Friday, September 15, 2017

Dasavataram - Conclusion

Courtesy:Dr.Smt.Saroja Ramanujam

Dasavatharam -முடிவுரை

1. அவதாரம் என்பது என்ன?

அவதரணம் என்றால் மேலிருந்து கீழே இறங்குவது. நாராயணன் வைகுண்டத்தில் இருந்து க்ஷீராப்திக்கு வந்து அங்கிருந்து பூலோகத்திகு வருவதே அவதாரம். ஏன் க்ஷீராப்தியில் இருந்து பூலோகம்? நாம் எல்லா அவதாரக் கதைகளிலும் தேவர்கள் பாற்கடலுக்கு வந்து நாராயணனை அவதாரம் செய்யும்படி ப்ரார்த்திகிறார்கள் என்று பார்க்கிறோம் அல்லவா.

உண்மை என்னவென்றால் அவதரணம் என்பது பார்க்க முடியாத உணரமுடியாத நிலையில் இருந்து கண் முன்னே பார்க்கும் நிலையில் இறங்கி வருவதே. இறைவன் எங்கும் இருக்கிறார். ஆனால் நம்மால் பார்க்க முடியாத சூக்ஷ்ம உருவில் உள்ளார். அந்த இறைத்தன்மை ஸ்தூல வடிவில் ஒரு உருவம் மூலம் தோன்றுவதே அவதாரம்.

இந்த அர்த்தத்தில் பார்த்தால் அவதாரம் எப்போதோ நிகழ்வதல்ல. ஒவ்வொரு நொடியும் எங்கோ ஒரு இடத்தில் தோன்றிக்கொண்டே இருக்கிறது. எங்கெல்லாம் தெய்வத்தன்மை வெளிப்படுகிறதோ, தீயவை அழிந்து நன்மை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் அவதாரம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

பாகவதத்தில் ஊற்றுக்கள் ;போல கணக்கற்ற அவதாரங்கள் நிகழ்கின்றன ஆயினும் அவற்றில் முக்கியமானவை இருபத்து நான்கு என்று சொல்லப் படுகிறது. அவற்றுள் சிறந்ததாக நாம் அறியும் பத்து அவதாரங்கள்.அதைப்பற்றி ஏற்கெனவே பார்த்தோம்.

2. புராணங்களும் இதிஹாஸங்களும்.

புராணங்கள் பதினெட்டு என்று அறிவோம். அதில் பாகவத புராணத்திலும் விஷ்ணு புராணத்திலும் தசாவதாரத்தைப் பற்றிய வர்ணனை காணப் படுகிறது. புராணங்களும் இதிஹாஸங்களும் கட்டுக்கதை அல்ல. ரிஷிகளின் கற்பனையும் அல்ல.அவை உயர்ந்த அர்த்தங்களை உடையவை.

ரிஷிகள் வேதத்தையும் சாஸ்திரங்களையும் படித்துப் புரிந்து கொள்ள முடியாத நம்மைப் போன்றவர்களுக்காக கருணை கொண்டு கதை வடிவில் அந்த உண்மைகளை போதிப்பதற்காக ஏற்பட்டவை.

3. ஸம்ஸ்கிருத இலக்கியங்கள் 
. ஸம்ஸ்கிருதத்தில் மூன்று வகையான இலக்கியங்கள் உண்டு. இவை மூன்று பிரிவின் கீழ் தொகுக்கப் பட்டவை.

சுருதி , ஸ்மிருதி- சுருதி என்பது வேதம். ஸ்மிருதி என்பது பகவத்கீதை, மனுஸ்மிருதி முதலிய வேதத்தை பின்பற்றும் இலக்கியங்கள். இவை ப்ரபுஸம்ஹிதை என்று கூறப்படுகின்றன. அதாவது ஓர் பிரபு அல்லது எஜமானனானவன் இப்படி செய் அப்படி செய்யாதே என்று கூறுவது போல் இவை அமைந்துள்ளதால்.

இதிஹாஸ புராணங்கள் – ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் பாகவதம் முதலிய புராணங்கள். இவை ஸுஹ்ருத்சம்ஹிதை என்று கூறப்படுகின்றன. ஸுஹ்ருத் அதாவது ஓர் நண்பன் எவ்வாறு சிநேக பாவத்தில் சொல்வானோ அவ்வாறு சுருதி ஸ்மிருதி இவைகளில் சொல்லப்பட்ட அதே உண்மைகளை எல்லோருக்கும் எளிய வகையில் கதை மூலம் எடுத்துச் சொல்கின்றன.

மூன்றாவது பிரிவு காவியங்கள் எனப்படும் இயல் இசை நாடகம் போன்றவை. இவை காளிதாசன் முதலிய கவிகளின் கருத்தோவியங்கள். இவை காந்தா சம்ஹிதை என்று கூறப்படுகின்றன. காந்தா அதாவது மனைவியின் சொற்கள் போல இனிமை வாய்ந்தவையையும் அதே சமயம் ஹிதமான விஷயங்களைக் கூறுபவையாயும் அமைந்தவை

. ஒரு நண்பன் சில சமயத்தில் உரிமையுடன் அறிவுரை கூறலாம். ஆனால் அதே அறிவுரையை ஒரு மனைவி கணவனிடம் கூறவேண்டும் என்றால் மறைமுகமாக அவன் மனதிற்குகந்தவாறு பேசி அந்த நல்ல முடிவு அவன் மனதிலேயே தோன்றினதாக அவன் நினைக்கும்படி கூற வேண்டும் . அதாவது நிறைய tact தேவை.

. ஏனென்றால் எந்தக் கணவனும் மனைவி அறிவுரை சொல்வதை விரும்புவதில்லை. ( அதாவது கடந்த காலங்களின் வாழ்க்கை முறை!) காவியங்கள் மனதுக்குகந்தமாதிரி இயல் இசை நாடகம் மூலம் அதே உண்மைகளை பாமர ஜனங்களும் உணரும்படி செய்கின்றன. ( இதுவும் கடந்த காலம். இப்போதுள்ளவை வேறு.)

இத்துடன் தசாவதாரத்தைப் பற்றிய என் பதிவுகள் நிறைவுறுகின்றன. இவற்றைப் பொறுமையாகப் படித்து அனுபவித்த உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிட்டுமாறு ப்ரார்த்தனையுடன் முடித்துக் கொள்கிறேன் வணக்கம்.


No comments:

Post a Comment