உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண் 180.*
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*பசுபதிநாதர் திருக்கோவில், திருபந்தனைநல்லூர்.*
________________________________________
நேரில் சென்று தரிசித்ததைப் போல..............
________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் முப்பத்து ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.
திருபந்தனைநல்லூர் எனும் ஊரை தற்போது வழக்கில் பந்தநல்லூர் என்று அழைக்கிறார்கள்.
*இறைவன்:* பசுபதிநாதர்.
*இறைவி:* வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை.
*தல விருட்சம்:* சரக்கொன்றை.
*தல தீர்த்தம்:* சூரிய தீர்த்தம்.
*ஆகமம்:* காமீக ஆகமம்.
*பெயர்க்காரணம்:*
அம்பிகை விளையாடிய பந்தை, இறைவனும் தடுத்து எற்றிய, இடமாதலின் *பந்தனைநல்லூர்* ஆயிற்று.
*தேவாரம் பாடியவர்கள்:*
சம்பந்தர்- மூன்றாம் திருமுறையில் ஒரு பதிகமும்,
திருநாவுக்கரசர் - ஆறாம் திருமுறையில் ஒரு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.
*இருப்பிடம்:*
மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்து பந்தநல்லூர் வழியாகச் செல்கிறது.
ஊரைத்தாண்டிச் சாலையோரத்தில் சற்று உள்ளடங்கிக் கோயில் உள்ளது.
கும்பகோணம் மற்றும் குத்தாலத்தில் இருந்தும் பந்தநல்லூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோவில்,
பந்தனைநல்லூர் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
PIN - 609 807
*ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
இவ்வாலயத்தின் சென்றபோது, முதலில் இராஜகோபுரம் ஐந்து நிலைகளைத் தாங்கி காட்சி தந்தது.
*சிவ சிவ, சிவ சிவ,* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
கோயிலுக்கு எதிரில் அமைந்திருந்த, நடுவில் நீராழி மண்டபத்துடன் கூடிய ஆலயத்தின் தீர்த்தமான சூரிய தீர்த்தத்திற்கு வந்து, தீர்த்தத்தை வாரி அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு திரும்பினோம்.
கோபுர வாயில் வழியே உள்ளே புகுந்ததும், அங்கு விசாலமான ஒரு மண்டபம் காணக்கிடைத்தது.
இந்த மண்டபத்தில் கவசமிட்ட கொடிமரமிருக்க, அதனருகே வந்து விழுந்து, சிரம் கரம் புஜம் செவி புரள வணங்கியெழுந்து பணிந்து நிமிர்ந்தோம்.
அடுத்திருந்த, பலிபீடத்தருகே நின்று, வழக்கம்போல நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டோம்.
அடுத்து நந்தி பெருமானைக் கண்டு வணங்கிக் கொண்டு, மேலும் ஆலயத்துள் புகுந்து இறைவனைத் தரிசிக்க அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
இந்த வாயில் வழி உள்ளே சென்று இடதுபுறம் திரும்பியபோது, நால்வர் சந்நிதியைக் கண்டோம். நால்வரையும் சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.
உட்பிரகாரம் வலம் வரும்போது கன்னி மூலையில் நிருதி கணபதி சந்நிதி இருக்க, விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
அதையடுத்து கிழக்கு நோக்கியுள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதியைக்கு வந்து வணங்கித் தொழுதோம்..
அதையடுத்து கஜலட்சுமி, அண்ணபூரணி, சரஸ்வதி ஆகியோரின் சந்நிதிகள் இருக்க, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.
இதற்கடுத்ததாக,63 நாயன்மார்களின் அணிவகுப்பு பிரகாத்தைக் கண்டதும், நெஞ்சுக்கு நேராக கைகளை குவித்து 63-யும் வணங்கிக் கொண்டோம்.
இதற்கடுத்து, உட்பிரகாரத்தில் தசலிங்கங்களின் காட்சியருளை, ஒவ்வொன்றாக தரிசித்து நகர்ந்தோம்.
இதைத்தொடர்ந்து, பவ்யபயத்துடன் பைரவரை வணங்கிக் கொண்டு அவரருளைப் பெற்று நகர்ந்தோம்.
அடுத்து நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் காட்சியளித்தன.
இவற்றுக்கு அருகில் சந்திரன், சூரியன், விநாயகர் இருக்க, மூவரையும் தொழுது நகர்ந்தோம்.
அடுத்து, தனிக்கோயிலாகப் பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப்பெருமாள் வீற்றிருந்தார்.
சுவாமி சந்நிதி வாயிலுக்குத் திருஞான சம்பந்தர் திருவாயில் என்று பெயர் எழுதப்பட்டிருந்தது.
பக்தர்களின் கூட்டம் அதிகமிருக்க, வரிசையோடு நாமும் மெல்ல மெல்லத் நகர்ந்தோம்.
