Thursday, July 6, 2017

Worship of Nandi

நற்பலன்கள் அள்ளித்தரும் நந்திதேவர் வழிபாடு!

ஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். 'ஓம் நமசிவாய...', 'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள்.

சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள்.

அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்... ஏன்?
கேட்டால், ''இது செவிட்டு சாமிங்க! அதான் கையைத் தட்டிக் கும்பிடுகிறோம்!'' என்றும், ''இவர் சந்நிதியில் நமது ஆடையிலிருந்து நூல் பிரித்துப் போட்டால் புது ஆடை கிடைக்கும்!'' என்றும் சொல்வார்கள்.

உண்மைதான்! நமது ஆடையில் இருந்து, தினம் இரண்டு நூல்களாக எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போட்டால், நான்கு நாட்களில் கிழிசலாகி விடும். புது ஆடை வாங்கித்தானே ஆக வேண்டும்! - இதெல்லாம் நாமாக ஏற்படுத்திக் கொண்ட தவறான அணுகுமுறைகள்.

இவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமே!

ஒருவரிடம் நாம் மந்திர உபதேசம் பெற்றால், அந்த மந்திரத்தை தினந்தோறும் இவ்வளவு தடவை (குருநாதர் சொன்னபடி) சொல்லி உருவேற்ற வேண்டும். அப்படி நம்மால் செய்ய முடியாதபோது, நமக்கு விபரீத பலன்கள் விளைய வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட மந்திரத்தை, ஒரு பசு மாட்டின் காதில் ஓத வேண்டும்.

இதனால் மந்திரத்தைச் சொல்லாததால் உண்டாகும் விபரீதப் பலன்கள் நம்மைத் தீண்டாது (என்பது நம்பிக்கை). மிகவும் நுட்பமான தகவல் இது.

இந்த உண்மை தெரியாமல் யாரோ - எப்படியோ ஆரம்பித்து வைத்த (கோயிலில் நந்தியின் காதுகளில் சொல்லும்) பழக்கம் இன்று மக்களிடையே பரவி விட்டது.

உண்மையில் இப்படிச் செய்யக் கூடாது!
கோயிலில் உள்ள நந்தியின் உருவத்தை நாம், நம் கைகளால் தொடக் கூடாது. அதற்கென உரியவர்கள் (குருக்கள் or அதனை பராமரிக்க தெரிந்தவர்கள்) மட்டுமே தொட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்ய வேண்டும். இதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment