Tuesday, June 27, 2017

Thiruchirukudi temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌹 *சிவ தல தொடர்.78.*🌹
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌷 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.* 🌷
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
💐 *திருச்சிறுகுடி.* 💐
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......)
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
பிரபஞ்சநாதனே போற்றி!
பிறவாவரதாயனே போற்றி!!

*சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோவில், சிறுகுடி*

*இறைவன்:* சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்.

*இறைவி:* மங்கள நாயகி.

*தல விருட்சம்:* வில்வம்.

*தல தீர்த்தம்:* மங்கள தீர்த்தம்.

*பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னதாக.

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் இத்தலம் அறுபதாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இருப்பிடம்:*
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி சுமார் மூன்று கி. மி. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது.

திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே இரண்டு கி.மி. தொலைவில் உள்ளது. 

பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்திறகு வர சாலை வசதி உள்ளது. 

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில்,
சிறுகுடி,
சரபோஜிராஜபுரம் அஞ்சல்,
(வழி) பூந்தோட்டம்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
PIN - 609 503

*ஆலயத் திறப்பு:*
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தினமும் திறந்திருக்கும்.

*தல அருமை:*
 ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார்.

கலக்கமடைந்த பார்வதி சிறுகுடி தலத்திற்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள். 

சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது.

சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாய் மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்த தலத்திற்கு *சூட்சுமபுரி* என்றும், இறைவனுக்கு *சூட்சுமபுரீஸ்வரர்* என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவனை சிறுகுடியீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

*கோவில் அமைப்பு:*
தல ஆலயத்துக்கு செல்லும்போது, முதலில் மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு தெரியவும், சிவ சிவ சிவ சிவ எனக்கூறி தலைமேல் கைகள் குவித்துக் கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

வாயிலின் உள்ளே செல்வும்,  பலிபீடம் இருக்க அதன் முன் நின்று ஆணவமலத்தை தூக்கிப் போட்டு, பலிபீடத்தையும் தொடாது வணங்கி நகர்ந்தோம்.

அடுத்திருந்த நந்தியாரை வணங்கினோம். சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்ய அர்ச்சனைச் சீட்டு வாங்குவதாக நினைத்திருந்தோம், இருப்பினும்  ஈசனைத் தரிசிக்கும் அனுமதி விண்ணப்பத்தை  நந்தியிடம் கேட்டுவிட்டு உள் நகர்ந்தோம்.

இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாரத்தில் மங்களவிநாயகர் இருந்தார் அவரை வணங்கிக் கொண்டோம்.

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிக்குச் சென்று பரிபூரண உன்னருட் பார்வை என்றும் வேண்டும் என வேண்டிக் கொண்டோம்.

முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது. அந்த நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே *சனைச்சரன்* என்று  எழுதப்பட்டுள்ளது. 

*"சனைச்சரன்"* என்று எழுதப்பட்டுள்ளது ஏன்? என்பதை அர்ச்சகரிடம் இதைப் பற்றி கேட்டோம்.

இதுதான் சனீஸ்வரரின் சரியான பெயர் என்று ஆலய குருக்கள் கூறினார்.

இதற்கு *மெதுவாக ஊர்ந்து செல்பவன்* என்று பொருள். இதுவே நாளடைவில் மருவி திருகி சனீச்வரன் என்றாயிற்று என்றார்.

நவக்கிரக சந்நிதியை விட்டு அகழ்ந்து திரும்ப, நவக்கிரகத்தை விட்டு கொஞ்சம் தள்ளி அங்கே  திருமேனியைப் பார்த்தோம்.

அவர் யார் என்று அருகில் போய் பார்த்தால்..... இடுப்பில் அரைஞாணக் கயிற்றுடனும், கழுத்து மாலை அணிந்தும் நம் திருஞானசம்பந்தர் திருமேனி கொண்டு நின்றிருந்தார். அவரின் அழகைக் கண்டு கண்களில் ஆனந்தத் திரவம் கசிந்துருக வணங்கினோம்.

அங்கிருந்து அடுத்து முன் மண்டபத்திற்கு சென்றோம். அங்கு தெற்கு நோக்கிய வண்ணம் அம்மை மங்களநாயகி சந்நிதி கொண்டு காட்சியருள் புரிந்து கொண்டிருந்தாள்.

அவள், அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தந்தாள். 

அம்பாள் சந்நிதிக்கு நாங்கள் வந்திருந்த சமயத்தில் அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.

இத்தலத்தில் அம்பாளுக்குத் தான் அபிஷேகம் நடை
பெறுமாம். சுவாமிக்கு இல்லையாம். காரணம், இறைவன் மணலாலான சுயம்புத் திருமேனி. அதனால் அவருக்கு அபிஷேகம் இல்லையென அருகிருந்தோர் கூறினர். 

கண்ணார, நெஞ்சம் நெகிழ அம்மையின் அபிஷேகக் காட்சிகளைக் கண்டு, நெஞ்சம் பரவசம் ஆகி நெகிழ்ந்தன. தீபாரதனை எடுத்து வணஙகி குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.

இதே முன் மண்டபம் வழியே உள்ளே சென்றோம்.  நேரே மூலவர் சூட்சுமபுரீஸ்வரர் சந்நிதி வந்தோம்.

குறைவான உயரத்துடன் மூலவர் சுயம்புத் திருமேனியாக அருள்பிரவாகமாக காட்சி தந்தார்.

அம்பிகை கைப்பிடியளவு மணலால் லிங்கம் பிடித்து வைத்து,  மங்கள தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி அவள் வழிபட்ட தலம் என்று, பக்தர் ஒருவர் நமக்கு விளக்கம் கொடுத்தார். 

*சிறுகுடியீசர்* என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கமாக. ஒருபிடி அளவேயுள்ள மணலாலாண லிங்கமாக இருப்பதால் இவருக்கு அபிஷேகம்  கிடையாதாம்.

லிங்க நெற்றியில் பள்ளமும் மற்றும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் மணல்சுயம்புத் திருமேனியில் உள்ளது.

அம்பிகை இறைவனை ஆலிங்கனம் செய்து கொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்று அதே பக்தர் கூறினார்.

நாங்களும் உற்று வணங்கிய போதுதான் தெரிந்தது. லிங்கத் திருமேனியில்  கவசம் சாத்தியே வைக்கப்பட்டிருந்ததைக் காணப் பெற்றோம். இறைவனை மனமுருகிப் பிரார்த்தனை செய்து வெளிவந்தோம்.

மூலவரின் தரிசனத்திற்குப் பிறகு அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.

இயக்குபவன் இடையிலா இணங்கிக் கொண்டிருக்க, நோக்கவந்த நாம் ஓய்வெடுக்கிறோம் என் எங்கோளோடிருந்தவர் கூறவும்,.......

ஓய்வுக்கு ஓய்வளித்து புறப்பட்டெழுந்து, கோஷ்டத்தை வலம் செய்ய முனைப்பெடுத்தோம்.

கருவறையின் தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வணங்கிக் கொண்டோம். 

மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, இருக்கிறார்

வடக்கு கோஷ்டத்தில் வலம் வருகையில் அங்கே பிரம்மாவைத் தொழுது கொண்டோம்.

அடுத்து வழக்கமாக துர்க்கை இருக்குமிடத்தில் துர்க்கை இல்லாது, அங்கே ஈசன் ஈசுவரி  இருவரும் ஒருவரேயான கோலத்தில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி நல்க, நம் வணக்கமும் வேண்டுதலும் நாவிலிருந்து விடைபெற்றது.

அடுத்திருக்கும் சந்நிதியில் சண்டிகேஸ்வரரைக் காணப்பெற்றோம். இவரை இவருக்கே உரியதான வணங்குதலை, (நெறி முறையுடன்) சப்தமில்லாமல் சுத்தமாக வணங்கித் தொழுதோம்.

கருவறைச் சுற்றில் மங்கள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதி ஆகியோரும் இருக்கக்  கண்டு வீழ்ந்து வணங்கி எழுந்தோம்.

உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானதாம். அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது ஈசன் கை போட்டுக் கொண்டு, இறைவன் காட்சி தருவது, பக்திப்பாங்குடன்   பார்க்க வேண்டிய  அழகாகும்.

இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது. செவ்வாய் தோஷமுடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பதை
தோஷ நிவர்த்திக்கு வந்தவர்கள் கூறினார்கள்.

செவ்வாய் வழிபாடு மிக விசேஷமானதாம். ஆலயத்திற்கு வெளியே நேரே எதிரிலுள்ள மங்கள தீர்த்தத்தில் இவர்கள் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டுக் கொண்டதை காணப்பெற்றோம்.

இத்தலத்தில் தீர்த்தமாடி ஈசனை வழிபட செவ்வாய் தோஷங்கள் விலகிவிட்டதாக பக்தர் ஒருவர் கூறியதால், நாங்களும் தோஷ நிவர்த்திக்கு வந்ததாகக் சொன்னார்கள் அவர்கள். 

அப்போது வேற்று மதத்தினர் சிலர் கூட இங்கு வந்து வழிபடுவதைப் பார்த்தோம். அவர்களிடம் பேச்சுக் கொடுக்க....

பல இண்ணல்கள் எங்களுக்கிருக்க, நன்பர்கள் ஒருவர் மூலம் இக்கோயிலுக்கு சென்று குளத்தில் குளித்து ஈசனை வணங்குங்கங்கள். உங்கள் இண்ணல்கள் தீரவில்லையென்றாலும் குறையும் என்று சொன்னார். 

அதனாலே நாங்கள் வந்திருக்கிறோம் எனச் சொன்னார்கள்.

இவர்களின் இண்ணல்கள் ஒழியச் செய்யட்டும் என்று நாங்களும் இறைவனிடம் இவர்களுக்காக வேண்டிக் கொண்டு வெளிவந்தோம். 

*தேவாரம் பாடியவர்கள்:*
*திருஞானசம்பந்தர்* பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம். 

முதல் பாடலில் சிறுகுடி இறைவனை வழிபடுவர்கள் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார். 

பதிகத்தின் பதினோறாவது பாடலில் *"தேன் வண்டுகள் விரும்பும் பொழில் சூழ்ந்த சிறுகுடி"*என்று பாடியுள்ளார். 

இந்தக் கூற்றை மெய்ப்பிப்பது போன்று இன்றும் இவ்வாலயத்தின் மண்டபத்தில் ஒரு ஜன்னலில் (தொடர்ந்து) தேன்கூடு இருப்பதை என்றும் பார்க்கலாம்.

🌸1.திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே.

🌼வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே ! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர் .

🌸2.சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவ ருறுபிணி யிலரே.

🌼குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சுற்றிய சடைமுடியுடைய சிவபெருமானே ! சுற்றிய சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழுது வணங்குபவர்கட்குப் பிணி எதுவும் இல்லை .

🌸3.தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடை யீரே
துள்ளிய மானுடை யீரும தொழுகழல்
உள்ளுதல் செயநல முறுமே.

🌼தெளிந்த நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , துள்ளிக் குதிக்கும் மானைக் கரத்தில் ஏந்தியுள்ள சிவபெருமானே ! துள்ளிக் குதிக்கும் மானை உடைய உம்முடைய திருவடிகளை நினைத்துத் தியானிக்கும் அடியவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர் .

🌸4.செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்
சொன்னல முடையவர் தொண்டே.

🌼செந்நெல் விளையும் வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நம்மோடு சேராது பகைமை கொண்ட அசுரர்கள் வாழும் திரிபுரங்களை எரித்த சிவபெருமானே ! திரிபுரம் எரித்த உம்மை நினைத்துப் போற்றும் சொல் நலமுடையவர்களே திருத்தொண்டர்கள் ஆவர் . ( உமது வழிபாட்டின் பலனைப் பற்றிப் பிறருக்கு உபதேசிக்கும் தக்கோர் ஆவர் என்பர் ).

🌸5.செற்றினின் மலிபுனற் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவ ரருவினை யிலரே.

🌼பாத்திகளில் குன்றாது பாயும் நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , முடியில் தங்கும் பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமானே ! பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த திருமுடியுடைய உம்மை மனம் குழைந்து வழிபடுபவர்கள் உலகப் பற்றற்றவர்கள் . அதன் காரணமாக மேல்வரும் அருவினையும் இல்லாதவராவர் .

🌸6.செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை யிடமுடை யீரே
மங்கையை யிடமுடை யீருமை வாழ்த்துவார்
சங்கைய திலர்நலர் தவமே.

🌼செங்கயல்மீன் விளங்கும் நீர்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமானே ! உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் உம்மை வாழ்த்தும் அடியவர்கள் அச்சம் இல்லாதவராவர் . நலமிக்கவரும் , தவப்பேறு உடையவரும் ஆவர் .

🌸7.செறிபொழி றழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந்
நெறியுணர் வோருயர்ந் தோரே.

🌼அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம் கமழும் சடைமுடியுடைய சிவபெருமானே ! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம்மை விரும்பி , அடைவதற்குரிய நெறிகளில் சன்மார்க்க நெறியில் நிற்போர் உயர்ந்தோராவர் .

🌸8.திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய 
தசமுக னுரநெரித் தீரே
தசமுக னுரநெரித் தீருமைச் சார்பவர்
வசையறு மதுவழி பாடே.

🌼எல்லாத் திக்குக்களிலுமுள்ளவர்கள் தொழுது போற்றும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும் , இராவணனின் வலிமை அடங்கும்படி கயிலைமலையின் கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழிபடுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும் . அது உம்மை வழிபட்டதன் பலனாகும் .

🌸9.செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை யசைவுசெய் தீரே
இருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவினை யொடுதுய ரிலரே.

🌼வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , மாறுபாடு கொண்ட திருமால் , பிரமன் இவர்களை வருத்தியவருமான சிவபெருமானே ! அவ்விருவரையும் வருத்திய உம்மைப் போற்றி வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும் , அதன் விளைவால் உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர் .

🌸10.செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரோ டமண்புறத் தீரே
புத்தரொ டமண்புறத் தீருமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே.

🌼வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப், புத்தர் , சமணர்கட்குப் புறம்பாக இருக்கும் சிவபெருமானே ! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப் போற்றி வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக் கொள்வர் .

🌸11.தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே.

🌼வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , மான் ஏந்திய கரமுடைய சிவபெருமானே ! மான் ஏந்திய கரமுடைய உம்மை வாழ்த்திப் போற்றிய ஞானசம்பந்தனின் இத் தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள் இம்மை , மறுமைப் பலன்களைப் பெறுவர்.
             திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை.

*தொடர்புக்கு:*
04366- 291 646

*நாளைய தலம்..திருவீழிமிழலை*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment