உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
________________________________________
*139*
*🌸 பாடல் பெற்ற சிவ தல தொடர்.🌸*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*மனத்துனைநாதர் கோவில், திருவலிவலம்*
_______________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்று இருபத்தொன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* மனத்துனைநாதர், இருதய கமலநாதர்.
*இறைவி:* மாழையொண்கண்ணி, அங்கயற்கண்ணி, வாளையவக் கண்ணி.
*தல விருட்சம்:* புன்னை மரம்.
*தல தீர்த்தம்:* சங்கர தீர்த்தம், காரணர் கங்கை.
*திருமேனி:* சுயம்பு உருவானவர்.
*தல விநாயகர்:*
வலம்புரி விநாயகர்.
*பதிகம்::** அப்பர், சுந்தரர், சம்பந்தர்.
*ஆலயப் பழமை:*
ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*புராணப் பெயர்கள்:*
திருவலிவலம், வில்வ வனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்று மங்கலம், கொன்றை வனம்.
*வழிபட்டோர்:* சூரியன், வலியன்(கரிக்குருவி), காரண முனிவர்.
*இருப்பிடம்:*
திருவாரூருக்கு தென்கிழக்கே ஒன்பது கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்து உள்ளது.
திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.
இரண்டுமே நல்ல பாதைகள்தான்.
*அஞ்சல் முகவரி:* அருள்மிகு மனத்துனைநாதர் திருக்கோவில்,
வலிவலம்,
வலிவலம் அஞ்சல்,
திருக்குவளை வட்டம்,
திருவாரூர் மாவட்டம்,
PIN 610 207
*ஆலயத் திறப்பு காலம்:*
நாள்தோறும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் எழுபதுகளில் இத்தலத்து ஆலயமும் ஒன்று.
வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது.
*கோவில் அமைப்பு:*
பேருந்தை விட்டு இறங்கி ஆலயத்தை நோக்கிச் செல்கையில் ஒரு முகப்பு வாயில் நம்மை வரவேற்கிறது.
முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையினாலான ரிஷப வாகனத்தில்மேல் அமர்ந்துள்ள சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஆகியோரைக் காணக் கிடைக்க கையுர்த்தி வணங்கிக் கொண்டோம்.
உள்ளே நுழைந்தால் தூண்களுடன் கூடிய முன் மண்டபம் இருந்தது.
மண்டபத்தில் கொடிமரம் காணக் கிடைக்கவில்லை. (இல்லை)
பலிபீடத்தருகே வந்து நம் ஆணவமலவொழிய வேண்டிக் கொண்டு, ஆணவத்தை பலியிட்டுவிட்டு தொடர்ந்தோம்.
அடுத்ததாக, நந்தி மண்டபத்தில் நந்தியாரைக் கண்டு, நம் வருகையை வணக்கமாக அவரிடம் செலுத்திவிட்டு ஈசனை வழிபட அனுமதிக்கக் கூறி வேண்டிக்கொண்டு நகர்ந்தோம்.
மூலவரைக் கண்டு வழிபட கோச்செங்கட் சோழன் அமைத்திருந்த மாடக்கோயில் பணிகளைச் காணப்பெற்றோம்.
படிகள் பதினாறைக் கடந்து மேலே ஏறினோம்.
அதன் பின் உள்ள மூன்றுநிலை விமானத்தின் உள்ளே கருவறையில்,
மூலவர் மனத்துனைநாதர் சந்நிதியுடன் கட்டுமலை அமைந்திருந்தது.
இறைவனை மனமுருகப் பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.
பின், இதனின் வலதுபுறமாக தெற்கு நோக்கிய அம்பாள் மாழையொண்கண்ணி சந்நிதி அமைந்திருந்தது.
அம்மையையும் மனமுருகப் பிரார்த்தித்து தொழுது வணங்கி கொண்டோம்.
பிராகாரத்தில் வலம் வரும்போது, வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் இருக்க ஒவ்வோருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.
ஆலயத்தைச் சுற்றி நான்கு புறமும் அக்காலத்தில் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்களில் *"பொழில் சூழ்ந்த வலிவலம்"* என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறியமுடிகிறது.
இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்ற ஒரு பெயரும் உண்டு.
இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.
சூரியனும், காரணரிஷியும் இத்தல இறைவனை பூசித்துப் பேறுபெற்றுள்ளனர்.
இத்தல தீர்த்தம் காரண ரிஷியின் பேரால் காரண கங்கை என்றுரைக்கப்படுகிறது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலுடன்தான் தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள்.
தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன்முதலாக ஓதும்........
*பிடியதனரு உமை கொள மிகுகரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகணபதிவர அருளினான் மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.*.........
என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற *பூ இயல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல்* என்ற பதிகத்தின் -ஐந்தாவது பாடலாகும்.
எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முன்பு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது நமது மரபு.
அதன்படி கணபதி வர அருளினான் என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள்.
சுந்தரர் தனது பதிகத்தில் ஐந்தாவது திருப்பாட்டில், சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த பாடலகளைப் பெற்ற இறைவன் வலிவலத்தில் உள்ளான் என்று அவர்கள் இருவரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
*நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத் தொண்ட னேன்அறி யாமை யறிந்து கல்லி யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின் றானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே* என்று...
*நூல்:*
இவ்வூர் இறைவனை, இறைவியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் *'வலிவலமும்மணிக்கோவையும்'*என்னும் நூலொன்றை "தமிழ்த்தாத்தா" திரு. உ.வே.
சாமிநாத ஐயர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பாடியவர் பெயர் தெரியவில்லை.
*கோவில் சிறப்பு:*
ஆலயம், மூன்று பக்கமும் நீர் நிறைந்த அகழியால் சூழப் பெற்றிருந்த அமைப்புடன் விளங்கியது. ஆனால், அகழியில் நீர் நிறைந்திருக்கப் பெறவில்லை.
இத்திருக்கோவிலில், பஞ்சமூர்த்திகள் தோரணவாயில் அமர்ந்திருக்கிறார்கள்.
கோச்செங்கண் சோழ மன்னனால் கட்டப்பட்டது இந்த ஆலயம்.
'மாடக்கோவில்' வகையைச் சேர்ந்தது என்பதைக் கூறினாலே, உங்களுக்கு கோச்செங்கட் சோழ மன்னன் நினைவுதான் வரும்.
ஈசனை, *'மனத்துணையே என்றன் வாழ்முதலே'* என்று மாணிக்கவாசகர் புகழ்கிறார்.
அன்பருக்கு *இன்னருள் செய்துய்ய வலிவலத்துச் சொன்முடியே'* என்கிறார் ராமலிங்க வள்ளலார்.
அப்பர்கூட தனது பதிகத்தில் *'மனத்துளானே'* என்று வர்ணித்துக் கூறுகிறார்.
சுந்தரரும், *'நல்லுடையார் மனத் தெய்ப்பினில் வைப்பை நானூறு குறைஅளித் தருள் புரிவானை'* என்று இத்தல இறைவனை புகழ்ந்துரைக்கிறார்.
மனம் என்ற ஒன்று இருப்பதால்தான், நமக்கு மனிதன் என்ற பெயர்.
அந்த மனமுடைய மனிதர்கள் வாழ்வில் இன்ப, துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், கஷ்ட, நஷ்டங்கள், நிறை குறைகள் என்று எத்தனையோ நன்மையும் தீமையையும் அனுபவிக்கிறார்கள்.
மனித மனதிற்கு துன்பம் வரும்போதும் மட்டும் மனம் கனத்துக் கொள்கிறது.
இந்த மன அழுத்தத்தால் 'ரத்த அழுத்தம்', 'இதய நோய்கள்', 'மாரடைப்பு' போன்றவை உருவாகிறது.
இன்று கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். அவரவருக்குத் தகுந்த கவலையைக் கொண்டிருக்கிறார்கள்.
அவரவர்கள் மனம் எப்போதும் இலகுவாக இருக்க எல்லாக் கவலைகளையும் விட்டொழிக்க வேண்டும். அதற்கான ஒரு வழி......
ஆம்! அனைத்தையும் ஈசன்ன் திருவடியில் சமர்ப்பித்து *'நீயே துணை'* என்று நம்பிச் சென்று தொழுதால், உடலும் உள்ளமும் தெளிவாகி நோய்கள் விலகப்பெறும்.
அந்தப் பெரும்பேற்றைத் தருபவர்தான் இத்தல நாயகர் மனத்துணை நாதர் ஆவார்.
மனதில் ஏற்படும் விரக்தி, சோர்வு ஆகியவற்றிக்கு இத்தலத்தில் இருக்கும் ஈசனால் தீர்வு கிடைக்கப் பெறுகின்ன்றனர்.
*'பிடியதன் உருஉமை கொளமிகு கரியது*
*வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்*
*கடிகண பதிவர அருளினன் மிகுகொடை*
*வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே'!*
என்று இந்தத் திருக்கோவில் நிருதி மூலையில் எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகருக்கு பாமாலை சூட்டியிருக்கிறார் திருஞானசம்பந்தர்.
தேவாரப் பண்ணிசைப்போர் புகழ்பெற்ற இத்திருப்பதிகத்தைப் பாடியே, மற்ற பண்களை இசைக்கிறார்கள் என்றால் இத்தலமும் அதில் எழுந்துள்ள விநாயகரும் எத்தகைய சிறப்புடையது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அடியவர்களின் துயர் களைய சிவசக்தியால் உருவாக்கப்பட்ட கணநாதர் இவராவார்.
இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில், *'அமரர்கள் மதித்த சேவக வலிவலம் நகருறை பெருமானே'* என்று போற்றுகிறார்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த வலிவலத்தில் அம்பிகை *'மழையொண்கண்ணி'* என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.
அம்பிகை சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தவனத்தில் தலவிருட்சமான புன்னை மரம் காற்றில் அசைந்து இனிய மணம் பரப்புகிறது. நீங்களும் அங்கு சென்று அம்மனத்தினை உணருங்கள். நல்வன பேறு பேணப் பெறுங்கள்.
இந்த திருத்தல இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
திருவலிவலத்துக்கு வடக்கே திருக்கோளிலி என்னும் திருக்குவளை, தெற்கே கைச்சின்னம் எனும் கச்சனம், கிழக்கே திருக்கன்றாப்பூர், மேற்கே திருநெல்லிக்காஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள் சூழ்ந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
*தல அருமை:*
முன்னொரு காலத்தில் ஒழுக்கத்தில் சிறந்த ஒருவன் வாழ்ந்து வந்தான்.
அவன் முன்வினைப் பயன் காரணமாக சில பாவங்களைச் செய்து வந்திருந்தான்.
அதனால் அவன் அடுத்தப் பிறவியில் கரிக்குருவியாக பிறவி எடுக்க நேரிட்டது.
மிகச் சிறியதாக இருந்த அந்தப் பறவையை, சில நேரங்களில், உணவு தேடியலைகையில், பெரிய பெரிய பறவைகள் ஒன்று கூடிப் சேர்ந்து தாக்கியதால் காயங்கள் உண்டாகி ரத்தம் ஒழுகியது.
காயம் அடைந்த அந்தக் கரிக் குருவி, தனிமையில் அங்கிருந்து நெடுதூரம் பறந்து பயணப்பட்டு ஒரு மரத்தில் போய் அமர்ந்து இழைப்பாறியது.
அந்தச் சமயத்தில், மரத்தின் கீழ் சிவனடியார் ஒருவர் சீடர்கள் பலர் குழும அமர்ந்திருந்தார்.
அவர் தன் சீடர்கள் பலருக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
இதையெல்லாம் இந்த மரத்தின் மீதமர்ந்திருந்த கரிக்குருவி, சிவனடியாரின் உபதேசங்களைக் கேட்டுக்கொண்டிருந்தது.
சிவனடியார் தன் சீடர்களிடம், *'அன்பர்களே! சிவ தலங்களில் சிறந்தது மதுரை திருத் தலமாகும். தீர்த்தங்களில் சிறந்தது, அந்த மதுரையம்பதியில் இருக்கும் பொற்றாமரைக் குளமாகும். மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர் ஆவார். மதுரைக்கு சமமான தலம் இந்த உலகத்தில் வேறு இல்லை.
எனவே வாழ்நாளில் ஒரு முறையேனும் மதுரை திருத்தலம் சென்று பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கநாத பெருமானை வழிபட்டு வந்தால் பேறு பல விளையக் காணலாம்.
அங்குள்ள சோம சுந்தரக் கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களைக் கொடுத்து அருள்வார்' என்று கூறினார்.
சீடர்களுக்கு உபதேசித்த ஞானாபதேசங்களை, சீடர்களோடு சீடர்களாக, மரக்கிளையில் அமர்ந்தவாறே சிவனடியாரின் உபதேசத்தைக் கேட்டது கரிக்குருவி.
தானும் மதுரைக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவு செய்தது.
அதன்படி அந்தக் கரிக்குருவி, மதுரையை அடைந்தது.
சொக்கநாதர் கோவிலைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தது.
ஆலயத் துள்ளல் பறந்து புகுந்தது.
பொற்றாமரைக் குளத்தில் இறங்கி மூழ்கி எழுந்தது.
பின்னர் அங்குள்ள இறைவனுக்கு நேராய் இருக்கும் தூண்களான ஒன்றில் அமர்ந்து இறைவனைக் கண்டு மனமுருக பிரார்த்தித்து வழிபட்டது.
இவ்வாறாக பலநாட்களாக தொடர்ந்து வழிபட்டு வந்தது, அந்தக் குருவி.
அதன் வழிபாட்டைக் கண்டு சொக்கநாதர் மனமிளகினார். அக்கரிக்குருவிக்கு திருவுளம் காட்ட முடிவு செய்தார்.
கரிக் குருவியின் முன்பாகத் தோன்றி, அதற்கு சில மந்திரங்களை கூறி உபதேசம் செய்தார்.
இதனால் கரிக்குருவிக்குண்டான சிற்றறிவுகள் நீங்கப் பெற்று, பேரறிவுகள் உணர்வினைப் பெற்றது.
ஞானம் பெற்ற கரிக்குருவி, *'இறைவா!* உங்களது கருணையால் நான் ஞானம் பெற்றவனானேன்.
இருந்தாலும் எனக்கு ஒரு குறை உள்ளது. மிகச் சிறிய பறவை நான், மற்ற பெரிய பறவைகளால் துன்புறுத்தப்பட்டு வருகிறேன்.
பார்ப்பவர்கள் கேலி செய்தும் குச்சி, கழிகள் மூலம் என்னை துரத்தியடிக்கும் நிலையில் உள்ளேன்' என்று முறையிட்டு அழுதது.
அதற்கு சிவபெருமான், *'எல்லாப் பறவைகளையும் விட நீ வலிமையுடையவனாக மாறுவாய்'* என்று அருளினார்.
அதற்குஅந்தக் கரிக்குருவி, 'சுவாமி! எனக்கு மட்டுமல்ல,, எனது மரபில் உள்ள அனைவருக்கும், எனக்கீந்த இவ்வரத்தினை தன்இனத்துக்கும் வலிமையுடன் இருக்கும் வரம் தந்தருள வேண்டும்' என்று கேட்டது.
இறைவனும் அப்படியே அருளினார். இதனால் அந்தக் கரிக்குருவி *'வலியான்'* என்ற பெயரையும் பெற்றது.
வரம் பெற்ற குருவி திருவலிவலம் திருத்தலத்திற்கு வந்து மனத்துணை நாதரை வழிபட்டு முக்தி அடைந்தது.
ஆகவே இந்த தலத்திற்கு *திருவலிவலம்'*என்ற பெயர் ஏற்பட்டன என தல புராணம் விவரிவிக்கிறது
*முதல் திருமுறை தேவாரம்:*
🍁ஒல்லையாறி யுள்ளமொன்றிக்
கள்ளமொழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து
காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றனாமம்
நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய்
வலிவலமே யவனே.
🙏🏾திருவலிவலம் மேவிய இறைவனே! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, வஞ்சம் வெஞ்சொல் தவிர்ந்து தூய்மையோடு, காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உன் நாமமாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன், வந்து அருள்புரிவாயாக.
🍁இயங்குகின்ற விரவிதிங்கண்
மற்றுநற் றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பாற்
சித்தந்தௌ கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா
காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய்
வலிவலமே யவனே.
🙏🏾வானவெளியில் இயங்குகின்ற ஞாயிறு, திங்கள் மற்றும் நல்ல தேவர்கள் எல்லோரும் அச்ச மேலீட்டினால் உன்னைப் பரம் பொருள் என்று தம் சித்தம் தௌயாதவராயுள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே, சாம வேதம் பாடி மகிழ்பவனே, காமனைக் காய்ந்தவனே, எவ்வாறு உன்னைத் தௌவது என்று யானும் மயங்குகின்றேன். வந்து அருள்புரிவாயாக.
🍁பெண்டிர்மக்கள் சுற்றமென்னும்
பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன்
வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றனாமங்
காதலிக்கின்ற துள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை
வலிவலமே யவனே.
🙏🏾வண்டுகள் தேனுண்ணற் பொருட்டு மலர்களைக் கிண்டி இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருவலிவலத்துள் மேவிய இறைவனே, மனைவி மக்கள் சுற்றம் முதலான பாசப் பெருங்கடலை இளைய காலத்திலேயே கடந்து வாழ்ந்தேன் அல்லேன். வேதனை. நோய் ஆகியன நலிய உலகியற் பாசங்கள் துன்பம் தருவன என்பதைக் கண்டு உன் திருநாமம் சொல்வதொன்றே இன்பமாவது என்பதைக் கண்டு அதனை ஓத உள்ளம் விரும்புகிறது. அருள் புரிவாயாக.
🍁மெய்யராகிப் பொய்யைநீக்கி
வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே
தேவர்குலக் கொழுந்தே
நைவனாயே னுன்றனாமம்
நாளும்நவிற் றுகின்றேன்
வையமுன்னே வந்துநல்காய்
வலிவலமே யவனே.
🙏🏾பொய்மையை விலக்கி, உண்மையை மேற்கொண்டு பந்த பாசங்களாகிய வேதனைகளைத் துறந்து செம்மையான மனமுடையோராய் வாழும் அன்பர்களின் சிந்தையுள் இருப்பவனே, தேவர்களின் குலக்கொழுந்தே! நான் வருந்தி நிற்கிறேன். உன்றன் திருநாமத்தை நாள்தோறும் ஓதி வருகிறேன். வலிவலம் மேவிய இறைவனே. வையகத்தே பலரும் காண வந்து அருள்புரிவாயாக.
🍁துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ்
சொல்லுவனுன் றிறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன்
றாளிணைக்கரழ்ப் பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ
நாளும்நினைந் தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன்
வலிவலமே யவனே.
🙏🏾திருவலிவலம் மேவிய இறைவனே, உறங்கும்போதும் உண்ணும்போதும் உன்றன் புகழையே சொல்லுவேன். தேவர்கள் வேறு புகலிடம் இல்லாது உன்பால் வந்து உன் தாளிணைகளின் கீழ்ப் பணிய அவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சை உண்ட உன் கருணையை நாளும் நினைதலையன்றி வேறு என் செய வல்லேன்? உன் அருள் பெறுதற்குத் தடையாக என்பால் வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன். அதனைப் போக்கி எனக்கு அருள்.
🍁புரிசடையாய் புண்ணியனே
நண்ணலார்மூ வெயிலும்
எரியவெய்தா யெம்பெருமா
னென்றிமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா
நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய்
வலிவலமே யவனே.
🙏🏾திருவலிவலம் மேவிய இறைவனே, முறுகிய சடையை உடையவனே, புண்ணிய வடிவினனே! பகைவர் தம் முப்புரங்களும் எரியுமாறு அம்பெய்தவனே என்று தேவர்கள்பரவும், யானையின் தோலை அணிந்தவனே, காலனுக்குக் காலனே! நீலமணி போலும் கண்டத்தையும் வரிந்து கட்டப் பெற்ற பாம்பினையும் உடையவனே! என்பால் வந்து அருள்புரிவாயாக.
🍁தாயும்நீயே தந்தைநரயே
சங்கரனே யடியேன்
ஆயும்நின்பா லன்புசெய்வா
னாதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னு
ளைவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன்
வலிவலமே யவனே.
🙏🏾திருவலிவலம் மேவிய இறைவனே! சங்கரனே எனக்குத் தாயும் தந்தையும் நீயேயாவாய். அடியேன் உள்ளம் சிவஞானிகளால் ஆய்ந்துணரப்படும் நின்பால் அன்பு செய்ய விரும்புகின்றது. எனக்குப் படைத்தளிக்கப்பட்ட இவ்வுடலிடைப் பொருந்திய ஐம்பொறிகள் உன்னைப் பொருந்தவொட்டாமல் தடுக்கின்றன. இம்மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன். அருள்புரிவாயாக.
🍁நீரொடுங்குஞ் செஞ்சடையாய்
நின்னுடையபொன் மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற
வேந்தனிரா வணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத்
திருவிரலா லடர்த்த
வாரொடுங்குங் கொங்கைபங்கா
வலிவலமே யவனே.
🙏🏾திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத்தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன் கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்த தனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய்.
🍁ஆதியாய நான்முகனும்
மாலுமறி வரிய
சோதியானே நீதியில்லேன்
சொல்லுவனின் றிறமே
ஓதிநாளு முன்னையேத்து
மென்னைவினை யவலம்
வாதியாமே வந்துநல்காய்
வலிவலமே யவனே.
🙏🏾திருவலிவலம் மேவிய இறைவனே! உலகங்களைப் படைத்துக் காத்தலில் ஆதியானவர்களாகிய நான்முகனும், திருமாலும் அறிதற்கரிய சோதிப் பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன் புகழையே சொல்லுகின்றேன். நாள்தோறும் உன்புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாய துன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக.
🍁பொதியிலானே பூவணத்தாய்
பொன்றிகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம்
பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர்
சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ
வலிவலமே யவனே.
🙏🏾திருவலிவலம் மேவிய இறைவனே, பொதிய மலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே, திருப்பூவணம் என்னும் தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ?.
🍁வன்னிகொன்றை மத்தஞ்சூடும்
வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன்
ஞானசம்பந்தன் சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார்
மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே
மன்னியிருப் பாரே.
🙏🏾வன்னி கொன்றை மலர், ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடும் திருவலிவலம் மேவிய இறைவனைக் காவிரி நாட்டிலுள்ள புகலி என்னும் சரகாழிப் பதிக்கு வேந்தனாய ஞானசம்பந்தண் புகழ்ந்து ஓதியனவும் எக்காலத்தும் ஓதத்தக்கனவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர், உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலை பெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்.
திருச்சிற்றம்பலம்.
*ஏழாம் திருமுறை தேவாரம்:*
🌸ஊனங் கத்துயிர்ப் பாய்உல கெல்லாம்
ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
வானங் கைத்தவர்க் கும்அளப் பரிய
வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத்
தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந்
தேச னைத்திளைத் தற்கினி யானை
மானங் கைத்தலத் தேந்தவல் லானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
🙏🏾புலால் வடிவாகிய உடம்பில் இருந்து உயிர்ப்பனவாகிய உயிர்களாய் நின்று அவைகட்கு உணர்வை உண்டாக்கி நிற்பவனும், விண்ணுலக இன்பத்தையும் வெறுத்துத் தவம் செய்வார்கட்கும் அளத்தற்கரிய வள்ளலாய் உள்ளவனும், தன் அடியவர்களது உள்ளத்தினுள்ளே, தேனும் கைப்ப, அமுதம் ஊற்றெழுவதுபோல எழுகின்ற ஒளிவடிவினனும், அழுந்துந்தோறும் இனிமை பயக்கின்றவனும், மானை அகங்கையிடத்து ஏந்த வல்லவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்தமையாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனம் காண்பேன்!
🌸பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
பாடிஆ டும்பத்தர்க் கன்புடை யானைச்
செல்லடி யேநெருங் கித்திறம் பாது
சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை
நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை
நான்உறு குறைஅறிந் தருள்புரி வானை
வல்லடி யார்மனத் திச்சையு ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
🙏🏾பலதிறப்பட்ட அடியவரது தொண்டுகட்கும் இரங்குபவனும், இசையோடு பாடி, அதனோடு ஆடலையும் செய்கின்ற சீரடியார்களைத் தன் தமர்களாகக் கொண்டு தொடர்புடையவனாகின்றவனும், தன்னை நோக்கிச் செல்லுகின்ற வழியிலே மாறுபடாது சென்று அணுகித் தன்னைப் பெற்றவர்கட்கே சித்தியையும் முத்தியையும் தருபவனும், நல்ல அடியார்களது மனத்தில், எய்ப்பிற்கு என்று வைத்துள்ள நிதியின் நினைவு போல நின்று அமைதியைத் தருபவனும், நான் அடைந்தனவும் அடையற்பாலனவுமாகிய குறைகளைத் தானே அறிந்து, அவற்றைக் களைந்தும், வாராது தடுத்தும் அருள்புரிபவனும், கற்றுவல்ல அடியார்களது உள்ளத்தில் தங்குவதற்கு விருப்பம் உடையவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!
🌸ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை
ஆதிஅந் தம்பணி வார்க்கணி யானைக்
கூழைய ராகிப்பொய் யேகுடி யோம்பிக்
குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்
வாழியர்க் கேவழு வாநெறி காட்டி
மறுபிறப் பென்னை மாசறுத் தானை
மாழையொண் கண்உமை யைமகிழ்ந் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
🙏🏾ஆழ்ந்தவனாகியும், அகன்றவனாகியும், உயர்ந்தவனாகியும் உள்ளவனும், பிறந்தது முதற் சாங்காறும் வழிபடுவார்க்கு அணியனாகின்றவனும், பணிவுடையவராய், குடியை, உள்ளத்தில் பற்றின்றிப் புரந்து, மனம் உருகிநின்று, தம்மை மெய்யடியார் கூட்டத்துள் வைத்தெண்ணும் வாழ்க்கையையுடையவர்க்கு அடிமை செய்தலில் தவறாத நெறியை உணர்த்து மாற்றால், என்னை மறுபிறப் பெடுத்தலாகிய குற்றத்தை அறுத்துத் தூயனாக்கியவனும், மாவடுப் போலும் கண்களையுடைய உமாதேவியை விரும்பி ஒருபாகத்தில் வைத்தவனும் ஆகிய பெருமானை, அடியேன், திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!
🌸நாத்தான் தன்திற மேதிறம் பாது
நண்ணிஅண் ணித்தமு தம்பொதிந் தூறும்
ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும்
அளவிறந் தபஃறேவர்கள் போற்றும்
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்
துருவி மால்பிர மன்னறி யாத
மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
🙏🏾அடியேற்கு, எனது நா, தனது புகழைச் சொல்லுதலில் என்றும் மாறுபடாதவாறு என்னிடத்துப் பொருந்தி, உள்ளே அமுதம் நிறைந்தாற்போல இனித்து ஊற்றெழுகின்ற துணைவனாய் உள்ளவனும், எண்ணில்லாத பல தேவர்களும் துதித்து வணங்குகின்ற வணக்கத்திற்கு உரியவனும். 'ஞாயிறு, திங்கள், தீ' என்னும் முச்சுடர்களிலும் வேறற நிற்பவனும், திருமாலும் பிரமனும் தேடி அறியப்படாத பெருமையை உடையவனும், எனக்குப் பெருமையை அளித்தவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!
🌸நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானைவலிவ
லந்தனில் வந்துகண் டேனே
🙏🏾சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த, தமிழ்ச் சொல்லால் அமைந்த மெய்யுணர்வு மாலையாகிய, முன்பு அவர்களால் சொல்லப்பட்டனவற்றையே பின்னும் பிறர் சொல்லிப் போற்றுதலை விரும்புபவனும், அடியேனது அறியாமையை அறிந்து, கல்லின் இயல்பைக் கொண்ட எனது மனத்தை உருகப்பண்ணி, கழல்
🌸பாடுமா பாடிப்ப ணியுமா றறியேன்
பனுவுமாப னுவிப்ப ரவுமா றறியேன்
தேடுமா தேடித்தி ருத்துமா றறியேன்
செல்லுமா செல்லச்செ லுத்துமா றறியேன்
கூடுமோ றெங்ஙன மோஎன்று கூறக்
குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
வாடிநீ வாளா வருந்தல்என் பானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
🙏🏾யான், முன் உள்ள பாடல்களை, அவைகளைப் பாடும் நெறியாற் பாடி இறைவனை வழிபடுமாற்றை அறிந்திலேன்; புதிய பாடல்களை யாக்கும் நெறியால் யாத்துத் துதிக்கு மாற்றினையும் அறிந்திலேன்; மனத்தில் உள்ள குற்றங்களை ஆராயும் நெறியால் ஆராய்ந்து கண்டு அதனைத் திருத்தும் வகையை அறிந்திலேன்; அதனால், அதனை நன்னெறியிற் செல்லுமாறு செலுத்தும் வழிய அறிந்திலேன்; இவற்றால் 'இவன் நன்னிலையைப் பெறுதல் எவ்வாறோ!' என்று நல்லோர்கள் இரங்கிக்கூற இருக்கின்ற காலத்து, என்னையே சிறப்பாக யாவர்க்கும் காட்டி, 'இவன் எனக்கு அடிமை' என்று சொல்லி வெளிக்கொணர்ந்து, தனக்கு ஆளாகக் கொண்டு, 'இனி, நீ, பயனின்றி வாடி வருந்தலை' என்று தேற்றிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!
🌸பந்தித்தவ் வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
சந்தித் ததிற லாற்பணி பூட்டித்
தவத்தை ஈட்டிய தன்னடி யார்க்குச்
சிந்தித் தற்கௌ தாய்த்திருப் பாதஞ்
சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
🙏🏾பிணித்துள்ள வினைத் தொடர்பு அறுதலால் பிறவியாகிய கடலினது பரப்புச் சுருங்குமாறு செய்பவனும், தன்னை உணர்ந்த உணர்வின் வலிமையால், தம் செயல்களைத் தன்னிடத்தே சேர்த்து, அதனால், செய்யும் செயலெல்லாம் தவமேயாகக் குவித்த தன் அடியவர்கட்குத் தனது திருவடிகள், நினைத்தற்கு எளியவாய்க் கிடைத்தலானே, தனது சிவலோகத்தின் வாயிலைத் திறந்து, அதன்கண் அவர்களைப் புகச்செய்ய வல்லவனும், தன்னையே வணங்குகின்றவர்களது மனத்தில் விளங்குபவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!
🌸எவ்வெவர் தேவர்இ ருடிகள் மன்னர்
எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
அவ்வவர் வேண்டிய தேயருள் செய்து
அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை
இவ்விவ கருணைஎங் கற்பகக் கடலை
எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
வவ்விஎன் ஆவிம னங்கலந் தானை
வவிவ லந்தனில் வந்துகண் டேனே.
🙏🏾தேவர்கள், இருடிகள், அரசர்கள் முதலாக எண்ணிறந்தவர்களாகிய எவரெவரும், எவ்விடத்திலும் இருந்து வழிபட, அவ்வெல்லா இடங்களிலும் நின்று அவர்களது வழி பாட்டினை ஏற்று, அவரவர் விரும்பியதை அவர்கட்கு அளித்து, இவ்வாற்றால், தன்னை அடைந்தவர்க்குப் புகலிடமாய் நிற்பவனும், இவ்வாறு உள்ள இவை இவையாகிய அருளைத் தருகின்ற எங்கள் கற்பகத் தருவும் கடலும் போல்பவனும், யான், 'எம் பெருமானே, எனக்கு அருள்செய்' என்று வேண்டிக்கொண்ட பின்பு, என் உயிரைத் தன்னுடையதாகக் கொண்டு, என் உள்ளத்திலே எஞ்ஞான்றும் நீங்காது இருப்பவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!
🌸திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத்
திறல்அ ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்
பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும்
பின்னையாய் முன்ன மேமுளைத் தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவா
தடிப ணிந்தறி தற்கரி யானை
வரையின் பாவைம ணாளன்எம் மானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
🙏🏾வானத்தில் திரிகின்ற முப்புரங்களை அழித்ததும், குற்றம் செய்த, வலிமையுடைய அரக்கனாகிய இராவணனை ஒறுத்ததும், ஏனை, பெரிய ஆலகால விடத்தை அமுதமாக உண்டதும் முடிதற்குக் காரணனான பின்னோனாய், எப்பொருட்கும் முன்னே தோன்றினவனும், அரிய நான்கு வேதங்களை ஓதுகின்ற அந்தணர்கள், மனம் மாறுபடாது நின்று அடிபணிந்தும், அவர்களால் அறிதற்கு அரியவனும், மலைமகட்குக் கணவனும் ஆகிய எம் பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!
