உ.
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
__________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.......................)
____________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 221:*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*மாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை மாகாளம்:*
___________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்தொன்று தலங்களுள் இத்தலம் முப்பத்து ஒன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* மாகாளேஸ்வரர், மாகாளநாதர்.
*இறைவி:*
குயில்மொழி அம்மை, மதுரசுந்தரநாயகி.
*தல விருட்சம்:* இலுப்பை மரம்.
*தல தீர்த்தம்:* மாகாள தீர்த்தம்.
*ஆகமம்:* சிவாகம முறைப்படி.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்.
இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
*இருப்பிடம்:*
திண்டிவனத்திலிருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலை மார்க்கத்தில் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையை தாண்டி சிறிது தூரம் சென்றால், இடதுபுறம் இரும்பை செல்லும் சாலை பிரிகிறது.
சாலை பிரியும் இடத்தில் இரும்பை என்ற பெயர்ப் பலகையும் உள்ளது.
இந்த சாலையில் இரண்டு கி.மி. சென்று மாகாளேஸ்வரர் திருக்கோயிலை அடையலாம்.
பாண்டிச்சேரியில் இருந்து சுமார் பத்து கி.மி. தொலைவில் இரும்பை மாகாளம் என்ற இந்தத் தலம் இருக்கிறது.
பாண்டிச்சேரியில் இருந்து சஞ்சீவிநகர் செல்லும் நகரப் பேருந்து மாகாளேஸ்வரர் கோவில் வழியாகச் செல்கிறது.
மற்றொரு பாடல் பெற்ற தலமான திருஅரசிலி இங்கிருந்து சுமார் ஐந்து கி.மி. தூரத்தில் இருக்கிறது.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில்,
இரும்பை அஞ்சல்,
வானூர் வட்டம்,
கடலூர் மாவட்டம்,
PIN 605 010
தினமும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
இவ்வாலயம் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரளவில் ஒரு பிராகாரத்துடன் அமைந்திருக்கிறது.
இவ்வாலயத்திற்குச் சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டோம் இங்கு இராஜகோபுரமில்லை என்று சிவ சிவ.
ஒரு முகப்பு வாயில் மட்டுமே காட்சியாய் தெரிய உள் புகுந்தோம்.
முகப்பு வாயிலின் வலதுபுறத்தில் விநாயகர் சந்நிதி இருந்ததது.
விடுவோமா?... சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
மூத்தோன் விநாயகரை வணங்கி கடந்தவுடன் நேரே பலிபீடம் காணக் கிடைத்தது.
அருகாக போய் நின்று, நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்து, கொடிமரத்து முன்பு நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
திரும்ப, நந்தி மண்டபத்திலிருந்த
நந்தியாரைக் கண்டு வணங்கிக் கொண்டோம். மேலும் ஆலயத்துள் சென்று இறைவனை வணங்க அனுமதி வேண்டிக் கொண்டோம்.
மூலவர் சந்நிதிக்குள் நுழைந்தோம். கருவறையின் முன் சுவர் முழுமையும், செப்புத் தகடுகள் பதிக்கப் பட்டிருந்தன.
துவாரபாலகர்கள், மாகாளர் ஆகியோர்கள் இந்த செப்புப் போர்வையில் இருந்தனர். இவையாவும் பொன்போல ஒளிர்ந்தன.
வாயிலின் இருபுறத்திலும் துவாரபாலகர்களைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.
இவர்களிடம், ஆலத்துள் இருக்கும் ஈசனை வணங்கச் செல்ல விண்ணப்பத்தை அளிக்க வேண்டி கொண்டு உள் சென்றோம்.
மூலவர், சுயம்புலிங்க வடிவில் மாகாளேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி அருள்புரிந்த வண்ணமிருந்தார்.
மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
அடுத்து, இறைவி குயில்மொழிநாயகி சந்நிதிக்குச் சென்று, தெற்கு நோக்கி அருள்புரிந்த அம்மையை, கண்குளிரக் கண்டு, மணங்குளிரத் தரிசித்து, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
அம்பாள் சந்நிதிக்கு அருகாக ஆடவல்லானின் நடராஜ சந்நிதி இருந்தது. நன்றாக தரிசித்து வணங்கிக் கொண்டோம்.
இவரின், ஆடற்கலையின் நயங்களை நினைத்தபடியே மெய்மறந்து நடந்து சென்றோம்.
நாம் ஆலயம் சென்றிருந்த சமயத்தில்தான் இவ்வாலயத்தின் திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் தெரிந்தன. பார்வைக்கு எல்லாமே மனதிற்கு ரம்மியமாக இருந்தது.
