Thursday, July 20, 2017

Shiva manasa pooja - Sadasiva Brahmendral

சிவ மானஸிக பூஜா என்ற ஸ்தோத்திரத்தில் பிரார்த்திக்கிறார் ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்.

ஈச்வரா. நான் உனக்கு உபச்சாரம் செய்வதாக நினைத்துப் பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் செய்வதாகத் தோன்றுகிறது. திரிலோகமும் வியாபித்த உன் திருவடியை நான் ஒர் உத்தரணி தீர்த்தத்தால் அலம்ப முடியுமா. விசுவாகரமான உன் சரீரத்திற்கு இந்த சிறிய வஸ்திரத்தைக் கட்டி மூட முடியுமா. 

உனக்கு நமஸ்காரம் பண்ணினால், என் காலை எந்தப் பக்கம் நீட்டினாலும் நீ தான் இருக்கிறாய். ஆனபடியால் உனக்கு நேரே காலை நீட்டிய தோஷம் அல்லவா எனக்கு ஏற்படுகிறது. சரி பூஜையே வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யப் பார்த்தால், எல்லாம் அறிந்த ஸர்வக்ஞான உன்னிடம் பிரார்த்திப்படும் அபசச்சாரமாக அல்லவா இருக்கிறது. 

பிரார்த்தனை என்றால் உனக்குத் தெரியாதவற்றை நான் கேட்பதாகத்தானே ஆகும். ஸர்வக்ஞன் என்பதற்கு என் பிரார்த்தனையே குறைவு உண்டாக்குகிறது. இருந்தாலும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிற அளவுக்கு நான் குறை உள்ளவனாகவே இருக்கத்தானே செய்கிறேன். 

அதனால் அந்தக் குறை நீங்குவதற்காக உன்னிடம் எதைப் பிரார்த்திப்பது எல்லாமான நீயேதான் நானாகவும் ஆகியிருக்கிறாய் என்று தெரியாமல் என்னைக் குறைவு படுத்திக் கொண்டிருக்கிறேனே. இந்தக் குறையை நீக்கு என்றே பிரார்த்திக்கிறேன். அகண்ட ஆனந்த ஸ்வரூபம். உன்னைத் தவிர வேறில்லை என்று வேதம் சொல்கிறது.

இருந்தாலும் பூரண ஆனந்தமாக உனக்கு வேறாக இப்படிக் கோணலும் மாணலுமாகக் குறையோடு நான் ஒருத்தன் இருப்பதுபோல் தோன்றுகிறதே. இல்லாவிட்டால் அழுதுகொண்டு இப்படி நான் பிரார்த்தனை பண்ண வரவேண்டியதே இல்லையே. இப்படி நான் உனக்கு வேறாக இருப்பதாகத் தோன்றுவதைப் போக்கடி. போக்கினால் நீதான் எல்லாமும், நீதான் நானும். 

அதாவது நான்தான் எல்லாமும் என்றாகும் அதாவது உன்னிடம் நான் இதைத்கொடு அதைக்கொடு என்று வெளி வஸ்துக்களைக் கேட்கவில்லை. என்னையே எனக்குக் கொடு என்றே பிரார்த்திக்கிறேன் என்பது தான் அது  !!!

No comments:

Post a Comment