🌸ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மால்உதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச்
சுமந்த மாவிர தத்தகங் காளன்
சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
மான்று சென்றணை யாதவன் றன்னை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
🙏🏾தன்னொடு மாறுபடுதலை ஏற்ற பிரமனது தலைகளில் ஒன்றை அறுத்து, அதனை நிரப்ப, மாயோனது உதிரத்தை ஏற்றவனும், யாவருக்கும் காணப்படுகின்ற தோளின் மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தையுடையவனும், தன்னைக் காண்பதற்குரிய வழியைக் காட்டுதற்கு அரியவனும், தன்னிடத்திற் பொருந்திய மனத்தையுடையவர்கட்கு எளியவனும், அறியாமை வழிச் சென்று அணுக இயலாதவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!
🌸கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்
கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்
மன்னு நாவல்ஆ ரூரன்வன் றொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்போய்
மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே.
🙏🏾வறுமையின் வலிமை கெடும்படி அரிய வேள்வித் தீயை வளர்த்தற்கு ஏதுவான, பெரியோர் பலரும் போற்றிக் கற்ற நான்கு வேதங்களின் முடிந்த பொருளாகிய தீப்போலும் உருவினனாகிய சிவபெருமானை, அவனை எஞ்ஞான்றும் தன்னிடத்து நீங்காது கொண்டு நிற்கும், 'திருவலிவலம்' என்னும் தலத்தில் வந்து கண்டு, அவன் அடியவனும், நிலை பெற்ற திருநாவலூரில் தோன்றியவனும், 'வன்றொண்டன்' எனப் பெயர்பெற்றவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய, இனிய இசையையுடைய, செவ்விய தமிழால் ஆகிய பத்துப் பாடல்களையும், மனத்தால் விரும்பிப் பாடவல்லவர்கள், தேவர்கள் விரும்பிப் போற்ற, துன்பம் இல்லாத வானுலகத்தைப் போய் அடைவர்; இது திண்ணம்.
திருச்சிற்றம்பலம.
*கல்வெட்டு:*
இத்தலத்திற்கான கல்வெட்டுக்கள் ஒன்பது படியெடுக்கப்பட்டுள்ளன.
இராஜேந்திரன் காலத்தியவை மூன்று.
குலோத்துங்கன் காலத்தியவை இரண்டு.
இராஜராஜன் காலத்தியவை இரண்டு.
சுந்தரபாண்டியன் காலத்தியவை இரண்டு.
இத்தலம் அருமொழித் தேவ வளநாட்டு வலிவலக் கூற்றத்து உபயகுல சுத்த சதுர்வேதி மங்கலமான வலிவலம் என்று வழங்கப்பட்டது.
இறைவன் மனத்துள் தேவர் என்றே கல்வெட்டுகளில் கூறப்பப்பட்டிருக்கிறது.
உடையார் மனத்துள் நாயனாரது கோயில் காரியம் பார்ப்பார் சிலரால் தேவப்பெருமான் திருமடத்து எதிர் ஒப்பிலாதார் சோமநாத தேவ முதலியாருக்கு நிலம் மாற்றிக் கொடுக்கப்பட்டது.
இந்தத் திருமடம் மனத்துள் நாயனார் கோயிலுக்குத் தெற்குப் பக்கத்தில் இருக்கிறது.
தென் விடங்கலூர், குலோத்துங்க சோழ நல்லூர் திரிசூலம், பொன் வேய்ந்த பெருமாள் நல்லூர் முதலிய கிராமங்கள் பல வேறு காரியங் களுக்குத் தானமாக அளிக்கப்பெற்றமை அறியப் பெறுகின்றன.
திருமூல தேவர் திருமடத்தில் இருந்த கோயில் அர்ச்சகர் ஒருவருக்கு நிலம் விற்கப்பெற்றது என்பதால் திருமூலதேவர் மடம் என்பது ஒன்று இருந்தமை புலனாகிறது.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
சித்திரையில் பிரமோற்சவம்.
தைப்பூசம்.
மகாசிவராத்திரி.
பங்குனி உத்திரம்.
வைகாசி விசாகம்.
ஆவணி ஞாயிறு.
புரட்டாசி நவராத்திரி.
ஐப்பசி அன்னாபிஷேகம்.
திருக்கார்த்திகை.
மார்கழி திருவாதிரை.
*தொடர்புக்கு:*
91 4366 205636.
திருச்சிற்றம்பலம்.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *கைச்சின நாதேசுவரர் திருக்கோயில், திருகைச்சினம்.*
________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment