Thursday, April 19, 2018

Mani sastry -Periyavaa

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகே உள்ள டி.கொளத்தூர் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் மணி சாஸ்திரி. சுமார் 40 வருடங்களுக்கு முன் காஞ்சி மடத்தோடு தொடர்பு கொண்ட பலருக்கும் இவரைத் தெரிந்திருக்கும். சுத்தமான வைதீகக் குடும்பம். பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். இருந்தாலும் தான் கொண்ட ஆசார அனுஷ்டானங்களை என்றென்றும் விடாமல், தொடர்ந்து மேற்கொண்டவர் மணி சாஸ்திரி. இவரது ஒட்டுமொத்த குடும்பமே மகா பெரியவா சேவையில் பூரித்து திளைத்தது.

இவருடைய அண்ணன் – ஹரிஹர சாஸ்திரி ஒரு காலத்தில் மயிலாப்பூரில் வைதீக காரியங்களில் மிகவும் பிரபலமாக விளங்கியவர். இவர்களுடைய தம்பியான சந்துரு சாஸ்திரி பெசண்ட் நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலில் பூஜகராக இருந்தார்.

1979-களில் ராஜ்தூத் பைக் ஒன்று வாங்கினார் ஹரிஹரசாஸ்திரி. அப்போது அந்த விஷயம் மீடியாக்களில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. காரணம் – வைதீகம் போன்ற தொழிலில் இருப்பவர்கள் அப்போது சொந்தமாக வாகனங்கள் வைத்துக் கொள்வது பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை. வைதீகக் காரியங்களில் இருக்கும் பலர் இன்றைக்கு பைக், கார் போன்ற வாகனங்கள் வைத்துக் கொள்வது சகஜம். ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன் எல்லாமே நடையாத்தைரை தான். கொஞ்சம் தொலைவு நடக்கவேண்டும் என்றால் தான் பேருந்துகளில் பயணிப்பார்கள்.

ஹரிஹர சாஸ்திரிகள் பைக் வாங்கிய விஷயத்தை அப்போது பிரபலமாக இருந்த இல்லஸ்ட்ரேடட் வீக்லி இதழ் 'பைக் வாங்கிய முதல் சாஸ்திரி' என்று இவரது படத்தையும் போட்டு செய்தி வெளியிட்டது. மஹாபெரியவா கூட இது பற்றி 'என்ன ஹரிஹர சாஸ்திரியாரே…பைக் வாங்கிட்ட போலிருக்கு' என்று விசாரித்தாராம். இது ஒரு துணுக்குத் தகவல் தான். அனுபவத்துக்கு வருவோம்.

1983-ல் சென்னை பெசண்ட் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார் மணி சாஸ்திரி. மாதாமாதம் சுமார் 400 ரூபாய் வாடகை. மஹாபெரியவா சேவைக்காக அவ்வப்போது காஞ்சிபுரம் சென்று பெசண்ட் நகர் வீட்டுக்குத் திரும்பி வருவது வழக்கம். பெரியவா காஞ்சிமடத்தில் இருக்கும் காலகட்டங்களில் குடும்பத்துடன் சென்று சேவை செய்வார் மணி சாஸ்திரி.

ஒருமுறை பெசண்ட்நகர் வீட்டில் இருந்த மணிசாஸ்திரி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். நன்றாக இருந்தவருக்குத் திடீரென என்ன ஆயிற்று என்று குழம்பிய வீட்டார், தங்கள் குடும்பத்துக்கு மிகவும் பழக்கமான டாக்டர் பி.ஆர்.ஷெட்டியிடம் அழைத்துப் போனார்கள். மணிசாஸ்திரியைப் பரிசோதித்துப் பார்த்த ஷெட்டி இவரை உடனடியாக ஒரு நல்ல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனாலும் மணிசாஸ்திரியின் பொருளாதார நிலை பற்றி நன்கு அறிந்தவர் ஷெட்டி. எனவே தன் கைப்பட ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்து அடையாறு பகுதியில் இருக்கும் வி.ஹெச்.எஸ்.மருத்துவமனையில் சேரச் சொல்லி அனுப்பினார்.