பிராகார மேற்குச் சுற்றில் கருவறைக்குப் பின்புறம் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து ஆறுமுகர் காட்சி தர, சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இச்சந்நிதிக்கு அருகிலேயே காலபைரவர் சந்நிதி இருந்தது. அருகில் சென்று, பவ்யபயத்துடன் வணங்கிக் திரும்பினோம்.
இச்சந்நிதியில் நின்று கொண்டு இறைவன், அம்பாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் நிலையுடன் அமைப்பு இருந்தது.
திரும்ப ஒருசேர மூவரையும் கண்டு வணங்கிக் கொண்டோம்.
நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் சேர்ந்து இருக்கின்றனர்.
சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகின்றனர்.
சூரியனின் இந்த தரிசனம் விசேஷமானதாம். கோவில் கிழக்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கியபடி சூரியன், சந்திரன் தனிச் சந்நிதிகளில் இருக்கிறார்கள்.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்களைக் கண்டு ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
பிராகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் ஆஞ்சனேயருக்கும் சந்நிதி அமையப் பெற்று
இருக்கிறது.
பிராகார சுற்றுச் சுவர் உட்புறம் முற்றிலும் விதவிதமான உருவங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இவைகள் யாவும் மிக மிக அழகாக இருந்தது.
ஆங்காங்கே ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. இவையாவும் அழகாகத் தெரிந்தன.
*தலப் பெருமை:*
இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் விளங்குகின்றன.
அவை வடதாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டுத் தலமான இந்த இரும்பை மாகாளம் ஆகும்.
சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர்.
அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து, தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள்.
இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள்.
பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறை பூந்தோட்டத்திற்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
அவர் மேலும் இத்தலம் வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
மாகாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனும் *"மகாகாளநாதர்"* என்ற பெயர் பெற்றார்.
*கடுவெளிச் சித்தர்:*
நான்காம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தின்போது,
கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள
அரசமரத்தின் கீழ் அமர்ந்து சிவனை நினைந்து தவம் செய்து வந்தார்.
இவரின் கடுமையான தவ வலிமையால் மிகுந்த சக்தியைப் பெற்றார்.
அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடி வந்தனர்.
இந்தப் பகுதியில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டதால் தீர்க்க வழிதெரியாத மன்னன் மேலானோரை நாடினான்.
அம்மேலானோரும், கழுவெளி சித்தர் என்பவர் இரும்பை மாகாணத்தில் தவம் இருக்கிறார் என்றும் அவர், ஒரு நாளைக்கு ஒரே
ஒரு அரச இலையை மட்டும் உண்டு அரசமரத்தின் கீழ்
தவம் செய்வதாகவும், அவர்சிவகடாட்சம் பெற்றவர்
என்பதால், அவரால் மட்டுமேஇந்த பஞ்சம் உள்ள
நிலையை மாற்ற இயலும்
என்றும் கூறினர்.
ஆனால் தவத்தில் ஆழ்ந்துள்ள முனிவரை
எவ்வாறு எழுப்பி அவரிடம்
நம் குறையை கூறுவது, ஒருவேளை அவர்
கோபித்தால் என்ன செய்வது என்று மன்னர்
தயங்குகினார்.
இரும்பையை சேர்ந்த தாசிவள்ளி என்பவள் தன் நாட்டிற்காக, தான் முனிவரை தவத்திலிருந்து
எழுப்புவதாகவும், அவர்
கோபம் கொண்டு சபித்தால், அதனைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும் தியாக
உள்ளத்துடன் கூறி
சித்தரை சந்திக்கச் சென்றாள்.
முனிவரின் உணவுப் பழக்கவழக்கங்களை அறிந்த
வள்ளி ஒரு அரச இலையைப் போன்று
*'அப்பளப்பூ'*ஒன்றை தயார் செய்து வைத்து காத்து இருந்தாள்.
முனிவர், அரசமரத்தின் பழுத்த இலைக்காக கண்ணை திறக்காமல்
வலது கையை மேலே உயர்த்தினார்.
அப்போது அவரது வலது கையில் அரச இலைக்குப்
பதிலாக அப்பளப்பூவை
வைத்தாள் வள்ளி.
அவர் தன் உணவை வில்வ இலை எண உண்ண சுவை
வேறுபாட்டை உணர்ந்ததும்,
நடந்ததை ஞானக் கண்ணால் அறிந்த சித்தர்
கண்களைத் திறந்தார்.
அப்போது, அவரை
வணங்கிய தாசி, தனது
நாட்டின் பஞ்சத்தைப்
போக்குமாறு பணிவுடன் வேண்டி நின்றாள்.
ஒரு தாசியே உயிரை துச்சமென மதித்து தன் நாட்டு மக்களின் பசியைப்
போக்க வழியறிய வந்ததை எண்ணி சித்தர் வியந்தார்.
இறைவனை வேண்டி பஞ்சம் நீங்க வழி செய்கிறேன் என சித்தரும்
ஒப்புக் கொண்டு கடுமையாக தவம் செய்தார்.
அதனால் நாட்டில் நல்ல மழை பெய்தது. பஞ்சம் அகன்றது. ஈசனுக்குத் திருவிழா எடுத்தனர்.
ஐந்தாம் நாள் திருவிழா நடந்தன. தாசி வள்ளியின்
நடனம் நடைபெற்றது.
அப்போது அவளின் வலது
கால் சிலம்பு கழன்று
தரையில் விழுந்தது.
தேவதாசியின் நடனத்தால்
விழாவிற்கு தடைவந்து
விடக்கூடாதே என்று
நினைத்த சித்தர்,சிலம்பை
தன் கையிலெடுத்து
அவளது காலில்
அணிவித்து விட்டார்.
சித்தரின் இச்செயலைத்
தவறாக பேசி அவரை ஏளனம் செய்து எள்ளி
நகையாடினார்கள்.
மக்களின் ஆணவத்தைக் கண்டு கோபம் கொண்ட
சித்தர்.........
*"வெல்லும் பொழுது விடிவேன் வெகுளியை செல்லும் பொழுது செலுத்திடுவேன் சிந்தை அதனை அல்லும் பகலும் உன்ன தொழுது கல்லும் பிளந்து கடுவெளியாமே'*
எனப் பாடினார்....
அவ்வளவுதான்...............
கோயிலிலிருந்த சிவலிங்கம், மூன்று
பாகங்களாக வெடித்து பிளந்து சிதறியது.
இதைக்கண்டு திடுக்கிட்ட
மக்களும் மன்னரும் தாங்கள் செய்த தவறை உணர்ந்தனர். முனிவரை பணிந்து சாந்தமடைய வேண்டினர்.
*"எட்டும் இரண்டும் அறிந்த எந்தனை, எட்டும் இரண்டும் அறிந்த உந்தனை, எட்டும் இரண்டும் ஒன்றதாகுமே"*
என்று கோபம் தணிந்து மறுபடி பாட லிங்கத்தின் இரண்டு பகுதி மட்டும் சேர்ந்து கூடியது.
இதனின் மூன்றாவது பகுதி பதினைந்து கி.மீ
தொலைவுக்கும் அப்பால் சென்று விழுந்தன.
இதனால் சிவலிங்கத்தை செப்புத்தகடால் கூப்பிவித்து வேய்ந்து, லிங்கத்தை ஒன்றாக்கி அரசன்
வழிபட்டான்.
அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் இந்தச் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அருள்கிறது.
தகடை அகற்றினால் பிளவின் அடையாளம் தெரிகிறது. ஆனால், அதற்கு முனைவதில்லை.
மூன்றாவது பகுதி விழுந்த இடம், இன்றும் புல் பூண்டு
முளைக்காத காடாய் காட்சியளிப்பதாக கூறுகிறார்கள்.
கருவறையில் லிங்கம்
மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது.
இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர்.
இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய
மும்மூர்த்திகளை குறிப்பதாக சிலர் கூறுவர்.
சிவனின் இந்த மும்மூர்த்தி
தரிசனம் மிகவும் அபூர்வமானது.
*குயில்மொழி நாயகி:*
அம்மனின் திருநாமம் குயில் மொழி நாயகி. இவள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு
பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற
கோலத்தில் அருளுகிறாள்.
கடுவெளிசித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்த போது, அம்பாள் குயில்
வடிவத்தில் இம்மரத்தில்
தங்கியிருந்து சித்தரை
கண்காணித்து, அவரது
தவத்தின் மேன்மையை
தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம்.
இதனால் அம்பாளுக்கு
*"குயில்மொழிநாயகி'*
என்று பெயர் ஏற்பட்டது.
பேச்சு சரியாக வராதவர்கள்
இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து
வழிபட்டு, அதனை நாக்கில்
தடவிக் கொள்கின்றனர்.
இவ்வாறு செய்வதால் குரல்வளம் சிறக்கும், கலைகளில்
சிறந்து விளங்கலாம் என
நம்பிக்கை.
அம்பாள் சன்னதிக்கு முன்
இடது புறத்தில் நடராஜர்
தனிச்சன்னதியில்
இருக்கிறார்.
இவரது கால் சற்று கீழே
மடங்கியபடி இருக்கிறது. இதனை நடராஜரின்
சந்தோஷ கோலம்
என்கிறார்கள்.
பங்குனி உத்திரத்தில்
முருகக்கடவுளுக்கு காவடி
எடுப்பது விசேஷமான
நிகழ்ச்சியாகும்.
*கலா சந்திரன்:* இக்கோயில் பிரகாரத்தில்
சந்திரன், மேற்கு பார்த்தபடி
தனிச்சன்னதியில்
இருக்கிறார். இவர் இடது
கையில் ஏடு ஒன்றை வைத்துக் கொண்டு
"கலா சந்திரனாக" காட்சி
தருகிறார்.
பக்தர்கள் இவருக்கு பால்
சாதம் நைவேத்யமாக
படைத்து வணங்கி வருகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து
விளங்கலாம் என்பது
நம்பிக்கை.
இங்கே கடுவெளிச் சித்தர் அரச மரத்தின் கீழ் தவம்
செய்யும் திருக்கோலம்
மிக அழகாகக் காட்சி
அளிக்கிறது.
இவரது தவக்கோலத் தரிசனம் காண்பவரையும்
தியானம் செய்யத்
தூண்டுகிறது.
முதலில் இந்த கோயிலில்
சித்தரின் சிலை வடிவம்
இல்லை. பின்னாளில் சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி
செய்த பொழுது சித்தரின் சிலை கிடைக்கப் பெற்றது.
கோயில் முன் மண்டபத்தில் செப்புத்தகட்டில் சித்தரின்
உருவம் அழகாக பொறிக்கப் பட்டுள்ளது.
சித்தர் ஜீவசமாதி அடைந்த இடம் என்பதால் சித்தர்
வழிபாடு செய்வோரும் பெரும் அளவில் வருகின்றனர்.
அவருடைய குருபூஜை தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
திருஞானசம்பந்தர், பட்டினத்தார் ஆகியோர்
சுவாமியை குறித்து பதிகம்
பாடியுள்ளனர்.
பட்டினத்தார்
திருவொற்றியூர் சென்றடையும் முன்னர்
இத்தலத்திற்கு வந்து
பாடியுள்ளதாக வரலாறு
அறிவிக்கின்றது.
"மாதா உடல் சலித்தாள்,
வல்வினையேன் கால்சலித்தேன் வேதாவும் கைசலித்து விட்டானே! நாதா!
இரும்பையூர் வாழ்சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா!
-பட்டினத்தார்
ஆலயத்தின் ஒவ்வொரு இடமும் மிகவும் சுத்தமாக
இருப்பதால் தெய்வீகத்
தன்மை ஒளிவிட்டுப்
பிரகாசிக்கின்றது.
கடுவெளிச் சித்தர், இவ்வாலய லிங்கத்தில்
ஜோதி மயமானதால் தெய்வங்களின் சக்தியுடன், கடுவெளிச் சித்தரின்
தவவலிமையும் நமக்குத் திருவருள் புரிகின்றன சிவ சிவ.
*சம்பந்தர் தேவாரம்:*
பண் :செவ்வழி.
1.🔔மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரமூன் றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.
🙏🏾கங்கையைச் சடையில் கரந்து , பிறைமதியைச் சூடி , மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த குழகனது இடம் , எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய திருமாகாளமாகும் .
2.🔔வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தாய் நீறெழக் கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.
🙏🏾வேதவித்தாய் , வெண்ணீறுபூசி , வினைகள் யாவற்றையும் அழித்து , கொடிய திரிபுரங்களை நீறெழச் செய்து , குற்றங்களுக்கு விதையானவற்றைத் தீர்த்து , அருள்புரியும் சிவ பிரானது இடம் , திருஇரும்பை நகரில் உள்ளதும் , மாதவத் தோரும் மறையோரும் தொழ நின்றதுமான திருமாகாளமாகும் .
3.🔔வெந்தநீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.
🙏🏾திருவெண்ணீற்றையும் எலும்பையும் அணிந்தவனும், விடை ஊர்தியனும் , எந்தையும் , தலைவனுமாகிய இறைவனது இடம், அழகிய சோலைகள் சூழ்ந்ததும் மணம் கமழும் பலாக் கனிகளை மந்திகள் ஏறிப் பறித்து உண்டு திரியும் பொழில்கள் சூழ்ந்தது மாகிய திருஇரும்பை நகரில் உள்ள திருமாகாளம் ஆகும் .
4.🔔நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.
🙏🏾நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும் , மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம் , குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும் .
5.🔔பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள்
கூசவானை யுரித்தபெரு மான்குறை வெண்மதி
ஈசனெங்கள் இறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.
🙏🏾குற்றமற்ற திருநீற்றுப் பொடியைப் பூசியவனும் , விடையூர்தியனும் , மலைமகள் கூசுமாறு யானையை உரித்த பெருமானும் , பிறைமதி சூடிய ஈசனும் ஆகிய எங்கள் இறைவனது இடம் , திரு இரும்பையில் உள்ளதும் , அடியவர் மலர் கொண்டு அணிவித்து மகிழ்வதுமாகிய திருமாகாளம் ஆகும் .
6.🔔குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.
🙏🏾கலைகள் குறைந்த பிறைமதியைச் சூடிக் கூத்தாடிய வரும் , வினைகளை அழிக்கும் பரமரும் , தூய்தான ஆறு குணங்களை உடையவரும் , பரவலான சடைகளை உடைய இறைவ ரும் , எங்கள் பெருமானுமாகிய இறைவரது இடம் திருஇரும்பை நகரில் வேத வித்துக்கள் வழிபடும் திருமாகாளமாகும் .
7.🔔பொங்குசெங்கண் அரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமானென நின்றவர் தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.
🙏🏾சடையில் பாம்பையும் பிறையும் பகை நீக்கித் தங்க வைத்த பெருமானும் , எவ்விடத்தும் விருப்போடு எழுந்தருளி விளங்குபவனுமாகிய இறைவனது இடம் திருஇரும்பையூரில் வானளாவிய பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருமாகாளம் ஆகும் .
8.🔔நட்டத்தோடு நரியாடு கானத்தெரி யாடுவான்
அட்டமூர்த்தி யழல்போ லுருவன் அழகாகவே
இட்டமாக இருக்கும் இடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.
🙏🏾நரிகள் விளையாடும் இடுகாட்டில் எரியேந்தி நடனம் புரிபவரும் , அட்டமூர்த்தி வடிவினரும் , அழல் உருவினரும் ஆகிய இறைவர் விருப்போடு எழுந்தருளிய இடம் திருஇரும்பை நகரில் உள்ளதும் வலம் வந்து தொழுவார் பிணிகளைத் தீர்ப்பதுமாகிய திருமாகாளமாகும் ,
9.🔔அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே.
🙏🏾மார்க்கண்டேயரோடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவரும் , இராவணன் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவரும் , ஆகிய சிவபிரான் இட்டமாக இருக்குமிடம் திருஇரும்பை நகரில் விளங்குவதும் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும் .
10.🔔அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.
🙏🏾பாம்பைத் தம் இடையில் கட்டிக்கொண்டு , அனலை அங்கையில் ஏந்தி , பிரமன் , மால் ஆகியோர் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்ற பெரியோன் இடம் , குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த திரு இரும்பை நகரில் உள்ள வானோரும் மறையோரும் தொழும் திருமாகாளமாகும் .
11.🔔எந்தையெம்மான் இடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு வானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார்பழி போகுமே.
🙏🏾எந்தையும் எங்கள் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவதும் திருஇரும்பையில் விளங்கும் தென்றல் வந்துலவும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாகாளத்தில் முடிவற்ற நிலையில் அனலாடும் இறைவன் மீது ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதுபவர்களின் பழிகள் போகும் .
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
பங்குனி உத்திரத்தில் அன்பர்கள் காவடி எடுத்து வழிபடுகின்றனர்.
கார்த்திகை சோமவார நாளில் சிறப்பு வழிபாடுகளும் மற்றும் மாதாந்திர நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
*தொடர்புக்கு:*
சுவாமிநாத குருக்கள்.
பஞ்சறதில்லறன்.
94434 65502
*அருகிலுள்ள பாடல் பெற்ற தலங்கள்:*
இரும்பை மாகாணத்திலிருந்து தொலைவுகள்.
புதுச்சேரி...................12.கி.மி.
வீராணம்பட்டினம்...17.கி.மி.
வில்லியனூர்............16.கி.மி.
திருஆண்டார் கோயில்
...........,........................26.கி.மி.
திருவக்கரை..............24.கி.மி.
மயிலம்........................24.கி.மி.
ஒழிந்தியாபட்டு.........08கி.மி.
இத்துடன், தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்த்தோர் தலம் மகிழ்ந்து பூர்ணமானது. நாளை முதல் நடுநாட்டில் அமைந்து விளங்கும் இருபத்து இரண்டு தலங்களில் நாளைய தலப்பதிவு *தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருநெல்வாயில் அரத்துறை. (திருவட்டுறை)*
____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment