Friday, September 15, 2017

Sivavaakiar on saguna & nirguna worship

Courtesy:Sri.J.K.Sivan

நமஸ்காரம் சிவ வாக்கியரே - 5

                               உருவ  அருவ  வழிபாடு                                                                                                  
             
அந்த வரக்கூடாத  அந்திம  நேரம் நெருங்கி விட்டது.  உடல்  ஜீவனை விட்டு பிரிவதற்கான அறிகுறிகள் தோன்றி விட்டன.  வேர்த்து கொட்டுகிறது. மேலே காற்றாடி வேகமாக சுத்தினாலும், உடல் தொப்பமாக ஆகிவிட்டது.   மூச்சு  ஏதோ  ஐந்து கிலோ ஓடினவன் மாதிரி,   பெட்டி  படுக்கையுடன்   ரயிலுடன் ஓடி அதை கோட்டை விட்டவன் மாதிரி  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறதே.  இந்த நேரத்தில் நீ கற்ற வேத சாஸ்த்திரங்கள் நினைவுக்கு வந்து அதனால்  டக்கென்று இதெல்லாம் நின்று விடுமா?

அரை நிமிஷ நேரமட்டிலுமாவது  உள்ளே புகுந்து ஆன்மாவாக உள்ள அவனை நோக்கி இருப்பேனாகில்  இந்த புஸ்தக மூட்டைகள், என்னை வாட்டும் நோய்கள் என்னை ஆட்கொள்ள இடம் கொடுத்திருப்பேனா?  அவை தான் தேவையா? நான் தான் சத்தியத்தை உணர்ந்து முத்திநிலையில் இருந்திருப்பேனே . அங்கே  உடல் எது அதில் நோய் தான் ஏது?   

இப்படியாக உரத்த குரலில் எல்லோரும் மெச்ச  வேத சாஸ்திரங்கள் ஒப்பிக்கும்   சட்டநாத பட்டரை  கேட்கிறார் சிவ வாக்கியர். என்ன தைரியம்!


''சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே 
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ 
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல் 
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.

''இது சுயம்பு சார்!.  எத்தனை ஆயிரம் வருஷம் என்று யாருக்குமே தெரியாது.  
இதோ இந்த விக்ரஹம் விஜயாலய சோழன் கொள்ளு தாத்தாவான  ஒரு சோழன் கனவில் வந்து அவன் ஸ்தபதியை கூட்டி வந்து பண்ணியது. அந்த கல் கூட  எங்கோ வடக்கே  இருந்த ஒரு மலையின் கல்.  ரொம்ப சக்திவாய்ந்த லிங்கம்.  பழமனாதி. வரப் ப்ரஸாதி''   என்று சொல்கிறீர்களே.  அதற்கு என்னென்னமோ பேர் சொல்லு
 கிறீர்கள்.  உங்கள் மனதில்  தோன்றும்  பெயர்களையெல்லாம் வைத்து விடுகிறீர்களே . ஐயன்மீர்.  உங்களின் அறியாமையை என்ன சொல்வேன். அதன் காரணமாகத்தானே  இப்படியெல்லாம் கடவுளின் பெயரை ஒரு ஜட வஸ்துவிற்கு வைத்து அழைக்கின்றீர்கள். நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

 இந்த உலகைப் படைத்த ஒன்று இருக்கிறது. பரம சக்தி.  எல்லாவற்றையும் செய்ய வல்லது;  உலகையும்,  உலகப்  பொருள்களையும்  படைக்க  வல்லது. தான் படைத்த  வஸ்துவை  அறியாமல் அழியாமல்   வைத்திருக்கவும்  காப்பாற்றவும் வல்லது. அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது. 

இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள்  வெறும் கல்லிலே காணவே முடியாதே.   உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே அந்த மஹா சக்தியை உணர முடியும் என்று ஒரு உயர்ந்த   உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர். இதை நாத்திகம் என்று கொள்ள வேண்டாம். எங்கும் நிறைந்த பரம் பொருளை கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி படுவது 
இரண்டாம் பக்ஷம். அது  தேவை இல்லை  என்று அவருக்கு  தோன்றி இருக்கலாம். அப்படி  வழிபடுபவர்கள்  அறியாமையை உடைய ஏழைகள் என்றும் சாடுகின்றார். அய்யா  சிவவாக்கியரே , உங்கள் நிலைக்கு நாங்கள் வந்துவிட்டால் உங்களை ஏன் இப்படி உட்கார்ந்து படிக்கப்போகிறோம். எங்களுக்கு இந்த நிலையில் தான் உணர முடியும். நாங்கள் ஏழையாக இருந்து விட்டு போகிறோமே. கொஞ்சம். அந்தப்பக்கம் திரும்பிக் கொள்ளுங்கள். 

'' பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் 
 எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
 பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே''

 நம்மிடையே  வெகு காலமாக  உள்ள  சில பழக்கம் அவருக்கு  மூடப் பழக்கங்களாக தோன்றி இருக்கிறது. நாம் படிப்பது அவரது எழுத்து வன்மையை ரசிக்க,  அவறது உயர்ந்த  ஆன்மீக தத்துவத்தை உணர்ந்து கொள்ள மட்டுமே.  

நம்மை அவர் நிலைக்கு கொண்டு செல்ல தேவையான சாதனங்களை தாம் நாம் பின்பற்றுகிறோம்.  ஒரே நாள் ராத்திரியில் நாம்  ரிஷியாக முடியாது.  இந்த பாடலில் பூசை  எதற்கு. கண்ணால் காண முடியாத அந்த எங்கும் நிறைந்த பரமாத்வை கண்டதுண்டா. உன்னுள்ளே இருப்பவனுக்கு எப்படி பூசை, என்ன பூசை பண்ணுவாய்?  ஆதிஅந்தமில்லாத  அருட்பெரும் ஜோதிக்கு எது பூசை, எப்படி பூசை, அதை என்ன வென்று சொல்லி கூப்பிட்டு பூசை பண்ணுவாய்? என்ற  கேள்விகளை எழுப்புகிற சிவ வாக்கியர்  ஒரு போதும் சாமி இல்லை என்று சொல்லவில்லை என்பது கவனம் இருக்கட்டும்.

     "பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 
     பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் 
     ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ 
     ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே" 

கடைசியாக இன்று இன்னொன்று சொல்லி நிறுத்துகிறேன். 

     ''"வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர் 
     வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ 
     வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள் 
     வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே"

பால முரளி கிருஷ்ணா  பாட்டு ஒன்று எனக்கு பிடிக்கும்.   சிவலிங்கத்தை அபிஷேகம் பண்ண விழையும் ஒரு பக்தர்   ''ஹே  மஹாலிங்கம், சம்போ, நான் என்னடா செய்வேன்?  என்று கேட்கும்  ''ஏமி  சேதுரா லிங்கா?'' என்ற அற்புத பாடல். கங்கை நீரால் உனக்கு அபிஷேகம் செய்ய விரும்பினேன். அடடா அதில் எண்ணற்ற  நீர் வாழ் உயிர்கள் அசுத்தம் செயகின்றனவே. சரி புஷ்பத்தை பறித்து உனக்கு சுற்றலாம் என்று பறிக்கப் போனேன். ஆஹா  எத்தனை வண்டுகள் தேனீக்கள் அதை எச்சில் படுத்தி விட்டன. சரி கறந்த பாலை பசுவிடம் பெற்று உனக்கு அபிஷேகம் செய்யலாமே என்று காராம்பசுவை நாடி ஓடினேன். பால் கரைக்கு முன்பே வேண்டாம் என்று தோன்றி விட்டது. காரணம். அதன் கன்றுக்குட்டி வாயை வைத்து காம்புகளை எச்சில் படுத்திவிட்டது. மேலும்  அது எச்சில் படுத்தி குடித்த மீதி பாலையா உனக்கு அர்ப்பணிப்பது.  பேசாமல் என் இதயத்தை எடுத்துக் கொள். அதிலே எந்த எச்சிலும் கிடையாது. யாரும் தொட்டதும் இல்லை '' என்று அழகாக பாடுவார்.  அதை இணைத்திருக்கிறேன். கேளுங்கள்.   

மேலே சொன்ன சிவவாக்கியர் பாடல் அதே அர்த்தம் கொண்டது தான்.  வாயில் எப்போது எச்சில் ஊறவில்லை?  வாயினால் ஓதப்படுவதால்  வேத மந்திரங்களும் எச்சில், பசு மடியில்  கன்று குடித்த  பால் எச்சில், பூதலங்களேழும் எச்சில் தான்.  எதில் எச்சிலில்லை?  --  சிவ வாக்கியரே  உங்கள் கேள்விக்கு  எனக்கு  பதில் சொல்ல திராணி இல்லை. https://www.youtube.com/watch?v=DOzbVCepY6w

No comments:

Post a Comment