அருள்வாக்கு! - தாவும் ஆசை!
============================
நம்முடைய சரீரத்திலேயே ஒரு அங்கத்தைவிட இன்னொரு அங்கத்திடம் ஆசை ஜாஸ்தியாயிருக்கிறது. சாதாரணமாக மற்ற எல்லா வெளி வஸ்துக்களையும் விட நமக்கு நம்முடைய சரீரத்தில்தான் அதீத பிரியம்.
"நாம்' என்பதே நம்முடைய சரீரம் என்றுதானே ஞானிகளைத் தவிர மற்ற எல்லோரும் நினைக்கிறோம்?
"நான் சிவப்பாக இருக்கிறேன்; அல்லது கறுப்பாக இருக்கிறேன். நான் குட்டையாயிருக்கிறேன்; அல்லது நெட்டையாயிருக்கிறேன்' என்றெல்லாம் சொல்லும் போது உடம்பையே "நானாக' நினைப்பதுதானே தெரிகிறது?
நமக்கு ரொம்பப் பிரியமானவர்கள் கவனக்குறைவால் நம் கால்விரலில் ஒன்றைக் கொஞ்சம் மிதித்து விட்டால்கூட அவர்களிடமுள்ள பிரியம் போய் கோபம் கொள்கிறோம். ஏனென்றால், உடம்பிடம் அத்தனை ஆசை!
இந்திரிய ஆனந்தங்களையெல்லாம் அதுதான் தருகிறது என்பதால் இப்படியொரு ஆசை. சோப், சென்ட், சில்க் எல்லாம் போட்டு உடம்பை ஆசை ஆசையாய் அலங்காரம் பண்ணிக் கொள்கிறோம்.
விரலில் புன், நன்றாய் சீழ் வைத்துவிட்டது. அதனால் ஜுரம் ஜன்னி வந்தது என்றால் "எங்கே கை முழுவதுமே புரை ஓடி அழுகி விடுமோ?' என்ற பயத்தில், நவரத்தின மோதிரம், வைர மோதிரம் போட்டு அலங்காரம் பண்ணிக் கொண்ட அந்த விரலை "ஆம்ப்யுடேட்' செய்யச் சொல்கிறோம். நம்முடைய உடம்பிலேயே ஒரு அங்க்தைவிட இன்னொன்றிடம் ஆசை ஜாஸ்தி என்பதைக் காட்ட வந்தேன்.
நமக்கு சர்க்கரை வியாதி வருகிறது. அதனால் காலில் ஏதோ புண் ஆறாமல் புரை ஓடிவிட்டது என்றால், விரல் மட்டும் இல்லை. "காலையே வெட்டினாலும் பரவாயில்லை. உயிரைக் காப்பாற்றுங்கள்' என்று டாக்டரிடம் சொல்கிறோம்.
"ஹார்ட்'டுக்கு மருந்து சாப்பிட்டால் வயிற்றுக்கு இன்னின்ன போடக்கூடாது. ஃபட் சேர்க்கவே கூடாது என்று டையட் வைக்கிறார்கள். "அப்படியே பண்ணுகிறேன்' என்று நோயாளி செய்கிறபோது இவனுடைய சரீரத்திலேயே இவனுக்கு வயிற்றைவிட இருதயத்திடம் ப்ரியம் ஜாஸ்தி என்றுதானே அர்த்தம்?
ஆசை வேகம் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவுவதாகவும் இருக்கிறது.
---ஜகத்குரு காஞ்சி காமகோடி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment