Thursday, July 13, 2017

Pandari & child - periyavaa

பாண்டுரங்க ப்ரஸாதம்...!

மெட்ராஸை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இப்போது மூன்றாவதாக கருவுற்றாள். அதுவும் எட்டாவது மாஸம். இந்தக் குழந்தையாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசை. ரெண்டு பேரும் பெரியவாளுடைய தர்ஶனத்துக்கு போனார்கள். அப்போ பெரியவா பண்டரீபுரத்தில் தங்கியிருந்தார். கூட அவளுடைய மாமாவும் போனார்.

"பெரியவா......இவ என் மருமாள். மொத ரெண்டும் பொண் கொழந்தேள்......இந்தத் தடவையாவது பிள்ளைக் கொழந்தை பொறக்க அனுக்ரஹம் பண்ணணும்"

"ஏன்? ரெண்டு பொண்ணோட, மூணாவது பொண்ணு பொறந்தா.......ஜாஸ்தின்னா சொல்ற?"

கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டார்.

" இது எத்தனாவது மாஸம்?"

"எட்டு நடக்கறது பெரியவா..."

"ஏழு மாஸம் கழிச்சு எங்கிட்ட வந்து பிள்ளை பொறக்கணும்...ன்னா...நான் என்ன பண்ணுவேன்? நீயே சொல்லு"

[பாவம். இவரால் எதுவுமே முடியாதாம்! என்ன ஒரு நடிப்பு!]

மருமாளின் கண்களில் கண்ணீர் கோர்க்க ஆரம்பித்தது. 

பெரியவா அவளை பார்த்துக் கொண்டே, மாமாவிடம் "அவ ஏண்டா அழறா?" என்று கேட்டுக் கொண்டே, எதிரில் தட்டில் வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களில் ஒன்றை எடுத்து தன் வலது தொடையில் தேய்த்துக் கொண்டே இருந்தார்.

பிறகு அப்பழத்தை அவளிடம் குடுத்தார்....

" இந்தா.......இத ஸாப்டு! போயி பாண்டுரங்கனை தர்ஶனம் பண்ணிட்டு வா...... போக முடியுமோல்லியோ?"

"முடியும் பெரியவா..." 

பழத்தை வாங்கிக் கொண்டாள்.

பாண்டுரங்கனை தர்ஶனம் பண்ணிவிட்டு வந்தார்கள்.

"நாலு நாளக்கி தங்கிட்டுப் போங்கோ!..."

நான்காம் நாள் அவர்கள், உத்தரவு வாங்கிக் கொண்டு கிளம்பும்போது அவளை அழைத்தார்...

"இப்டி வா! ஒனக்கு புள்ளைக் கொழந்தை பொறந்தா....... சந்த்ரமௌலின்னு பேர் வெக்கறியா?"

"பெரியவா என்ன சொல்றேளோ......அப்டியே நடக்கறோம் பெரியவா"

நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பினார்கள். 

அழகான பிள்ளைக் குழந்தை பிறந்தது. ஏழுமாஸம் கழிச்சு குழந்தையை பெரியவாளிடம் அழைத்து வந்தனர். 

அப்போ பெரியவா காஞ்சிபுரத்தில் இருந்தார்.

"சந்த்ரமௌளிதானே?........" 

ஞாபகமாக கேட்டார்.

"பெரியவா சொன்னபடி சந்த்ரமௌளின்னுதான் பேர் வெச்சிருக்கோம்..... ஆனா, கொழந்தையோட தலேல முன் நெத்திலேர்ந்து பின் கழுத்து வரைக்கும் நீளமா ஒரு பள்ளம் இருக்கு பெரியவா"

"கொழந்தைய நல்ல வெளிச்சத்ல, கீழ துணிய விரிச்சு போடு! தலேல பள்ளம் இருக்கா....பாக்கலாம்"

என்று சொல்லிக் கொண்டே, பக்கத்திலிருந்த பழக்கூடையிலிருந்து, வாழைப்பழம், மாம்பழம், அன்னாஸிப்பழம் எல்லாவற்றையும் எடுத்து கீழே கிடந்த குழந்தையின் முன்னால் வைத்தார்.

"இந்த பழம்-லாம் ஒனக்கு வேணுமா?..... ஒன்னால இதெல்லாத்தையும் ஸாப்ட முடியுமா?"

விளையாட்டு தாத்தாவாக குழந்தையிடம் கேட்டார். அதுபாட்டுக்கு கையை காலை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

அப்புறம் அவன் அம்மாவிடம் கேட்டார்...

"இதெல்லாத்தையும் இவனுக்கு குடுக்கலாமா?" 

"கொழந்தை பால்தான் ஸாப்டுவான்...பெரியவா...."

"எல்லாத்தையும் நன்னா மாவாட்டம் பெஸிஞ்சு, ஜலம் ஊத்தி கரைச்சு கஞ்சியாட்டம் பண்ணிக் குடு"

எல்லாப் பழங்களையும் அம்மாவிடம் குடுத்தார்.

"உத்தரவு பெரியவா.......ஆனா, இந்த தலேல பள்ளம்...."

இழுத்தாள் அம்மாக்காரி.

"இவ..... எங்கிட்ட, பிள்ளைக் கொழந்தை வேணும்..ன்னு எந்த ஊர்ல இருக்கறச்சே கேட்டா?"

கணவரிடம் கேட்டார்.

"பண்டரீபுரத்ல"

"அங்க....பாண்டுரங்கனை தர்ஶனம் பண்ணினேளோ?"

"பண்ணினோம் பெரியவா"

"வெறும் தர்ஶனத்தை சொல்லல...! அஞ்சு ரூவா குடுத்தா, ஸ்வாமியோட தலேல இருக்கற தலைப்பாகைய எடுத்துட்டு காட்டுவா.........! அந்த பாண்டுரங்கனுக்கும், தலேல இப்டித்தான் பள்ளமா இருக்கும்.....! ஏன்னா...வடக்கே, பக்தாள்ளாம் ஸ்வாமியை கையால தொட்டு கும்படற பழக்கம் உண்டு. அதே மாதிரி பாண்டுரங்கன் தலேல, எல்லாரும் கையை வெச்சு வெச்சு, ஸ்வாமிக்கு தலேல பள்ளமே விழுந்துடுத்து! இவ, பிள்ளை வேணுன்னு பாண்டுரங்கன்கிட்ட கேட்டாளோல்லியோ?..... அதான், கொழந்தையோட தலேலயும் பள்ளம் இருக்கு.... ஸெரியாப் போய்டும்"

தெய்வத்தின் அனுக்ரஹத்தால், தெய்வத்திடமே பிள்ளைவரம் வேண்டி அனுப்பப்பட்டு, அத்தெய்வத்தின் சாயலாகவே பிறக்க அந்த குழந்தை என்ன பாக்யம் பண்ணியிருக்க வேண்டும்! அதை கருவில் ஸுமந்த தாய் எத்தனை பாக்யஶாலி!

பெரியவா சொன்னபடி அந்த பழங்களை கஞ்சி மாதிரி பண்ணி, நாலு நாள் குடுத்ததும் ஊர் திரும்ப உத்தரவானது.

ரயிலில் குழந்தையோடு கிளம்பி வரும்போது, குழந்தைக்கு உடை மாற்றும் போதுதான் கவனித்தாள்.....

தலையில் இருந்த பள்ளம் மாயமாக மறைந்து விட்டிருந்தது!

Compiled & penned  by Gowri sukumar

No comments:

Post a Comment