Tuesday, June 27, 2017

Prasnottara malika in Tamil

-ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய பிரச்னோத்தர ரத்தினமாலை

1.பகவானே ,கொள்ள வேண்டியது எது ?
           குரு சொல்லும் வசனம் 

2.தள்ள வேண்டியது எது ? 
             வீண் செயல் 

3.குரு யார் ?
       உண்மை அறிஞன் ,தத்துவ ஞானி ,தன்னை அடைந்த மாணவனின் நன்மைக்காக ஓயாமல் பாடுபடுகிறவன் .

4.மிகவும் இனியது எது ?
        தருமம் 

5.எவன் சுத்தம் உள்ளவன் ?
       மனச்சுத்தம் உள்ளவன் .

6.எவன் பண்டிதன் ?
         விவேகி .

7.எது நஞ்சு ?
      குரு மொழியை அலட்சியம் செய்தல் 

8.மனிதர் வேண்டத்தக்கது எது ?
     தனக்கும் பிறருக்கும் நன்மை .அதற்கே பிறவி .

9.எதிரி யார் ?
    முயற்சி இல்லாச் சோம்பல் .

10.முழுக் குருடன் யார் ?
     ஆசை வலைப்பட்டவன் .

11.சூரன் யார் ?
     பெண்களிடம் மயங்காத வைராக்கியம் உடையவன் .

12.செவிக்கு அமுதம் எது ?
     சாதுவின் உபதேசம் .

13.பெருமை எதனால் ?
      எதையும் பிறரிடம் வேண்டாமையினால் .

14.தாழ்வு எது ?
      தாழ்ந்தவனிடம் யாசிப்பது .

15.எது வாழ்வு ?
    குற்றமின்மை .

16.எது மடமை ?
   கற்றும் ,கற்ற வழியில் நில்லாமை .

17.நரகம் எது ?
    பிறர் வசம் இருப்பது .

18.செய்யத்தக்கது எது ?
   உயிருக்கு இனிமை .

19.அனர்த்தம் விளைவிப்பது எது ?
     அகம்பாவம் .

20.சாகும் வரை மனதைக் குடைவது எது ?
        மறைவில் செய்த பாவம் .

21.முயற்சி எதன் பால் ?
       கல்வி ,ஈகை ,நல்ல மருந்து --இவற்றின் பால் .

22.எதிலிருந்து விலகுவது ?
   தீயர் ,பிறர் மனைவி ,பிறர் பொருள் .

23.விருப்புடன் எதைச் செய்வது ?
    தீனாரிடம் கருணை ,நல்லவரிடம் நட்பு .

24.உயிரைக்கொடுத்தாலும் திருத்த முடியாதவர் யார் ?
    ,மூர்க்கர், சந்தேகப்பேர்வழிகள் ,தாமசர் ,நன்றி கெட்டவர் .

25.சாது யார் ?
    ஒழுக்கமுள்ளவன் .
    தீ  நடத்தையுள்ளவன் .

26.உலகை வெல்பவன் யார் ?
     உண்மையும் பொறுமையும் கொண்டவன் .

27.உயிர்க்கூட்டம் யாருக்கு வசமாகும் ?
     உண்மையை இனிமையாக பேசுபவனுக்கு .

28.குருடன் யார் ?
     காரியமில்லாதவன் ,தகாததை செய்பவன் .

29.செவிடன் யார் ?
      நல்லுரை கேளாதவன் .

30.ஊமை யார் ?
  தக்க காலத்தில் இன்சொல் பேசத்தெரியாதவன் .

31.ஈகை எது ?
  கேளாது கொடுத்தல் .

32.நண்பன் யார் ?
   தீமை புகாது தடுப்பவன் .

33.கவனமாக வாழ்வது எப்படி ?
    இன்சொல் ,ஈகை ,அறிவு ,செருக்கின்மை ,பொறுமை ,சௌகரியம் ,தியாகத்துடன் கூடிய செல்வன் ஆதலே .

34.அறிவுடையார் யாரை வணங்குவர் ?
     இயல்பாகவே அடக்கமுடையவரை .

35-உலகம் யாருக்கு வசப்படும் ?
     தருமசீலராய் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .

36.விபத்து யாரைத் தீண்டாது ?
    அடக்கத்துடன் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .

37.சரஸ்வதி யாரை விரும்புவாள் ?
      சுறுசுறுப்பான மூளை ,நீதி நெறி --இரண்டும் உடையவரை .

38.லட்சுமி யாரை விட்டு விலகுவாள் ?
     அந்தணர் ,குரு ,தேவர் ---இவர்களை தூற்றித் திரிபவரை .

39.கவலை இல்லாதவன் யார் ?
     பணிவுள்ள மனைவியும் ,நிலையான செல்வத்தையும் உடையவன் .

40.மனிதர் சம்பாதிக்கத் தக்கவை  எவை ?
     கல்வி ,செல்வம் ,புகழ் ,புண்ணியம் .

41.எல்லா நல்ல குணங்களையும் அழிப்பது எது ?
     கருமித்தனம் .

42.பெரிய தீட்டு எது ?
      கடன் தொல்லை .

43.கடவுளுக்கு பிரியமானவர் யார் ?
     தானும் மனத்துயர் இன்றிப்  பிறர் மனத்தையும் புண் படுத்தாதவர் .

44.நம்பத்தகாதவன் யார் ?
     சதா பொய் சொல்லுபவன் .

45.பொய் எப்போது தீதில்லை ?
     தருமப் பாதுகாப்பின் போது .

46.உடலெடுத்தவருக்கு எது பாக்கியம் ?
    ஆரோக்கியம் .

47.யார் தூய்மையானவன் ?
     எவனுடைய மனத்தில் களங்கம் இல்லையோ ,பொறாமை இல்லையோ அவனே தூய்மையானவன் .

48.தாமரை இலையில் தண்ணீர் நிற்காதது போல வாழ்க்கையில் நிலையில்லாமல் இருப்பவை எவை ?
       இளமை ,செல்வம் ,ஆயுள் .

49.சாதிக்க வேண்டியது எது ?
   என்ன நேர்ந்தாலும் மற்றவர்களுக்கு எப்போதும் நன்மையே நாம் செய்ய வேண்டும் .

50.துக்கம் இல்லாதவன் யார் /
     கோபம் இல்லாதவன் .

51.அந்தணன் உபாசிப்பது எவரை /
     காயத்திரி ,சூரியன் ,அக்னி ,சம்பு .

52.இவற்றில் உள்ளது என்ன ?
     சுத்த சிவ தத்துவம் .

53.யார் பிரத்தியட்ச தேவதை ?
     மாதா .

54.பூஜ்ய குரு யார் ?
     தந்தை .

55.சர்வதேவதாத்மா யார் ?
     வேதவித்தையும் நல்ல கர்மானுஷ்டானமும் கொண்ட விப்ரன் .

56.எதனால் குலம் அழியும் ?
      சாது ஜனங்களை புண்படுத்துவதால் .

57.யார் வாக்கு பலிக்கும் ?
     சத்திய ,மௌன ,சம வீலர் வாக்கு.

No comments:

Post a Comment