அதன்படி பதறிப் போனவர்கள், மணி சாஸ்திரியை அழைத்துக் கொண்டு V.H.S.மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அட்மிஷனும் உடனடியாகக் கிடைத்தது. பலதரப்பட்ட மருத்துவர்களும் வந்து மணிசாஸ்திரியைப் பரிசோதித்தார்கள். ஏராளமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் உடலில் எக்கச்சக்க காம்ப்ளிகேஷன் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருவாரம் இங்கேயே சிகிச்சை செய்வோம். அதன் பிறகு பார்ப்போம் என்றார்கள்.

மணி சாஸ்திரிகளிடம் இருந்து பேச்சே இல்லை. உடலில் எந்தச் செயல்பாடும் இல்லை. குடும்பத்தினர் அனைவரும் கலங்கினர். மஹாபெரியவாளுக்கு சேவை செய்தே தேய்ந்து போன இந்த தேகத்தை அந்த மகானே திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தனர்.

டாக்டர்கள் சொன்ன ஒரு வாரம் முடிந்தது. ஆனால் மணி சாஸ்திரியின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவர்கள் தோற்றுப் போயினர். இந்த நிலையில் 'நாளை இவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்' அதுதான் நல்லது' என்று சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சொன்னார்கள் டாக்டர்கள். அடுத்து என்ன செய்வது என்றே அந்தக் குடும்பத்தினருக்குப் புரியவில்லை. கண்ணீர் மல்க நின்றனர் அனைவரும்.

அப்போது ஹரிஹர சாஸ்திரி மருத்துவமனைக்கு வந்தார். படுக்கையில் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த தம்பி மணிசாஸ்திரியிடம் சென்றார். தம்பியை இந்த நிலையில் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவருக்கு. 'கவலைப்படாதடா….உனக்கு ஒண்ணும் இல்லை. காஞ்சிபுரம் போய் பெரியவாளைப் பார்த்திட்டு வருவோம் வாடா' என்றார் தம்பியிடம் சுவாதீனமாக. மணிசாஸ்திரியிடம் இருந்து இதற்கு எந்தப் பதிலும் இல்லை. கேட்கக் கூடிய கேள்வியை உள்வாங்கிக் கொள்பவர்களால்தானே பதில் சொல்லமுடியும்? இப்போது தான் மணி சாஸ்திரி அந்த நிலையில் இல்லையே.

உடன் இருந்த மருத்துவர்களும் குடும்பத்தினரும் பதறிப் போனார்கள். உடலில் அசைவே இல்லாமல் இருக்கும் இவரை எப்படி காஞ்சிபுரத்திற்குக் கூட்டிப் போவது? அது ரொம்பவும் ஆபத்தானது என்று சட்டென்று மறுத்துப் பேசினார்கள். ஹரிஹர சாஸ்திரியைக் கடிந்து கொள்ளவும் செய்தார்கள்.

மணி சாஸ்திரி வராவிட்டால் என்ன? அவன் சார்பாக நானே போய் மஹாபெரியவாளைப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன். அந்தக் கருணை தெய்வம் தான் இவனை உயிர்ப்பிக்க வேண்டும். நிச்சயம் இவனைக் காப்பாற்றும் என்று ஹரிஹர சாஸ்திரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரையும் அறியாமல் அவரது கண்கள் கலங்கின. இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டார்.

தம்பி மணி சாஸ்திரியை அவர் முன்பு இருந்த பழைய உற்சாக நிலையில் பார்த்துவிடத் துடித்தார் ஹரிஹர சாஸ்திரிகள். 'மணி சாஸ்திரியை எப்படியாவது காஞ்சிபுரம் கூட்டிப்போனால், மகா பெரியவாளைப் பார்த்ததுமே எழுந்து உட்கார்ந்து விடுவான். ஆனால், அவன் இப்போது இருக்கும் நிலையில் காஞ்சிபுரத்துக்கு எப்படிக் கூட்டிப்போவது?' என்று தீவிரமாக யோசித்தார் ஹரிஹர சாஸ்திரிகள்.