ஈசன் கருவறை சந்நிதியை நெருங்கவும், வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் இருந்தனர்.
வரிசை நகர நகர, நம்மின் இடதுபுறமாக இருந்த துவாரபாலகரை வரிசையில் நின்றவாறே இவரை வணங்கிக் கொண்டு, ஆலயத்துள் இறைவனை வணங்கச் செல்லும் அனுமதியும் வேண்டியபடி நடந்தோம்.
அடுத்திருந்த அடுத்த, வலதுபக்க துவாரபாலகரை வணங்க முடியாது பக்தர்களின்தலைகள் மறைந்திருக்க,.....
ஈசனின் சந்நிதி நுழைவாயில் படியின் அருகே வரிசை வரும்போது, அடுத்திருந்த துவாரபாலகரின் தரிசன பார்வை கிடைத்தது.
இவரையும், வணங்கிக் கொண்டு, ஈசனைத் தொழச் செல்லும் அனுமதியும் வேண்டிக் கொண்டு மெல்ல அடியெடுத்து வைத்து, சந்நிதிக்குள் புகுந்தோம்.
துவாரபாலகரைக் கைகூப்பித்தொழுது உட்சென்று, மகாமண்டபத்திற்கு வந்தோம்.
இங்கு நடராஜர் சபை இருந்தது. நம் கைகள் தானே உயரத் தொடங்கின. பெருமானை ரசிக்க ரசிக்க வணங்கிப் பருகிக் கொண்டோம்.
இத்தலத்தின் மூலவர் பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் குட்டையான பாணத்துடன் அருமையான தரிசனம் கிடைத்தது.
மிக உயரக்குறைவான லிங்கம். பார்த்தவுடனேயே உடலின் உரோமக்கால்கள் குத்திட்டு சிலிர்த்தன.
கைகளை உயர்த்தி குவித்து சிவ சிவ சிவ சிவ சிவ சிவ என முனு முனுக்க வணங்கிக் கொண்டோம்.
இவர் புற்றாக இருந்து வெளிப்பட்டதால், ஈசனுக்கு குவளையைச் சார்த்தி இருந்தார்கள்.
அபிஷேகத்தபோது இவ்வரியக் காட்சி கண்டு, பக்தியின் நாக்கால் நமக்கு 'நா' தழுதழுத்து தொண்டை வலித்தது.
கண்களிலிருந்து கண்ணீர், ஆனந்தமாக பெருகியொழுகியது. *சிவ சிவ. சிவ சிவ.*
நல்ல தரிசனத்திற்குப் பின், அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு, அங்கேயே அப்படியே அவ்விபூதியை, நம் நெற்றிக்கு திரித்துக் தரித்துக் கொண்டு, நிறைவான தரிசனம் கிடைத்த மகிழ்வுடன் திரும்பினோம்.
அடுத்து, அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டிருப்பது காணக் கிடைத்தது. எல்லாம் அற்புத அழகுடன் காட்சியாகத் தெரிந்தன.
இவற்றுள் பிட்சாடனமூர்த்தியாரின் அழகு, மிக பிரமிப்பான அழகுடன் தெரிந்தன.
இத்தலத்தில் வருடத்தில் ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் படுகின்றனவாம். இங்கிருந்த குருக்கள் ஒருவர் கூறினார்.
அடுத்து அம்பாள் வேணுபுஜாம்பிகை சந்நிதிக்கு விரைந்தோம்.
அம்பாள் தெற்கு நோக்கிப் பார்த்த வண்ணம் இருந்தாள்.
அம்பாள் இத்தலத்தில் தவம் செய்யும் கோலத்தில் இருந்ததனால், அம்பாளின் நுழைவாயிலின் இருபுறத்தின் ஒரு புறத்தில், ஐயனார் இருந்தார். கைகூப்பி வணங்கிக் கொண்டோம்.
மறுபுறத்தில், காளி காவலாக காட்சி தந்தாள். இவளையும் கரம்சேர்த்துகூப்பி வணங்கிக் கொண்டு சந்நிதி உள் புகுந்தோம்
தரிசனம் தந்த அம்பாளை, சிரந்தாழ வணங்கிக் கொண்டோம்.
அம்பாளின் தரிசனத்தை மனநிறைவாக அள்ளியெடுத்து நெஞ்சத்துள் வைத்து இருத்திக் கொண்டோம்.
மனமுருகி பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
*தல அருமை:*
சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது.
இதனால் சிவன் நான்கு வேதத்தையும் நான்கு பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார்.
பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார்.
இருட்டே இல்லாமல் போக, மாலை வேளையில் சூரியன் மறையும் நேரம் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது.
அனைவரும் சூரியனிடம் செல்ல, பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார்.
