*சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🌸 திருவிளையாடல் புராணத் தொடர். 🌸
(16-வது படலம்.) -வது நாள்.
🍂எளியநடை சரிதம்.🍂
வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கிருதயுகத் தொடக்கத்தில் காட்டில் முனிவர்கள் ஒன்று கூடி "இலக்கணத்தோடு வேதத்தைக் கற்றிருக்கிறோம் அன்றி அவற்றின் பொருளை விளக்க குரு கிடைக்கவில்லையே!" என வருந்தினார்.
அப்போது அங்கு வந்த அரபத்தர் என்ற ரிஷி அவர்களின் முகவாட்டத்தின் காரணத்தை அறிந்து "நீங்கள் ஆலவாய் சென்று தஷிணாமூர்த்தியைக் குறித்து தவம் செய்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும்" என்று கூறினார்.
அவர்களும் அப்படியே ஆலவாய் சென்று அரபத்தர் கூறியபடி கடுந்தவம் செய்தனர். தவம் என்றால் எப்படி?
சும்மா கண்ணை மூடிக் கொண்டு சிவ சிவ என்று ஜபிப்பதா? அல்ல... முக்காலமும் ஜபம், பூஜை, தர்ப்பணம், ஹோமம், அன்னதானம் இப்படி, ஒருநாளா, ஒருமாதமா.....ஒரு வருஷம் நடந்தது. இதை உணவின்றி, நித்திரையின்றி ஒரே மனதாகச் செய்தனர். மெய் வருத்தம் பாராமல்,பசி கருதாமல் கண் துஞ்சாமல் கார்த்திகைப் பெளர்ணமி முதல் அடுத்த கார்த்திகைப் பெளர்ணமி வரை தவமிருந்தனர்.
தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் பதினாறு வயது அந்தண வாலிபன் கோலத்தில் உடலெல்லாம் திருநீறு பூசி, உருத்திராட்சங்கள் அணிந்து, காதிலே குண்டலம், தலைப்பாகை, உயர்ந்த குரலில் சுரம் தவறாமல் வேதமந்திரங்களைச் சொல்லிக் கொண்டு முகத்தில் இளநகையுடன் முனிவர்களுக்கு காட்சியளித்தார்.முனிவர்கள் இறைவன் திருவடியில் விழுந்து வணங்கினர்.
இறைவன், நீங்கள் வேண்டுவது என்ன? என்று கேட்க, "ஈசனே, எங்களுக்கும் உலகத்திற்கும் நன்மை ஏற்பட எல்லாவித வேதங்களின் பொருளையும் எங்களுக்கு விளங்கச் சொல்ல வேண்டும்" எனப் பணிவுடன் வேண்டி நின்றனர் ரிஷிகள்.
சிவபெருமான் ஆலவாய் தலத்துக்குள் செல்ல, முனிவர்கள் பின் தொடர்ந்தனர். சுந்தரேசலிங்கம் இருக்கும் இடத்திற்கு நேர் எதிரே சிவபெருமான் அமர, முனிவர்களும் சூழ அமர்ந்தார்கள். "வேதப் பொருளை கேட்பவர்க்கு துயர் யாவும் நீங்கும்"
"ஆதியில் வேதமும் ஒன்றே; அதன் பொருளும் ஒன்றே; பின் வரும் நாளில் கிளைகளின் பிரிவால் வேதங்களும் அவற்றின் பொருள்களும் வேறுபட்டன.
ஈசானன் பிரம்மனைப் படைத்து தன்னிடமிருந்து தோன்றிய எல்லா வேதங்களையும் பிரம்மனிடம் ஒப்படைத்தார். ஜோதிமயமான இந்த லிங்கத்திற்கு முதலும் முடிவும் கிடையாது. இதற்கு பிரம்மம் என்று பெயர்.
படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற முத்தொழிலுக்காக,பிரம்மம் மூன்றாகப் பிரித்து பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் எனப்பெயர் பெற்றது.
ஆத்ம தத்துவத்திலிருந்து 'அ' என்ற எழுத்தும், வித்தியா என்ற தத்துவத்திலிருந்து, 'உ' என்ற எழுத்தும், சிவதத்துவத்திலிருந்து 'ம்' என்ற எழுத்தும், ஸர்வ தத்துவத்திலிருந்து பிந்துவுடன் கூடிய நாதமும் எழுந்து பிரணவமி என்னும் 'ௐ' என்ற ஒலி அமைந்திரக்கிறது.
பிரிந்த பிரணவத்திலிருந்து பூ; புவ; ஸ்வ என்ற பிரிந்த வியாகிக்ருதிகளும் சேர்ந்த பிரணவத்திலிருந்து பூர்புவஸ்சுவ என்ற சேர்ந்த வியாக்ருதிகளும் சிவனது ஆணையால் தோன்றின. மறுபடியும் அவற்றினின்று நினைத்ததை தரக் கூடியதும் வேதங்களை ஈன்ற தாயுமான காயத்ரி, சேர்ந்த உருவிலும், பிரிந்த உருவிலும் தோன்றிற்று. காயத்ரியிலிருந்து ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் உண்டாயின. அவற்றினின்றும் பல பிரிவுகள் வேதங்கள் விரிந்டன.
பிரணவம் முதலான மகாமந்திரங்களும், அகரம் முதலிய எழுத்துக்களும், காமிகம் முதலான ஆகமங்களும், பிநாக பாணியுடைய உச்ச முகத்திலிருந்தும், இருபத்தோர் சாகைகளுடைய, ருக்வேதம், தத்புருஷ முகத்தினின்றும், நூற்றொரு பிரிவுகளுடைய யஜுா்வேதம், அகோர முகத்தினின்றும், ஆயிரம் பிரிவுகளுடைய சாமவேதம், வாமதேவ முகத்தினின்றும் ஒன்பது பிரிவுகளுடைய அதர்வண வேதம் சத்தியோஜத முகத்தினின்றும் வந்தன. நான்கு வேதங்களுடன் வருணங்களும், தர்மங்களும், வேள்வி விதிகளும் இறைவனிடமிருந்து தோன்றின.
வேதங்களைக் கருமகாண்டம், ஞானகாண்டம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஞானகாண்டம் உண்மை, அறிவு, பகவானின் அருள் வடிவத்தை விவரிக்கின்றன. கரும காண்டம் பூஜை வகைகள் ஆசிரம விதிகளை விவரிக்கின்றன.
அக்கினி ஹோத்திரம் முதல் அசுவமேதம் வரை எல்லா யாகங்கள், நித்திய, நைமித்திக, காமிய கர்மாக்கள் எல்லாம் ஈசுவரனையே சேரும்.
சிவபூஜை செய்வதால் வேதங்களில் கூறப்பட்ட கருமங்கள் எல்லாம் செய்த பலன் கிடைக்கும். வேதாந்த அறிவால் பெறப்படும் பயனை, ஆலவாய் லிங்கத்தை வணங்கி வழிபடுதலால் அடையலாம்.
கருமங்களை ஒழுங்காக அனுஷ்டித்தால் உள்ளத் தூய்மை உண்டாகும். மனம் தூய்மையானால் அமைதி, ஒழுக்கம், அழுக்காறின்மை, வைராக்கியம் முதலிய நற்குணங்கள் ஏற்படும். மனம் கட்டுப்பட்டு நிற்கும். திருநீறும், உருத்திராட்சமும் கெட்ட சக்திகளிலிருந்து மானிடரைக் காப்பாற்றும் வல்லமை கொண்டது.
குருவைப் பேணுதல் சிறந்த கவசமாகும்.
அறங்களில் ஸ்மிருதிகளில் கூறப்பட்டவை சிறந்தவை. அதிலும் சுருதிகளில் கூறப்பட்டவை மேலானவை. சுருதி, தர்மம், அதர்மம், என்று பாகுபாடு செய்கிறது.
சுகம் அனைத்தும் சிவனே என்ற அறிவு இண்பத்தையும் மோட்சத்தையும் அளிக்கும் என்று கூறிய தஷ்ணாமூர்த்தி கண்கவர், சாண்டில்யர், கர்க்கர் போன்ற ருஷிகளின் நெஞ்சைத் தொட்டு வேதத்தின் பொருள் தெளிவாக விளங்கட்டும் என்று கூறி லிங்கத்தில் மறைந்தார்.
உடனே ரிஷிகளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் வேதத்தின் பொருள் புரிபடவும் மகிழ்ந்து சோமசுந்தர மூர்த்தியை பல வதத்திலும் போற்றிப் புகழ்ந்தனர். "லிங்கங்களில் தானே தோன்றிய சுயலிங்கம் சிறந்தது. அதுவே வேதங்களின் காரணம், பொருள்" என்று தொடங்கி பிரணவத்தின் பொருளுரைத்த இந்தப் 16-ம் திருவிளையாடலைப் பக்தியுடன் படிப்பவரும், கேட்பவரும் நன்னெறியில் ஒழுகுவர். பிதுர்க்கள் மோட்சமடைவர். எல்லா செல்வங்களும், அஷ்டபோக பாக்கியங்களும், பதினாறு பேறுகளும் அடைவார்கள், அறுபத்துநான்கு கலைகளும் கைவரும்.
(இத்துடன் 16-வது படலமான வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படல எளியநடை சரிதம் மகிழ்ந்து நிறைந்தது. நாளை 17-வது படலமான மாணிக்கம் விற்ற படல செய்யுள்நடை +விளக்கம் வரும்.)
No comments:
Post a Comment