'மணி சாஸ்திரியை எப்படியாவது காரில் உட்கார வைத்து காஞ்சிபுரம் கூட்டிப் போய் விடுவது' என்ற ஹரிஹர சாஸ்திரிகளின் கருத்தை, குடும்பத்தினர் உட்பட மருத்துவர்கள் எவருமே ஏற்கவில்லை. அது மணி சாஸ்திரியின் தற்போதைய உடல் நிலைக்கு உகந்ததல்ல என்று கருத்து தெரிவித்தனர் அடையாறு வி.ஹெச்.எஸ். மருத்துவர்கள்.

"சரி… மணி சாஸ்திரியின் சார்பாக நான் காஞ்சிபுரம் புறப்படுகிறேன். அந்தக் கருணை தெய்வத்திடம் கண்ணீர் மல்க வேண்டுகிறேன். பயன் இல்லாமலா போகும்?" என்று திடமான நம்பிக்கையுடன் தன் குடும்பத்தினரிடம் சொன்ன ஹரிஹர சாஸ்திரிகள், அன்று இரவே காஞ்சிபுரம் கிளம்பத் திட்டமிட்டார்.

இவர்களின் குடும்பத்தின் மீது அபாரமான அன்பும் தீவிர மரியாதையும் கொண்ட, 'பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த அன்பர்கள் உதவ முன்வந்தார்கள். அவர்களின் முயற்சியால் பயணத்துக்கு ஒரு காரும் ஏற்பாடானது. அந்த காரில் ரத்னகிரீஸ்வரர் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் ஹரிஹர சாஸ்திரிகளுடன் காஞ்சிபுரம் புறப்படத் தயாரானார்கள்.
ஹரிஹர சாஸ்திரிகள் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் புறப்படத் தயாரான அதே இரவு. நேரம் மணி 11. இப்போது காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்துக்கு வருவோம்.

மடத்தில் பூஜைகளைப் பார்த்துவிட்டு, மஹா பெரியவாளையும் தரிசித்துவிட்டு, இரவு ஆகாரத்தையும் முடித்து, பக்தர்கள் பலரும் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டு விட்டிருந்தார்கள். மடத்திலேயே தங்கி மறுநாளும் மஹா ஸ்வாமிகளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்கிற ஆசையும் அனுக்கிரகமும் உள்ளவர்கள் மட்டும் மடத்தில் இரவு தங்கி இருந்தார்கள். நேரம் ஆகி விட்டபடியால், அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு உறங்கப் போய்விட்டார்கள்.

கிட்டத்தட்ட காஞ்சி மடமே அமைதியான சூழ்நிலையில் இருந்தது. இரவு காவல் காக்கும் பணியில் உள்ள வாட்ச்மேன், மடத்தின் பிரதான கதவைப் பூட்டுவதற்காக முனைந்து கொண்டிருந்தார். இந்த நேரம் பார்த்து, ஒரு சீடனை அனுப்பி அந்த வாட்ச்மேனைக் கூட்டிவரச் சொன்னார் மகா பெரியவா.

'கதவைப் பூட்டுகிற வேளையில் பெரியவா வரச் சொல்கிறாரே…. ஏதாவது விஷயம் இல்லாமல் இருக்காது' என்று தனக்குள் பரபரத்த வாட்ச்மேன், தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து அவசர அவசரமாக இடுப்பில் சுருட்டிக் கட்டிக் கொண்டு, மடத்துக்குள் விரைந்தார்.

பெரியவாளைப் பார்த்ததும் பெரிதாக ஒரு கும்பிடு போட்டார்.
பிறகு வாட்ச்மேனிடம் பெரியவா, "கதவைப் பூட்டிடாதே… மெட்ராஸ்லேர்ந்து ஹரிஹர சாஸ்திரி இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வருவான். கதவைப் பூட்டிட்டா அவனுக்குக் கஷ்டமா போயிடும். அவன் வந்தப்பறம் பூட்டிக்கோ" என்று சொல்ல, பெரியவாளின் ஞான திருஷ்டியைக் கண்டு பரவசப்பட்ட வாட்ச்மேன், "அப்படியே ஆகட்டும் சாமீ" என்று மீண்டும் கும்பிடு போட்டு, வெளியே நடந்தான்.

மடத்தின் மெயின் 'கேட்' அருகே வந்தவன், கதவைப் பூட்டாமல், அங்கேயே ஒரு மர நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

மணி நள்ளிரவு பன்னிரண்டை நெருங்கியது.

ஹரிஹர சாஸ்திரிகள் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த அந்த கார், காஞ்சி ஸ்ரீமடத்தின் வாசலில் 'கிறீச்'சிட்டு நின்றது.

இதைத்தானே வாட்ச்மேனும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்?!

முதலில் ஹரிஹர சாஸ்திரிகள் காரில் இருந்து இறங்க, வாட்ச்மேன் பரவசமானான். "வாங்க ஐயரே… நீங்க இன்னிக்கு ராத்திரி, மடத்துக்கு வருவீங்கன்னு சாமீ இப்பதான் அரை மணி நேரம் முன்னே சொன்னாரு… உங்களுக்காகக் கதவைக்கூட பூட்ட வேண்டாம்னு சாமீ சொல்லிச்சு. வாங்க, வாங்க" என்று வரவேற்றான். ஹரிஹர சாஸ்திரிகளை முன்னே அறிந்தவர்தான் இந்த வாட்ச்மேன்.

தன்னுடன் வந்த ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலய பிரமுகர்களைப் பார்த்து, "மடத்துக்கு இன்னிக்கு நாம வரப்போறோம்னு பெரியவாளுக்கு நியூஸ் கொடுத்திருந்தேளா?" என்று கேட்டார் ஹரிஹர சாஸ்திரிகள்.

அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் முகத்தைப் பார்த்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கினர்.

ஹரிஹர சாஸ்திரிகள் மெய்சிலிர்த்துப் போனார்.

"மகா பெரியவாளே…" என்று நா தழுதழுக்க, அந்தக் கலியுக பரமேஸ்வரனின் திருநாமம் உச்சரித்து மடத்தின் வாசலுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார். இதுவே ஒரு நல்ல சகுனமாகப் பட்டது அவருக்கு!

மெல்லிய விளக்கொளியில் இருந்த ஸ்ரீமடத்துக்குள் அவர்கள் நுழைந்தனர்.

அப்போது ஒரு சிஷ்யன் வேகமாக இவர்களிடம் வந்து, "மாமா… பெரியவா உங்களுக்காகக் காத்திண்டிருக்கா… உள்ளே கூட்டிண்டு வரச் சொன்னா" என்றான், அடுத்தகட்ட அதிரடியாக.

ஹரிஹர சாஸ்திரிகளுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் அடுத்த அதிர்ச்சி. 'நாம் வரப்போவது பெரியவாளுக்குத் தெரிந்திருக்கிறது. இதுவாவது பரவாயில்லை. வந்தவுடனே நம்மைப் பார்க்க வேண்டும் என அந்தப் பரப்பிரம்மம், இரவில்கூட ஓய்வெடுக்காமல் காத்துக் கொண்டிருக்கிறதே!'

சிஷ்யன் முன்னால் நடக்க, பரபரவென்று அவனைப் பின்தொடர்ந்தார்கள் அனைவரும்.

பெரியவா அமர்ந்திருந்த அந்தக் குடிசையின் வாசலுக்குச் சென்றதும், சிஷ்யன் ஒதுங்கிக் கொண்டான். ஹரிஹர சாஸ்திரிகள் உள்ளே காலடி எடுத்து வைத்ததும், "வாப்பா ஹரிஹரா… ராத்திரி வேளைல வந்திருக்கே. முக்கியமான ஜோலின்னு, துணைக்கு ஆசாமிங்களையும் கூட்டிண்டு கார்லயே வந்திட்டியோ?" என்று அந்த மகா முனிவர், இவர்களைப் பார்த்து இயல்பாகக் கேட்டார்.
"அது வந்து பெரியவா…" என்று ஹரிஹர சாஸ்திரிகள் மெள்ள விஷயத்தைச் சொல்லத் துவங்க … "முதல்ல எல்லாரும் உக்காருங்கோ. ஆகாரமெல்லாம் ஆயிடுத்தோல்யோ? இல்லேன்னா அரிசி உப்புமா ரெடி பண்ணச் சொல்லட்டுமா?" என்று கேட்டார் பெரியவா.

"எல்லாம் ஆச்சு பெரியவா. எதுவும் வேண்டாம்" என்றவர்கள், தரையில் சம்மணமிட்டு அமர்ந்தார்கள்.

"பெரியவா… என் தம்பி மணி சாஸ்திரி ஒடம்பு முடியாம படுத்திண்டிருக்கான். இன்னிக்கோ, நாளைக்கோன்னு டாக்டர்கள் நாள் குறிச்சிட்டுப் போயிட்டா…" என்று அடுத்து எதோ சொல்ல வந்த ஹரிஹர சாஸ்திரிகளை பெரியவா இடை மறித்தார். "ஏண்டா… இப்ப அவனை, தனியா விட்டுட்டா எல்லாரும் இங்க வந்திருக்கேள்?" என்று திகைப்புடன் கேட்டார்.

பெரியவாளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது ஹரிஹர சாஸ்திரிகளுக்கு.

சில விநாடிகள் தியானத்துக்குப் பிறகு பெரியவா திருவாய் மலர்ந்தார். "அசடே… இந்தப் பிரசாதத்தைக் கொண்டுபோய் மணிகிட்ட கொடு. எல்லாம் காமாட்சியோடது" என்று பிரசாதத் தட்டுகள் இருந்த பக்கம் கைநீட்டிக் காண்பித்தார்.

அங்கே-

நாலைந்து மூங்கில் தட்டுகள். அதில் ஏராளமான புஷ்பங்கள், மாலைகள், விதம்விதமான பழங்கள், விபூதி, குங்குமம் என்று அனைத்தும் ஃபிரஷ்ஷாக இருந்தன. மூங்கில் தட்டின் விளிம்புகூட கண்களில் படவில்லை. அந்த அளவுக்குப் பிரசாதங்கள் அனைத்தும் அடர்த்தியாக – மூங்கில் தட்டையே முழுவதுமாக அடைத்துக் கொண்டிருந்தன.

ஹரிஹர சாஸ்திரிகளும் பெரியவாளிடம் இருந்து தன் வாழ்க்கையில் எத்தனையோ முறை பிரசாதங்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், இது போன்றதொரு பிரசாதங்களை – தூக்க முடியாத அளவுக்கு – அவர் பெற்றதே இல்லை.

எல்லோரும் பெரியவாளின் திருப்பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார்கள். அனைவரையும் ஆசீர்வதித்தார் மகா பெரியவா.

"பெரியவா உத்தரவு கொடுத்தா, பிரசாதங்களை எடுத்துண்டு இப்பவே மெட்ராஸ் கௌம்பிடுவோம். மணி ரொம்ப சந்தோஷப்படுவான்" என்று தரையில் இருந்து, மெள்ள எழுந்தபடி கேட்டார் ஹரிஹர சாஸ்திரிகள்.

"அவசரப்படாதே… மணி சாஸ்திரி பத்திரமா இருப்பான். அகால வேளை. இங்கேயே படுத்துண்டுட்டு விடிகார்த்தால வெளிச்சம் வர ஆரம்பிச்சவுடனே கௌம்புங்கோ" என்றார் மகா ஸ்வாமிகள்.

"உத்தரவு பெரியவா" என்றபடி, வந்தவர்களுடன் சேர்ந்து தானும் மூங்கில் தட்டுகளைச் சுமந்தபடி அங்கிருந்து வெளியே வந்தார் ஹரிஹர சாஸ்திரிகள். மடத்தின் ஒரு மூலையில் – தலைமாட்டில் பிரசாதத் தட்டுகளை வைத்துவிட்டு மேல்வஸ்திரத்தைத் தரையில் விரித்து, லேசாகக் கண் அயர்ந்தனர்.

புரண்டு புரண்டு படுத்தார்களே தவிர, எவருக்கும் தூக்கம் வரவில்லை.

பொழுது விடிந்தவுடன் இந்தப் பிரசாதங்களைக் கொன்டுபோய் தம்பி மணியிடம் சேர்க்க வேண்டும் என்பதே ஹரிஹர சாஸ்திரிகளின் நினைப்பாக இருந்தது. 'அவன் இந்நேரம் எப்படி இருக்கிறானோ? பெரியவாளின் ஆசியுடன் தேறி விடுவானா?" என்றெல்லாம் இவரது எண்ணம் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது.

அதிகாலை ஐந்து மணிக்கு மடத்தின் வாசலில் சாணம் தெளித்து, கோலம் போடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஹரிஹர சாஸ்திரிகள் உட்பட அனைவரும் காருக்கு வந்துவிட்டனர். டிரைவரும் தயாராகவே இருந்தார்.

பிரசாதங்களைச் சுமந்தபடி அந்த கார், அடையாறு வி.ஹெச்.எஸ். ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. பெரியவாளின் பிரசாதத் தட்டு ஒன்றைத் தன் மடியில் வைத்திருந்த ஹரிஹர சாஸ்திரிகள், ஏதோ பெரியவாளே தன்னுடன் பயணித்து வருவதுபோல் உணர்ந்தார்.

காலை சுமார் ஏழரை மணிக்கு அடையாறு வி.ஹெச்.எஸ். ஆஸ்பத்திரிக்குள் அந்த கார் நுழைந்தது. காரில் இருந்து இறங்கியவர்கள், தங்களால் முடிந்த தட்டுகளைக் கையில் எடுத்துக்கொண்டு மணி சாஸ்திரி இருந்த வார்டை நோக்கி நடந்தனர்.

மலர்களும் மாலைகளும் நிரம்பிய அந்த மூங்கில் தட்டில் இருந்து கிளம்பிய திவ்யமான நறுமணம், மருத்துவமனையின் சூழலையே மாற்றியது.

எதிர்ப்பட்ட மருத்துவர்களும் நர்ஸ்களும், காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்து மகா பெரியவா ஆசியுடன் இந்தத் தட்டுகள் வந்துள்ளன என்பதை அறிந்து, அதைத் தொட்டுத் தங்கள் கண்களில் ஒற்றிக்கொண்டனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக வந்திருந்த சில உறவுக்கார அன்பர்கள், அதற்கு நமஸ்கரிக்கவே செய்தனர்.
இந்தக் களேபரங்களை எல்லாம் தாண்டி மணி சாஸ்திரி அட்மிட் ஆகி இருந்த வார்டுக்குள் இவர்கள் செல்வதற்குச் சில நிமிடங்கள் கூடுதலாகவே ஆயின.

'தம்பி மணி சாஸ்திரி நேற்றைய இரவுப் பொழுதை எப்படிக் கழித்தானோ? அவனுடைய தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?' என்றெல்லாம் ஹரிஹர சாஸ்திரிகள் மனம் கன்னாபின்னாவென்று அலைந்தது.

இதோ ஹரிஹர சாஸ்திரிகள், மணி சாஸ்திரி அட்மிட் ஆகி இருந்த வார்டுக்குள் நுழைந்துவிட்டார். பிரசாத மணம், அந்த அறைக்குக் கூடுதல் பிரகாசம் தந்தது. சூழலையே இதமாக்கியது.

"தம்பீ மணி…" என்று கூப்பிட்டுக் கொண்டே வார்டுக்குள் முதலில் நுழைந்த ஹரிஹர சாஸ்திரி ஏகத்துக்கும் அதிர்ந்துவிட்டார்

ஹரிஹர சாஸ்திரிகளுடன் காஞ்சிபுரத்தில் இருந்து திரும்பியவர்களும் மடத்தில் இருந்து பெரியவாளின் அனுக்ரஹமாகக் கிடைத்த பிரசாதங்களைக் கைகளில் சுமந்திருந்தனர். 'மணி சாஸ்திரியின் கையில் எப்படியாவது இந்தப் பிரசாதங்களைக் கொடுத்து, மஹாபெரியவாளின் அருள் அவனுக்குக் கிடைக்கவைக்க வேண்டும். பிரசாதமாகக் கொண்டு வந்திருக்கும் ஓரிரு பழங்களை நறுக்கி, அவனுக்கு உட்கொள்ளக் கொடுக்க வேண்டும். விபூதி பிரசாதத்தை அவன் நெற்றியில் இட்டுவிட்டு, தினமும் தலைமாட்டுக்கு அருகில் வைக்கச் சொல்ல வேண்டும்' என்றெல்லாம் நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் அவரது அண்ணனான ஹரிஹர சாஸ்திரிகள்.

மணிசாஸ்திரி இருந்த வார்டுக்குள் நுழைந்ததும், ஏகத்துக்கும் அதிர்ந்து விட்டார் ஹரிஹர சாஸ்திரி. உடல் நலம் முடியாமல் – நோயின் உக்கிரமம் தாளாமல் சுருண்டு படுத்திருப்பான் மணி சாஸ்திரி என்று சென்றவருக்கு, அவர் ஜம்மென்று நிமிர்ந்து பெட்டில் உட்கார்ந்திருந்ததால் அதிர்ச்சி இருக்காதே பின்னே?! அது மட்டுமல்ல… 'வாப்பா ஹரிஹரா… எங்கேர்ந்து வர்றே? என்று மணி சாஸ்திரி குரலில் பிசிறு இல்லாமல் கேட்ட கேள்வியைத் தன் காதுகளில் வாங்கிக் கொள்ளவில்லை ஹரிஹர சாஸ்திரி.

தம்பியை இந்த நிலையில் பார்த்ததும், ஹரிஹர சாஸ்திரிக்குப் பேச்சே எழவில்லை. கண்களில் நீர் கசிய ஆனந்தப்பட்டார். நெகிழ்ச்சியில் பூரித்தார். காஞ்சி மடத்துக்குச் சென்று பெரியவா தரிசனம் முடித்து வந்திருக்கும் வேளையில் இப்படி ஓர் அற்புதமா என்று எண்ணி, அந்த நடமாடும் தெய்வத்தை ஒரு கணம் இருந்த திசையில் இருந்தே மனமுருக வேண்டிக் கொண்டார். மானசீக நமஸ்காரத்தைத் தெரிவித்தார்.

பிற்கௌ தன் இயல்புக்கு வந்த ஹரிஹர சாஸ்திரி 'என்ன மணி எப்படிடா இருக்கே? இப்படித் திடீர்னு எழுந்து பெட்ல உக்காந்திண்டிருக்கியே..உன்னால முடியறதா? டாக்டருங்க பார்த்தா ஏதானும் சொல்லப் போறா' என்று வேகவேகமாக நடந்து பெட்டில் மணிசாஸ்திரியின் அருகில் உட்கார்ந்து கொண்டார் ஹரிஹர சாஸ்திரி. கூடவே நர்ஸ், மற்றும் டாக்டர்களின் அனுமதி பெறாமல் எழுந்து உட்கார்ந்து தன்னை சிரமப்படுத்திக் கொள்கிறானோ என்றும் கவலைப்பட்டார் ஹரிஹர சாஸ்திரி.
'ஒண்ணும் கவலைப்படாதீங்கோ…நான் நல்லா இருக்கேன். நேத்து ராத்திரி வரைக்கும் என்னால எதுவும் முடியாம இருந்தது. இன்னிக்கு முடியறது. எழுந்து உட்கார்ந்தேன்' என்றார் மணி சாஸ்திரி.

'எப்படிடா முடியறது? இந்த நாள் வரைக்கும் எங்களையெல்லாம் இப்படிக் கவலைப்பட வெச்சுட்டியேடா…உனக்கான நாளையும் டாக்டருங்க குறிச்சிக்கும்படியா வெச்சுட்டியேடா' என்று மணி சாஸ்திரியை ஆதுரமாகப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தார் ஹரிஹர சாஸ்திரி.

'எனக்கு ஒன்னும் இல்லேண்ணா… நேத்து ராத்திரி பெரியவா இங்கே வந்தா…' மணி சாஸ்திரி இப்படிச் சொல்லத் துவங்க மிரண்டு போனார் ஹரிஹர சாஸ்திரி.

'என்ன சொல்றே..பெரியவா இங்கே வந்தாளா? எந்தப் பெரியவா?

என்னண்ணா இப்படிக் கேக்கறேள்? நமக்கு எல்லாம் பெரியவான்னா யாரு? காஞ்சி தெய்வம் தான். சாட்சாத் அந்தப் பெரியவா இங்கே வந்தா…'

வந்தாரா… இந்த ஆஸ்பத்திரிகு வந்தாரா…என்ன சொன்னார்? ஹரிஹர சாஸ்திரியால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை. தம்பி சொல்லப் போகும் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தார்.

'ராத்திரி ரெண்டு மணி இருக்கும். தூக்கம் வராம பொரண்டு பொரண்டு படுத்தேன். திடீர்னு அதிகார தொனியில் ஒரு குரல் – 'மணி எழுந்து உட்கார்டானு. பொசுக்குன்னு எழுந்து பார்த்தா யாருமே இல்லை. எதோ பிரமையோன்னு திரும்பப் படுத்துட்டேன். அப்புறமும் அதே அதிகாரக் குரல் – 'மணி..உனக்கு ஒண்ணுமே இல்லை. நீ ஆரோக்கியமா இருக்கே.எழுந்து உட்கார்டா' தூக்கிவாரிப்போட்டது எனக்கு.

மஹாபெரியவா என் முன் தோன்றி சொன்னார். 'ஜய ஜய சங்கர'னு கன்னத்துல போட்டுண்டு 'அப்படியே ஆகட்டும் பெரியவா'னு சட்டுன்னு போர்வையை விலக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். இது நாள் என்னைப் பாடாப் படுத்திண்டிருந்த உபாதை எதுவும் அதுக்குப் பிறகு கொஞ்சமும் இல்லை. உடம்பு ரொம்ப இயல்பா ஆயிடுத்து' – மணி சாஸ்திரி வெகு சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஹரிஹர சாஸ்திரிகளும், அவருடன் வந்தவர்களும் அடைந்த ஆச்சரியத்துக்கும் பிரமிப்புக்கும் அளவே இல்லை. 'மணி உனக்கு ஒடம்பு நன்னா ஆகணும்னு தான் காஞ்சிபுரம் போய் அந்த மஹானைத் தரிசனம் பண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு வந்தோன். ஆனா அவரோட பிரசாதம் உன் கைக்கு வந்து சேர்றதுக்குள்ளே உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்துட்ட அந்த தெய்வத்தின் கருணையை எப்படிப் பாராட்டறது' என்றவர், தான் கொண்டுவந்த பிரசாதத்தில் இருந்து விபூதியை மட்டும் எடுத்து மணி சாஸ்திரியின் நெற்றியில் இட்டுவிட்டார்.

V.H.S.மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களுக்கும் நர்ஸுகளுக்கும் இந்தத் தகவல் போய் ஓடோடி வந்தார்கள். 'நேற்றைய தினம் வரை நாட்களை எண்ணிக் கொண்டிருந்த மணி சாஸ்திரியா இவர்? என்று ஆளாளுக்குத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு வந்த பிரசாதம் மருத்துவமனைக்குள் விநியோகம் ஆனது.

'என்னை எப்ப டிஸ்சார்ஜ் பண்றேள்?" என்று மணி சாஸ்திரி ஆர்வமுடன் கேட்டது மருத்துவர்களுக்கே மாபெரும் சந்தோஷத்தை தந்தது. அடுத்த ஓரிரு நாட்களில் அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து இயல்பாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார் மணி சாஸ்திரி. 1983-ஆம் வருடத்திலேயே நாள் குறிக்கப்பட்ட மணி சாஸ்திரி, பன்னிரண்டு வருடங்கள் கழித்து 1995-ல் இயற்கை எய்தினார்.

காஞ்சி மடத்துக்கு மணிசாஸ்திரி செய்திருந்த தொண்டைப் பாராட்டி மடத்தின் சார்பில் அவருக்கு சென்னை கொட்டிவாக்கத்தில் ஒரு வீடு தந்திருந்தார்கள். அந்த வீட்டில் தான் அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர.

பெரியவா சரணம் பெரியவா கருணை.

No comments:

Post a Comment