எனவே முனிவர்கள் அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர்.
சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்காமல் பந்து விளையாட்டிலேயே ஆர்வத்துடன் இருந்தாள்.
இதனால், கோபம் கொண்ட சிவன், பந்தை தன் காலால் எட்டி உதைத்துவிட்டு பார்வதியை பசுவாகப் போகும்படி சபிக்கிறார்.
வருந்திய பார்வதி சாபவிமோசனம் வேண்டுகிறார்.
பந்து பூமியில் இத்தலத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது.
இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.
பார்வதியை காப்பாற்ற மகாவிஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார்.
பகல் பொழுதில் பசுவை மேய விட்டு, மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார்.
ஒரு நாள் பசு புற்றிலிருந்த லிங்கத்தை பார்த்து, அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது.
அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் கன்வ மகரிஷி செல்கிறார்.
புற்றின் மீது பசு பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க, பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெறுகின்றனர்.
சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார்.
அதன்படி தவம் செய்த அம்மன் சிவனை திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள்பாலிக்கிறார்.
இங்கு சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
பந்து அணைந்த தலம் ஆதலால் பந்தணை நல்லூர் என்று இத்தலம் பெயர் பெற்றது.
பசுவுக்குப் பதியாக வந்து அருள் செய்தமையால் இறைவன் பசுபதிநாதர் என்று பெயர் பெற்றார்.
சிவலிங்க பாணத்தின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதை இன்றும் காணலாம்.
*தல பெருமை:*
காம்போச மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம் இத்தலம்.
இதனால் இம்மன்னன் தன் மகனுக்குப் பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
இன்றும் திருக்குள படித்துறை இதன் தொடர்பாகக் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.
காம்போச மன்னன் திருப்பணிகள் செய்து கட்டிய இக்கோயில் பிற்காலத்தில் சோழ மன்னர்களால் மேலும் திருப்பணிகள் செய்யப்பட்டன.
சரக்கொன்றையை தல விருடசமாகப் பெற்ற பந்தனைநல்லூர் தலம் ஒரு பித்ரு சாப நிவர்த்தி ஸ்தலம் ஆகும்.
கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கியருளும் தலமும் கூட. சொத்து வழக்கில் நியாயம், கடன் பிரச்னை, தொழில் விருத்தி ஆகியவற்றைத் தந்தருள்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர்.
வித்தை, கல்வி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஸ்ரீவேணுபுஜாம்பிகை வழங்குகிறாள்'" என்று ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலின் குருக்கள் கூறுகின்றார்.
*திருநாவுக்கரசர் தேவாரம்:*
1.🔔நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
நூல்பூண்டார் நூன்மேலோ ராமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப்
பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
🙏🏾பந்தணைநல்லூர்ப் பெருமான் வருந்துவதாகிய மாயை உடம்பு உடையர் அல்லாதாராய்ப் பாம்புகளையும் , மார்பில் பூணூலையும் அதன்மேல் ஆமை ஓட்டினையும் அணிந்தவர் . அவர் வளர்கின்ற கருங்குழலியாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு , பிறையைச் சூடிய சடையில் கங்கையையும் கொண்டு அந்தி வானத்தின் செந்நிறமேனியில் அடிமுதல் முடி வரை திருநீறணிந்து , கையில் தீயினைக் கொண்டு , பேய்கள் தங்கும் பரந்த சுடுகாட்டில் கூத்தாடிப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து வந்து பிச்சை ஏற்றவர் .
2.🔔காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணால்
பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
🙏🏾பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை நுகர்ந்து , களிற்றுத் தோலால் மெய்யினைப் போர்த்து , மண்டையோட்டினையே உண்கலனாகக் கொண்டு , ஒற்றியூரை உகந்து , அடியார்களுடைய உடற்பிணிகளையும் உட்பகைகளையும் தம் ஒரே பார்வையாலே வலிமைகெடச் செய்து , பிடவம் , மொந்தை , குடமுழா , கொடுகொட்டி , குழல் என்ற வாச்சியங்கள் ஒலிக்கச் சுடுகாட்டினைத் தவிர வேற்று இடங்களை விரும்பாது , அங்குப் பாடியும் ஆடியும் செயற்பட்டுப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து பிச்சை ஏற்றவர் .
3.🔔பூதப் படையுடையார் பொங்கு நூலார்
புலித்தோ லுடையினார் போரேற் றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார்
விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி
ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
🙏🏾தேவர்களை அடிமையாகக் கொண்டு அவர்களுடைய பொன்னுலகை உடைமையாகக் கொண்டு சுற்றிக் கட்டப் பட்ட கழலைத் திருவடிகளில் அணிந்த பந்தணைநல்லூர்ப் பெருமான் வெள்ளம் ஒலிக்கும் கடலில் தோன்றிய விடத்தை உண்டவர் . விரிந்த சடைமேல் வெள்ளிய பிறையினை முடிமாலையாகச் சூடியவர் . வேதங்கள் ஓதி வேள்விகள் செய்யும் அந்தணர்கள் தம்மைப் பரம்பொருளாக விரும்ப இருப்பவர் . திருமாலாகிய போரிடும் காளையை உடைய அப்பெருமான் பூதப்படை உடையவர் . அவர் பூணூல் அணிந்து புலித்தோலை இடையில் அணிந்து பசிய கண்களை உடைய காளை மீது அமர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார் .
4.🔔நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றி லேற்றார்
வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
🙏🏾கச்சணிந்த முலைகளையுடைய உமாதேவியாரை இடப்பாகமாக ஏற்ற பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் ஏற்றுக் கங்கை உலாவும் சடைமுடி மேல் திங்கள் சூடியவர் . மான்குட்டியை ஒருகையில் ஏற்ற அப் பெருமான் அழகிய கை ஒன்றில் நெருப்பை ஏற்று , ஊர்களெல்லாம் பிச்சை ஏற்று , பிச்சையிட வந்த மகளிரின் நிறை என்ற பண்பினைக் கவர்ந்தவர் . அவர் மழு ஏந்தி , உலகில் பரவிய புகழுக்கு உரியவராய்ப் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் .
5.🔔தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலா யடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
🙏🏾அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவராய் , எல்லோருக்கும் முற்பட்டவராய்ச் சூரியனாகவும் அக்கினியாகவும் இருந்து , அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் உள்ள பந்தணை நல்லூர்ப் பெருமான் அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமான ஞானஒளியை உடையவர் . நடுங்காத அழகிய தலையை உடையவர் . தூய நீறணிந்தவர் . சடையில் முடிமாலை சூடியவர் . இடுகாட்டைச் சூழ்ந்திருக்கும் சுடு காட்டில் இரவு தோறும் கூத்து நிகழ்த்துபவர் . அவர் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார் .
6.🔔கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோல் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
🙏🏾கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும் , உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான் , மத யானைத் தோலைப் போர்த்தவர் . எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர் . மான் தோலைத் தோளில் அணிந்து , நாகத்தைத் திருமேனியிற் பூண்டு , முடியிலும் பாம்பினைச் சூடி , நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓது கின்ற நாவினை உடையவர் . அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர் .
7.🔔முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி யுலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
🙏🏾பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர் . அவர் பிறை சூடிய சடையினர் . மூவுலகும் துதிக்கும் முதல்வர் . சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர் . பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர் . மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர் . வெள்ளியநீறு அணிபவர் . தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர் . பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார் .
8.🔔கண்ணமரு நெற்றியார் காட்டார் நாட்டார்
கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப்
பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்
பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
🙏🏾தமக்கெனப் பெயர் ஒன்றும் இல்லாதவரும் , பிறப்பு இறப்பு பிணி என்பன அற்றவரும் , நில உலகத்தவரும் வானுலகத்தவரும் , பிரமன் உபபிரமர்களும் , உரகர் முதலிய மற்றவர்களும் எதிரே வந்து வணங்கித் துதித்துப் பண்ணோடு கூடிப் பாடுதலை உடையவரும் ஆகிய பந்தணைநல்லூர்ப் பெருமான் கங்கை தங்கும் சடையினர் . கண் பொருந்திய நெற்றியை உடையவர் . கையில் மழு ஏந்தியவர் . காட்டிலும் , நாட்டிலும் உகந்தருளியிருக்கும் அப் பெருமான் பைங்கண் விடை ஊர்ந்து பலி ஏற்றார் .
9.🔔ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீல முண்டார்
நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
யனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
🙏🏾பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர் . தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர் . நீறணிந்த மேனியர் . விடத்தை உண்டவர் . வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர் . உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர் . கங்கை தங்கு சடையினர் . ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர் . தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர் . புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர் .
10.🔔கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலை யின்மே லிருந்து
வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
🙏🏾ஞானத்தை அடியார்க்கு வழங்குபவராய்த் தாமே ஞானவடிவாகி , நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய் , நாகை , குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான் . அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர் . வலிமை மிகுந்த அழகிய கயிலாய மலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன் தலைகள் சிதறுமாறு கோபித்த அப் பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர் . அவர் பைங்கண் ஏறு இவர்ந்து பணி ஏற்றவர் .
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
மாசி மகம்,
பங்குனி உத்திரம் உற்சவங்கள்.
*தொடர்புக்கு:*
சேகர் குருக்கள்.
0435- 2450595
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கஞ்சனூர்.*
________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment