Friday, August 19, 2016

Vaazhga antanar - sambandar

வாழ்க அந்தணர்:

சைவநெறியே மெய்ந்நெறியென்று நிலைநாட்டிய திருப்பாசுரம் எனப்படும் "வாழ்க அந்தணர்" என்னும் திருப்பதிகம், இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
நல்லவர்களால்தான் நாடு வாழ்கின்றது. இதனை அவ்வையார், "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்றார். திருவள்ளுவரும், "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்றார். நல்லோரைப் பண்புடையார் என்றார் வள்ளுவர்.
நல்லவர்களை, பண்பாளர்களை, சான்றோர் என்று பேசுகிறது புறநானூறு. "யாண்டு பலவாக நரையில வாகுதல்" எப்படி சாத்தியமாயிற்று, என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடையாக அதே பாடலின் நிறைவில், "ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" என்று தெளிவுபடுத்துகிறார்.
எனவே, அரைகுறையான, வளர்ச்சியடையாத மக்களும், பிற உயிரினங்களும் வாழ்வாங்கு வாழவேண்டுமானால், நல்லவர்கள் அந்த நாட்டில் வாழவேண்டும்.
இது குறித்தே மற்றொரு புறநானூற்றுப் புலவரும் "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே" எனக் கூறிப்போந்தார்.
இவ்வரிய கருத்தை ஒட்டியே ஞானசம்பந்தர், சைவ நெறியை நிலைநிறுத்தப் பாடியருளிய, "வாழ்க அந்தணர்" என்ற பதிகத்தில், உலகம் வாழவேண்டுமானால், மூவர் முதலில் வாழ வேண்டும், என்று அருளினார். அம்மூவரார், அந்தணர், வானவர், ஆனினம் என்பர். ஆம். பிற உயிர்களிடத்துச் செந்தண்மை பூண்ட அந்தணர்களால் சாதாரண மக்களும் நல்லவர்கள் ஆகின்றனர். இதனால் அந்தணர்கள் முதலில் வாழவேண்டும்.
இவர்கள் பூசுரர் எனப் பெயர் பெறுவர். சுரர் என்றால் தேவர் எனப்பெறுவர். இவர்களை நல்லவர்கள் என்பர். அசுரர் என்றால் நல்லவர்கள் அல்லாதவர்கள். அசுரர்களே வல்லவர்கள், திறமை மிக்கவர்கள். ஆனால் பிற உயிர்களுக்கு பெரும்பாலும் தீங்கு செய்பவர்கள். இக்கருத்தை அருணகிரிநாதர் ஒராற்றால் குறிப்பிடுவது காண்க. "வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடிவேலைத் தொடுவோனே" என்பது அவர் வாக்கு.
அந்தணர்களைப் பூசுரர் என்பார்கள். பூ-பூமியில் சுரர்-தேவர்கள். சேக்கிழார் ஓர் இடத்தில் இவ்வந்தணர்களை, நிலத்தேவர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தணர் நல்லவராய் இருப்பதோடு, வேள்வி செய்து மழை பெய்யவும் காரணராய் இருப்பர். அந்தணரும், வானவரும், ஆனினமும் வாழ்வதால் தண்புனல் வீழும். நல்லவர்கள் வாழ்ந்து அதனால் மழை பொழியுமானால் வளம் பெருகும். வளம் பெருகும்போது அவ்வளத்தை ஒப்புரவினால் எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். அதற்கு நீதிவேந்தன் ஒருவன் தேவை. அதனைத்தான் வேந்தனும் ஓங்குக, என்றார் ஞானசம்பந்தர். நல்லரசன் ஆட்சியில் தீயது ஆழவும், வேந்தன் ஓங்கவும், நல்லோர் நெறியுடன் வாழவும், அரன் நாமம் உலகெலாம் சூழவேண்டும். அரன் நாமம் சூழ்ந்திருக்குமானால் வையகம் துயர் தீர்ந்து சுகம் பெறும். இவற்றையெல்லாம் உள்ளடக்கியே, வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரம் பாடலுற்றார் ஞானக் குழந்தை. அப்பாடல் காண்க.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

வாழ்க அந்தணர், வானவர், ஆன்இனம்,
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது, எல்லாம் அரன்நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே

No comments:

Post a Comment