ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புதான் என்ன ?
திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்!
ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமால், திடீரென மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது, பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டது. தன் மீது பாந்தமாக படுத்திருக்கும் பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று நினைத்தார்,
ஆதிசேஷன்.ஆனந்தத்தின் காரணம் என்ன என்று ஹரியிடமே கேட்டார்.
மகாவிஷ்ணு கூறினார். 'சிவபெருமான், நடராஜராக திருவாதிரை திருநாளன்று ஆடிய திருத் தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு காரணம்' என்றார். இதைக் கேட்டதும், திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை தானும் காண நாட்டம் கொண்டார் ஆதிசேஷன். பார்த்தசாரதியும் ஆசி கூறி அனுப்பினார்.
ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார். கயிலைநாதனை நினைத்து அவர் இருந்த தவமானது உச்சநிலையை அடைந்தது. அவர் தன்னை மறந்தார்.
அப்போது, 'பதஞ்சலி' என்று மென்மையான குரல் கேட்டு கண்விழித்தார். அங்கு சாந்தமான முகத்துடன் சர்வேஸ்வரன் நிற்பதைக் கண்டு ஆனந்தத்தில் தாழ் பணிந்தார். தான் தவம் புரிந்ததற்கான காரணத்தை கூற எத்தனித்தார்.
அண்ட சராசரத்தையும் அடக்கி ஆளும் ஈசன் அறியாததும் உள்ளதா என்ன? சிவனே பேசத் தொடங்கினார், 'பதஞ்சலியே! உன்னைப் போன்று எனது திருவாதிரை திருநடனம் காண வேண்டி, வியாக்ர பாதர் என்பவரும் என்னை நோக்கி கடும் தவம் செய்து காத்திருக்கிறார். எனவே நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீர்கள்!' என்று கூறி மறைந்தார்.
பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும், ஈசன் கூறியபடி தில்லையம்பதிக்கு சென்றனர். அங்கு மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று தனது திருநடனத்தை அவர்கள் இருவருக்கும், காட்டி அருளினார் சிவபெருமான்.
இந்த தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் தில்லை என்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தை காண்பது விசேஷமாக உள்ளது
நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ...ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார்.
அன்றைய தினம் விரதமிருந்து சிதம்பரம் சென்று அங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் விலகி, இன்பமான வாழ்வு அமைவதுடன், முக்தி கிடைக்க வழி செய்யும்.
நன்றி : -- ஆனந்தவிகடன்.
படத்தை பெரிதுபடுத்தி பார்க்கவும்.
No comments:
Post a Comment