Friday, September 15, 2017

Nagapatinam temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பிரபஞ்ச நாதனே போற்றி!
பிறவாவரமருளு நாயகா போற்றி!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
               *தலம்.100*
☘ *பாடல் பெற்ற சிவ தலங்கள் தொடர்.*☘
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
☘ *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*☘
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
☘ *திருநாகைக்காரோணோம்.*☘
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*திருநாகைக்காரோணம் (நாகப்பட்டிணம்)*

*இறைவன்:* காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்.

*இறைவி:* நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி.

*தல மரம்:* மாமரம்.

*தீர்த்தம்:* தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்.

*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*திருமேனி:* சுயம்புவானவர்.

தேவாரம் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்து இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*வழிபட்டோர்:* சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன்,விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர்.

*கோவில் அமைப்பு:*
கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால்,  இராஜகோபுரத்தை தரிசிக்க இயலாது என்பதால், நாங்கள் இராஜகோபுரம் செல்லும் வாயிலுக்கு நடந்தோம்.

ஆனால், முற்றுப் பெறாத வாயில் வழியே செல்லும்போது முதலில் நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம், ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.

நாங்கள், ஐந்து நிலை கோபுர வாயிலுக்கு வர *சிவ சிவ*என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

சுவாமி பிராகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் இருக்கக் காணலாம்.

இப்பிராகாரத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன், முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன், காட்சி கொடுத்தவர், நடராஜர், பிக்ஷாடனர் அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசித்தோம். 

தியாகராஜர் சன்னதியில் சுந்தரவிடங்கரை தரிசித்தோம். 

மூலவரான காயாரோகணரை சந்நிக்கு வந்தோம். அற்புதமான அவர் தரிசனம் கிடைக்கப் பெற்றது. மகிழ்ந்து மனநிறைவுடன் வெளிவந்தோம்.

அம்பாள் சந்நிதிக்கு வந்து அவளருட் பார்வைக்கு முன் வந்தோம். அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணம் காட்சி தந்தாள்.

மனமுருக பிரார்த்தனை செய்து பணிந்து வணங்கி, தீபராதனை எடுத்து குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.

சுவாமிக்குப் பின்னால் வந்தபோது, சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசித்தோம். 

ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார் விருட்சத்தையும் விநாயகரையும் சேர்த்து வலம் செய்து வணங்கிக் கொண்டோம்.

சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலுமிருக்க தீர்த்த ஸ்நானம் (சிரசிற்கு) செய்து வணங்கிக் கொண்டோம்.

கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. உடல்நிலை சீராக இல்லாதபோதே இத்தலத் தரிசனத்திற்கு வந்தோமாதலால் நாங்கள் கடலில் தீர்த்தமாடவில்லை. 

அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி நல்கிய தலம் இது. சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்தத் தலம் இது.

சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.

சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை முதலானவை வழங்கிய தலம் இது.

இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால், அன்றுமுதல் இக்கோவிலில் குதிரைவாகன விழா, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறுகிறது.

*தல பெருமை:*
நாகப்பட்டினம் - அதிபத்த நாயனார் அவதரித்து, வழிபட்டு முத்தி அடைந்தத் திருப்பதியாகும்.

அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் (நம்பியார் நகர்) உள்ளது. 

அதிபத்த நாயனாரின் திருவுருவச் சிலை, நாகைக்காரோணம் திருக்கோயிலில் உள்ளது.

சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் நாகப்பட்டினத் திருநகர *"நுளைபாடி"* என்பது தற்போது *"நம்பியார்நகர்"* என்று வழங்கப்படுகின்றது. இது நாகப்பட்டின நகரின் ஒரு பதியாகும்.

ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. (தியாகராஜர் - சுந்தர விடங்கர், நடனம் - பாராவாரதரங்க நடனம்).

கயிலையையும், காசியையும் போல இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது.

மூவர் பெருமக்களால் பாடல் பெற்றத் திருத்தலம்.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும் பெற்றத் தலம்.

இத்தல ரதம் கண்ணாடித் தேராகும்.

ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுள்ளன; முதல் இராசராசன், குலோத்துங்கன் முதலியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் அவை.

சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியுள்ளது.

நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னியைக் கூடிப்பெற்ற புதல்வனே தொண்டை நாட்டை அரசாண்ட இளந்திரையன் எனப் பத்துப்பாட்டால் அறிகிறோம்.

குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன்நாகையார் எனக் கூறப்படுகிறது.

நகரின் மத்தியில் இக்கோயில் நூற்று என்பது மீட்டர் நீளமும், எழுபத்தைந்து மீட்டர் அகலமும் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

வைகாசியில் பிரமோற்சவமும், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறும். 

அப்போது, சாலீசுகனுக்குத் திருமணக்காட்சி அளித்த பின், பல்லக்கில் புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடைபெறுகிறது.

ஆவணியில் அதிபத்த நாயனார் விழாவும், ஆடி - தை அமாவாசை மற்றும் மாசி மக நாட்களில் சமுத்திர தீர்த்த வாரியும், தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

நாகைக்காரோணப் புராணம் அறுபத்தோர் படலங்களையும், இரண்டாயிரத்து ஐந்நூற்று ஆறு பாடல்களையும் கொண்ட இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று ஆயிரத்து எண்ணூற்று அறுபதில் அரங்கேற்றம் பெற்றது.

மகாவித்துவான் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள், இப்புராணத்தின் அருமை பெருமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்:

"இந்நூலில் பல நயங்கள் மிகுந்துவிளங்கும். சொல்லணி, பொருளணி, தொடைநயம், பொருட்சிறப்பு, சுவைநயம், நீதி, சிவபக்தி, சிவத்தலச்சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் நிரம்பியுள்ளன. சுவைப் பிழம்பாக விளங்கும் இக்காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருக்க வேண்டும். 

பல புலவர்களின் வாக்குகளை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தால் போதும்."

ஞானசம்பந்தர் அருளிய திருமுகப் பாசுரத்தின் ஒவ்வோரு பாடலுக்கும் சேக்கிழார் விரிவுரை செய்ததைப் போலப் பிள்ளை அவர்களும், சுந்தரர் இத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இப்புராணத்தில் விளக்கம் அளித்துள்ளது அறிந்து மகிழத் தக்கது.

இரண்டாயிரத்து ஐநூற்று ஆறு பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970-ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டுத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்து பேருபகாரம் செய்தது.

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணம் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தபோது பசியால், வீதியில் பாக்கு விளையாடும் பாலகர்களை நோக்கிப் *"சோறு எங்கு விக்கும்?"* என்று கேட்டார். அச்சிறுவர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினர்.

(விற்கும் என்பது பேச்சு வழக்கில் விக்கும் என வழங்குதலும் உண்டு.) புலவர் சிறுவர்கள் மீது கோபங்கொண்டு, அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு வரைசுவரொன்றில் *"பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு..."* என்று எழுதி நிறுத்தி விட்டு, பசிதீர்ந்து எஞ்சிய பகுதியைப் பாடி முடிப்போம் என்று சென்று, பசியாறி வந்து பார்க்கும்போது, அப்பாடலின் இரண்டாமடி *"நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை"* என்று எழுதி இருப்பதைக் கண்டு, சிறுவர்களின் கல்வியறிவை மெச்சிச் சென்றார் என்பது தனிப்பாடல் திரட்டில் காணப்படும் வரலாறு.

*தல அருமை:*
புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந்த சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ளது.

இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய் விளங்குகிறது.

பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இதனை *ஆதி புராணம்* என்றும் சுவாமியை *ஆதி புராணேச்வரர்* என்றும் தல புராணம் கூறுகிறது.

இது, ஆதி சேஷனால் பூஜிக்கப் பெற்றதால், *நாகை* என்றும், புண்டரீக முனிவரை இறைவன் தனது தேகத்தில் ஆரோகணம் செய்துகொண்டமையால், *காயாரோகணம்* என்றும் பெயர். 

இதுவே மருவி, காரோணம் என்றாயிற்று. (காரோணம் என்று பெயருடைய திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ளது.
 1. நாகைக் காரோணம், 2. குடந்தைக் காரோணம், 
3.கச்சிக்காரோணம் [காயாரோகணம்] - லிங்கபேசம் [காயாரோகணம்]ஆகும்.)

ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் முதலிய பெயர்களாலும் இத்தலம் விளங்கியுள்ளது என்று தலபுராணம் கூறுகின்றது.

*பதிகம்:*
🌸மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகி லுய்யலா நெஞ்சி னீரே.

🌸வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற் றிசைமுகன் சிரமொன் றேந்தும்
கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே.

🌸நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை விளைபொருண் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை யுணர்த லானா முய்ந்தவா நெஞ்சி னீரே.

🌸மண்டனை யிரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே.

🌸அணிந்த சென்னி நீணிலா வரவஞ் சூடி
மறையொலி பாடி யாடன் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த விடும்பைபோ யின்ப மாமே.

🌸வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும்
உம்பனை யும்பர் கோனை நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணநா முய்ந்த வாறே.

🌸வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசர மருளி னானை
மங்கைமா ராட லோவா மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே.

🌸தெற்றினர் புரங்கண் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலு நாகைக் காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே.

🌸 (இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.)

🌸கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்
தொருவிர னுதிக்கு நில்லா தொண்டிற லரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகம்
திருவடி தரித்து நிற்கத் திண்ணநா முய்ந்த வாறே.

திருநாகைக்காரோணம் 
(திருநேரிசை )

☘மனைவி, தாய், தந்தை, 
மக்கள், மற்று உள சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையும் மா கடல்-சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யலாம் நெஞ்சினீரே.

☘வையனை, வையம் உண்ட மால் அங்கம் தோள்மேல் கொண்ட
செய்யனைச், செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும்
கையனைக், கடல்-சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே, அம்ம, நாம் உய்ந்தவாறே.

☘நிருத்தனை, நிமலன் தன்னை, நீள் நிலம் விண்ணின் மிக்க
விருத்தனை, வேத வித்தை, விளை-பொருள் மூலம் ஆன
கருத்தனைக், கடல்-சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்தலால், நாம் உய்ந்தவா நெஞ்சினீரே.

☘மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்
தெண்-திரை கடைய வந்த தீ-விடம் தன்னை உண்ட
கண்டனைக், கடல்-சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே, அம்ம நாம் உய்ந்தவாறே.

☘நிறை-புனல் அணிந்த சென்னி நீள்-நிலா அரவம் சூடி,
மறை-ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்,
கறை-மலி கடல்-சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
இறைவனை நாளும் ஏத்த, இடும்பை போய், இன்பம் ஆமே.

☘வெம்பனைக் கருங்கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த
கம்பனைக், காலற் காய்ந்த காலனை, ஞாலம் ஏத்தும்
உம்பனை, உம்பர் கோனை, நாகைக் காரோணம் மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே, திண்ணம் நாம் உய்ந்தவாறே.

☘வெங்கடும் கானத்து ஏழை தன்னொடும் வேடனாய்ச் சென்று,
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு-சரம் அருளினானை,
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானைக்,
கங்குலும் பகலும் காணப் பெற்று நாம் களித்தவாறே.

☘தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்
செற்ற வெஞ்சிலையர், வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார்,
கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்
பெற்றவர் பிறந்தார், மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே.

☘ (இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.)

☘கரு-மலி கடல்-சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து
ஒரு-விரல் நுதிக்கு நில்லாது ஒண்-திறல் அரக்கன் உக்கான்;
இரு-திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்
திருவடி தரித்து நிற்கத், திண்ணம் நாம் உய்ந்தவாறே.
     
           திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம் சிக்கல் வ(ள)ரும்.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*கோவை.கு.கருப்பசாமி.*
அடியேன் பெயர் இனி இவ்விடத்திலே இடம் பெறும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment