநிலை
பெறலாம் என்பதே ஆகும்.

| சாம்பல் |

சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சம்பல்
நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில்
எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும்
கடந்து போகும். அதனால் எதற்காகவும்
மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல்
உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து
வாருங்கள் என்பதே ஆகும்.

| நீலகண்டம் |

சிவபெருமானின் நீல நிற தொண்டையின்
மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு
எவ்வளவு கோபம் வந்தாலும், அதை
கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.
தேவையில்லாமல் அதை மற்றவர் மீது
திணித்து (விஷ சொற்களாக), உங்கள்
நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள
கூடாது, என்பதே ஆகும்.

| உடுக்கை |

சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக,
உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும்
ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள்
உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது
என்பதே ஆகும்.

| கங்கை |

சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை
நமக்கு உணர்த்துவது, உங்களது
அறியாமையின் முடிவில் ஒரு தேடல்
பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான்
உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது
என்பதே ஆகும்.

| கமண்டலம் |

சிவபெருமானின் கமண்டலம் மூலம் நம் அறிய
வேண்டியது, நமது உடலில் இருந்து தீய
எண்ணங்களையும், எதிர்மறை
எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம்
நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே
ஆகும்.

| நாகம் |

சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும்
நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது,
நம்முள் இருக்கும் 'நான்' எனும் அகங்காரத்தை
விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும்
மற்றும் உடல்நிலையும் மேலோங்கும்
என்பதே ஆகும்.

#சிவபெருமானின்  #அங்கங்களும் #அதன் #விளக்கங்களும் #பற்றிப் #பார்ப்போம்

1} திருமுடி –

திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் ( யான், எனது, என்ற செருக்கு இல்லாமல்) பரவசப்படுவதே சிவனது திருமுடியாம்.

2} திருமுகம் –

உலகில் காணும் அனைத்தையும் இறைவனின் அனுக்ரஹமாகவே ( உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சிவமாகவே பார்க்கும் தன்மை) கண்டு அனுபவிப்பது அவரது திருமுகம்.

3} இருதயம் –

முக்தி பெறுவதற்குரிய பக்குவ ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானத்தை ( உண்மையான அறிவு விளக்கத்தை) உணர்த்தும் திருவருட்சக்தி இருதயமாகும்.

4} திருவடி –

யான் எனது என்னும் அகங்கார மமகாரமாய் நிற்கும் பொய்யறிவு ( அறியாமை என்ற இருள்) நீங்கத்திருவருள் ஞானம் பிரகாசித்து நிற்றலயே சிவனுடைய திருவடி என்பர்.

5} {வித்யா} தேகம் –

ஆன்மாக்கள் ( உயிர்கள்) செய்யும் கன்மத்திற்கு ( நல்வினை, தீவினை, செய்வதற்கு ஏற்ப) ஈடாக ரட்சிக்கும் குணமாகிய சதாசிவ மூர்த்தியினுடைய திருமேனி மந்திரம் ( திருவைந்தெழுத்து) ஆகையால் மந்திர ரூபமாகிய ஞான சக்தியே வித்யா தேகம் எனப்படும்.

6} திரிநேத்ரம் –

சூரியன்,சந்திரன்,அக்கினி ( முக்கண் உடையவன்) என்னும் முச்சூடர்களையும் அடக்கியாள்பவர் தாமே என்பதையும் ஆகவனீயம், காருகபத்யம், தக்கிணாக்கினியம் என்னும் மூன்று வேள்விகளும் தம்மிடத்தே பொருந்தியுள்ளன என்பதையும். எல்லாச் செயல்களையும் அறிந்து செய்யும் இச்சை, ஞானம், கிரியா சக்திகளையுடையவர்தாம் என்பதையும் இம்மூன்று கண்களும் குறிக்கின்றன.

7} திரிசூலம் –

ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சத்தி வடிவினதாகிய சூலப்படையானது முத்தொழிலையுடையவர், மும்மலங்களை ( ஆணவம், கன்மம், மாயை) நீக்குபவர் தாமே என்பதைக் குறிப்பது.

8} மழு –

லய சிவமாக இருப்பவர் தாம் என்பதைக் குறிக்க லயஸ்தானமாகவுள்ள மழுவை ஏந்தியுள்ளார்.

