Tuesday, August 4, 2015

Thaadagai

Courtesy:Sri.GS.Dattatreyan

அந்த பெண்ணுக்கு தாடகை என்று பெயர் திருமணமாகி வெகு காலமாகியும் குழந்தை இல்லை .உற்றாரும் ,சுற்றத்தாரும் முணுமுணுக்க ஆரம்பிக்க ,மன உளைச்சல் ஏற்பட்டு அதனை தவிர்க்க தினமும் அருகில் மரத்தடியில் வீற்றிருந்த சிவன் கோவிலுக்கு மனஅமைதிக்காக செல்ல ஆரம்பித்தாள் .மனிதர்கள் செவி சாய்க்காத நிலையில் இறைவனை தவிர வேறேது புகலிடம் .விளக்கேற்றுவது ,மாலை சூட்டுவது , மனக்குறைகள் சொல்லி புலம்புவது என தினசரி வழக்கமாகிறது .

ஒரு நாள் மிக அழகாக ,முல்லை ,செவ்வந்தி ,மரிக்கொழுந்து ,பன்னீர் பூ என பலவித மலர்களால் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவிக்க புறப்பட்டு செல்கிறாள் .இறைவன் திருமுன் அருகே வந்து மாலை அணிவிக்க முற்படுகையில் சேலையின் மாராப்பு சரிகிறது .இயல்பாக சரி செய்து கொள்ளும் கைகளில் மாலை இருக்க , சுற்றி யாரும் இல்லையெனினும் சிவன் ஆண் தானே என்ற ஒரு நொடிப்பொழுது தயக்கம் ஏற்படுகிறது .அதே நொடியில் 
(சிவலிங்கமாக உள்ள இறைவன் தலையை வளைத்து)
இறைவன் தலை வணங்கி மாலையை ஏற்றுக்கொள்கிறார் .அதிர்ந்த தாடகை என் சிவனே என்று மனம் நெகிழ்ந்து பணிந்து வேண்டியவையும் விரும்பியவையும் அடைந்து நல்வாழ்வு பெற்றாள்.

இந்த நிகழ்வுக்கு வெகு காலத்திற்கு பின் அரசர்களால் அந்த மரத்தடியில் உள்ள சிவபெருமானுக்கு கோவில் கட்டப்படுகிறது .கோவில் முழுமை அடைந்த பின் அரசர் ஏன் இந்த சிவலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது என யோசித்து அதனை நிமிர்த்த குதிரை ,யானை இவற்றில் கட்டி இழுத்து முயற்சி செய்கிறார் .ஒன்றும் இயலவில்லை .

இறைவனின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனாருக்கு தகவல் அறிந்து அங்கு வருகிறார் .சிவலிங்கத்தின் மீது ஒரு நுனியும் , தனது கழுத்தில் ஒரு நுனியும் கயிற்றை இறுக்கி கொண்டு ஐயனே நீங்கள் நிமிர வேண்டும் அல்லது எனது உயிரை தங்கள் திருவடி சேர்ப்பிக்க வேண்டும் என கூறி இழுக்க சிவலிங்கத்தின் பாணம் நேராகியது .இருப்பினும் தாடகைக்காக தாழ்ந்து ,குங்கிலயக்கலயனாருக்காக நிமிர்ந்ததால் இன்றும் அந்த சிவலிங்க வடிவின் பாணம் ஒரு முறுக்கிய துணியின் வடிவிலே இருப்பதை காணலாம் .தாடகைஈச்வரம் என்று அழைக்கப்படும் திருப்பனந்தாள் கும்பகோணம் அருகில் உள்ளது .

இறைவனே பெண்ணின் மானம் மதித்த பண்பையும் ,பெண்களை உயர்வாக நடத்திய மனப்பாங்கும் கொண்ட மனிதர்கள் வாழ்ந்த தமிழ்நாடு.இவையே தமிழர் நாகரீகம்.

No comments:

Post a Comment