Tuesday, July 28, 2015

Brahma granthi,Vishnu granthi, Rudra granthi

Courtesy:Sri.GS.Dattatreyan

குணங்கள் மூன்று வகைப்படும். சத்வம், ராஜஸம், தாமஸம். சத்வ குணமே அனைத்திலும் மேலானதாய்ச் சொல்லப் படும். எனினும் எல்லாரிடமும் சத்வ குணமே மேலோங்கி இருப்பதில்லை. மூன்று குணங்களின் கலவையாகவே இருப்போம். இந்த மூன்று குணங்களின் மூலகர்த்தாவே அம்பிகைதான். லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, "யோநிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா" என்று கூறுகிறது. இந்த குணங்களில் ரஜோ குணம் மேலிட்டிருந்தால் அதனுடன் சம்பந்தப் பட்ட சைதன்யம் ஆன பிரம்மாவும், சத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு சைதன்யமும், தமோ குணம் மேலிடும்போது ருத்ர சைதன்யமும் சம்பந்தப் படும். ஆகவே அம்பிகை இந்த ஈரேழு பதினான்கு உலகையும் ஈன்றவளாய், அனைத்துக்கும் மூத்தோளாய் இருக்கிறாள். அருள் கொண்டு ஈன்றது போல அவற்றைப் பாதுகாக்கவும் செய்கிறாள். தேவைப்படும்போது சம்ஹரிக்கவும் செய்கிறாள். மும்மூர்த்திகளையும் அவரவருக்கு உரிய தொழிலைச் செய்யுமாறு இயற்றுபவள் அம்பிகை என்பது இதன் மூலக் கருத்து.
இதையே அபிராமி பட்டர்,

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கிளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!"
என்கின்றார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார். இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம். ஆகவே அம்பிகையைப் பூஜித்தால் மும்மூர்த்திகளையும் பூஜித்ததாகும் என்பதே இந்த ஸ்லோகத்தின் மையக் கருத்து. இதையே லலிதா சஹஸ்ரநாமம்,
"ஸ்ருஷ்டி கர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணீ
சம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரீ
ஸதாசிவா அனுக்ரஹதா பஞ்சக்ருத்ய-பராயணா!
என்று கூறுவதை ஏற்கெனவே பார்த்தோம்.
இங்கே செளந்தர்ய லஹரியில் மேலும் மணிபீடஸ்ய நிகடே என்றும் கூறி இருக்கிறார் ஆசாரியாள். நம் சரீரத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதையும் அவற்றுக்கு உள்ள தத்துவத்தையும் ஏற்கெனவே பார்த்தோம். மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரச் சக்கரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நம் உடலின் ஒவ்வொரு தத்துவத்தைக் குறிக்கும். அதோடு சம்பந்தப் பட்டதே. எப்படி எனில் மூலாதாரம் (இளவேனில் காலம்)வஸந்தருதுவாகவும் 55 நாட்கள் கொண்டதாயும், (வறண்ட கோடைக்காலம்)மணிபூரகம் 52 நாட்கள் கொண்ட க்ரீஷ்மருதுவாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாட்கள் கொண்ட (மழைக்காலம்)வர்ஷருதுவாகவும், அநாஹதம் 54 நாட்கள் கொண்ட (இலையுதிர்காலம்)சரத்ருதுவாகவும், விசுத்தி72 நாட்கள் கொண்ட (முன்பனிக்காலம்)ஹேமந்த ருதுவாகவும், ஆக்ஞா 64 நாட்கள் கொண்ட (பின்பனிக்காலம்)சிசிர ருதுவாகவும் வர்ணிக்கப் படுகிறது. இந்த ஆறு ஆதாரங்களும் மூன்று கண்டங்களாயும் பிரிக்கப் பட்டுள்ளது. அக்னி கண்டம், சூர்ய கண்டம், சோம கண்டம். அக்னி கண்டத்தில் பிரம்மக்ரந்தி, சூர்ய கண்டத்தில் விஷ்ணு க்ரந்தி, ஸோம கண்டத்தில் ருத்ர க்ரந்தி. ஆறு சக்கரங்களின் வழியாகவும் தேவியை உள்முகமாய் வழிபட்டால், மும்மூர்த்திகளையும் வழிபட்டதாகும். கடைசியில் சஹஸ்ராரத்தில் சச்சிதாநந்த ஸ்வரூப தரிசனம்.

No comments:

Post a Comment