Friday, July 14, 2017

Tiruvaiyaru pancanadeswarar temple

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                  *(8)*
🌺 *சிவ தல அருமைகள் பெருமைகள்.* 🌺
நேரில் சென்று தரிசித்ததைப்போல......
___________________________________________
      🌺 *திருவையாறு.* 🌺
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:*
பஞ்சநதேஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற் சோதீஸ்வர், பிரணதார்த்திஹரன்.

*இறைவி:*
தர்ம சம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி.

*தலமரம்:* வில்வம்.

*தீர்த்தம்:* சூரிய தீர்த்தம்., காவிரி.

சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று தலங்களுள் ஐம்பத்தொன்றாவது தலமாகப் போற்றப் பெறுகின்றது.

*இருப்பிடம்:*
தஞ்சாவூரிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. தஞ்சை கும்பகோணம் முதலிய ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

*பெயர்க்காரணம்:*
பஞ்ச நதிகள் தலம்.
(வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி) ஆனதால் இப்பெயர் பெற்றது.

*தேவாரம் பாடியவர்கள்:*
மூவரும் சேர்ந்து மொத்தம் பதினெட்டுப் பதிகங்கள் பாடியிருக்கிறார்கள்.

*சம்பந்தர்* 1-ல் மூன்று பதிகங்களும், 2-ல் இரண்டு பதிகங்களும்,

*அப்பர்:* 4-ல் எட்டு பதிகங்களும், 5-ல் இரண்டு பதிகங்களும், 6-ல் இரண்டு பதிகங்களும்,

*சுந்தரர்:* 7-ல் ஒரே ஒரு பதிகமும் பாடியிருக்கிறார்கள்.

*கோவில் அமைப்பு:*
பதினைந்து ஏக்கர் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கி ஏழு நிலை இராஜ கோபுரம் இருக்கிறது.

ஐந்து பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக ஐயாறப்பர் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

இங்கு பழமையான சிற்பங்களை உடைய பழமையான கோபுரம்.

விசாலாமான உள்ளிடம் அமையப் பெற்றுள்ளது.

உள் புகவும் வலப்பால் பெரிய மண்டபம் இருக்கிறதைக் காணலாம்.

இம்மண்டபத்தில் வல்லப விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் உள்ளன.

உள்ளேயிருக்கும் கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. இதில் சிற்பங்களை அதிகமான காணவில்லை.

இதன்பின் வலது பக்கமாய், அம்பாள் கோவிலுக்கு போகும் வழி வருகிறது.

கோவிலினுள் ஐயாரப்பன் ஆலயம், வடகயிலாயம்,  தென்கையிலாயம் என மூன்று கோவில்களாக அமைந்துள்ளது.

உள் நுழைந்து வலமாக வரும்போது, சூரிய தீர்த்தம் நீராழி மண்டபத்தோடு நல்ல கட்டமைப்பில் காணக்கிடைக்கிறது.

தெற்கு வாயிலின்  வெளிப்புறம் ஆட்கொண்டார் சன்னதி.யைக் காணப் பெறுகிறோம்.

இதைக் கடந்து நாம செல்லும்போதுதான், பிரகாரத்தில் அப்பருக்கு கயிலை காட்சி அருளிய (தென்கயிலை) தனிக்கோயிலாகவும், கோபுர விமான அமைப்புகளுடனும், மூன்று நிலை கோபுரத்துடனும் காட்சி அருளைக் காணலாம்.

மூலவர் சிவலிங்கத் திருமேனியின் பின்புறம் அம்பாள்.நின்ற கோலத்துடன் இருப்பதைக் கண்டு வணங்கிக் கொள்ள வேண்டும்.

ஆடி அமாவாசை அன்று அப்பர்ஸகயிலைக் காட்சி கண்ட ஐதீகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மூலவர் பிருத்திவி லிங்கம்--(பாணத்திற்கு) ஆதலால் அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.

பிருத்திவி லிங்கமாக இருக்கும் பாணத்திற்கு புனுகுச் சட்டம் சார்த்தப் படுகிறது.

கூம்பிய அழகுடன் கூடிய பாணம் கொண்ட தீண்டாத் திருமேனியாவார் நம் பிருத்திவி லிங்கபெருமான்.

ஐயாறப்பரின் உள்பிரகாரத்தை நாம் வலம் வர இயலாது.

இப்பிரகாரத்திற்கு தட்சிணாமூர்த்தி பிரகாரம் என பெயர்.

கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.

ஐயாறப்பர் ஜடாபாரத்தோடு (சடைமுடி) இருப்பதாக ஐதீகம். மகாலட்சுமியும் தவம் செய்து கொண்டிருக்கிறார். ஆதலால் இப்பிரகாரத்தை வலம் வருதல் கிடையாது. கூடாது.

*தல பெருமை:*
இத்தலம் காசிக்கு இணையான சமமான தலம். 

ஈசனான அவனே தன்னை பூசித்துக் கொண்ட இடம்.

சிவகணத் தலைவர், ஜெப்பேசநந்திகேஸ்வர் அவதார தலம்.

சுந்தரருக்கும், சேரமான் பெருமானுக்கும் ஆற்று வெள்ளத்தை ஒதுக்கி தரிசனம் தந்த இடம்.

தியாகையர் வாழ்ந்து நாதோபாசனை நல்கியது.

நாதமும், லயமும் இறையஞ்சலி செலுத்தும் இசைத்தலம்.

சப்த ஸ்தானத் தலம்.

சிலாத முனிவர் திருவையாற்றில் மகப்பேறு வேண்டித் தவம் செய்தார்.

ஈசன் அருளிய வண்ணம் யாகசாலை நிலத்தை உழுதபோது, ஒரு பெட்டகத்துள் குழந்தையாக நந்தி தேவர் கிடைக்கப் பெற்றார்.

நந்தி தேவரை வளர்த்த முனிவர், வியாஹபாத முனிவரின் புதல்வியான சுயம்பிரகாசை திருமணம் செய்து கொடுத்து அருள் பெற்ற தலம்.

*தல அருமை:*
ஒரு சமயம் திருமாவளவன் என்னும் கரிகாலன் வடக்கே இமயம் சென்று புலிக்கொடி நாட்டி தன் நாடு திரும்புகையில் காவிரிக் கரையின் வழியே வருகின்ற பொழுது, திருவையாற்றின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேர்க்கால் ஆழமாகப் பதிந்து நின்று நிலை வராது நின்று போனது.

யானைப் படைகளைக் கொண்டு வந்து விட்டு இழுத்துப் பார்த்தான் மன்ன். நகர்த்த முடியாது போனது.

குதிரைப் படைகளையும் கூட்டி வைத்து இழுக்கச் செய்தான் மன்னன். தேர் நகரவே இல்லை.

தன் காலாட்படைகளை வைத்து, தேர் பதிந்த இடத்தை அகழ்ந்து தோண்டி நகர்த்த முனைந்தான்.

அதிசயம் நடந்தது......

பள்ளம் பறிக்கத் தோண்டி அகழ்ந்திய பகுதியிலிருந்துதான் அந்த அதிசயம் நடந்தது.

ஆம் அகழ்ந்தெடுத்த பள்ளத்திலிருந்து விநாயகர், முருகன், லிங்க வடிவில் ஐயாறப்பர், சப்தமாதர்கள், சண்டேசுரர், சூரியன் ஆகியோரின் திருவுருவத் திருமேனிகள் கிடைக்கப் பெற்றன.

யோகி ஒருவரின் சடைகள் பரந்தும், வரிந்தும், புதைந்தும் காணப்பட்டன.

மன்னன் நயமேசர் எனும் அகப்பைச் சித்தரை தரிசித்தார்.

அவரோ.....ஐயாறானாகிய ஐயன் பகைவர் காணாது ஒளிந்திருக்கிறார்.

நீ இப்புவியை ஆளவந்ததும் உனக்காகத் தோன்றியுள்ளார்கள். ஆக இந்தமகாலிங்கத்திற்கு கோவில் புரணமைப்பாயாக! என்றார்.

கோவில் புரணமைப்புக்கு வேண்டிய பொருளுதவி, நந்தியின் குளம்படியிலிருந்து  பொன், வெள்ளி, கருங்கல் ஆகிய உனக்குக் கிடைக்கும் என அருளினார். 

அவ்வாறே கரிகாற் சோழன் சிறப்பாக திருவையாற்று ஐயாறப்பர் ஆலயத்தை புணர்நிர்மாணம் செய்து அதனருகே ஓர் அழகிய ஊரையும் உருவாக்கி, மக்களையும் அவ்விடத்தில் குழுமியிருக்கப் பணித்தான்.

இறைவனை பூசிக்கும் இருபத்து நால்வரில் ஒருவர், நீண்ட நாட்களாக கயிலை யாத்திரை சென்றிருந்தார்.

பல நாட்களாகியும் அவர் திரும்பாதது கண்டு ஏனைய இருபத்து மூன்று பேர்களும் அவருக்குரிய சொத்துக்களை பங்கு போட்டுக் கொண்டு, மேலும் அவர் மனைவி மக்கள்களை துன்புறுத்தி வந்தனர்.

துன்புறுத்துதலாலுக்குண்டான அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் நேராக ஐயாறப்பரிடம் வந்து முறையிட்டு வணங்கி அழுதனர்.

அது சமயம் இறைவன் ஆதிசைவர் வேடம் கொண்டு அவர் மனை புகுந்தார்.

இருபத்து மூவரும் அபகரித்திருந்த சொத்துக்கள் பொருட்களை திரும்பக் கொடுத்தனர்.

*பின்பு சிவாலயம் சென்று இறைவனை பூசை செய்யலானார். இந் நிகழ்வைத்தான் ஈசனே ஈசனை பூசை செய்த வரலாறு.*

இத்தலத்தில் எழுபதுக்கும் மேலான கல்வெட்டுக்கள் உளன.

*திருவிழாக்கள்:*
சித்திரையில் ஏழூர் விழாவும், பங்குனி மாதத்தில் நந்திதேவர் திருவிழாவும், ஆடி அமாவாசை திருவிழாவும் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றது.

*பூஜை:*
காமீக ஆகம முறையில் ஆறுகால பூஜை.

காலை 6-00 மணி முதல் பகல் 12-00 மணி வரை.

மாலை 4-00 மணி முதல் இரவு 9-00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு பஞ்சநாதேஸ்வரர் திருக்கோயில்.
திருவையாறு அஞ்சல்.
திருவையாறு வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம். 613 204

*தொடர்புக்கு:*
கண்காணிப்பாளர். தருமையாதீனம்.
04362--260332

          திருச்சிற்றம்பலம்.

*நாளை....திருநெய்தானம்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*



              திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment