Thursday, April 27, 2017

Adishankara charitram part3 - Periyavaa

Courtesy: http://valmikiramayanam.in/?p=2426

ஸ்ரீ சங்கர சரிதம் – மூன்றாம் பகுதி – ஸ்ரீசங்கர ஜனனம்; மகாபெரியவா ஜனனம்

நேற்றைக்கு, தேவர்கள் தக்ஷிணாமூர்த்தி கிட்ட "பூமியில் கலியினுடைய ஆட்டோபம் ஜாஸ்தி ஆகிவிட்டது. 72 துர்மதங்கள் வந்துடுத்து. நீங்கள் அவதாரம் பண்ணி, ஜனகளுக்கு நல்ல புத்தி குடுக்கணும்" அப்படின்னு பிரார்த்தனை பண்ணிண்டா. அதே நேரத்தில் இங்கே காலடி என்கிற க்ஷேத்ரத்தில் சிவகுரு ஆர்யாம்பா என்ற தம்பதி குழந்தை வரம் வேண்டி திருச்சூர் வடக்குன்நாத க்ஷேத்ரத்துல பஜனம் பண்ணிண்டு இருந்தா. பகவான் அவாளுக்கு கனவுல வந்து அனுக்ரகம் பண்ணினார், என்கிறதெல்லாம் சொல்லிண்டு இருந்தேன்.

இந்த இடத்துல மஹா பெரியவா தெய்வத்தின் குரல்ல ஒரு நூறு பக்கங்கள், வேதத்தில் இருந்தும், தர்ம சாஸ்த்ரங்களில் இருந்தும், புராணங்களில் இருந்தும் "ஆதி சங்கரராக அவதாரம் பண்ணினது பரமேஸ்வரன் தான்" என்று சான்றுகள் இருக்கு அப்படின்னு எடுத்து சொல்லி இருக்கா. ஸ்ரீருத்ரத்துல "நம: கபர்தினே ச வ்யுப்தகேஷாய ச" அப்படின்னு வரது. கபர்தி னா ஜடாமுடி தரித்தவர் னு அர்த்தம். வ்யுப்தகேஷ: முண்டனம் பண்ணிண்டு இருக்கறவர். மொட்டை அடிச்சுண்டு இருக்கறவர் னு அர்த்தம். பெரியவா சொல்றா, "பவாய ச, ருத்ராய ச, ஷர்வாய ச  னு பரமேச்வரனுடைய நாமங்களாக வந்துண்டு இருக்கு இந்த அனுவாகத்துல. அப்படி வரும் போது கபர்தினே ச என்கிறது பொருந்தறது. எல்லா பரமேச்வரருடைய எல்லா அவஸரத்துலேயும் சிதம்பரத்துல நடராஜவானாலும் சரி, தக்ஷிணாமூர்த்தி ஆனாலும் சரி, பிக்ஷாடனர் ஆனாலும் சரி, ஜடா முடியோட தான் இருக்கார். எங்கேயுமே பரமேஸ்வரன் முண்டனம் பண்ணிண்டு இல்லை. அதுனால வ்யுப்தகேஷாய ச என்கிறது ஆதி சங்கரருடைய அவதாரத்தை தான் குறிக்கிறது" அப்படின்னு சொல்லி, அப்படி சும்மா சொன்னா போறாது னு சிவ ரஹஸ்யத்துலேர்ந்து, மத்த பாஷ்யக்காரர்கள் சொன்னதெல்லாம் சொல்லி தக்ஷிணாமூர்த்தி தான் ஆதி சங்கரராக அவதாரம் பண்ணினார் என்பதை நிறுவுகிறார்.

எனக்கு அந்த இடத்தில் ரொம்ப பிடிச்ச ஒரு ஸ்லோகம். மாதவிய சங்கர விஜயத்துல இருக்க கூடிய ஒரு ஸ்லோகம்

अज्ञानान्तर्गहन पतितान् आत्मविद्योपदेशै

त्रातुं लोकान् भव तव शिखा तापपाप च्यमानान् |

मुक्त्वा मौनं वटविटपिनो मूलतो निष्पतन्ती

शंभोर्मूर्तिश्चरति भुवने शंकराचार्यरूपा  ||

அஞ்ஞானானந்தர் கஹன பதிதான் ஆத்மவித்யோபதேஷைஹி

த்ராத்தும் லோகான் பவ-தவ-ஷிகா, தாப பாப சிமானான் |

முக்த்வா மௌனம் வடவிடபினஹ, மூலதோ நிஷ்பதந்தி

சம்போர் மூர்த்திஹி சரதி புவனே சங்கராச்சார்ய ரூபா ||

என்று ஒரு அழகான ஸ்லோகம். "நிறைய ஆதி சங்கரரை பத்தி ஸ்லோகங்கள் இருந்தாலும் இது ரொம்ப அர்த்த புஷ்டியோடு இருப்பதால் பண்டிதர்களுக்கு தெரிஞ்ச ஸ்லோகமாக, ரொம்ப ப்ராபல்யத்தோடு இருக்கு" னு பெரியவா சொல்றா.

இதுல ஒரு உபமானம். ஒரு காட்டுல தீ பிடிச்சு எரிகிறது. இந்த காட்டிலேர்ந்து வெளியில போகவும் வழி இல்லாம இருக்கு. இது என்ன காடு? அக்ஞானம் என்கிற காடு. பவ தவ ஷிகா – சம்சாரம் என்கிற காட்டுத்தீ. இந்த காட்டுத்தீ ஜனங்களை எல்லாம் எரிக்கிறது. 'அஞ்ஞானானந்தர் கஹன பதிதான்' – இது அக்ஞானத்துனால கும்மிருட்டா இருக்கற ஒரு காடு. இதுல ஜனங்கள் விழுந்துட்டா. வெளியில் போகவும் வழி தெரியாமல் அடர்த்தியான காடாக இருக்கு. காட்டுத்தீயில் இருந்து எது காப்பாத்த முடியும். ஜலம் காப்பாத்த முடியும். ஆனால் ஒரு வாளி தண்ணியை விட்டு காட்டுத்தீயை அணைக்க முடியுமோ? அங்க பக்கத்துல ஒரு மலை இருக்கு. அந்த மலை மேலே ஒரு மடு இருக்கு. மடுவில் ஜலம் இருக்கு. ஆனா மடு ஜலம் போருமோ? யாராவது நாலு பேர் இங்கே தீயிலிருந்து தப்பிச்சு போய் அங்கே மடுவுக்கு போனால், அந்த மடுவில் குளிச்சோ, அந்த ஜலத்தை குடிச்சோ, இந்த காட்டுத் தீயின் தாபத்தை தீர்த்து கொள்ளலாம்.

ஆனால் மத்த ஜனங்கள் எல்லாம் என்ன பண்ணுவா? அங்கே இருக்கற மிருகங்கள் எல்லாம் என்ன பண்ணும்? அதுனால அந்த மடுவாக இருந்த ஜலம் ஒரு பிரவாகமாக கிளம்பி ஆறாக பெருகி ஓடி வந்து இந்த காட்டுத்தீயை அணைக்கிறது அப்படின்னு இந்த உபமானம். இதில் மடுவாக இருந்த ஜலம் என்ன? ஓடி வந்த ஆறு என்ன? அப்படின்னு பார்ப்போம்.

சம்போர் மூர்த்திஹி – சம் அப்படின்னா ஆனந்தம் னு அர்த்தம். நம: சாம்பவே ச மயோபவே ச னு ஸ்ரீ ருத்ரத்தில் இருக்கு. சம் னாலும் ஆனந்தம் மயஸ் நாளும் ஆனந்தம். சம் னா பேரானந்தம். மயஸ் னா உலகத்தில் கிடைக்க கூடிய ஆனந்தம் , சிற்றின்பம். அந்த ஞானத்தின் மூலமாக கிடைக்கும் பேரானந்தத்துக்கு ஆதாரம், அது எங்க தோன்றுகிறதோ, அந்த ஆனந்தத்தின் source எதுன்னா. அதுதான் அந்த பரமேஸ்வரன், அந்த பரமேஸ்வரன் "சம்பு". இங்க சொல்லக்கூடிய அந்த சம்பு  யாருன்னா, "வட விடபினஹ" ஒரு ஆலமரத்து அடியில இருக்க கூடிய சம்பு."வட விடபினஹ மூலதஹ" அந்த ஆலமத்தின் அடியில் அமர்ந்து இருந்த அந்த சம்புவானவர், அந்த மடு ஜலம், ஸனகாதி முனிவர்கள் மாதிரி நிறைய சாதனைகள் எல்லாம் பண்ணி, அவா எல்லாம் போய் அந்த மடு ஜலத்தை ஆனந்தமா பருகி சந்தோஷப்படறா. ஆனா நம்ம மாதிரி சாதாரண ஜனங்களுக்கு, அனுக்கிரஹம் பண்ணனும் எங்கறதுக்காக ஆறாக ஓடி வந்தது.

இந்த இடத்துல, பெரியவா ஒண்ணு வேடிக்கையா சொல்றா, "கங்கை பூமிக்கு வர வேண்டும் என்று பிரம்மாவைக் குறிச்சு பகீரதன் தபஸ் பண்ணிணான், பிரம்மா கங்கை கிட்ட "நீ பூமிக்கு போ"ன்னு சொன்னார். பரமேஸ்வரன் அவளை தலைல தங்கிண்டார். ஆனால் அந்த மாதிரி இந்த சம்புவை வந்து யாரவது சொல்ல முடியுமா? அவரே கருணையினால் கிளம்பினார்", அப்படின்னு சொல்றா.

அந்த மாதிரி கருணையினால் அந்த மடுஜலம் ஒரு ஆறாக பெருகி ஓடியது. "முக்தவா மௌனம்", அங்க ஆலமரத்து அடியில இருந்த சம்பு, மௌனமா இருந்தே அனுக்கிரஹம் பண்ணிண்டு இருந்தார். இப்போ என்ன பண்ணிணாராம், அங்க இருந்து கிளம்பி, 'சம்போர் மூர்திஹி சரதி புவனே' உலகத்துல எல்லாம் போக ஆரம்பிச்சார், நடையா நடந்தார் பாரத தேசம் முழுக்க, எந்த ரூபத்துல 'சங்கராச்சார்ய ரூபா' சங்கராச்சார்யர் ரூபத்தில், எல்லாருக்கும் வந்து அனுக்கிரஹம் பண்ணி 'ஆத்மவித்ய உபதேஷைஹி' ஆத்மவித்யான்னா அத்வைத வித்யை. அந்த வித்யயை உபதேசம் பண்ணி, உலகத்துல உள்ள எல்லாரையும் காப்பாத்தி, அவா வந்து இந்த காட்டு தீல இருக்கோமே, அப்படின்னு சும்மா இல்லை. அவாளுக்கு வந்து அப்ப கூட அக்ஞானம் இருக்கறதுனால 'தாப பாப ச்யமானாம்' மேலும் மேலும் பாபங்கள் பண்ணி, அதனால அவா தாபம் அடைந்து இருந்தா. அந்த தாபத்தில் இருந்து அவாளுக்கு ஆத்மவித்யையை உபதேசம் பண்ணி, ஞானத்தை கொடுத்து, அவாளை அந்த தாபத்தில் இருந்து கரையேற்றின, அந்த காட்டு தீயில் இருந்து காப்பாற்றின பரம் பொருள் அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்.

அஞ்ஞானானந்தர் கஹன பதிதான் ஆத்மவித்யோபதேஷைஹி

த்ராத்தும் லோகான் பவ-தவ-ஷிகா, தாப பாப சிமானான் |

முக்த்வா மௌனம் வடவிடபினஹ, மூலதோ நிஷ்பதந்தி

சம்போர் மூர்த்திஹி சரதி புவனே சங்கராச்சார்ய ரூபா ||

அப்படின்னு அந்த ஸ்லோகம்.

நான் இந்த பெரியவா எண்ணூறு பக்கத்தை சொன்னதை முழுக்க சொல்றதுக்கு முப்பது மணி நேரத்துக்கு மேல ஆகும், நான் ஒரு மூணு மணிநேரத்துல சொல்லணும்ங்கறதுனால சிலது எல்லாம் நான் குறைச்சு சொல்லிண்டு இருக்கேன். ஆனா இந்த ஸ்லோகம் ரொம்ப அழகா இருந்தது, இதை விடமுடியாதுன்னு தோணித்து. அவளோ அழகான ஒரு ஸ்லோகம். மாதவிய சங்கர விஜயத்துல இருக்க கூடிய ஒரு, தக்ஷிணாமூர்த்திதான்  சங்கராச்சார்யாளாக அவதாரம் பண்ணார்.

அப்படி அந்த சிவகுரு ஆர்யாம்பா தம்பதி பண்ண பிரார்த்தனைக்கு பலனாக, ஆதிசங்கர பாகவத்பாதாளாக தக்ஷிணாமூர்த்தி காலடி க்ஷேத்ரத்துல  அவா ஆத்துல ஒரு குழந்தையாக பிறந்தார். வைகாசி மாசம் சுக்ல பஞ்சமி திதில வந்து பிறந்தார். மஹாபெரியவா இது வந்து கி.மு 509வது வருஷம், அப்டின்னு 2500 வருஷங்களுக்கு முன்னாடி அதிசங்கரரோட அவதாரம், அப்படி ஒரு 150 பக்கம், historical evidences எல்லாம் கொடுத்து எழுதி இருக்கா. மஹாபெரியவா என்ன சொல்றானா இந்த Englishகாரன், Jesus Christக்கு அப்பறமாதான்  இந்த இந்து மதமே வந்தது அப்படின்னு establish பண்றதுக்காக historyய திரிச்சு எழுதியிருக்கான்.  அவன் எல்லாத்தையும் பின்னாடி தள்ளிட்டான், அது correct இல்லை, 800 ADலதான் ஆதிசங்கரர் அவதாரம் 1200 வருஷம் ஆச்சுன்னு எல்லாரும் கொண்டாடறா, Government லகூட கொண்டாடறா, ஆனா மஹாபெரியவா சங்கரர் அவதாரம் 509 BC என்று சொல்லி இருக்கா. எனக்கு அந்த evidence எல்லாம் முக்கியம் இல்லை, மஹாபெரியவா சொன்னாங்கிறது போறும் எனக்கு, அதில் இருந்து அறுபத்தியெட்டு பீடாதிபதிகள் காஞ்சி மடத்துல வந்து இருக்கா. அந்த 800ADல வந்தவர் ஆதிசங்கரர் அளவுக்கு, க்யாதியோடவும், தபஸோடயும் ஒரு பெரியவரா இருந்து இருப்பார், அபிநவ சங்கரர் அப்படின்னு இருந்து இருப்பார் அப்படின்னு பெரியவா சொல்றா. இந்த சர்ச்சைகள் எல்லாம் நமக்கு வேண்டாம் அப்படின்னு பெரியவா சொல்லிடறா. நம்ம ஆதிசங்கரர் முப்பத்திரண்டு வருஷங்கள்ல பண்ண திக்விஜயத்தையும் அவர் பண்ண அனுகிரஹத்தையும் நினைப்போம் அப்படின்னு சொல்றா.

இந்த வசந்த ருதுல வைகாசி மாசத்துல சுக்ல பஞ்சமில ஆதிசங்கரர் அவதாரம், இதை சொல்லம்போது அந்த  வைகாசி மாசத்துக்கே மாதவ மாசம்ன்னு பேரு, வெள்ளை வெளேர்னு சுத்த சத்வத்தை குறிக்கும் மல்லிகை எல்லாம் நிறைய பூத்து இருக்கும், உலகமே சந்தோஷமா இருக்கும் வசந்த ருதுனால அப்டின்னு பெரியவா சொல்றா. மஹாபெரியவளோட அவதாரமும் வைகாசி அனுஷத்துலதான், அதை அவர் உணராமலே அவர் அந்த மாதிரி ஆச்சர்ய பாதியோட சொல்லிண்டு இருக்கார்.

இந்த 'கடபயாதி சங்க்யை'ன்னு  ஒண்ணு இருக்கு.  சம்ஸ்க்ருதத்தில

क(ka)  ख(kha)  ग(ga)  घ(gha)  ङ(nga)

च(cha)  छ(chha)  ज(ja)  झ(jha)  ञ(nja) னு இருக்கு.

இதுல क(ka)  ख(kha)  ग(ga)  घ(gha)  ङ(nga) च(cha)  छ(chha)  ज(ja)  झ(jha)

இதுக்கு क(ka) க்கு ஒண்ணு, ख(kha)க்கு இரண்டு, அப்படி 1 லேர்ந்து 9 வரைக்கும் value respectively.

ट(ta)  ठ(tha)  ड(da)  ढ(dha)  ण(na) त(ta)  थ(tha)  द(da)  ध(dha)

இதுக்கு 1 லேர்ந்து 9 வரைக்கும் value respectively.

प(pa)  फ(pha)  ब(ba)  भ(bha)  म(ma)

இதுக்கு 1 லேர்ந்து 5 வரைக்கும் value respectively.

य(ya)  र(ra)  ल(la)  व(va)  श(sha)  ष(sha)  स(sh)  ह(ha)

இதுக்கு 1 லேர்ந்து 8 வரைக்கும் value respectively.

ஸ்லோகங்களில் எண்களை குறிக்க இதை உபயோகப் படுத்துவா. இந்த 'கடபயாதி சங்க்யை' ல இன்னொரு rule, அந்த ஸ்லோகத்துல வர எழுத்துக்களுக்கு வர எண்களை எடுத்து அதை reverse  பண்ணி எடுத்துக்க வேண்டும்.

அப்படி ஆதிசங்கர பாகவத்பாதாள் அவதாரம் பண்ணிண, வைகாசி, சுக்ல, பஞ்சமி, வைகாசிங்கிறது ரெண்டாவது மாசம், சுக்ல பக்ஷங்கிறது முதல் பக்ஷம், பஞ்சமிங்கிறது அஞ்சாவது திதி, இந்த மூணுத்தயும் வெச்சிண்டு, அந்த சங்கர அப்படிங்கிற பேரே வந்து, அந்த 2,1,5 வெச்சுண்டு 5,1,2ன்னு reverse பண்ணி 5,1,2க்கு ய, ர, ல, வ, ஶ இதில் ஶ-ங்கிறது அஞ்சாவது எழுத்து. க ங்கறது முதல் எழுத்து, ர-ங்கிறது ரெண்டாவது எழுத்து இவற்றை எடுத்து 'ஶங்கர' அப்படின்னு பேரே வெச்சா. இந்த 'கடபயாதி சங்க்யை' யை இவர் பிறந்ததை வெச்சிண்டு ஶங்கரங்கிற நாமத்தை வெச்சா அப்படின்னு சொல்றா. அந்த மாதிரி, ஜயந்தியே சங்கர, சங்கர ஜெயந்தி இல்லை, அவர் ஜயத்தியே சங்கர வாக இருக்குன்னு பெரியவா சொல்லி இருக்கா.

அந்த சங்கர பகவத் பாதாள், அதிமேதாவியான ஒரு குழந்தையாக இருந்ததுனால, நாலு அஞ்சு வயசுக்குள்ளயே காவியங்கள் எல்லாம் பார்த்த உடனே படிச்சுட்டார். அப்படி ரொம்ப புத்திமானாக இருக்கறதுனால, ரொம்ப புத்திமானாக இருக்கற குழந்தைகளுக்கு அஞ்சு வயசிலேயே பூணூல் போடறது அப்படின்னு ஒரு exception. ப்ராஹ்மண குழந்தைகளுக்கு ஏழு அப்படின்னு தான் கணக்கு, கர்பாத் அஷ்டமம் அப்படின்னு. இந்த சங்கர பகவத் பாதாளுக்கு அஞ்சு வயசுலயே பூணூல் போட்டு, வேத அத்யயனம் எல்லாம் பண்ணிண்டு இருக்கார். இன்னிக்கு இந்த கனக தாரா சொல்லணும்னு ஆசைபட்டேன், அந்த கனக தாரா கதையை நாளைக்கு சொல்லிட்டு அந்த கனக தாரா ஸ்தோத்ரத்தையும் நாளைக்கு முழுக்க படிக்கிறேன்.

இப்போ இங்க ஆதி சங்கர பகவத் பாதாள் அவதாரம் பண்ணிணது சொல்லும் போது, இந்த சங்கர ஜெயந்தியை நாம எல்லாம் விமர்சையா கொண்டாடணும், அப்படின்னு மஹாபெரியவா ரொம்ப appeal பண்ணி, அதை வந்து பெரியவா இருக்கும் போது எல்லாரும் follow பண்ணி நிறைய கொண்டாட வெச்சு இருக்கார். அதி சங்கரருக்கு தேரோட்டம், ஆதி சங்கரருக்கு உத்சவங்கள், எந்தெந்த ஊர்ல பெரியவா இருந்தாலும் அந்தந்த ஊர்ல பெரியவா அந்த சங்கர ஜெயந்தியை அவா விமரிசையா கொண்டாடி இருக்கா. காமாக்ஷி கோவில்ல விசேஷமா ஆதிசங்கரருக்கு பெரிய ஒரு சன்னிதி இருக்கு. அங்க நல்ல ஒரு ஆக்ருதியோட நல்ல ஓர் well-built ஆக,  உயரமான  ஒரு ஆதி சங்கரர் பிரதிஷ்டை பண்ணி இருக்கா. அப்படி ஆதிசங்கரருக்கு காமாக்ஷிக்கும் ரொம்ப ஒரு நெருக்கம். இந்த காமாக்ஷி கோவில்லதான் ஆதிசங்கரருக்கு ஜெயந்தி உத்சவம் பத்துநாள் ஜன்மோத்சவம்ன்னு, ஜெயந்தியில் இருந்து ஆரம்பிச்சு பத்து நாள் உத்சவம் கொண்டாடறா. இது கோவிலோட முறையாகவே கொண்டாடறா, மத்த individual sponsorsன்னு இல்லாம, கோவில்ல இருந்தே இந்த மாதிரி கொண்டாடறா. இந்த பத்து நாளும் சௌந்தர்யா லஹரி பத்து, பத்து பாடல்களை ஆதிசங்கரர் காமாக்ஷிக்கு படிச்சு ஒப்பிக்கற மாதிரி, பத்தாம் நாள் நூறு பாடலும்  பூர்த்திஆனா உடனே, அம்பாள் ஆதிசங்கரருக்கு பரிவட்டம் எல்லாம் கட்டி மரியாதை பண்ற மாதிரியும் உத்சவம் பண்றா. அப்படி விசேஷமா அந்த காமாக்ஷி கோவில்ல சங்கர ஜெயந்தியை கொண்டாடறா. பெரியவா, எல்லாரும் சங்கர ஜெயந்தி கொண்டாடணும், ஆதிசங்கர பகவத்பாதாள் அவதாரம் பண்ணி, இவ்வளோ ஆச்சர்யமான ஷண்மதம் ஸ்தாபனம் பண்ணி அதெல்லாம் பண்ணலனா நம்ம இந்த ராமநவமியும் க்ருக்ஷ்ணாஷ்டமியும் கொண்டாடி இருக்கவே மாட்டோம் , மத்த மாதங்கள் எல்லாம் நம்ம வேத மதத்தை அடிச்சிண்டு போய் இருக்கும். அப்படி நம்ம மதத்தை காப்பாத்தி கொடுத்து, இவ்வளோ லோக சங்கரமான கார்யங்கள் பண்ண ஆதி சங்கரருடைய ஜயந்தியை எல்லாருமா ஞாபகமா கொண்டாடணும், முடிஞ்ச அளவுக்கு விமர்சையா கொண்டாடணும். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரன்னு ஒரு அஞ்சு நிமிஷமாவது சொல்லணும் கடைசி பக்ஷமா அப்படின்னு பெரியவா அவ்வளோ தூரம் அதை stress பண்ணி சொல்லி இருக்கா.

இன்னிக்கு, 2500வருஷம் முன்னாடி ஆதி சங்கரர்  அவதாரம். அதற்கப்புறம், 2500 வருஷம் கழிச்சு நமக்காக அவதாரம் பண்ணிண மஹாபெரியவா. அவா மஹாபெரியவா வந்து, சுப்பிரமணிய  சாஸ்திரிகள், மஹாலக்ஷ்மி அம்மையார்ன்னு ஒரு திவ்ய தம்பதிகள்னு தான் சொல்லணும். ரொம்ப கொடுத்து வெச்ச ஒரு புண்யசாலிகளான தம்பதிகளுக்கு, ரெண்டாவது குழந்தையா வைகாசி அனுஷத்துல மஹாபெரியவா அவதாரம் பண்ணினா. மே 20 ம் தேதி, 1894 வது வருஷம்.

பெரியவாளுக்கு முன்னாடி ஒருத்தர் பொறந்திருக்கார். அவர் பேர் கணபதி சாஸ்திரிகள். பெரியவாளோட  அப்பா பேர் சுப்பிரமணிய சாஸ்திரிகள். சுப்பிரமணிய சாஸ்திரிகளோட அப்பா பேர், கணபதி சாஸ்திரிகள். அதுனால, தாத்தா பேரை தலைச்சனுக்கு வெச்சிருக்கா. அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு பிரார்த்தனை , பண்ணி, அவாளுக்கு குலதெய்வம் சுவாமிமலை முருகன். சுவாமிமலை முருகனை பிரார்த்தனை பண்ணி அவாளுக்கு, குழந்தையா பொறந்தவர் தான் நம்ம மஹாபெரியவா. அதனால பெரியவாளுக்கு, ஸ்வாமிநாதன்னு, பேர் வெச்சிருக்கா.

அதற்கப்புறம், பெரியவாளோட  கூட பொறந்தவா, அடுத்து, லலிதாம்பான்னு ஒரு பொண்ணு. அப்புறம் சாம்பமூர்த்தினு ஒரு பிள்ளை. அப்பறம் சதாசிவம் என்று சொல்லப்படும், நம்முடைய சிவன் சார். அப்புறம், கிருஷ்ண மூர்த்தி. கடைசி குழந்தைங்கிறதுனால குஞ்சு, சாஸ்திரிகள்,னு அவரை சொல்லுவாளாம். இவா, எல்லாரும், அந்த தாத்தாலேருந்து ஆரம்பிச்சு, இன்னும் அதுக்கு முன்னாடி எத்தனை தலைமுறையோ தெரியலை. எல்லாரும், மடத்துலயிருந்து ஒரு பைசா கூட எடுத்துக்காம, மடத்துக்காக life time service பண்ணியிருக்கா. இந்த  ஆறுபேரோட பேரைப் பார்த்தாலே, கணபதி,ஸ்வாமிநாதன், லலிதாம்பா, சாம்பமூர்த்தி, சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி அப்படீங்கிற இந்த ஆறுபேரும் ஷண் மதத்துல இருக்கிற ஆறு தெய்வங்களோட பேரா இருக்கு. இப்படி ஒரு அழகு.

இந்த நம்ம ஸ்வாமிநாதன் பிறந்து, வளர்ந்துண்டு, இருக்கும்போது, நல்ல சூட்டிகையா இருக்கார். ஒரு  வாட்டி, இவா அப்பாவும், inspector of schools. வேற ஒரு சிங்காரவேல முதலியார்னு ஒரு  inspector வந்து விழுப்புரத்துல இவர் படிச்சுண்டு இருக்கற school ல inspect பண்ண வந்திருக்கார். கேள்விகள் கேட்கறார். ஓலை தடுப்பு போட்டு ரெண்டு மூணு கிளாஸ். அதனால அவர் அந்த கிளாஸ் ல கேள்வி கேட்டுருக்கார்.  யாரும் பதில் சொல்லல. இந்த கிளாஸ் ல இருந்து நம்ம ஸ்வாமிநாதன் பதில் சொல்லறார்.  இது என்ன வேடிக்கைன்னா, இவர் படிக்கறது ஆறாங் கிளாஸ். பதில் சொல்றது எட்டாம் கிளாஸ் பாடம். உடனே எப்படி உனக்கு தெரியறதுன்னு வாத்தியாரே கேட்கறார். "இல்ல, எங்க அண்ணா கணபதி வாய்விட்டு படிப்பார்", அதனாலே தெரியும் அப்படினு சொல்லிடறார். ஆனா அந்த சிங்காரவேலு முதலியாரே சொல்றார். "இவன் ரொம்ப புத்திமானா இருக்கான். இந்த பையன். ரொம்ப தேஜஸா இருக்கான். ரொம்ப நன்னா வருவான். பெரிய பதவிக்கு, வருவான்", அப்படீன்னு சொல்றார். அந்த பெரிய பதவி "லோககுரு" ங்கற பதவி தான் இல்லையா!

அப்பறம் கிருஷ்ணஸ்வாமி ஐயர் னு நாமம் நம்ம சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு ஒரு neighbour, நெருங்கின நண்பர். அதுக்கு, நடுவுலயே ஸ்வாமிநாதன், சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி 66 வது, சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள். காஞ்சி காமகோடி பீடாதிபதிகள். அங்க பக்கத்துல வரா. இவரை கூட்டிண்டு போறா. சுவாமிநாதனும் ஆசார்யாளும் ரெண்டு பேரும், ரொம்ப நெருக்கமா ஆயிடறா. "அடிக்கடி கூட்டிண்டு வா" குழந்தையை அப்படீன்னு சொல்லி, நிறைய இவர் கிட்ட, பேசிண்டு இருக்கார்.

அப்புறம், ஒரு நாளைக்கு, இவரும் இவர் friend மா கிளம்பி, ஆத்துல கூட சொல்லாம கிளம்பி வெளியூருக்கு மடத்துக்கு போயிடறா. இவா நாளெல்லாம் தேடறா. ஆச்சார்யாள் ஆள்விட்டு சொல்லி அனுப்பறார். "குழந்தை இங்கதான் இருக்கான். பத்திரமா இருக்கான்", அப்படீன்னு சொல்றார். "நா, அவனை, நாலு நாள் வெச்சிருந்து, அனுப்பறேன்" அப்படீன்னு சொல்றார். அந்த குரு நாதர். அப்படி நாலு நாள், வெச்சுண்டு, அந்த குழந்தைக்கு, அனுகிருஹம் லாம், பண்ணியிருக்கார்.

அப்படி, இந்த பையன், ஸந்யாஸிகளை, தேடித் போறானே, அப்படீன்னு சொல்லி, அவா அப்பா கிருஷ்ணஸ்வாமி, ஐயர்ங்கிற ஒரு friend கிட்ட  இவன் ஜாதகத்தை காண்பிச்சு "ஏதாவது தெரியறதா பாரேன், இவன் என்னவா வருவான்?" அப்படீன்னு கேட்கறார். அந்த ஜாதகத்தை, பார்த்த உடனே, "குழந்தையை, நீ அழைச்சிண்டு வா" அப்படீன்னு, சொல்றார். இந்த குழந்தையை உயரமா ஒரு திண்ணையில உட்கார வெச்சு, அந்த கிருஷ்ணஸ்வாமி ஐயர், கால்களை, நன்னா அலம்பி, கால்களை உத்துப் பாத்துட்டு,  ரெண்டு கால்களையும் எடுத்து, தலைமேல் வெச்சுக்கறார். "என்ன மாமா, என்ன மாமா", ங்கறான், குழந்தை. அவர், அப்பா கிட்ட, சொல்றார். "இந்த காலை, நான், இன்னிக்கு, பிடிச்சேன். இது, ராஜாக்களும், ராணிகளும், உலகத்தில் இருக்கற, எல்லாரும், எல்லா மஹான்களும், நமஸ்காரம் பண்ணப் போற பாதங்கள். இதோட பெருமையை, என்னால வாயால, சொல்ல முடியாதுப்பா. நீ ரொம்ப கொடுத்து வெச்சவன். அவ்வளவு தான். ஸுப்ரமணி", அப்படீன்னு,  சொல்லிடறார். அப்பேற்பட்ட, ஒரு பெரியவா.

இந்த கட்டத்தோட  இன்னிக்கு, பூர்த்தி பண்ணிக்கறேன். நாளைக்கு, ஆதி சங்கரர் கனகதாரை. அப்புறம், ஸந்யாஸம். நம்ம மஹாபெரியவா ஸந்யாஸம் வாங்கிண்டது. அதெல்லாம் பாப்போம்.

ஸ்ரீ சங்கர அவதாரம் (20 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…



No comments:

Post a Comment