9} வாள் –

பிறவி வேரின் கொடியை அறுப்பவர்தாமே என்பதை அறிவிப்பதற்காக ஞான வடிவமாகிய ( அறிவால் நீங்க வேண்டியவை) வாளை ஏந்தியுள்ளார்.

10} குலிசம் –

ஒருவராலும் கெடுத்தற்கு ( துன்பம் தர) இயலாத சுத்தமாயை ஆளும் பேத குண்த்தையுடையவர் தாம் என்பதை அறிவித்தற்காக துஷ்டர்களைப் ( கெட்ட குணத்தை உடையவர்கள்) பேதிக்கின்ற குணமாகிய குலிசத்தை ஏந்தினார்.

11} அபயகரம்

உலக துன்பத்திற்குப் பயப்பட வேண்டாம் என்று அனுக்ரஹம் ( திருவருள் தரும் குணத்தை) செய்யும் குணத்தைக் குறிக்கிறது.

12} வரத கரம் –

ஆன்மாக்களின் கன்மத்துக்கு ஈடாகப் போக முத்திகளைக் கொடுப்பவர் {வரமளிப்பவர்} தாம் என்பதை அறிவித்தற்காகக் கொண்ட்து வரத கரம்.

13} அக்கினி –

ஆன்மாக்களின் பாசங்களை நீக்குபவர் தாம் என்பதை உணர்த்தும் பொருட்டுச் சம்ஹார வடிவாகிய அக்கினியைத் தாங்கியுள்ளார்.

14} அங்குசம் –

மறைப்பினை {திரோபாவம்} செய்பவர் என்பதை அறிவிப்பது.

15} மணி –

நாதத் தத்துவத்திற்குத் ( 36 தத்துவம் கடந்தவர்) தாமே தலைவர் என்பதைக் குறிக்கிறது.

16} ஸர்ப்பம் {பாம்பு} –

பாம்பினுடைய விரிவு, சுருக்கம் போல உலகின் தோற்றம் ஒடுக்கம் இருப்பதற்கு உலகிற்கு நிமித்த காரணர் தாம் என்பதை அறிவித்தற்காகக் குண்டலினி சக்தி ரூபமாகிய பாம்பை ஏந்தியுள்ளார்.

17} பாசம் –

ஆன்மாக்களுக்கு பலத்தை ஊட்டுபவர் தாம் என்பதை அறிவித்தற்காக மாயா ரூபமாகிய பாசத்தை திருக்கரத்தில் ஏந்தியுள்ளார்.

18} மான் –

மானினது நாங்கு கால்களும் நான்கு ( ரிக்,யசூர், சாமம்,அதர்வணம்) வேதங்களாகையால் வேதப் பொருளாக உள்ளவர் தாம் என்பதை உணர்த்துவதற்காக மானை ஏந்தினார்.

19} புன்முறுவல் –

சஞ்சிதம் முதலான மூவகைத் ( ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்) துயரத்தையும் போக்கி அருளுவதற்காக இளமையான புன்சிரிப்பைக் கொண்டுள்ளார்.

20} உபவீதம் {பூணூல்} –

சிவஞானப் பொருளாக இருப்பவரும் அதைத் தருபவரும் தாமே என்பதை உணர்த்துவது.

21} சிகை {தலைக்குடுமி} –

ஞான வடிவமாக உள்ளவர் தாமே என்பதையும் அறிவிக்கவே ஞான அடையாளமாகிய சிகையைக் கொண்டுள்ளார்.

22} சிலம்பு மற்றும் மெட்டி –

பக்குவ ஆன்மாக்களைப் பேரின்பத்தின் அழுத்துதற்குச் சாதனமாக அருட்சிலம்பு மற்றும் மெட்டி விளங்குகிறது.

23} வீரக்கழல் –

ஆன்மாக்களை வசப்படுத்தும் முன் வினையை வென்று, பிறவித் துன்பத்தைப் போக்கும் காரணர் தாம் என்பதை உணர்த்துவது.

24} கங்கை –

உலகை அழிக்குமாறு வந்த கங்கையை அதன் வேகத்தைக் குறைத்து அடக்கி உலகை காத்து இன்பத்தைத் தந்ததால், ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் திளைக்கச் செய்ததற்கு அடையாளமாகக் கங்கையை தலைமுடியில் தரித்துள்ளார்

25) காதில் குழை ( தோடு) -

அசுரர்களை அழித்து ( ஆணவத்தை) வளையமாக காதில் அணிந்துள்ள ஆபரணம் தோடு ஆகும்

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment