Tuesday, May 30, 2017

GOD, MANTRA & ASTROLOGY - Are theytrue?

சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?
தெரிஞ்சிக்கிறது ரொம்ப சிம்பிள்! இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள் உண்மைதானா என்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம் நீக்கமற நிறைத்திருக்கும்.

இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழியுள்ளதாமே.. எப்படி தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க.. பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன்.

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.

No comments:

Post a Comment